Monday, 14 November 2022

இராமாசிரமம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 098 (18)

The hermitage of Rama | Ayodhya-Kanda-Sarga-098 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் ஆசிரமத்தைக் கண்டுபிடித்ததில் பரதன் அடைந்த மகிழ்ச்சி...

Bharata in search of Rama

பாதங்களைக் கொண்டோரில் {மனிதர்களில்} உத்தமனான அந்தப் பிரபு {பரதன்}, தன் சேனையை முகாமிடச் செய்து, தன் குருவிடம் {தந்தை தசரதனிடம்} அர்ப்பணிப்புள்ள ராமனிடம் பாத நடையாகச் செல்ல விரும்பினான்.(1) நல்ல முறையில் சைனியத்தை முகாமிடச் செய்ததும், தேசத்திற்குரிய {இடத்திற்குரிய} விதிப்படியே அந்த பரதன், சத்ருக்னனிடம் இதைச் சொன்னான்:(2) "சௌம்யா {மென்மையானவனே}, நீயும், வேடர்களுடன் கூடிய இந்த நர சங்கங்களும் {மனிதக் கூட்டங்களும்}, இந்த வனத்தின் அனைத்துப் பக்கங்களிலும் தேடுவீராக.(3) குஹன், ஆயிரக்கணக்கான தன் ஞாதிகளுடன் {உறவினர்களுடன்}, சரங்களும், விற்களும், வாள்களும் தரித்துக் கொண்டு, நேரடியாகச் சென்று காகுத்ஸ்தர்களை {ராமலக்ஷ்மணர்களைத்} தேடட்டும்.(4) அமாத்யர்கள் {அமைச்சர்கள்}, புரவாசிகள் {நகரவாசிகள்}, குருக்கள் {புரோஹிதர்கள்}, துவிஜர்கள் {இருபிறப்பாளர்கள்} சகிதனான {ஆகியோருடன் கூடிய} நானும் இந்த வனம் முழுவதும் பாதநடையாகவே திரிவேன் {சென்று தேடுவேன்}.(5) 

மஹாபலம் பொருந்திய ராமரையும், மஹா பாக்கியசாலியான லக்ஷ்மணனையும், வைதேஹியையும் காணும் வரை நான் சாந்தியடைய மாட்டேன் {எனக்கு மன நிம்மதி உண்டாகாது}.(6) பத்மபத்ரங்களுக்கு {தாமரை இதழ்களுக்கு} ஒப்பான கண்களுடன் கூடியதும், சந்திரனுக்கே ஒப்பானதுமான நம்முடன் பிறந்தவரின் சுபவதனத்தை {அழகிய முகத்தைக்} காணும் வரை நான் சாந்தியடைய மாட்டேன்.(7) பார்த்திபர்களுக்கேயுரிய அடையாளங்களைக் கொண்ட நம்முடன் பிறந்தவரின் சரணங்களை {பாதங்களை} என் சிரசில் {தலையில்} தாங்கும் வரை நான் சாந்தியடைய மாட்டேன்.(8) அந்த ராஜ ஆரியர் {ராஜ்ஜியத்தின் மகுடத்திற்குரிய நம் அண்ணன் ராமன்}, ஜலத்தால் அபிஷேகஞ் செய்யப்பட்டு நம் பித்ரு பிதாமஹர்களுக்குரிய {நம் தந்தைக்கும், நம் முப்பாட்டன்களுக்குமுரிய} ராஜ்ஜியத்தில் ஸ்தாபிக்கப்படும் வரை நான் சாந்தியடைய மாட்டேன்.(9)

தாமரைக் கண்களைக் கொண்டவரும், களங்கமற்ற சந்திரனுக்கு ஒப்பான பேரொளியைக் கொண்டவருமான ராமரின் முகத்தைக் காணும் லக்ஷ்மணனே உண்மையில் சித்தார்த்தன் {நோக்கம் நிறைவேறி சாதித்தவன்}.(10) சாகரம் வரையுள்ள பிருத்வியின் தலைவரை {பூமியின் பாதுகாவலரான ராமரைப்} பின்தொடர்ந்து சென்ற மஹாபாக்கியவதியான ஜனகாத்மஜையே {ஜனகனின் மகளான சீதையே} நோக்கம் நிறைவேறியவள் {கொடுத்து வைத்தவள்}.(11) நந்தனத்தில் {சைத்திரரதமென்னும் உத்தியானவனத்தில்} வசிக்கும் குபேரனைப் போல, அந்த காகுத்ஸ்தர் {ராமர்} வசிக்கும் இந்தச் சித்திரகூட கிரியே, கிரிராஜனுக்கு {இமயத்திற்கு} ஒப்பான நல்ல பாக்கியம் பெற்றது.(12) காட்டு விலங்குகள் வசிக்கும் இந்த துரக வனம் {அடர்ந்த காடு}, மஹாதேஜஸ்விகளிலும் {பேரொளியுடன் திகழ்பவர்களிலும்}, சஸ்திரந் தரிப்பவர்களிலுஞ் {ஆயுதம் தரிப்பவர்களிலும்} சிறந்தவர் {ராமர்} வசிப்பதால் நல்வினையுற்றது" {என்றான் பரதன்}[1].(13)

[1] கே.எம்.கே. மூர்த்தி பதிப்பில் 13ம் சுலோகத்துடன் இந்த சர்க்கம் நிறைவடைகிறது. பிற பதிப்புகளில் இன்னும் ஐந்து சுலோகங்கள் வருகின்றன. அவை பின்வருமாறு

மஹாதேஜஸ்வியும் {பெரும் வலிமைமிக்கவனும்}, மஹாபாஹுவும் {பெருந்தோள்களைக் கொண்டவனும்}, புருஷரிஷபனுமான {மனிதர்களில் காளையுமான} பரதன், இவ்வாறு சொல்லிவிட்டு, அந்த மஹத்தான வனத்திற்குள் பாதநடையாகவே பிரவேசித்தான்.(14) நாநயம் மிக்கவர்களில் சிறந்தவனான அவன், அந்த கிரியின் சாரல்களில் முற்றாக மலர்ந்திருக்கும் உச்சிகளைக் கொண்ட மரக்கூட்டங்களுக்கு மத்தியில் நடந்தான்.(15) சித்திர கூடத்தின் மேல், மலர்ந்திருக்கும் சால மரத்தை {ஆச்சா மரத்தை} அடைந்ததும், ராமாசிரமத்தின் அக்னியில் இருந்து உயர்ந்தெழும் துவஜத்தை {நெருப்பின் கொடியான புகையைக்} கண்டான்.(16) பந்துக்கள் {உறவினர்கள்} சகிதமாகச் சென்ற ஸ்ரீமான் பரதன் அதைக் கண்டதும், ராமன் அங்கே இருப்பதை அறிந்து, நீரைக் கடந்தவன் {மறுகரையை அடைந்தவனைப்} போல மகிழ்ச்சியடைந்தான்.(17) அந்த மஹாத்மா {பரதன்}, ராமாசிரமம் இருக்கும் சித்திரகூட கிரியில் புண்ணிய ஜனங்கள் வசிப்பதைக் கேட்டறிந்து, தொலைவில் முகாமிட்டிருக்கும் சம்முவிடம் {படையிடம்} மீண்டும் சென்று, குஹனுடன் துரிதமாகச் சென்றான்.(18)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 098ல் உள்ள சுலோகங்கள்: 18

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் துந்துபி தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்