Saturday, 23 October 2021

திரிசங்கு | பால காண்டம் சர்க்கம் - 57 (22)

Trishanku | Bala-Kanda-Sarga-57 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: உடலுடன் சுவர்க்கம் செல்ல வேள்வி செய்யத் தீர்மானித்த திரிசங்கு; வசிஷ்டர் மறுத்தது; வசிஷ்டரின் மகன்களை நாடிய திரிசங்கு...

Trishanku and Vasishta's sons

{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "இராகவா {ராமா}, அந்த மஹாத்மாவுடன் {வசிஷ்டருடன்} வைரம் {பகை} ஏற்படுத்திக் கொண்டவரும், மஹாதபஸ்வியுமான விஷ்வாமித்ரர், கொதிக்கும் இதயத்துடன் தமது ஆத்மாவை {மனத்தை} அடக்கிக் கொண்டு, பெருமூச்சுவிட்டுக் கொண்டே தமது மனைவியுடன் தக்ஷிண தேசத்திற்குச் சென்று {தென்னாடு சென்று}, பரம கோரமான மஹாதவம் செய்தார். அவர், பழங்களும், கிழங்குகளும் உண்டு தற்கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து பெருந்தவத்தைச் செய்துகொண்டிருந்தார்.(1-3அ) அப்போது அவருக்கு சத்தியத்திலும், தர்மத்திலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் ஹவிஷ்பந்தன் {ஹவிஷ்யந்தன்}, மதுஷ்யந்தன், துருடநேத்ரன், மஹாரதன் முதலிய புத்திரர்கள் பிறந்தனர்.(3ஆ,4அ)

ஆயிரம் வருடங்கள் பூரணமடைந்ததும், லோகபிதாமஹனான {உலகின் பெரும்பாட்டனான} பிரம்மன், தபோதனரான {தவத்தையே செல்வமாகக் கொண்டவரான} விஷ்வாமித்ரரிடம் இந்த மதுரமான வாக்கியத்தைச் சொன்னான்: "குசிகாத்மஜா {குசிகனின் மகனே}, உன் தவத்தால் நீ ராஜிரிஷிலோகங்களை வென்றாய். (4ஆ,5) இந்த தவத்தால் நீ ராஜரிஷி ஆகிவிட்டாய்." {என்றான் பிரம்மன்}. அந்த மஹாதேஜஸ்வியும், லோகங்களின் பரமேஷ்வரனுமான {உலகங்களின் மேலான ஆட்சியாளனுமான பிரம்மன்} இவ்வாறு சொல்லிவிட்டுத் தேவர்கள் சஹிதனாகவும், திரிவிஷ்டப {சுவர்க்கத்தின்} வழியாகவும் பிரம்மலோகத்திற்குச் சென்றான்.(6,7அ)

விஷ்வாமித்ரர் இதைக் கேட்டு வெட்கத்தால் தலைகுனிந்து, மஹாதுக்கத்தை அடைந்து, ஆவேசத்துடன் இவ்வாறு பேசினார்:(7ஆ,8அ) "மிகப் பெருந்தவத்தைச் செய்திருந்தாலும், ரிஷிகணங்களும், தேவர்கள் அனைவரும் என்னை ராஜரிஷி என்றே கொள்கின்றனர். என் தவத்திற்கான கனி கிட்டவில்லை என்றே நினைக்கிறேன்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(8ஆ,9அ) காகுத்ஸ்தா {காகுத்ஸ்தனின் வழித்தோன்றலான ராமா}, மஹாதபஸ்வியான அந்தப் பரமாத்மவான் {விஷ்வாமித்ரர்}, இவ்வாறு தம் மனத்தில் தீர்மானித்து, மீண்டும் பரம தவம் செய்வதில் ஈடுபட்டார்.(9ஆ,10அ)

அதே காலத்தில், சத்யவாதியும், ஜிதேந்திரியனும் {புலன்களை வென்றவனும்}, இக்ஷ்வாகு குலவர்தனனுமான {இக்ஷ்வாகு குலத்தைச் செழிக்கச் செய்பவனுமான} திரிசங்கு என்றொருவன் இருந்தன்.(10ஆ,11அ) இராகவா, "சொந்த சரீரத்துடன் {உடலுடன்} தேவர்களின் பரம கதியில் {சுவர்கத்திற்குச்} செல்ல நான் ஒரு யஜ்ஞம் {வேள்வி} செய்வேன்" எனப் புத்தியில் தீர்மானித்த அவன் {திரிசங்கு}, வசிஷ்டரை அழைத்துத் தன் சிந்தனையைச் சொன்னான்.(11ஆ,12)

மஹாத்மாவான வசிஷ்டர், "இது சாத்தியமில்லை" என்றார். வசிஷ்டரால் நிராகரிக்கப்பட்ட அவன் {திரிசங்கு}, தக்ஷிண திசைக்கு {தென் திசைக்கு}ச் சென்றான். தன் காரியத்தை உணர்ந்த அந்த நிருபன் {மன்னன் திரிசங்கு} அவரது {வசிஷ்டரின்} புத்திரர்களிடம் சென்றான்.(13,14அ) தீர்க்க தவம் செய்து வந்தவர்களும், மஹாதேஜஸ்விகளும், வாசிஷ்டர்களும் {வசிஷ்டரின் மகன்களும்}, பேரொளி கொண்டவர்களும், தீவிர தவத்தில் இருந்த உன்னதர்களுமான அந்த வசிஷ்ட புத்திரர்களிடம் அந்தத் திரிசங்கு சென்றான்.(14ஆ,15)

அவன் {திரிசங்கு}, மஹாத்மாக்களும், குருசுதன்களுமான {தன் குருவின் மகன்களுமான} அவர்களிடம் சென்று, சற்றே குனிந்த முகத்துடன் கைகளைக் கூப்பி, வயதுக்குகந்த வரிசையில் அந்த மஹாத்மாக்களை மதித்து, அனைவரிடமும் இவ்வாறு பேசினான்:(16,17அ) "உங்களை நான் சரணடைகிறேன். புகலிடமளிக்கும் உங்களிடம் நான் சரணடைகிறேன். நீங்கள் மங்கலமாக இருப்பீராக. மஹாத்மாவான வசிஷ்டரால் நான் நிராகரிக்கப்பட்டேன்.(17ஆ,18அ) ஒரு மஹாயஜ்ஞம் செய்ய நான் ஏங்குகிறேன். இதற்குச் சம்மதிப்பதே உங்களுக்குத் தகும். என் குருவின் புத்திரர்களான உங்கள் அனைவரையும் நான் நமஸ்கரிக்கிறேன் {வணங்குகிறேன்}.(18ஆ,19அ) தலைவணங்கி நான் உங்களை வழிபடுகிறேன். தவம் செய்யும் உங்களைப் போன்ற பிராமணர்களை நான் யாசிக்கிறேன். நீங்கள் அனைவரும், ’சரீரத்துடன் {உடலுடன்} தேவலோகத்திற்குச் செல்லும் வகையில் எனக்காக ஒரு யஜ்ஞத்தைச் செய்ய வேண்டும்’ என நான் வேண்டுகிறேன்.(19ஆ,20) தபோதனர்களே {தவத்தையே செல்வமாகக் கொண்டவர்களே}, வசிஷ்டரால் நிராகரிக்கப்பட்ட நான், குருபுத்திரர்களான உங்களைத் தவிர வேறு எந்தக் கதியையும் {வழியையும்} காணவில்லை.(21) இக்ஷ்வாகுக்கள் அனைவருக்கும் புரோஹிதத்தில் பரம கதியான அவருக்கு {வசிஷ்டருக்கு} அடுத்தபடியாக இருக்கும் நீங்கள் அனைவரும் எனக்குத் தேவர்களைப் போன்றவர்கள்" {என்றான் திரிசங்கு}.(22) 

பாலகாண்டம் சர்க்கம் – 57ல் உள்ள சுலோகங்கள் : 22

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்