Thursday, 25 September 2025

மீண்டும் திரும்பிய தேர் | யுத்த காண்டம் சர்க்கம் – 104 (27)

The return of the chariot | Yuddha-Kanda-Sarga-104 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சாரதியைக் கண்டித்த ராவணன்; இராவணனை நிறைவடையச் செய்து மீண்டும் போர்க்களத்திற்குத் தேரைச் செலுத்திய சாரதி...

Ravana reproaches his charioteer

கிருதாந்த பலத்தால் {வினைப்பயனின் / விதியின் சக்தியால் தூண்டப்பட்ட} அந்த ராவணன், குரோதத்தால் நயனங்கள் {கண்கள்} சிவந்து, மோஹத்தால் சூதனிடம் {அறியாமையால் தேரோட்டியிடம் பின்வருமாறு} கூறினான்:(1) "பௌருஷமற்று {ஆண்மையற்று}, சக்தியற்று, வீரியம் குறைந்து, தேஜஸ்ஸை இழந்து, பயந்த லகுவானவனை {எளிமையானவனைப்} போலவும்,{2} மாயை கைக்கூடாமல், அஸ்திரங்களுக்கு விலக்கானவனைப் போலவும் என்னைப் புறக்கணித்துவிட்டு, துர்புத்தியைக் கொண்டவனே, உன் சொந்த புத்திக்கிணங்க நீ செயல்படுகிறாய்.(2,3) என் விருப்பத்தைப் புறக்கணித்து, சத்ருக்களின் முன் என்னை அவமதித்து, என்னுடைய இந்த ரதத்தை என்ன அர்த்தத்திற்காக அப்புறம் கொண்டு வந்தாய்?(4) அநாரியா {இழிந்தவனே}, நீண்ட காலமாக நான் ஈட்டிய புகழ், தேஜஸ் {வலிமை}, நம்பிக்கை ஆகியவை இதோ உன்னால் அழிக்கப்பட்டன.(5)

சிறப்புமிக்க வீரியத்துடன் கூடிய சத்ரு, தன் விக்ரமத்தால் பிறர் விரும்பத்தக்கவனாக இருக்கையில், யுத்த லுப்தனான நான், உன்னால் காபுருஷனாக்கப்பட்டேன் {போரில் பேராவல் கொண்டவனான நான், உன்னால் கோழையாக்கப்பட்டேன்}.(6) துர்மதியைக் கொண்டவனே, எத்தகைய மோஹத்தால் நீ இந்த ரதத்தைச் செலுத்தாமல் இருக்கிறாயோ, அத்தகையவனான நீ பகைவனால் ஏற்பாடு செய்யப்பட்டவன் என்ற என் எதிர்வாதம் சத்தியமானது.(7) உன்னால் எது அனுஷ்டிக்கப்படுகிறதோ, அது ரிபுக்களுக்கு {பகைவருக்குத்} தகுந்தது. என் ஹிதத்தை விரும்பும் {நலத்தை நாடும்} நண்பனின் கர்மம் இதுவல்ல.(8) நீ என்னுடன் வெகு காலமாக இருப்பதும், {வெகுமதி கொடுத்த} என் குணங்களும் உன் நினைவில் இருந்தால், என் ரிபு {பகைவன்} திரும்பிச் செல்வதற்கு முன், சீக்கிரமாக ரதத்தைத் திருப்பிச் செலுத்துவாயாக" {என்றான் ராவணன்}.(9)

Ravana and his charioteer

இவ்வாறு புத்தியற்றவனால் கடுமையாகச் சொல்லப்பட்டதும், ஹித புத்தி கொண்டவனான சூதன், ராவணனிடம் {பின்வரும்} நயமிக்க சொற்களை நட்புடன் கூறினான்:(10) "நான் பீதியடைந்தவனல்ல. நான் மூடனல்ல. நான் சத்ருக்களால் வெல்லப்பட்டவனல்ல. நான் பிரமத்தனோ {அலட்சியம் செய்பவனோ / பைத்தியக்காரனோ}, சினேகமற்றவனோ, உமது சத்கிரியைகளை {செய்த நன்மைகளையோ} மறந்தவனோவல்ல.(11) ஹிதத்தை {நன்மையை} விரும்புகிறவனும், புகழைப் பாதுகாக்கிறவனும், சினேகம் நிறைந்த மனம் கொண்டவனுமான என்னால், ஹிதத்திற்காகவே {உமது நன்மைக்காகவே உமக்குப்} பிரியமற்றது செய்யப்பட்டது.(12) மஹாராஜாவே, ஏதோவொரு லகுவான அனாரியனைப் போல, உமது பிரியத்தையும், நன்மையையும் விரும்பும் என்னிடம் இந்த அர்த்தத்தில் தோஷங்காண்பது உமக்குத் தகாது.(13)  நீர்ப்பெருக்கால் {மேட்டை அடைந்து திரும்பும்} நதி வேகத்தைப் போலப் போரில் இருந்து எதன் நிமித்தம் ரதம் திருப்பிக் கொண்டுவரப்பட்டது என்பதற்கான என் மறுமொழியைக் கேட்பீராக.(14) 

மஹத்தான ரணகர்மத்தில் உமது சிரமத்தை {பெரும் போர் செய்ததில் நீர் சோர்ந்திருப்பதை} நான் புரிந்து கொண்டேன். சூரரே, உமது முகத்தில் வீரியத்தையும் {உற்சாகத்தையும்}, தெளிவையும் நான் காணவில்லை.(15) என் ரதத்தின் வாஜிகள் {குதிரைகள்}, ரதத்தை இழுப்பதில் வருத்தமுற்று பங்கமடைந்தன. வெப்பத்தால் சோர்வடைந்து, மழையால் பீடிக்கப்பட்ட பசுக்களைப் போல, தீனமடைந்து முற்றிலும் களைத்தன.(16) 

நமக்குத் தோன்றும் ஏராளமான நிமித்தங்களை ஆராய்ந்ததில், ஒவ்வொன்றிலும் அபிரதக்ஷிணத்தையே {மங்கலமின்மையையே} கவனிக்கிறேன்.(17) தேச, காலங்களும் {தகுந்த இடமும், காலமும்}, லக்ஷணங்களும் {சகுனங்களும்}, இங்கிதங்களும் {தெளிவு, கலக்கம் உள்ளிட்ட அறிகுறிகளும்}, இன்பதுன்பங்களும், ரதிகரின் {தேர்வீரரின்} களைப்பும், பலாபலமும் {சாரதியால்} புரிந்து கொள்ளப்பட வேண்டும்.(18) பூமியின் ஸ்தலநிம்னங்களும் {மேடுபள்ளங்களும்}, சமம், சமமில்லாத இடங்களும், யுத்தத்திற்குத் தகுந்த காலங்களும், மாற்றானின் அந்தரதர்சனமும் {பகைவனுடைய உள் பலவீனமும், சாரதியால்} புரிந்து கொள்ளப்பட வேண்டும்.(19) உபயான, அபயானங்களும் {அணுகுதலும், பின்வாங்குதலும் / கிட்டுவதும், எட்டுவதும்}, ஸ்தானத்தில் இருத்தலும், விலகுதலும், ரதத்தை நிறுத்தலும், செலுத்தலும் என இவை யாவும் ரதஸ்தனால் {தேரோட்டியால்} அறியப்பட வேண்டும்.(20)

நீர் சிரமத்தில் இருந்து விடுபடுவதற்கு ஹேதுவாகவும், அதேபோல, இந்த ரதவாஜிகளின் ரௌத்திரமான களைப்பைப் போக்கவும், என்னால் இந்த க்ஷமம் {பொறுக்கத்தகுந்த / மன்னிக்கத்தகுந்த செயல்} செய்யப்பட்டது.(21) வீரரே, பிரபோ, இந்த ரதம் ஸ்வேச்சையாக {தன்னிச்சையாக} என்னால்  ஓட்டிவரப்படவில்லை. என்னால் எது செய்யப்பட்டதோ, அது தலைவர் மீது கொண்ட சினேகத்தால் செய்யப்பட்டது.(22) அரிசூதனரே {பகைவரை அழிப்பவரே}, வீரரே,  ஆணையிடுவீராக. எப்படி நீர் சொல்கிறீரோ, அப்படியே கடமையுணர்வுமிக்க உள்ளத்துடன் நான் செயல்படுவேன்" {என்றான் சாரதி}.(23)

அந்த சாரதியின் அந்த வாக்கியத்தால் மகிழ்ச்சியடைந்த ராவணன், {அவனைப்} பலவாறு புகழ்ந்து, யுத்தலுப்தத்துடன் {போரில் பேராவலுடன்} இதைக் கூறினான்:(24) "சூதா, இந்த ரதத்தை சீக்கிரம் ராகவனை நோக்கிச் செலுத்துவாயாக. இராவணன், சமரில் சத்ருவை வதைக்காமல் திரும்ப மாட்டான்" {என்றான் ராவணன்}.(25)

இராக்ஷசேஷ்வரனான ராவணன் இதைச் சொல்லிவிட்டு மகிழ்ச்சியடைந்தான். அவனுக்கு சுபமான, உத்தமமான ஹஸ்தாபரணத்தை {அழகிற்சிறந்த கைவளையைக்} கொடுத்தான்.{26} அந்த சாரதி, ராவணனின் வாக்கியத்தைக் கேட்டுத் திரும்பினான்.(26,27அ) அந்த சாரதி, ராவணனின் வாக்கியத்தால் தூண்டப்பட்டபோது, ஹயங்களை {குதிரைகளைத்} தூண்டி விரைந்து செலுத்தினான். பிறகு, ராக்ஷசேந்திரனுக்குரிய அந்த மஹாரதம், ஒரு க்ஷணத்தில் ராமனுடைய ரதத்தின் முன் நின்றது.(27ஆ,இ)

யுத்த காண்டம் சர்க்கம் – 104ல் உள்ள சுலோகங்கள்: 27

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை