Ravana's sorrow for his son | Yuddha-Kanda-Sarga-072 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அதிகாயனின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்டு சோகத்தில் மூழ்கிய ராவணன், லங்கையின் பாதுகாப்பு குறித்த கவலையில், ராட்சசர்களை கவனமாக இருக்குமாறு கட்டளையிட்டது...
மஹாத்மாவான லக்ஷ்மணன்[1] அதிகாயனைக் கொன்றதைக் கேட்ட பதற்றத்தினால் ராஜா {ராவணன்} இந்த வசனத்தைக் கூறினான்:(1) "பொறுத்துக் கொள்ள முடியாதவரும் {கோபக்காரரும்}, தன்வியுமான {வில்லுடன் கூடியவருமான} தூம்ராக்ஷர், சஸ்திரங்களில் நிபுணர்களான அகம்பனர், பிரஹஸ்தர், அதேபோல கும்பகர்ணன்{2} ஆகிய இவர்கள் மஹாபலவான்கள்; யுத்தத்தை விரும்பும் வீர ராக்ஷசர்கள்; பரசைனியங்களை {பகைவரின் படைகளை} வெல்பவர்கள்; பகைவர்களால் ஒருபோதும் வெல்லப்படாதவர்கள்.{3} களைப்பின்றி ஏராளமான கர்மங்களைச் செய்யும் வீரனான ராமன், பேருடல் படைத்தவர்களும், நானாவித அஸ்திரங்களில் விசாரதர்களுமான {அந்த} ராக்ஷசர்களையுங்கூட கொன்றுவிட்டான்.{4} மஹாத்மாக்களும், சூரர்களுமான வேறு பலரையும் அழித்துவிட்டான்.{2-5அ)
[1] செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில் இந்த சர்க்கம் கிடையாது.
பலத்திற்காகவும், வீரியத்திற்காவும் புகழ்பெற்ற என் புத்திரன் இந்திரஜித், {தனக்கு} வரமாக தத்தம் செய்யப்பட்ட கோரமான சரங்களால் பிராதாக்கள் {உடன்பிறந்தோரான ராமலக்ஷ்மணர்கள்} இருவரையும் பந்தனம் செய்தான் {கட்டிப்போட்டான்}.(5ஆ,6அ) மஹாபலவான்களான சர்வ ஸுராஸுரர்களுக்கும் {தேவர்கள், அசுரர்கள் அனைவருக்கும்} எது சாத்தியமில்லாததோ,{6ஆ} யக்ஷ, கந்தர்வ, பன்னகர்களுக்கும் {எது} கோரமானதோ, அந்த பந்தனத்திலிருந்து விடுபடுவது, பிரபாவத்தாலோ? மாயையாலோ? மோஹத்தாலோ {மந்திர வஞ்சனையாலோ}? நான் அறியமாட்டேன்.{7} அந்தச் சர பந்தனத்திலிருந்து பிராதாக்களான {உடன்பிறந்தோரான} ராமலக்ஷ்மணர்கள் இருவரும் விடுபட்டனர்.(6ஆ-8அ)
இராக்ஷசப் போர்வீரர்களில் எந்த சூரர்கள், என் சாசனத்தின் {ஆணையின்} பேரில் யுத்தத்திற்குப் புறப்பட்டுச் சென்றனரோ, அவர்கள் அனைவரும் மஹாபலவான்களான வானரர்களால் கொல்லப்பட்டனர்.(8ஆ,9அ) இன்றைய யுத்தத்தில், லக்ஷ்மணனுடன் கூடிய ராமனையும், படைகளுடன் கூடிய சுக்ரீவ, விபீஷணர்களையும் நாசமடையச் செய்யக் கூடிய எந்த வீரனையும் நான் பார்க்கவில்லை.(9ஆ,10அ) அஹோ! எவனுடைய விக்ரமத்தால் ராக்ஷசர்கள் கொல்லப்பட்டனரோ, அந்த ராமன் பலவானே. அவனது அஸ்திர பலமும் மஹத்துவம் வாய்ந்ததே.(10ஆ,11அ)
இந்தப் புரீயும் {இந்த லங்கை நகரமும்}, சீதை இருக்கும் அசோகவனிகையும் அனைத்துப் பக்கங்களிலும் குல்மங்களால் {படைப்பிரிவுகளால்} விழிப்புடன் ரக்ஷிக்கப்படுகின்றன.(11ஆ,12அ) எங்கெங்கே குல்மங்கள் {படைப்பிரிவுகள்} எப்போதும் இருக்கின்றனவோ, அந்தந்த இடங்களில் ஏற்படும் {எந்த} வெளியேற்றத்தையோ, பிரவேசத்தையோ மீண்டும், மீண்டும் நாம் அறிய வேண்டும்.(12ஆ,13அ) நிசாசரர்களே {இரவுலாவிகளான ராக்ஷசர்களே}, அவரவர் படைகளால் எங்கும் சூழப்பட்டவர்களாகவே இருந்து, அந்த வானரர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பீராக[2].(13ஆ,14அ) பிரதியுஷையிலோ {விடியற்காலையிலோ}, அர்த்தராத்திரியிலோ, பிரதோஷத்திலோ {மாலையிலோ}, எங்கும், எப்போதும்,{14ஆ} எவ்வழியிலேனும் வானரர்களிடம் அலட்சியம் காட்டலாகாது. செயல்பாடின்றி நின்று கொண்டிருந்தாலும், சதா முன்னேறிக் கொண்டிருந்தாலும் பலம் {அந்த வானரப்படை} கண்காணிக்கப்பட வேண்டும்" {என்றான் ராவணன்}.(14ஆ,15)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஸீதையைக் காக்கும் அசோகவனிகையில் எவனையாயினும், எவ்விதத்திலும் எமக்குத் தெரியாமல் உள்ளே விடக்கூடாது; வெளியிலும் போக விடலாகாது. மற்றும் எங்கெங்கு ஸேனை இருக்கிறதோ, ஆங்காங்கு முழுவதும், அவரவர்குள்ள ஸேனைகளால் சூழப்பட்டுக் கண்ணோக்க முற்று அடிக்கடி திரிந்து கொண்டிருக்க வேண்டும்" என்றிருக்கிறது.
அப்போது, மஹாபலவான்களான அந்த ராக்ஷசர்கள் அனைவரும், லங்காதிபனின் {ராவணனின்} அந்த வசனத்தைக் கேட்டு, அதன்படியே {அந்தக் கட்டளையின்படியே} அனைத்தையும் செய்தனர்.(16) இராக்ஷசாதிபனான அந்த ராவணன், அவர்கள் {ராக்ஷசர்கள்} அனைவரையும் அறிவுறுத்திவிட்டு, துயரமென்னும் முள் துளைத்த தீனனாகத் தன் ஆலயத்திற்குள் {தன் வீட்டிற்குள்} பிரவேசித்தான்.(17) மஹாபலவானும், நிசாசரர்களின் அதிபனுமான அவன் {ராவணன்}, கோபத்தீ மூண்டவனாக, அந்த புத்திர வியசனத்தை {சோகத்தைச்} சிந்தித்தபடியே, மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தான்.(18)
யுத்த காண்டம் சர்க்கம் – 072ல் உள்ள சுலோகங்கள்: 18
Previous | | Sanskrit | | English | | Next |