Tuesday, 27 May 2025

அதிகாயனின் வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 071 (116)

Atikaya killed | Yuddha-Kanda-Sarga-071 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அதிகாயனின் தோற்றம் கண்டு பயந்த வானரர்கள்; ராமனை நோக்கிச் சென்று தற்புகழ்ச்சி செய்த அதிகாயன்; பயங்கர யுத்தம் செய்து அதிகாயனைக் கொன்ற லக்ஷ்மணன்...

Atikaya Rama Vibheeshana, digital art made by copilot inspired by a Chandamama image

உரோமஹர்ஷணம் கொள்ளும் {மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும்} வகையில் தன் பலம் {படை} கொந்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டும், சக்ரனுக்கு {இந்திரனுக்குத்} துல்லியமான பராக்கிரமத்தைக் கொண்ட தன் பிராதாக்கள் {தன்னுடன் பிறந்தோர்} கொல்லப்படுவதைக் கண்டும்,{1} தன் பித்ருவ்யர்களும் {சிற்றப்பன்மாரும்}, ராக்ஷசரிஷப பிராதாக்களுமான {ராக்ஷசர்களில் உடன்பிறந்த காளைகளுமான} யுத்தோன்மத்தனும், மத்தனும் {மஹோதரனும், மஹாபார்ஷ்வனும்} போரில் வீழ்ந்ததைக் கண்டும்,{2} மஹாதேஜஸ்வியும், பிரம்மனால் வரங்கள் தத்தம் செய்யப்பட்டவனும், அத்ரிக்கு {மலைக்கு} ஒப்பானவனும், போரில் தேவதானவர்களின் செருக்கை அழிப்பவனுமான அதிகாயன் கோபமடைந்தான்.(1-3) சக்ராரியான அவன் {இந்திரனின் பகைவனான அதிகாயன்}, ஆயிரம் பாஸ்கரர்களின் {சூரியர்களின்} சங்கமத்தைப் போல் ஒளிரும் ஒரு ரதத்தில் ஏறி, வானரர்களை நோக்கி விரைந்தான்.(4) கிரீடியும் {கிரீடம் தரித்தவனும்}, தூய குண்டலங்களை அணிந்தவனுமான அவன் {அதிகாயன்}, சாபத்தை {வில்லை} வளைத்து, தன் நாமத்தை {பெயரை} உரக்க அறிவித்தபடியே மஹாஸ்வனத்துடன் நாதம் செய்தான்.(5) அவன், அந்த சிம்மநாதத்தாலும், உரக்க அறிவிக்கும் தன் பெயராலும், பயங்கரமான  நாணொலியாலும் பயத்தை விளைவித்தபடியே வானரர்களை அச்சுறுத்தினான்.(6)

அவனது தேக மாஹாத்மியத்தை {அதிகாயனின் உடல் மகத்துவத்தைக்} கண்ட அந்த வானரர்கள் அனைவரும், கும்பகர்ணன் எழுந்துவிட்டான் என்ற பயத்தால் பீடிக்கப்பட்டு பரஸ்பரம் தஞ்சம் புகுந்தனர் {ஒருவரையொருவர் பற்றிப் பிணைந்து கொண்டனர்}.(7) அந்த வானரப் போர்வீரர்கள், திரிவிக்கிரமனான விஷ்ணுவை போன்ற அவனது ரூபத்தைக் கண்டு {வாமன அவதாரத்தில் தன்னுடைய காலடிகள் மூன்றால் உலகத்தை அளந்த விஷ்ணுவைப் போன்ற அவனது வடிவத்தைக் கண்டு} பயத்தால் பீடிக்கப்பட்டு, அங்கேயும், இங்கேயும் ஓடினார்கள்.(8) தாக்கப்பட வேண்டிய அதிகாயனால் மனம் கலங்கிய வானரர்கள், போரில் சரண்யனான லக்ஷ்மணாக்ரஜனிடம் சரணம் அடைந்தனர் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமனிடம் தஞ்சம்புகுந்தனர்}.(9) அப்போது காகுத்ஸ்தன் {ராமன்}, பர்வதத்திற்கு ஒப்பாக ரதத்தில் இருப்பவனும், தன்வியும், காலமேகத்தைப் போல கர்ஜிப்பவனுமான அதிகாயனை தூரத்தில் இருந்து கண்டான்.(10) 

பேருடல் கொண்டவனான அவனைக் கண்டு, சற்றே ஆச்சரியமடைந்த அந்த ராகவனும், வானரர்களை சாந்தமடையச் செய்துவிட்டு, விபீஷணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(11) "பர்வதத்திற்கு ஒப்பானவனும், தனுஷ்மானும் {வில்லேந்தியவனும்}, ஹரிலோசனனும் {பழுப்பு நிறக் கண்களைக் கொண்டவனும்}, ஆயிரம் ஹயங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்ட விசாலமான சியந்தனத்தில் {தேரில்} அமர்ந்திருப்பவனுமான இவன் எவன்?(12) கூரிய சூலங்கள், மிகக்கூரிய பராசங்கள், தோமரங்களுடன் கூடிய இவன், பூதங்களால் சூழப்பட்ட மஹேஷ்வரனை {சிவனைப்} போல ஒளிர்கிறான்.(13) காலனின் நாவுகளைப் போலப் பிரகாசிப்பவனான இவன், மின்னலுடன் கூடிய மேகத்தைப் போல, ரதசக்திகளுடன் {தேரில் கொடிகளைத் தாங்கும் தண்டங்களுடன்}[1] திரிகிறான்.(14) ஹேமப்ருஷ்டங்களைக் கொண்ட தனு, அம்பரத்தில் சக்ரசாபத்தைப் போல {பொன்மயமான பின்புறத்தடன் கூடிய விற்கள், வானத்தில் இந்திரவில்லை / வானவில்லைப் போல}, இவனது ரதத்தை எங்கும் ஒளிரச் செய்கிறது.(15) 

[1] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "மூலத்தில் ரதசக்தி என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. சக்தி என்பது ஈட்டியாகும். ரதசக்தி என்பது தேரில் கொடியைத் தாங்கும் தண்டமாகும். எனவே, இவை சிறப்பு வகை ஈட்டிகளாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது.

இரண பூமியை விளங்க {போர்க்களத்தை ஒளிரச்} செய்து கொண்டு, ஆதித்யனின் ஒளியுடன் கூடிய ரதத்தில் வருபவனும், ராக்ஷசசார்தூலனும், ரதிகளில் சிரேஷ்டனுமான {ராக்ஷசப் புலியும், தேர்வீரர்களில் சிறந்தவனுமான} இவன் யார்?{16} சூரியக் கதிர்களின் பிரபைக்கு ஒப்பான பாணங்களால், பத்து திசைகளையும் ஒளிரச் செய்யும் இவன், தன் துவஜசிருங்கத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ராஹுவினால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்[2].(16,17) மூன்று வளைவுகளையும், ஹேமத்தால் அலங்கரிக்கப்பட்ட பிருஷ்டத்தையும் {பொன்னாலான பின்புறத்தையும்}, மேகத்தின் ஒலியையும் கொண்ட இவனது தனு {வில்}, சக்ரதனுவை {இந்திரனின் வில்லை / வானவில்லைப்} போல ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.(18) துவஜத்துடனும், பதாகையுடனும், நுகத்தடியுடனும், நான்கு சாரதிகளுடனும் கூடிய {இவனது} மஹாரதம், மேகத்தின் ஸ்வனத்தை எழுப்புகிறது.(19) முப்பத்தெட்டு தூணிகள் {அம்பறாத்தூணிகள்}, பயங்கரமான கார்முகங்கள் {விற்கள்}, காஞ்சனப் பிங்கள {பொன், பழுப்பு} நிறங்களிலான நாண்கள் ஆகியவை இவனது ரதத்தில் இருக்கின்றன.(20) 

[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "இவன் ஸூர்யகிரணம் போன்ற பாணங்களால் பத்துத் திசைகளையும் ப்ரகாசிக்கச் செய்துகொண்டு த்வஜத்தின் நுனியிலுள்ள ராஹுவால் மிகுதியும் விளங்குகின்றனன்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "கொடிமரத்தின் மேல் பகுதியில் ராகுவின் சித்திரம் தீட்டிய கொடி விளங்குகிறது. சூரியனின் செங்கதிர்களுக்கொப்பான பாணங்களால் பத்துத் திசைகளும் ஒளி பெறுகின்றன" என்றிருக்கிறது.

தெளிவாகப் பத்து ஹஸ்தம் {பத்து முழம்} நீளமுள்ளவையும், {கைப்பிடிகள்} நான்கு ஹஸ்தம் {நான்கு முழம்}  கொண்டவையும்[3], இரு பக்கமும் கூர்மையுடன் பிரகாசிப்பவையுமான கட்கங்கள் {வாள்கள்} இரண்டு ரதத்தில் தொங்குகின்றன.(21) கண்டத்தில் {கழுத்தில்} சிவந்த மாலையால் அலங்கரிக்கப்பட்டவனும், மஹாபர்வதத்திற்கு ஒப்பானவனும், காலனைப் போன்றக் கரிய, பெரும் வாயைக் கொண்டவனுமான இந்த தீரன், மேகத்தால் மறைக்கப்பட்ட பாஸ்கரனை {சூரியனைப்} போலத் தெரிகிறான்.(22) காஞ்சன அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட புஜங்களுடன் கூடிய இவன், இரு சிருங்கங்களுடன் கூடிய ஹிமவானை {இமய மலையைப்} போல சோபிக்கிறான்.(23) சுபமான விழிகளுடனும், குண்டலங்கள் இரண்டுடனும் கூடிய இவனது முகம், புனர்வசு {புனர்பூச} நக்ஷத்திரங்களுக்கு மத்தியில் பரிபூரண நிசாகரனை {பௌர்ணமி நிலவைப்} போல ஒளிர்கிறது.(24) மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்ட விபீஷணா}, எவனைக் கண்டு, சர்வ வானரர்களும் பயத்தால் பீடிக்கப்பட்டவர்களாகத் திசைகளெங்கும் ஓடுகிறார்களோ, அத்தகையவனான இந்த ராக்ஷசோத்தமனைக் குறித்து நீ எனக்குச் சொல்வாயாக" {என்று விபீஷணனிடம் கேட்டான் ராமன்}.(25)

[3] விவேக் தேவ்ராய் பதிப்பில் இந்த ஹஸ்தம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் Cubit என்ற சொல் முழம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "நான்கு கியூபிட்கள் அளவு என்பது கைப்பிடிக்கா? வாளுறைக்கா? என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை" என்றிருக்கிறது.

அமிததேஜஸ்வியும் {அளவில்லா ஆற்றல் கொண்டவனும்}, ராஜபுத்திரனுமான ராமனால் {இவ்வாறு} கேட்கப்பட்டதும், மஹாதேஜஸ்வியான அந்த விபீஷணன், ராகவனிடம் {பின்வருமாறு} கூறினான்:(26) "மஹாதேஜஸ்வியான ராஜா தசக்ரீவர், வைஷ்ரவணானுஜராவார் {குபேரனின் தம்பியாவார்}. இராக்ஷசாதிபதி ராவணர், மஹா உற்சாகத்துடன் பயங்கர கர்மங்களைச் செய்யக்கூடியவர்.(27) இரணத்தில் ராவணருக்கே ஒப்பான இந்த வீரியவான் அவருடைய புத்திரன். இவன் பெரியோரை சேவிப்பவன்; சுருதியை {வேதத்தைக்} கேட்டவர்களில் சிறந்தவன்; சர்வ அஸ்திரங்களிலும் நிபுணன்.(28) அஷ்வம் {குதிரை}, ரதம், நாகம் {யானை} ஆகியவற்றில் ஏறுவதிலும், கட்கம் {வாள்} வீசுவதிலும், தனுசு {வில்} வளைப்பதிலும், சாந்த {சாம}, தான, பேத உபாயங்களிலும், புதிய ஆலோசனைகளை வழங்குவதிலும் வல்லவன்.(29) எவனுடைய தோள்களில் அடைக்கலம் புகுந்து லங்கை நிர்பயமாக {அச்சமற்றதாக} இருக்கிறதோ, அத்தகைய இந்த தான்யமாலினி தனயனை {தான்யமாலினியின் மகனை}[4] அதிகாயன் என்று அறிவீராக.(30) 

[4] சுந்தரகாண்டம் 22ம் சர்க்கத்தில், 39 முதல் 44ம் சுலோகம் வரை இந்த தான்யமாலினி குறித்துச் சொல்லப்படுகிறது. விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த தான்யமாலினி ஏற்கனவே குறிப்பிடப்பட்டபோது, இவள் ராவணனின் மனைவி என்பது நமக்குச் சொல்லப்படவில்லை" என்றிருக்கிறது.

பாவிதாத்மனான இவன் {பரமாத்மாவை தியானித்து, ஆத்மத் தூய்மையடைந்த அதிகாயன்}, பிரம்மனை ஆராதித்து, அஸ்திரங்களை அடைந்து, ரிபுக்களை {பகைவரை} வென்றான்.(31) ஸுராஸுரர்களால் வதைக்கப்படாமையும் {தேவாசுரர்களால் கொல்லப்படாத வரமும்}, இந்த திவ்ய கவசமும், ரவி {சூரியன்} போல் ஒளிரும் ரதமும் இவனுக்கு ஸ்வயம்பூவால் தத்தம் செய்யப்பட்டன {பிரம்மாவால் வரமாகத் தரப்பட்டன}.(32) இவன் தேவர்களையும், தானவர்களையும் நூற்றுக்கணக்கான முறை வென்றிருக்கிறான்; யக்ஷர்களையும் அழித்திருக்கிறான்; ராக்ஷசர்களை ரக்ஷித்திருக்கிறான்.(33) எவனுடைய பாணங்களால் யுத்தத்தில் மதிமிக்க இந்திரனின் வஜ்ரமும் ஸ்தம்பித்ததோ, அதே போல சலீலராஜனின் பாசமும் {வருணனின் பாசக்கயிறும்} வீழ்த்தப்பட்டதோ,{34} அத்தகைய இந்த அதிகாயன், பலவான்; ராக்ஷசர்களில் ரிஷபன் {காளை}. மதிமிக்கவனான இந்த ராவணசுதன் {ராவணனின் மகனான அதிகாயன்} தேவதானவர்களின் செருக்கை அழித்தவன்.(34,35) எனவே, புருஷபுங்கவரே {மனிதர்களில் முதன்மையான ராமரே}, வானர சைனியத்தைத் தன் சாயகங்களால் {கணைகளால்} இவன் அழிப்பதற்கு முன், சீக்கிரமே யத்னம் செய்ய {முயற்சிக்க} வேண்டும்" {என்றான் விபீஷணன்}.(36)

அப்போது, பலவான் அதிகாயன், ஹரிவாஹினிக்குள் பிரவேசித்து, தனுவை வளைத்தபடியே மீண்டும் மீண்டும் நாதம் செய்தான்.(37) இரதத்தில் வீற்றிருப்பவனும், ரதிகர்களில் சிறந்தவனுமான அந்தப் பயங்கர உடல் படைத்தவனைக் கண்டு மஹாத்மாக்களான பிரதான வனௌகசர்கள் எதிர்த்துச் சென்றனர்.(38) குமுதன், துவிவிதன், மைந்தன், நீலன், சரபன் ஆகியோர் மரங்களையும், கிரிசிருங்கங்களையும் {மலைச் சிகரங்களையும்} எடுத்துக் கொண்டு, ஒரே நேரத்தில் எதிர்த்துச் சென்றனர்.(39) அஸ்திரவிதங்களை அறிந்தவர்களில் சிறந்தவனும், மஹாதேஜஸ்வியுமான அதிகாயன், கனக பூஷணத்துடன் {பொன்னலங்காரத்துடன்} கூடிய தன் சரங்களால் அவர்களின் விருக்ஷங்களையும், சைலங்களையும் {மரங்களையும், மலைகளையும்} வெட்டி வீழ்த்தினான்.(40) பலவானும், விசாரதனும் {நிபுணனும்}, பயங்கர உடலைக் கொண்டவனுமான அவன் {அதிகாயன்}, யுத்தத்தில் தன்னை எதிர்த்து வரும் அந்த ஹரீக்கள் {குரங்குகள்} யாவரையும், முற்றிலும் இரும்பாலான சரங்களால் தாக்கினான்.(41) மஹாரணத்தில் {பெரும்போரில்} அதிகாயனின் பாணவர்ஷத்தால் {கணைமழையால்} கடுமையாகத் தாக்கப்பட்டு, உடல் பிளக்கப்பட்ட அந்தப் பிலவங்கமர்களால் பதிலடியேதும் கொடுக்க முடியவில்லை.(42) யௌவனச் செருக்குடன் {இளமையின் செருக்குடன்} கூடி அந்த ராக்ஷசன் {அதிகாயன்}, குரோதமடைந்த ஹரி மிருகயூதத்தைப் போல {சினங்கொண்ட சிங்கம் மான்கூட்டத்தை அச்சுறுத்துவதைப் போல}, அந்த ஹரி வீரர்களின் சைனியத்தை {குரங்குப் படையை} அச்சுறுத்தினான்.(43)

அந்த ராக்ஷசேந்திரன், யுத்தம் செய்யாத ஹரியூதர்களின் மத்தியில் எவரையும் தாக்காதிருந்தான். தனுவுடனும், கலாபத்துடனும் {வில்லுடனும், அம்பறாத்தூணியுடனும்} கூடிய அவன் {அதிகாயன்}, ராமனிடம் விரைந்து சென்று, கர்வம் நிறைந்த இந்த வாக்கியத்தை மொழிந்தான்:(44) "சர, சாப பாணியாக {கையில் கணைகளையும், வில்லையும் கொண்டு} ரதத்தில் அமர்ந்திருக்கும் நான், பிராக்ருதர்கள் {சாதாரணர்கள்} எவருடனும் யுத்தம் செய்வதில்லை. எவனுக்கு சக்தியும், வியவசாய யுக்தமும் {முயற்சியும் பொருந்தி} இருக்கிறதோ, அவன் சீக்கிரமே இங்கே என்னிடம் வந்து யுத்தத்தை தத்தம் செய்யட்டும்" {என்றான் அதிகாயன்}.(45)

அப்போது, அமித்ரஹந்தனான சௌமித்ரி {பகைவரை அழிப்பவனும், சுமித்திரையின் மகனுமான லக்ஷ்மணன்}, அவனுடைய {அதிகாயனின்} அந்த வாக்கியத்தைக் கேட்டு கோபத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் துள்ளி எழுந்து, புன்னகையுடன் தன் சாபத்தை {வில்லை} எடுத்தான்.(46) குரோதமடைந்து, குதித்தெழுந்த சௌமித்ரி, தூணியில் இருந்து சாயகத்தை {கணையை} எடுத்து, அதிகாயனின் எதிரில் மஹத்தான தனுவை இழுத்தான்.(47) இலக்ஷ்மணனின் அந்த ஜியாசப்தம் {நாணொலி} மஹீயையும் {பூமியையும்}, சைலங்களையும் {மலைகளையும்}, ஆகாசத்தையும், சாகரத்தையும் {பெருங்கடலையும்}, சர்வ திசைகளையும் நிறைத்து, ரஜனீசரர்களை {இரவுலாவிகளை} உக்கிரமாக அச்சுறுத்தியது.(48) பலவானும், மஹாதேஜஸ்வியுமான ராக்ஷசேந்திராத்மஜன் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனின் புதல்வன், அதிகாயன்}, பயத்தை உண்டாக்கவல்ல சௌமித்ரியின் சாபநிர்கோஷத்தை {லக்ஷ்மணனின் வில்லோசையைக்} கேட்டு வியப்படைந்தான்.(49)

Atikaya and Lakshmana - made by copilot inspired by a chandamama image

அப்போது, எதிர்த்துவரும் லக்ஷ்மணனைக் கண்டு கோபமடைந்த அதிகாயன், கூரிய பாணத்தை எடுத்து, இந்த வசனத்தைக் கூறினான்:(50) "சௌமித்ரே, நீ விக்ரமத்தை அறியாத பாலனாக இருக்கிறாய். செல்வாயாக. காலனுக்கு ஒப்பான என்னுடன் யுத்தம் புரிய ஏன் இச்சிக்கிறாய்?(51) என் கைகளால் ஏவப்படும் பாணங்களின் வேகத்தை ஹிமவானாலும் {இமய மலையாலும்} தாங்க முடியாது. அந்தரிக்ஷத்தாலும், மஹீயாலும் {வானத்தாலும், பூமியாலும் தாங்க} முடியாது.(52) சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் காலாக்னியைத் தூண்ட இச்சிக்கிறாய். சாபத்தை {வில்லை} வைத்துவிட்டுச் செல்வாயாக. என்னிடம் வந்து பிராணன்களை இழக்காதே.(53) முரட்டுத்தனத்தால் திரும்பிச் செல்ல நீ விரும்பவில்லையெனில், நின்று, பிராணன்களைக் கைவிட்டு யமக்ஷயத்தை {யமனின் வசிப்பிடத்தை} அடைவாயாக.(54) தப்த காஞ்ச பூஷணத்துடன் கூடியவையும் {புடம்போட்ட பொன்னால் அலங்கரிக்கப்பட்டவையும்}, என் ரிபுக்களின் {பகைவரின்} செருக்கை அகற்றவல்லவையும், ஈஷ்வர ஆயுதங்களுக்கு ஒப்பானவையுமான இந்தக் கூரிய பாணங்களைப் பார்.(55) சர்ப்பங்களுக்கு ஒப்பான இந்த பாணங்கள், மிருகராஜா நாகராஜனின் சோணிதத்தை {சிங்கம் யானையின் குருதியைப் பருகுவதைப்} போல, உன் சோணிதத்தை {ரத்தத்தைப்} பருகும்" என்று சொல்லிவிட்டுக் குரோதத்துடன் தனுசில் சரத்தைப் பொருத்தினான் {அதிகாயன்}.(56)

போரில் ரோஷத்துடனும், கர்வத்துடனும் அதிகாயன் கூறிய சொற்களைக் கேட்டு ராஜபுத்திரன் {லக்ஷ்மணன்} கோபமடைந்தான். பிறகு, அதிபலவானும், மனஸ்வியும் {உயர்ந்த மனம் கொண்டவனும்}, பெரும்புகழ் படைத்தவனுமான அவன் {லக்ஷ்மணன், பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(57) "வாக்கியம் மாத்திரம் உன்னைப் பிரதானனாக்காது {பேச்சு மட்டுமே உன்னைப் பெரியவனாக்காது}. கதை விடுபவர்கள் சத்புருஷர்களாகமாட்டார்கள் {நன்மக்கள் ஆகமாட்டார்கள்}. பாணபாணியாகவும், தன்வியுமாக {கையில் கணையுடனும், வில்லுடனும்} நிற்கும் என்னிடம் உன் பலத்தைக் காட்டுவாயாக.(58) கர்மங்களில் உன்னை வெளிப்படுத்துவாயாக. தற்புகழ்ச்சி உனக்குத் தகாது. எவன் பௌருஷத்துடன் {ஆண்மையுடன்} இருக்கிறானோ, அவனே சூரன் என்று சொல்லப்படுகிறான்.(59) தன்வியாகவும் {வில்லைக் கொண்டவனாகவும்}, சர்வ ஆயுதங்களுடன் கூடியவனாகவும் நீ ரதத்தில் அமர்ந்திருக்கிறாய். சரங்களாலோ, அஸ்திரங்களாலோ கூட {உன்} பராக்கிரமத்தைக் காட்டுவாயாக.(60) அப்போது, காலத்தால் நன்கு பக்குவமடைந்த தாலம்பழத்தை மாருதம் {கனிந்த பனம்பழத்தைக் காற்று வீழ்த்துவதைப்} போல, உன் சிரத்தை {என்} கூரிய சரங்களால் வீழ்த்துவேன்.(61) இன்று பாணத்தால் துளைக்கப்பட்டு, உன் காத்திரத்தில் {உடலில்} பெருகும் உதிரத்தை, தப்த காஞ்ச பூஷணத்துடன் கூடிய {புடம்போட்ட பொன்னால் அலங்கரிக்கப்பட்ட} என்னுடைய பாணங்கள் பருகப் போகின்றன.(62) "இவன் பாலன்" என்று நினைத்து {என்னை} அவமதிப்பது உனக்குத் தகாது. பாலனாகவோ, விருத்தனாகவோ {சிறுவனாகவோ, முதியவனாகவோ} இருந்தாலும், போர்முனையில் என்னை மிருத்யுவாக {மரண தேவனாக} நீ அறிவாயாக.{63} பாலனான விஷ்ணுவே திரிவிக்ரமனாகத் திரிலோகங்களையும் {மூவடிகளால் மூன்று உலகங்களையும்} ஆட்கொண்டான்" {என்றான் லக்ஷ்மணன்}.(63,64அ)

ஹேதுவானவையும், பரமார்த்தம் பொதிந்தவையுமான லக்ஷ்மணனின் சொற்களைக் கேட்ட அதிகாயன், பரம குரோதமடைந்து, உத்தம பாணத்தை எடுத்தான்.(64ஆ,65அ) அப்போது, வித்யாதரர்கள், பூதங்கள், தேவர்கள், தைத்தியர்கள், மஹாரிஷிகள், குஹ்யர்கள் உள்ளிட்ட மஹாத்மாக்கள் அந்த யுத்தத்தைக் கண்டனர்.(65ஆ,66அ) பிறகு, கோபமடைந்த அதிகாயன், சாயகத்தை சாபத்தில் பொருத்தி {கணையை வில்லிலிட்டு இழுத்து} அந்தரிக்ஷத்தை சுருக்கி விடுபவனைப் போல லக்ஷ்மணனை நோக்கி ஏவினான்.(66ஆ,67அ) பகைவீரர்களை அழிப்பவனான லக்ஷ்மணன், விஷம் மிக்கப் பாம்புபோலப் பாய்ந்து வரும் அந்தக் கூரிய சரத்தை அர்த்தச்சந்திரத்தால் {தன் அர்த்தச்சந்திர பாணத்தால்} வெட்டித் துண்டாக்கினான்.(67ஆ,68அ) 

தலைவெட்டப்பட்ட உரகத்தைப் போலத் தன் சரம் வெட்டப்பட்டதைக் கண்டு குரோதமடைந்த அதிகாயன், பஞ்சபாணங்களை {ஐந்து கணைகளைப்} பொருத்தினான்.(68ஆ,69அ) நிசாசரன் {இரவுலாவியான அதிகாயன்} அந்த சரங்களை லக்ஷ்மணன் மீது ஏவினான். அவை தன்னை அடையும் முன்பே பரதானுஜன் {பரதனின் தம்பியான லக்ஷ்மணன்} கூரிய பாணங்களால் அவற்றை வெட்டினான்.(69ஆ,70அ) பகைவீரர்களை அழிப்பவனான அந்த லக்ஷ்மணன், கூரிய பாணங்களால் அவற்றை வெட்டிவிட்டு, ஜுவலிக்கும்  தேஜஸ்ஸுடன் கூடிய கூரிய பாணம் ஒன்றை எடுத்தான்.(70ஆ,71அ) அந்த சாயகத்தை எடுத்த லக்ஷ்மணன், தன் சிறந்த தனுவில் பொருத்தினான்; வேகமாக வளைத்து அதை விடுத்தான்.(71ஆ,72அ) அந்த வீரியவான், நடபர்வண சரத்தை பூர்ணமாக இழுத்து, விடுத்து ராக்ஷசசிரேஷ்டனின் நெற்றியைத் தாக்கினான்.(72ஆ,73அ) சோணிதத்தால் நனைந்திருந்த அந்தப் பயங்கர ராக்ஷசனின் நெற்றியில் புதைந்த அந்தச் சரம், அசலத்தில் பன்னகேந்திரனை {மலையில் பாம்புகளின் அரசனைப்} போலத் தெரிந்தது.(73ஆ,74அ) இலக்ஷ்மணனால் பீடிக்கப்பட்ட ராக்ஷசன் {அதிகாயன்}, ருத்ர பாணத்தால் தாக்கப்பட்ட கோரமான திரிபுர கோபுரத்தைப் போல நடுநடுங்கினான்.(74ஆ,75அ) ஆசுவாசமடைந்த மஹாபலவான் {அதிகாயன்}, ஆலோசித்துத் தெளிந்து, "சாது {நல்லது}. பாணத்தைப் பறக்கவிட்டு எனக்கு சிலாகிக்கத் தகுந்த ரிபு {பாராட்டத்தகுந்த பகைவன்} ஆகிவிட்டாய்" {என்றான்}.(75ஆ,76அ) இவ்விதம் சொன்னவன், முகத்தைச் சுழித்து, மஹாபுஜங்களை உதறிக் கொண்டு[5], தன் தேரின் மேல் ஏறி, அந்த ரதத்தில் அங்கேயும் இங்கேயும் திரிந்தான்.(76ஆ,77அ)

[5] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அந்தத் தாக்குதல் அவனைத் தேரைவிட்டு இறக்கியிருக்க வேண்டும்" என்றிருக்கிறது.

இராக்ஷசரிஷபன் {அதிகாயன்}, ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என சாயகங்களை எடுத்து, சாபத்தில் பொருத்தி {கணைகளை எடுத்து வில்லில் பொருத்தி}, வளைத்து, ஏவவும் செய்தான்.(77ஆ,78அ) ராக்ஷசேந்திரனின் தனுவில் இருந்து ஏவப்பட்டவையும், காலனுக்கு ஒப்பானவையும், ரவி {சூரியன்} போலப் பிரகாசிக்கும் ஹேமபுங்கங்களுடன் கூடியவையுமான அவை அம்பரத்தை {வானத்தை} ஒளிரச் செய்தன.(78ஆ,79அ) அப்போது ராகவானுஜன், ராக்ஷசனால் ஏவப்பட்ட சர வெள்ளத்தால் கலக்கமடையாமல், ஏராளமான கூரிய சரங்களால் அவற்றை வெட்டி வீழ்த்தினான்.(79ஆ,80அ) யுத்தத்தில் அந்தச் சரங்கள் வெட்டப்படுவதைக் கண்டு கோபமடைந்தவனும், திரதசேந்திராரியுமான ராவணாத்மஜன் {சொர்க்கத்தின் தலைவனான இந்திரனின் பகைவனும், ராவணனின் மகனுமான அதிகாயன்}  ஒரு கூரிய சரத்தை எடுத்தான்.(80ஆ,81அ) மஹாதேஜஸ்வியான அவன், அந்த பாணத்தை {வில்லில்} பொருத்தி, உடனே ஏவி, எதிர்த்துவரும் சௌமித்ரியின் மார்பை அதைக் கொண்டு தாக்கினான்.(81ஆ,82அ) யுத்தத்தில் அதிகாயனால் மார்பில் தாக்கப்பட்ட சௌமித்ரி {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணன்}, மத்ததுவீபம்  {மதயானை} பெருக்கும் மதத்தைப் போலத் தீவிரமாக உதிரம் பெருக்கினான்.(82ஆ,83அ) 

பிறகு அந்த விபு {வலிமைமிக்க லக்ஷ்மணன்}, அந்த சல்லியத்திலிருந்து {முள்ளாகத் தைத்த கணையிலிருந்து} உடனே தன்னை விடுவித்துக் கொண்டு, கூரிய சரத்தை எடுத்து அஸ்திரத்துடன் {மனத்தால்} இணைத்தான்.(83ஆ,84அ) சாயகத்தில் ஆக்னேய அஸ்திரத்தை {அக்னி அஸ்திரத்தைச்} சரியாக {மனத்தால்} இணைத்தபோது, அந்த மஹாத்மாவின் பாணமும், தனுசும் ஜுவலித்தன.(84ஆ,85அ) மஹாதேஜஸ்வியான அதிகாயன், சௌர அஸ்திரத்தை {சூரிய அஸ்திரத்தை} எடுத்து, ஹேமபுங்கங்களுடன் கூடியதும், புஜங்கத்தை {பாம்பைப்} போலத் தெரிந்ததுமான அந்த பாணத்தில் {மனத்தால்} அதை இணைத்தான்.(85ஆ,86அ) அஸ்திரத்துடன் இணைக்கப்பட்டதும், கோரமாக ஜுவலிப்பதுமான அந்த சரத்தை, அந்தகன் {ஏவும்} காலதண்டத்தைப் போல அதிகாயன் மீது லக்ஷ்மணன் ஏவினான்.(86ஆ,87அ) ஆக்னேயாஸ்திரத்துடன் {மனத்தால்} இணைக்கப்பட்ட பாணத்தை நிசாசரன் {இரவுலாவியான அதிகாயன்} கண்டபோது, சூரியாஸ்திரத்துடன் {மனத்தால்} இணைக்கப்பட்ட ரௌத்திரமான பாணத்தை ஏவினான்.(87ஆ,88அ) நுனிகள் தேஜஸ்ஸுடன் பிரகாசிக்கும் அவ்விரு பாணங்களும், குரோதங்கொண்ட புஜங்கங்கள்  {பாம்புகள்} இரண்டைப் போல, அம்பரத்தில்  அன்யோன்யம் {வானத்தில் ஒன்றோடொன்று} மோதிக்கொண்டன.(88ஆ,89அ) அவை அன்யோன்யம் முற்றாக எரித்துக் கொண்டு பிருத்வீதலத்தில் விழுந்தன.{89ஆ} அந்த உத்தம சரங்கள் இரண்டும் சுடரின்றி, ஒளியின்றி எரிந்து பஸ்மமாகின {சாம்பலாகின}. அவை இரண்டும் சுடர்விடாமல், ஒளிராமல் மஹீதலத்தில் கிடந்தன.(89ஆ,90)

அப்போது குரோதமடைந்த அதிகாயன், துவாஷ்டிர ஐஷீகத்தை {விஷ்வகர்மாவின் ஐசீக அஸ்திரத்தை} ஏவினான். பிறகு, வீரியவானான சௌமித்ரி ஐந்திராஸ்திரத்தால் {இந்திர அஸ்திரத்தால்} அதைத் துண்டாக வெட்டினான்.(91) ஐஷீகம் அழிக்கப்பட்டதைக் கண்ட குமாரன் ராவணாத்மஜன் {ராவணனின் மகனான அதிகாயன்}, பெருங்குரோதம் அடைந்து, சாயகத்தில் யாம்யேனாஸ்திரத்தை {தன் கணையில் யமனின் அஸ்திரத்தை மனத்தால்} இணைத்தான்.(92) நிசாசரன் {இரவுலாவியான அதிகாயன்} அந்த அஸ்திரத்தை லக்ஷ்மணன் மீது ஏவியபோது, அந்த லக்ஷ்மணன் வாயவ்யாஸ்திரத்தை {வாயுவின் அஸ்திரத்தைக்} கொண்டு அதை அழித்தான்.(93) பிறகு பெருங்குரோதமடைந்த லக்ஷ்மணன், மேகம் மழைத்தாரைகளை எப்படியோ, அப்படியே அந்த ராவணாத்மஜன் மீது சரத் தாரைகளை வர்ஷித்தான் {பொழிந்தான்}.(94) அதிகாயனை அடைந்த அந்த பாணங்கள், வஜ்ரங்களால் அலங்கரிக்கப்பட்ட அவனது கவசத்தால் தங்கள் சல்லியங்கள் பங்கமடைந்து {கூர்முனைகள் முறிந்து} சடக்கென மஹீதலத்தில் விழுந்தன.(95) பகைவீரர்களை அழிப்பவனும், பெரும்புகழ் வாய்ந்தவனுமான லக்ஷ்மணன், அவை மோகமடைந்ததைக் கண்டு {தன் கணைகள் வீணானதைக் கண்டு} ஆயிரக்கணக்கான பாணங்களைப் பொழிந்தான்.(96) 

பேருடல் படைத்த ராக்ஷசனான அதிகாயன், பாணவெள்ளம் பொழியப்பட்டாலும், வதைக்கப்பட முடியாத {அழிக்கப்பட முடியாத} கவசத்தால் போரில் கலங்காதிருந்தான்.(97) விஷம் மிக்க பாம்பைப் போன்ற சரமொன்றை லக்ஷ்மணன் மீது ஏவினான். அந்த சரத்தால் அந்த சௌமித்ரி மர்மதேசத்தில் தாக்கப்பட்டான்.{98} சத்ருக்களை எரிப்பவனான அவன் ஒரு முஹூர்த்தம் மாத்திரம் நனவிழந்தான்.(98,99அ) நனவு மீண்டதும், உத்தம சாயகங்கள் {உயர்ந்த கணைகள்} நான்கால்,{99ஆ} அந்த மஹாபலவான், ஹயங்களையும், சாரதியையும் {அதிகாயனின் குதிரைகளையும், அவனது சாரதியையும்} கொன்றான். அந்த அரிந்தமன் {பகைவரைக் கொல்லும் லக்ஷ்மணன்}, சர வர்ஷத்தால் {கணைமழையால்} துவஜத்தையும் கலங்கடித்தான்.(99ஆ,100) சௌமித்ரியான அந்த லக்ஷ்மணன், கலக்கத்தில் இருந்து விடுபட்டு, அந்த ராக்ஷச வத அர்த்தத்திற்காக {அதிகாயனைக் கொல்வதற்காக} இலக்கைக் குறிபார்த்து அந்தச் சரங்களை ஏவினான்.(101) 

அந்த நரோத்தமனால் {மனிதர்களில் முதன்மையான லக்ஷ்மணனால்} யுத்தத்தில் அவனுக்கு {அதிகாயனுக்குத்} தீங்கேதும் விளைவிக்க முடியாதபோது, வாயு வந்து அவனிடம் {வாயுதேவன் லக்ஷ்மணனிடம் வந்து பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(102) "இவன் பிரம்மனால் தத்தம் செய்யப்பட்ட வரத்தால் வதைக்கப்பட முடியாத {அழிக்கப்பட முடியாத} கவசத்தை அணிந்திருக்கிறான். பிரம்மாஸ்திரம் கொண்டு இவனைப் பிளப்பாயாக. வேறு எந்த வகையிலும் இவன் வதைக்கப்பட முடியாதவன்.{103} இந்த பலவான் கவசீயாக {கவசம் அணிந்து} இருக்கும்போது, வேறு எந்த அஸ்திரங்களாலும் வதைக்கப்பட முடியாதவனாவான்" {என்றான் வாயுதேவன்}[6].(103,104அ)

[6] கோல் முகந்து அள்ளி அள்ளி கொடுஞ் சிலை நாணில் கோத்து
கால்முகம் குழைய வாங்கி சொரிகின்ற காளை வீரன்
பால்முகம் தோன்ற நின்று காற்றினுக்கு அரசன் பண்டை
நான்முகன் படையால் அன்றிச் சாகிலன் நம்ப என்றான்.

- கம்பராமாயணம் 7930ம் பாடல், யுத்த காண்டம், அதிகாயன் வதைப் படலம்

பொருள்: கணைகளை எடுத்து, அள்ளி, அள்ளி, வளைந்த வில்லின் நாணில் கோர்த்து, இரு நுனிகளும் சேருமாறு வளைத்து, {அம்பு மழை} பொழிகின்ற காளை போன்ற வீரனிடம் {லக்ஷ்மணனிடம்} முகம் தோன்ற {நேரடியாக} வந்து நின்ற காற்றினுக்கு அரசன் {வாயுதேவன்}, "நம்ப {விரும்பத்தகுந்த குணங்களைக் கொண்டவனே}, பழமையான பிரம்மனின் படைக்கலத்தாலன்றி {பிரம்மாஸ்திரத்தாலன்றி} இவன் சாகமாட்டான்" என்றான்.

இந்திரனுக்கு நிகரான வீரியம் கொண்ட சௌமித்ரி, வாயுவின் வசனத்தைக் கேட்ட பிறகு, அந்த பிரம்மாஸ்திரத்தை {மனத்தால்} இணைத்த உடனேயே, அந்த பாணத்தை உக்கிர வேகத்தில் செலுத்தினான்.(104ஆ,இ) சிறந்த அஸ்திரத்தை, கூர் முனை கொண்ட சிறந்த பாணத்தில் {மனத்தால்} சௌமித்ரி இணைத்தபோது, திசைகளும், சந்திர, அர்க்க {சூரிய}, மஹா கிரஹங்களும், நபமும் {வானமும்} திகிலடைந்தன; ஊர்வியும் {பூமியும்} முழங்கினாள்.(105) சௌமித்ரி, நல்ல புங்கங்களுடன் கூடிய அந்த சரத்தில், பிரம்மாஸ்திரத்தை {மனத்தால்} இணைத்த பிறகு, யமதூதனுக்கு ஒப்பான தன் சாபத்திலிருந்து {வில்லில் இருந்து}, வஜ்ரத்திற்கு ஒப்பான பாணத்தை, அந்த இந்திராரிசுதன் {இந்திரனின் பகைவனான ராவணனின் மகன், அதிகாயனின்} மீது ஏவினான்.(106) அதிகாயன், லக்ஷ்மணனால் போரில் ஏவப்பட்டதும், வீண்போகாத வேகம் கொண்டதும், உத்தம வஜ்ரத்தைப் போன்றதும், அழகிய இறகுகளால் சித்திரமாக அலங்கரிக்கப்பட்ட புங்கத்தைக் கொண்டதுமான அந்த பாணம் போரில் தன்னை நோக்கிப் பாய்வதைக் கண்டான்.(107)  அதிகாயன், சுவர்ணவேகத்தில் {கருடனின் வேகத்தில்} இவ்வாறு தன் சமீத்தை அடைந்த அந்த சாயகத்தைக் கண்ட உடனேயே, கூர் முனை கொண்ட அநேக பாணங்களால் அதைத் தாக்கினான்.(108)  ஒளிர்வதும், காலனுக்கு ஒப்பாகத் தெரிவதும், கரிய நிறம் கொண்டதுமான அந்த பாணம் வருவதை கண்டபோது, சக்தி {வேல்}, ரிஷ்டி {ஈட்டி}, கதை {கதாயுதம்}, குடாரம் {கோடரி}, சூலம், ஹலம் {கலப்பை}[7] ஆகியவற்றால் அதிகாயன் அதைத் தாக்கினான்.(109) அப்போது, அக்னி போல் ஒளிர்ந்த அந்தச் சரம், அற்புத வடிவங்களிலான அந்த ஆயுதங்களை மோகமடையச் செய்து {வீண்போகச் செய்து}, கிரீடத்துடன் கூடிய அதிகாயனின் சிரத்தைக் கொய்தது.(110) 

[7] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "கலப்பை (ஹலம்) என்பது எழுத்துப் பிழையாக இருக்க வேண்டும். இது கணை {சரம்} என்றே இருக்க வேண்டும்" என்றிருக்கிறது. அதற்கேற்ப பல பதிப்புகளிலும் இங்கே சரம் என்றே இருக்கிறது.

சிரஸ்திராணத்துடன் {தலைப்பாகையுடன்} கூடிய அந்தத் தலை, லக்ஷ்மணனின் பாணத்தால் அறுக்கப்பட்ட உடனேயே, ஹிமவத சிருங்கத்தை {இமயமலைச் சிகரத்தைப்} போல பூமியில் விழுந்தது.(111) ஹதம் செய்யப்பட்டவர்களில் {கொல்லப்பட்டவர்களில்} எஞ்சிய நிசாசரர்கள் {இரவுலாவிகள்}, அம்பரமும், பூஷணங்களும் {ஆடையும், ஆபரணங்களும்} கலைந்து, பூமியில் விழுந்தவனைக் கண்டு திகைப்படைந்தனர்.(112) அவர்களில், போரில் ஏற்பட்ட சிரமத்தினால் {களைப்பினால்} சோகமான முகத்துடன் கூடிய தீனர்கள் பலரும், திடீரென்று உச்ச ஸ்வரங்களில் விகாரமாக அலறினர்.(113) நிசாசரர்கள், தங்கள் நாயகன் ஹதம் செய்யப்பட்டபோது {கொல்லப்பட்டபோது}, சுற்றிலும் போரிடுவதைக் கைவிட்டு, அந்தப் புரியை {லங்கையை} நோக்கி பீதியில் ஓடிச் சென்றனர்.(114)

வெல்வதற்கரியவனும், பயங்கர பலம் கொண்டவனுமான ரிபு ஹதம் செய்யப்பட்டபோது {பகைவன் கொல்லப்பட்டபோது}, பெரும் மகிழ்ச்சியடைந்த வானரர்கள் ஏராளமானோர், இஷ்டபாகியான {தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிய} லக்ஷ்மணனை, முற்றும் மலர்ந்த பத்மங்களுக்கு ஒப்பான முகங்களுடன் பூஜித்தனர்.(115) அதிபலம் வாய்ந்தவனும், மேகத்திற்கு ஒப்பானவனுமான அதிகாயனை யுத்தத்தில் வீழ்த்திய அந்த லக்ஷ்மணன், பெரும் மகிழ்ச்சியடைந்தபோது, கபிக்கூட்டத்தினரால் பூஜிக்கப்பெற்று, துரிதமாக ராமனின் பக்கம் சென்றான்.(116)

யுத்த காண்டம் சர்க்கம் – 071ல் உள்ள சுலோகங்கள்: 116

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை