The situation of the rest who came | Yuddha-Kanda-Sarga-070 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அதிகாயனைத் தவிர்த்து, தேவாந்தகன், மஹோதரன், திரிசிரன், மஹாபார்ஷ்வன் ஆகியோர் ஹனுமான், நீலன், ரிஷபன் ஆகியோரால் கொல்லப்படுவது...
நராந்தகன் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், நைர்ருதரிஷபர்களுமான {ராக்ஷசர்களில் காளைகளுமான} தேவாந்தகன், திரிமூர்த்தன் {திரிசிரஸ்}, பௌலஸ்தியன் {புலஸ்தியர் வழி வந்தவனான} மஹோதரன் ஆகியோர் அழுது கூச்சலிட்டனர்.(1) மஹோதரன், மேகத்திற்கு ஒப்பான வாரணேந்திரத்தில் {தலைமை யானையின் மீது} ஏறிச் சென்று, மஹாவீரியனான வாலிபுத்திரனை {அங்கதனை} வேகமாகத் தாக்கினான்.(2) பிறகு, பலவானான தேவாந்தகன், பிராதாவுக்கான விசனத்துடன் {உடன் பிறந்தவனுக்கான வேதனையுடன்}, ஒளிரும் தன் பரிகத்தை எடுத்துக் கொண்டு, அங்கதனை நோக்கி விரைந்தான்.(3) பிறகு, வீரனான திரிசிரன், ஆதித்யனுக்கு ஒப்பானதும், பரம வாஜிகள் {மிகச் சிறந்த குதிரைகள்} பூட்டப்பட்டதுமான ரதத்தில் ஏறிச் சென்று வாலிபுத்திரனை {அங்கதனை} எதிர்த்தான்.(4)
தேவர்களின் செருக்கை அழிப்பவர்களான மூன்று நைர்ருதேந்திரர்களால் {ராக்ஷசேந்திரர்களால்} எதிர்க்கப்பட்ட அந்த அங்கதன், பெருங்கிளைகளுடன் கூடிய விருக்ஷமொன்றை {ஒரு மரத்தைப்} பிடுங்கினான்.(5) வீரன் அங்கதன், ஒளிரும் அசனியை சக்ரன் {இடியை இந்திரன் எறிவது} எப்படியோ, அப்படியே மஹாசாகைகளுடன் கூடிய அந்த மஹாவிருக்ஷத்தை {பெருங்கிளைகளுடன் கூடிய அந்தப் பெரும் மரத்தை} தேவாந்தகன் மீது சட்டென எறிந்தான்.(6) திரிசிரன், விஷம் மிக்க பாம்புகளுக்கு ஒப்பான சரங்களால் அதை வெட்டி வீழ்த்தினான். அந்த அங்கதன் விருக்ஷம் வெட்டப்பட்டதைக் கண்டு துள்ளியெழுந்தான்.(7) பிறகு, அந்த கபிகுஞ்சரன் {குரங்குகளில் யானையான அங்கதன்}, விருக்ஷங்களையும், பாறைகளையும் வர்ஷித்தான் {மழையாகப் பொழிந்தான்}. குரோதமடைந்த திரிசிரன், கூரிய சரங்களால் அவற்றை வெட்டி வீழ்த்தினான்.(8) ஸுராந்தகன் {தேவாந்தகன்}, தன் பிடியில் இருந்த பரிகத்தால் அந்த விருக்ஷங்களை பங்கமடையச் செய்தான் {மரங்களை வெட்டி முறித்தான்}. திரிசிரனும், வீரன் அங்கதனைத் தன் சாயகங்களால் {அம்புகளால்} தாக்கினான்.(9) குரோதமடைந்த மஹோதரன், கஜத்தில் {யானையின் மீது} ஏறி, வாலிபுத்திரனை {அங்கதனை} நோக்கி விரைந்து, வஜ்ரத்தைப் போன்ற தோமரங்களால் அவனது மார்பைத் தாக்கினான்.(10) அப்போது, குரோதமடைந்த தேவாந்தகன், அங்கதனை நெருங்கி, சட்டெனப் பரிகத்தால் தாக்கிவிட்டு, தூரமாக விலகிச் சென்றான்.(11)
மூன்று நைர்ருதசிரேஷ்டர்களால் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டாலும், மஹாதேஜஸ்வியும், பிரதாபவானுமான அந்த வாலிபுத்திரன் {அங்கதன்} கலங்கினானில்லை.(12) வேகவானும், பரம துர்ஜயனுமான அவன் {வெல்வதற்கரியவர்களில் சிறந்தவனுமான அங்கதன்}, மஹாவேகத்தில் தாக்குதல் தொடுத்து, தன் உள்ளங்கையால் அவனது மஹாகஜத்தை {தேவாந்தகனின் பெரும் யானையை} அறைந்தான்.(13) போரில் அவனுடைய அந்தத் தாக்குதலால், அந்த நாகராஜனின் நயனங்கள் {யானையரசனின் கண்கள் பிதுங்கி} வெளியே விழுந்தன. அந்தக் குஞ்சரம் {யானை} அலறியது.(14) போரில் மஹாபலவானான வாலிபுத்திரன், அதன் கொம்பொன்றை {அந்த யானையின் தந்தம்} ஒன்றைப் பிடுங்கி, தேவாந்தகனை நோக்கி விரைந்து சென்று அவனைத் தாக்கினான்.(15) தேஜஸ்வியான அவன் {தேவாந்தகன்}, வாதத்தால் {காற்றால்} அசைக்கப்பெற்ற மரத்தைப் போல வெலவெலத்து, அரக்கின் வர்ணத்தில் மஹத்தான உதிரத்தைக் கக்கினான்.(16) அதன்பிறகு, பலவானும், மஹாதேஜஸ்வியுமான தேவாந்தகன், பெரும் சிரமத்துடன ஆசுவாசமடைந்து, பரிகத்தை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கதனைத் தாக்கினான்.(17) வானரேந்திராத்மஜன் {வானர மன்னனான வாலியின் புதல்வன் அங்கதன்} பரிகத்தால் தாக்கப்பட்டபோது, முழங்கால் மடிந்து, பூமியில் விழுந்தாலும் மீண்டும் குதித்தெழுந்தான்.(18) அந்த ஹரிபதியின் புத்திரன் {குரங்குத் தலைவனின் மகனான அங்கதன்} எழுந்ததும், திரிசிரன், நேராகச் செல்லக்கூடிய, கோரமான மூன்று பாணங்களால் அவனது நெற்றியைத் தாக்கினான்.(19)
அப்போது, மூன்று நைர்ருதபுங்கவர்களால் {ராக்ஷசர்களில் முதன்மையான மூவரால்} அங்கதன் சூழப்படுவதை அறிந்த ஹனுமானும், நீலனும் அங்கே சென்றனர்.(20) பிறகு நீலன், ஒரு மலைச் சிகரத்தை திரிசிரஸ் மீது வீசினான். மதிமிக்கவனான ராவணசுதன் {ராவணனின் மகனான திரிசிரன்} தன் கூரிய சரங்களால் அதைப் பிளந்தான்.(21) நூற்றுக்கணக்கான பாணங்களால் பின்னம் செய்யப்பட்ட அந்த கிரிசிகரம், நெருப்புப் பொறிகளுடனும், ஜுவாலைகளுடனும் கீழே விழுந்து பாறைகளாக நொறுங்கியது.(22) பலவானான அந்த தேவாந்தகன், போரில் மகிழ்ச்சியுடன் விரைந்து வரும் மாருதாத்மஜனை {வாயு மைந்தன் ஹனுமானைக்} கண்டு, பரிகத்தை எடுத்துக் கொண்டு எதிர்த்துச் சென்றான்.(23) அப்போது குதித்தெழுந்த கபிக்குஞ்சரன் {குரங்குகளில் யானையான} ஹனுமான், தன்னை நோக்கி விரைந்து வருபவனின் தலையில் வஜ்ரத்திற்கு ஒப்பான தன் முஷ்டியால் தாக்கினான்.(24) வீரனும், பலவானுமான வாயுசுதன் {வாயு மைந்தன் ஹனுமான்}, அவனது சிரசில் தாக்கியபோது, அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்} தன் நாதத்தால் ராக்ஷசர்களை நடுங்கச் செய்தான்.(25) இராக்ஷசராஜனின் {ராக்ஷசர்களின் மன்னன் ராவணனின்} மகனான அந்த தேவாந்தகன், முஷ்டியின் தாக்குதலால் தன் தலை நொறுங்கி, பற்களும், கண்களும் பிதுங்கி, நாவு தொங்கி, மாண்டவனாக சட்டென பூமியில் விழுந்தான்.(26)
இராக்ஷசயூத முக்கியர்களில் மஹாபலவானான அந்த தேவசத்ரு {தேவாந்தகன்} போரில் கொல்லப்பட்டபோது, குரோதமடைந்த திரிசிரன், கூரிய பாணங்களின் உக்கிர மழையை நீலனின் மார்பில் பொழிந்தான்.(27) குரோதமடைந்த அந்த மஹோதரனும், மந்தரத்தில் ரஷ்மிமானை {மந்தர மலையில் ஏறும் கதிர்களின் நாயகன் சூரியனைப்} போல, பர்வதத்திற்கு ஒப்பான குஞ்சரத்தில் {யானையின்மீது} மீண்டும் ஏறி,{28} கிரியைச் சூழ்ந்து மின்னல் சக்கரங்களுடன் மழையைப் பொழிந்து கர்ஜிக்கும் மேகத்தைப் போல, நீலனின் மீது பாணமயமான {அம்புகளாலான} மழையைப் பொழிந்தான்.(28,29) அப்போது, அந்த மஹாபலவானின் {மஹோதரனின்} சர மழையால், கபிசைனிய பாலனான நீலன், காத்திரம் {உடல்} பிளக்கப்பட்டவனாகத் திகைத்து நின்றான்.(30) நீலன், நனவுமீண்ட பிறகு, எண்ணற்ற விருக்ஷங்களுடன் கூடிய சைலம் ஒன்றைத் தூக்கி, பெரும் வேகத்துடன் குதித்தெழுந்து, அதைக் கொண்டு மஹோதரனின் தலையைத் தாக்கினான்.(31) அந்த மஹோதரன், சைலம் விழுந்து பங்கமடைந்ததாலும், அந்த மஹாதுவீபத்தின் {பெரும் யானையின்} அடியில் நசுங்கியதாலும் மாண்டு[1], வஜ்ரத்தால் தாக்கப்பட்ட அத்ரியை {மலையைப்} போல பூமிதலத்தில் விழுந்தான்.(32)
[1] இங்கே நீலனின் கைகளில் மரணத்தை அடையும் இந்த மஹோதரன், கம்பராமாயணத்தில், ராமனால் கொல்லப்படுகிறான். அதிலும் ராவணனைக் கொல்வதற்கு முன், இறுதி யுத்தத்திற்கு முன்பாக ராமன் இவனைக் கொல்கிறான்.பொன் தடந்தேரும் மாவும் பூட்கையும் புலவு உண் வாட்கைக்கல் தடந் திண் தோள் ஆளும் நெருங்கிய கடல்கள் எல்லாம்வற்றின இராமன் வாளி வடஅனல் பருக வன்தாள்ஒற்றை வன் தடந் தேரோடும் மகோதரன் ஒருவன் சென்றான்(9716)அசனிஏறு இருந்த கொற்றக் கொடியின்மேல் அரவத் தேர்மேல்குசை உறு பாகன்தன்மேல் கொற்றவன் குவவுத் தோள்மேல்விசை உறு பகழி மாரி வித்தினான் விண்ணினோடும்திசைகளும் கிழிய ஆர்த்தான் தீர்த்தனும் முறுவல் செய்தான்(9717)வில் ஒன்றால் கவசம் ஒன்றால் விறலுடைக் கரம் ஓர் ஒன்றால்கல் ஒன்று தோளும் ஒன்றால் கழுத்து ஒன்றால் கடிதின் வாங்கிசெல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினான் செப்பி வந்தசொல் ஒன்றாய்ச் செய்கை ஒன்றாய்த் துணிந்தனன் அரக்கன் துஞ்சி(9718)- கம்பராமாயணம் 9716-9718ம் பாடல், யுத்தகாண்டம், இராவணன் வதைப் படலம்பொருள்: பொன்மயமான பெரிய தேர்களும், குதிரைகளும், யானைகளும், புலால் நாறும் வாள் ஏந்திய கைகளையும், கல்போல் அகன்று திரண்ட தோள்களையும் கொண்ட காலாட்படையும் கொண்ட நெருங்கிய கடல் போன்ற படைகள் யாவற்றையும், ராமனின் அம்புகளெனும் வடவாமுகாக்னி பருக, வறண்டு போயின. ஒரே பெரிய தேரோடு வலிய கால்களைக் கொண்ட மகோதரன் ஒருவன் தன்னந்தனியாகச் சென்றான்.(9716) இடியின் லச்சினை பொறிக்கப் பெற்றிருந்த வெற்றிக் கொடியின் மீதும், ஒலிமிக்க தேர் மீதும், கடிவாளம் பற்றி தேர்ப்பாகன் மாதலி மீதும், வெற்றியாளனின் {ராமனின்} மலை போன்ற தோள்கள் மீதும், வேகம் கொண்ட அம்பு மழையை விதை தூவுவது போல் தூவினான். விண்ணும், திசைகளும் கிழிந்து போகுமளவுக்கு முழக்கமிட்டான். தூயவனும் {ராமனும்} புன்னகை பூத்தான்.(9717) வில்லை ஒரு கணையாலும், கவசத்தை ஒரு கணையாலும், வலிமைமிக்க கைகளை ஒவ்வொரு கணையாலும், கற்பாறை போன்ற தோள்களை ஒரு கணையாலும், கழுத்தை ஒரு கணையாலும் என வேகம் பொருந்திய அம்புகளை விரைவாக ஐயன் {ராமன்} செலுத்தினான். சொல்லி வந்த சொல் ஒன்றாகவும், செயல் ஒன்றாகவும் அரக்கன் {மஹோதரன்} இறந்து உடல் துண்டாகி விழுந்தான்.(9718)
தன் பித்ருவ்யர் {சிறிய தந்தையான மஹோதரன்} கொல்லப்பட்டதைக் கண்ட திரிசிரன், பெரும் குரோதமடைந்து, தன் சாபத்தை {வில்லை} எடுத்து, கூரிய பாணங்களால் ஹனூமந்தனைத் தாக்கினான்.(33) கோபமடைந்த அந்த வாயுமைந்தன் {ஹனுமான்}, ஒரு கிரிசிகரத்தை வீசினான். பலவானான திரிசிரன், தன் கூரிய சரங்களால் அதைப் பல துண்டுகளாக நொறுக்கினான்.(34) அந்தக் கபி {ஹனுமான்}, சிகரம் வீணானதைக் கண்டபோது, அந்த ரணத்தில் ராவணனின் மைந்தன் {திரிசிரன்} மீது மரங்களின் மழையை ஏவினான்.(35) பிரதாபவானான திரிசிரன், தன் மீது விழும் அந்த மரங்களின் மழையை, கூரிய பாணங்களால் வானத்திலேயே வெட்டி வீழ்த்தி நாதம் செய்தான்.(36) குரோதமடைந்த ஹனுமானும், மீண்டும் குதித்தெழுந்து, ஒரு மிருகராட் நாகேந்திரத்தை {விலங்குகளின் ராஜாவான சிங்கம், ஒரு தலைமை யானையை} எப்படியோ, அப்படியே தன் நகங்களால் திரிசிரனின் ஹயத்தை {குதிரையைக்} கிழித்தான்.(37) அப்போது, ராவணாத்மஜனான திரிசிரன், காலராத்ரியைப் பற்றும் அந்தகனை {யமனைப்} போல ஒரு சக்தியை {வேலாயுதத்தை} எடுத்து, அதை அனிலபுத்திரன் {வாயுமைந்தன் ஹனுமான்} மீது ஏவினான்.(38) ஹரிசிரேஷ்டன் {குரங்குகளில் சிறந்தவனான ஹனுமான்}, திவத்தில் உல்கத்தை {வானத்தில் எரிகொள்ளியைப்} போல் வேகமாக வரும் அந்த சக்தி, தன் மீது விழுவதற்கு முன் பிடித்து, அதை பங்கம் செய்து {முறித்து}, நாதம் செய்தான்.(39) கோரமான தோற்றம் கொண்ட அந்த சக்தி, ஹனூமதனால் பங்கம் செய்யப்பட்டதைக் கண்ட வானரகணங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து, மேகங்களைப் போல கர்ஜனை செய்தனர்.(40)
பிறகு, ராக்ஷசோத்தமனான திரிசிரன், ஒரு கட்கத்தை {கத்தியை} எடுத்து, வானரேந்திரனின் {குரங்குகளின் தலைவனான ஹனுமானின்} மார்பில் அந்த கட்கத்தை நாட்டினான்.(41) வீரியவானான மாருதாத்மஜன் {வாயுமைந்தன்} ஹனுமான், கட்கத்தின் அழுத்தத்தால் பீடிக்கப்பட்டு, தன் உள்ளங்கையால் திரிமூர்த்தனின் {திரிசிரசின்} மார்பில் அறைந்தான்.(42) மஹாதேஜஸ்வியான அந்த திரிசிரன், உள்ளங்கையால் தாக்கப்பட்டதும், தன் கையில் இருந்த ஆயுதம் நழுவ, நனவிழந்தவனாகப் புவியில் விழுந்தான்.(43) கிரிக்கு ஒப்பான அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, விழுந்த அவனது கட்கத்தை {வாளை} எடுத்து, சர்வ ராக்ஷசர்களையும் அச்சுறுத்தியபடியே நாதம் செய்தான்.(44) அந்த கோஷத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிசாசரன் {இரவுலாவியான திரிசிரஸ்} குதித்தெழுந்தான். குதித்தெழுந்ததும் தன் முஷ்டியைக் கொண்டு ஹனூமந்தனைத் தாக்கினான்.(45) மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, முஷ்டியின் தாக்குதலால் கோபமடைந்தான். கோபமடைந்ததும் ராக்ஷசரிஷபனின் கிரீடத்தைப் பற்றினான்.(46)
குரோதமடைந்த அந்த அநிலசுதன் {வாயுமைந்தன் ஹனுமான்}, துவஷ்டுசுதனின் சிரங்களை {வெட்டிய} சக்ரனைப் போல {துவஷ்டாவின் / விஷ்வகர்மாவின் மகனான விஷ்வரூபனின் தலைகளை இந்திரன் வெட்டியது எப்படியோ, அப்படியே}[2], கிரீடங்களுடனும், குண்டலங்களுடனும் கூடிய அவனது சிரசுகளை {திரிசிரனின் தலைகளை} கூரிய வாளால் வெட்டினான்.(47) எரியும் வைஷ்வானரனை {அக்னியைப்} போல ஜுவலிக்கும் நீண்ட கண்களைக் கொண்டவையும், மலைகளைப் போன்றவையுமான அந்த இந்திர சத்ருவின் சிரசுகள் {மூன்று தலைகளும்}, அர்க்கமார்க்கத்திலிருந்து விழும் ஜோதிகளைப் போல {புண்ணியம் தீர்ந்து சூரியனின் வழியில் இருந்து விழும் நக்ஷத்திரங்களைப்} போலப் பிருத்வியில் விழுந்தன.(48)
[2] மஹாபாரதம், உத்யோக பர்வம், 9ம் அத்தியாயத்தில் இது குறித்து விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
தேவரிபுவான அந்த திரிசிரன், சக்ரனின் {இந்திரனின்} பராக்கிரமத்தைக் கொண்ட ஹனூமதனால் கொல்லப்பட்டதும், பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான வானரர்கள்} கர்ஜனை செய்தனர்; பூமி நடுங்கியது; ராக்ஷசர்கள் எங்கும் ஓடிச்சென்றனர்.{49} திரிசிரன் கொல்லப்பட்டதைக் கண்டும், அதேபோல வெல்வதற்கரிய மஹோதரன், தேவாந்தகன், நராந்தகன் ஆகியோரும் கொல்லப்பட்டதைக் கண்டும்,{50} மஹாபலவானும், ராக்ஷச புங்கவனுமான மஹாபார்ஷ்வன்[3] பெருங்கோபம் அடைந்தான்.(49-51அ) சுபமானதும், மதிப்புமிக்கதும், இரும்பாலானதும், கோரமானதும், சர்வபலம் கொண்டதுமான கதையை {கதாயுதத்தை} எடுத்தான்.{51ஆ} ஹேமப்பட்டங்களால் {தங்கப்பட்டைகளால்} பிணைக்கப்பட்டதும், மாமிசம், சோணிதத்தால் பூசப்பட்டதும், ஒளியுடன் பிரகாசிப்பதும், சத்ருக்களின் சோணிதத்தால் சிவந்து ஒளிர்வதும்,{52} தேஜஸ்ஸுடன் ஒளிரும் நுனியைக் கொண்டதும், சிவந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அது {அந்த கதாயுதம்}, ஐராவதம், மஹாபத்மம், சார்வபௌமம் ஆகியவற்றையும் பயத்தால் பீடிக்கச் செய்வதாக இருந்தது[4].(51ஆ-53) மஹாபலவானான மஹாபார்ஷ்வன், பெருங்குரோதத்துடன் அந்த கதையை எடுத்துக் கொண்டு, ஜுவலிக்கும் யுகாந்த அக்னியைப் போல ஹரீக்களை {குரங்குகளை} எதிர்த்துச் சென்றான்.(54)
[3] பல பதிப்புகளில் இந்த இடத்தில், "மத்தன்" என்ற பெயர் வருகிறது. தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில் உள்ள மூலத்தில், "மஹாபார்ஷ்வன்" என்றே இருக்கிறது. 51 முதல் 59ம் சுலோகம் வரை பல இடங்களில், பல பதிப்புகளில் இவன் "மத்தன்" என்றே குறிப்பிடப்படுகிறான்.
[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதண்டம், சார்வபௌமம், சுப்ரதீகம் ஆகிய எட்டும் திக்குகளைக் காக்கும் யானைகளாகும். இவற்றில் யானைகளின் மன்னனாகக் கருதப்படும் ஐராவதம் இந்திரனின் வாகனமாகும். மஹாபத்மம் என்பது, புண்டரீகத்தின் மற்றொரு பெயராகும்" என்றிருக்கிறது.
அப்போது, பலம் மிக்க வானரனான ரிஷபன், குதித்தெழுந்து, ராவணானுஜனான {ராவணனின் தம்பியான்} மஹாபார்ஷ்வனை நெருங்கி அவனுக்கு முன்பு வந்து நின்றான்.(55) பர்வதத்திற்கு ஒப்பான வானரம் எதிரே நிற்பதைக் கண்டதும், மீண்டும் குரோதமடைந்து, வஜ்ரத்திற்கு ஒப்பான தன் கதையால் அவனது மார்பை {ரிஷபனின் மார்பை மஹாபார்ஷ்வன்} தாக்கினான்.(56) அவனது அந்த கதையால் தாக்கப்பட்ட அந்த வானரரிஷபனின் மார்பு பிளக்கப்பட்டு நடுங்கியபடியே ஏராளமான உதிரத்தை சிந்தினான்.(57) வானரரிஷபனான {வானரர்களில் காளையான} ரிஷபன், நீண்ட நேரத்திற்குப் பிறகு நனவுமீண்டு, குரோதமடைந்து, உதடுகள் நடுங்க, மஹாபார்ஷ்வனைப் பார்த்தான்.(58)
வேகவானும், வானரவீரர்களில் முக்கியனும், சைலத்தைப் போன்ற ரூபம் கொண்டவனுமான அவன் {ரிஷபன்}, வேகமாக எழுந்து, தன் முஷ்டியைக் கொண்டு, அந்த ராக்ஷசனின் தோள்களுக்கு மத்தியில் பலமாக அடித்தான்.(59) குருதியால் நனைந்த அங்கங்களுடன் கூடிய அவன் {மஹாபார்ஷ்வன்}, வேரறுந்த விருக்ஷத்தைப் போலத் தரையில் திடீரென விழுந்தான். அப்போது அவன் {ரிஷபன்}, கோரமான யமதண்டத்திற்கு ஒப்பான அவனுடைய {மஹாபார்ஷ்வனின்} அந்த கதையை எடுத்துக் கொண்டு நாதம் செய்தான்.(60) அவன் {மஹாபார்ஷ்வன்} இறந்தவனைப் போலவே ஒரு முஹூர்த்த காலம் கிடந்தான். மாலை வேளையில் வரும் மேகத்திற்கு ஒப்பான வர்ணம் கொண்ட அந்த ஸுராரி {தேவர்களின் பகைவனான மஹாபார்ஷ்வன்}, நனவு மீண்டு திடீரென எழுந்து, அந்த வாரிராஜாத்மஜனை {வருணனின் மகனான ரிஷபனைத்} தாக்கினான்.(61)
ஒரு முஹூர்த்தம் பூமிதலத்தில் மூர்ச்சித்துக் கிடந்த அவன் {ரிஷபன்}, நனவு மீண்டதும், அத்ரிவராத்ரிக்கு {மலைகளில் சிறந்த மலைக்கு} ஒப்பான அந்த கதையை உறுதியாகப் பற்றிக் கொண்டு, போரில் அவனைத் தாக்கினான்.(62) ரௌத்திரமான அது {அந்த கதாயுதம்}, ரௌத்திரனும், தேவாத்வரவிப்ரசத்ருவுமான {தேவர்களுக்கும், சிறந்த பிராமணர்களுக்கும் பகைவனுமான} அவனது தேகத்தை அடைந்ததும், அவனது மார்பைப் பிளந்து, தாதுக்களை வெளியேற்றும் அத்ரிராஜனை {மலைகளின் ராஜாவான இமயத்தைப்} போல, ஏராளமான ரத்தத்தை வெளியேற்றியது.(63) மஹாத்மாவான அவன் {ரிஷபன்}, அந்த கதையை நோக்கி வேகமாகச் சென்று, அந்தப் பயங்கரமான கதையைக் கைப்பற்றி, மீண்டும் மீண்டும் சுழற்றியபடியே,{64} ரணமூர்த்தத்தில் மத்தானீகனான[5] மஹாபார்ஷ்வனைத் தாக்கினான்.(64) தன் கதையாலேயே தாக்கப்பட்ட அந்த மஹாபார்ஷ்வன், பற்களும், கண்களும் பிதுங்க, வஜ்ரத்தால் தாக்கப்பட்ட அசலத்தைப் போலக் கீழே விழுந்தான்.(65)
[5] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "மஹாபார்ஷ்வனுக்கே மத்தனென்றும், மத்தானீகனென்று இரண்டு பெயர்கள் உண்டு" என்றிருக்கிறது.
அந்த ராக்ஷசன், வலிமை இழந்து, நயனங்கள் பிதுங்கி, ஆயுள் தீர்ந்து பூமியில் விழுந்தபோது, ராக்ஷசப்படை தப்பி ஓடியது.(66) இராவணனின் பிராதாவான {இராவணன் உடன் பிறந்தவனான மஹாபார்ஷ்வன்} கொல்லப்பட்டதும் ஆர்ணவத்திற்கு {கடலுக்கு} ஒப்பான அந்த நைர்ருதர்களின் படை, கேவலம் ஜீவித அர்த்தத்திற்காக {உயிர்வாழ்வதற்காக} தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, கரை உடைந்த ஆர்ணவத்துக்கு ஒப்பாக ஓடிச் சென்றது.(67)
யுத்த காண்டம் சர்க்கம் – 070ல் உள்ள சுலோகங்கள்: 67
Previous | | Sanskrit | | English | | Next |