Friday 26 July 2024

விபீஷணன் அறிவுரை | யுத்த காண்டம் சர்க்கம் - 009 (23)

Advice of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-009 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராக்ஷசர்களுக்கும், ராவணனுக்கும் அறிவுரை வழங்கிய விபீஷணன்...

Vibheeshana advising Ravana

பிறகு நிகும்பன், ரபசன், மஹாபலன், சூரியசத்ரு, சுப்தக்னன், யஜ்ஞகோபன், மஹாபார்ஷ்வன், மஹோதரன்,{1} வெல்வதற்கரிய ராக்ஷசர்களான அக்னிகேது, ரஷ்மிகேது, மஹாதேஜஸ்வியும், பலவானும், ராவணாத்மஜனுமான {ராவணனின் மகனுமான} இந்திரஜித்,{2} மஹாபலவானான பிரஹஸ்தன், விரூபாக்ஷன், மஹாபலவானான வஜ்ரதம்ஷ்டிரன், தூம்ராக்ஷன், அதிகாயன், துர்முகன் என்ற ராக்ஷசன் ஆகியோர்,{3} பரிகங்கள், பட்டசங்கள், பராசங்கள் {முள்ளாயுதங்கள்}, சக்திகள் {வேல்கள்}, சூலங்கள், பரசுகள் {கோடரிகள்}, சாபங்கள் {விற்கள்}, பாணங்கள் {கணைகள்}, கூர்மையான பெருங்கட்கங்கள் {கத்திகள்} ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர்.{4} தேஜஸ்ஸால் ஒளிர்ந்த சர்வ ராக்ஷசர்களும், பரமகுரோதத்துடன் துள்ளிக் குதித்து, ராவணனிடம் {பின்வருமாறு} சொன்னார்கள்:(1-5) "ராமனையும், சுக்ரீவனையும், லக்ஷ்மணனையும், லங்கைக்குத் தீங்கிழைத்தவனும், கிருபைக்குரியவனுமான ஹனூமதனையும் கொல்வோம்" {என்றனர்}.(6)

விபீஷணன், ஆயுதங்களைப் பிடித்திருந்த அவர்கள் அனைவரையும் நிறுத்தி, அமரச் செய்து, கூப்பிய கைகளுடன் இந்த வாக்கியத்தைக் கூறினான்:(7) "தாதா {ஐயா, ராவணரே}, எப்போது {சாம, தான, பேதம் எனும்} மூன்று உபாயங்களால் அர்த்தத்தை {நோக்கத்தை} அடைய முடியவில்லையோ, அதுவே தகுந்த விக்கிரம காலமாகும் என்று மநீஷிணர்கள் சொல்கின்றனர் {அதுவே ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு / தண்டத்திற்குப் பொருத்தமான காலமாகும் என்று நீதிநூல் வல்லுனர்கள் / கல்விமான்கள் சொல்கின்றனர்}.(8) தாதா, அலட்சியமாக இருப்பவர்கள், {பகைவரின்} தாக்குதலுக்கு உள்ளானவர்கள், தெய்வத்தால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோரை விதிப்படி பரீக்ஷித்து செய்யப்படும் விக்கிரமமே சித்திக்கும்.(9) அலட்சியமற்றவரும் {விழிப்புள்ளவரும்}, வெற்றியில் விருப்பங் கொண்டவரும், உறுதிமிக்க பலத்தை {படையைக்} கொண்டவரும், கோபத்தை வென்றவரும், வெல்வதற்கரியவருமான அவரை {ராமரை} நீங்கள் தாக்க விரும்புவது எப்படி?(10) நதநதீபதியான {நதங்கள், நதிகளின் தலைவனான} கோரமான சமுத்திரத்தைக் கடந்த ஹனுமதனின் கதியை {வேகத்தை} உலகில் எவனால் நினைத்துப் பார்க்கவோ, அறிந்து கொள்ளவோ முடியும்?(11)

நிசாசரர்களே {இரவுலாவிகளே}, பகைவரின் பலமும், படையும் அளவிடற்கரியனவாக இருக்கின்றன. எவ்வகையிலேனும் அவசரப்பட்டு {அவர்களை} அவமதித்துவிடக் கூடாது.(12) புகழ்மிக்க எவருடைய பாரியை {மனைவி சீதை} ஜனஸ்தானத்திலிருந்து கொண்டுவரப்பட்டாளோ, அந்த ராமர், பூர்வத்தில் ராக்ஷசராஜருக்கு {ராவணருக்குச்} செய்த அபக்ருதம் {கூடாத செயல் / தவறு} என்ன?(13) வரம்புமீறிய கரன், போரில் ராமரால் கொல்லப்பட்டான். பிராணிகளின் பலம் எப்படியோ, அப்படியே அவசியம் தங்கள் பிராணன்களை ரக்ஷித்துக் கொள்ள வேண்டும் {உயிரினங்கள் தங்கள் வலிமைக்கு ஏற்பத் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். [இராமர், தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவே கரனைக் கொன்றார்]}[1][2].(14) இதன் நிமித்தம், வைதேகியிடமிருந்து நமக்கு மகத்தான பயம் உண்டாகும். கொண்டு வரப்பட்ட அவள் {சீதை}, கொடுக்கப்பட வேண்டும். கலகத்தின் அர்த்தத்தில் {கலகம் செய்வதன் பொருட்டு} செயல்படுவதால் என்ன {பயன்}?(15) தர்மத்தைப் பின்பற்றும் அந்த வீரியவானிடம் {ராமரிடம்}, அர்த்தமில்லாமல் வைரம் பாராட்டுவது, நம்மால் தாங்கிக் கொள்ளக்கூடியதல்ல. மைதிலி அவரிடம் {ராமரிடம்} கொடுக்கப்பட வேண்டும்.(16)

[1] நரசிம்மாசாரியர், தர்மாலய, கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்புகளில் இதன் பிறகு மற்றுமொரு சுலோகம் வருகிறது. அதன் பொருள், "பிறர் மனைவியை கண்ணெடுத்துப் பார்ப்பது புகழுக்குக் களங்கம் விளைவிப்பது; ஆயுளைக் குறைப்பது; {நால்வகை} புருஷார்த்தங்களையும் அழிக்கக்கூடியது. பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது; பாவம் செய்வதை மேன்மேலும் தூண்டிவிடுவது" என்பதாகும். ஆங்கிலப் பதிப்புகள் எதனிலும் இது சொல்லப்படவில்லை.

[2] இங்கே சூர்ப்பணகையின் அங்கபங்கம் குறித்து விபீஷணன் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

கஜங்கள், அஷ்வங்கள் {யானைகள், குதிரைகள்} ஆகியவற்றுடன் கூடியதும், ஏராளமான ரத்தினங்களால் நிறைந்ததுமான புரீ {நம் லங்கா நகரம்} சிதறிப் போவதற்கு முன், மைதிலி அவரிடம் கொடுக்கப்பட வேண்டும்.(17) கோரமானதும், வெல்வதற்கரியதுமான மஹத்தான ஹரிவாஹினி {குரங்குப்படை}, நமது லங்கையைத் தாக்கும் வரை காத்திராமல் சீதை கொடுக்கப்பட வேண்டும்.(18) இராமரிடம், அவரது அன்பு பாரியை {மனைவி சீதை} கொடுக்கப்படவில்லையெனில், இந்த லங்காபுரீக்கும், சர்வ ராக்ஷசர்களுக்கும் நாசமே விளையும்.(19) பந்துத்வத்தால் {உறவுமுறையால்} உம்மை வேண்டுகிறேன். என் வசனத்தின்படி செயல்படுவீராக. நான் உமது ஹிதத்திற்காகவே சொல்கிறேன். மைதிலியை அவரிடம் {ராமரிடம்} கொடுத்துவிடுவீராக.(20) 

நிருபாத்மஜர் {மன்னர் தசரதரின் மகனான ராமர்}, சரத் {கூதிர்} கால சூரியனைப் போல் ஒளிர்பவையும், நவ புங்கங்களுடன் {புதிய இறகுகளுடன்} கூடியவையும், திடமானவையும், அமோகமானவையுமான {தவறாதவையுமான} கணைகளை, உம்மை வதைப்பதற்காக ஏவும் முன், மைதிலியை தாசரதியிடம் {தசரதரின் மகனான ராமரிடம்} கொடுத்துவிடுவீராக.(21) சுகத்தையும், தர்மத்தையும் நாசம் செய்யக்கூடிய அந்தக் கோபத்தைக் கைவிடுவீராக. கீர்த்தியையும், தர்மத்தையும் வளர்க்கும் இன்பத்தை நாடி அமைதியடைவீராக. புத்திரர்களுடனும், பந்துக்களுடனும் {உறவினர்களுடனும்} நாம் ஜீவித்திருப்போம். மைதிலியை தாசரதியிடம் கொடுத்துவிடுவீராக" {என்றான் விபீஷணன்}.(22)

இராக்ஷசேஷ்வரன் ராவணன், விபீஷணனின் சொற்களைக் கேட்டு, அவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, தானும் கிருஹத்திற்குள் பிரவேசித்தான்.(23)

யுத்த காண்டம் சர்க்கம் – 009ல் உள்ள சுலோகங்கள்: 23

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை