Saturday 13 July 2024

இராமனைத் தேற்றிய சுக்ரீவன் | யுத்த காண்டம் சர்க்கம் - 002 (26)

Sugreeva comforts Rama | Yuddha-Kanda-Sarga-002 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சோகத்தில் ஆழ்ந்த ராமன். துணிவுடன் இருக்குமாறு ராமனுக்கு ஆறுதல் கூறிய சுக்ரீவன்...

Rama and Sugreeva


ஸ்ரீமான் சுக்ரீவன், சோகத்தில் ஆழ்ந்திருந்தவனும், தசரதாத்மஜனுமான {தசரதனின் மகனுமான} அந்த ராமனின் சோகத்தைப் போக்கவல்ல {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(1) "வீரரே, மற்ற பிராகிருதன் {சாதாரணன்} எப்படியோ, அப்படி ஏன் நீர் துன்புறுகிறீர்? இப்படி இருக்காதீர். செய்நன்றிகொன்றவன் நட்பை {நட்பைக் கைவிடுவதைப்} போல, இந்த சந்தாபத்தைக் கைவிடுவீராக.(2) இராகவரே, பகைவனின் நிலயத்தை அறிந்த செய்தி கிடைத்துவிட்டதால், உமது சந்தாபத்திற்கான ஸ்தானம் {கவலைக்கான காரணம்} எதையும் நான் காணவில்லை.(3) இராகவரே, மதிமானும், சாஸ்திரவித்தும், பிராஜ்ஞரும், பண்டிதருமான நீர் {சாஸ்திரங்களை நன்கறிந்தவரும், அறிஞரும், கல்விமானுமான நீர்}, கிருதாத்மர்களின் அர்த்தத்தையும், புத்தியையும் தூஷிக்கும் {காரிய காரணங்களை நிறைவேற்றியவர்களின் நோக்கத்தையும், புரிதலையும் பழிக்கும் வகையிலான} இந்தப் பிராகிருத {சாதாரண} புத்தியைக் கைவிடுவீராக.(4) 

மஹாநக்ரங்கள் {பெரும் முதலைகள்} நிறைந்த சமுத்திரத்தை லங்கனம் செய்து {கடந்து}, லங்கை மீதேறி, உமது பகைவரை நாம் அழிப்போம்.(5) உற்சாகமற்றவனும், சோகத்தால் மனம் கலங்கியவனுமான ஒருவனின் நோக்கங்கள் பாழாகும். அவனும் விசனத்தையே {துன்பத்தையே} அடைவான்.(6) அனைத்துவகையிலும் சூரர்களும், சமர்த்தர்களுமான இந்த ஹரியூதபர்கள் {குரங்குக் கூட்டக் குழுத்தலைவர்கள்}, உமது அர்த்தத்திற்காக பாவகனுக்குள்ளும் {நெருப்புக்குள்ளும்} உற்சாகத்துடன் பிரவேசிப்பார்கள். இதை அவர்களின் மகிழ்ச்சியில் இருந்தே அறிகிறேன். என் தர்க்கம் திடமானதே.(7,8அ) பாப கர்மங்களைச் செய்பவனும், பகைவனுமான ராவணனை விக்ரமத்தால் அழித்து, சீதையை மீட்பது எப்படியோ, அப்படிச் செயல்படுவதே உமக்குத் தகும்.(8ஆ,9அ) இராகவரே, அந்த ராக்ஷச ராஜனின் அந்தப் புரீயை {ராவணனின் லங்கா நகரை} நாம் பார்க்கும் வகையில், அங்கே சேது பந்தனம் செய்வது {அணை / பாலம் கட்டுவது} எப்படியோ, அப்படிச் செயல்படுவதே உமக்குத் தகும்.(9ஆ,10அ)

திரிகூடத்தின் சிகரத்தில் நிலைத்திருக்கும் அந்த லங்காம்புரியை நாம் கண்டு, யுத்தத்தில் ராவணனும் காணப்பட்டதும் அவன் கொல்லப்பட்டான் என்றே கருதுவீராக.(10ஆ,11அ) கோர வருணாலயமான சாகரத்தில் சேதுவைக் கட்டாமல், இந்திரன் உள்ளிட்ட ஸுராஸுரர்களாலும்கூட {தேவர்களாலும், அசுரர்களாலும்கூட} லங்கையை நொறுக்க {வீழ்த்த} முடியாது.(11ஆ,12அ) இலங்கையின் சமீபம் வரை சமுத்திரத்தில்  சேது கட்டப்பட்டு,{12ஆ} அதை எப்போது என் சர்வ சைனியமும் கடக்கிறதோ, அப்போதே வெற்றியை அடைந்துவிட்டதாகக் கருதுவீராக. காமரூபிகளான இந்த ஹரயர்கள் {விரும்பிய வடிவங்களை எடுக்க வல்லவர்களான இந்தக் குரங்குகள்} போரில் உண்மையில் வீரமிக்கவர்களாவர்.(12ஆ,13)

எனவே, இராஜரே, சர்வ அர்த்தங்களையும் நாசம் செய்யும் இந்தக் குழப்ப புத்தி போதும். இவ்வுலகில் சோகமே புருஷர்களின் சௌர்யத்தை {சூரத்தனத்தை} கரைத்துவிடுகிறது.(14) மனுஷ்யன் என்ன காரியம் செய்தாலும், அவன் சௌண்டீர்யத்தைக் {தைரியத்தையும், பராக்கிரமத்தையும்} கைக்கொள்ள வேண்டும். அவ்வாறு செயல்பட்டால், அதுவே விரைவில் அவனை அலங்கரிக்கும்.(15) மஹாப்ராஜ்ஞரே {அனைத்தையும் அறிந்தவரே}, இந்தக் காலத்தில் தேஜஸ்ஸுடன் கூடிய வலிமையைக் கைக்கொள்வீராக. இழப்பினாலும், அழிவினாலும் உண்டாகும் சோகமானது, சூரர்களும், மஹாத்மாக்களுமான உம் விதமான மனுஷ்யர்களின் சர்வ அர்த்தங்களையும் நாசம் செய்துவிடும் {நோக்கங்கள் அனைத்தையும் அழித்துவிடும்}.(16,17அ)

நீர் புத்திமான்களில் சிறந்தவராகவும், சர்வ சாஸ்திர கோவிதராகவும் {சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவராகவும்} இருக்கிறீர். எனவே, என் விதமாகச் செயல்படுபவர்களைக் கொண்டு, பகைவரை வெல்வதே உமக்குத் தகும்.(17ஆ,18அ) இராகவரே, கையில் தனுசுடன் கூடிய உம்முடன் போர்க்களத்தில் முகம் முகமாக {கையில் வில்லுடன் கூடிய உம்மைப் போர்க்களத்தில் எதிர்த்து} நிற்கக் கூடிய எவன் ஒருவனையும் மூன்று உலகங்களிலும் நான் காணவில்லை.(18ஆ,19அ) வானரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உமது காரியம் கெட்டுப்போகாது. அக்ஷயமான சாகரத்தை {வற்றாத கடலைக்} கடந்த உடனேயே சீதையை நீர் தரிசிப்பீர்.(19ஆ,20அ)

எனவே, பூபதியே {உலகின் தலைவரே}, சோகத்தைக் கைக்கொண்டது போதும். {இனி} குரோதத்தைக் கைக்கொள்வீராக. முயற்சியற்ற க்ஷத்திரியர்கள் மந்தர்களாவர். சண்டர்களுக்கே {கோபம் நிறைந்தவர்களுக்கே} அனைவரும் பயப்படுவார்கள்.(20ஆ,21அ) ஸூக்ஷ்மபுத்தி உடையவரே {நுண்ணறிவுமிக்கவரே}, நதீபதியான கோரமான சமுத்திரத்தை லங்கனம் செய்யும் அர்த்தத்திற்கான உபாயங்களை {ஆறுகளின் தலைவனான பயங்கரப் பெருங்கடலைக் கடப்பதற்கான வழிமுறைகளைக்} குறித்து எங்களுடன் சேர்ந்து இப்போதே ஆலோசிப்பீராக.(21ஆ,22அ) இந்த சைனியம் அதை {கடலைக்} கடந்துவிட்டால், வெற்றியடைவது நிச்சயம். என் சர்வ சைனியமும் கடந்துவிட்டால் வெற்றி அடையப்பட்டது என்றே கருதுவீராக.(22ஆ,23அ) 

சமரில் சூரர்களும், காமரூபிகளுமான இந்த ஹரயர்கள் {விரும்பிய வடிவை ஏற்க வல்லவர்களுமான இந்தக் குரங்குகள்}, பாறைகளையும், மரங்களையும் பொழிந்து, உண்மையில் அந்தப் பகைவரை ஊதித் தள்ளிவிடுவார்கள்.(23ஆ,24அ) எப்படியோ வருணாலயத்தைக் கடப்பதையே நான் பார்க்கிறேன். பகைவரை அழிப்பவரே. யுத்தத்தில் அவன் {ராவணன்} கொல்லப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.(24ஆ,25அ) ஏராளம் சொல்லி என்ன? எல்லா வகையிலும் நீர் விஜயராக இருப்பீர் {முற்றான வெற்றியை அடைவீர்}. அதற்கான நிமித்தங்களை {நல்ல சகுனங்களை} நான் பார்க்கிறேன். என் மனம் சிலிர்ப்பை அடைகிறது" {என்றான் சுக்ரீவன்}.(25ஆ,26)

யுத்த காண்டம் சர்க்கம் – 002ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை