Monday 8 July 2024

இராமனின் ஆலிங்கனம் | யுத்த காண்டம் சர்க்கம் - 001 (20)

Rama's hug | Yuddha-Kanda-Sarga-001 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஹனுமான் அறிவித்ததைக் கேட்டுவிட்டு, அவனை ஆரத் தழுவிப் பாராட்டிய ராமன்; சமுத்திரத்தை எப்படிக் கடப்பது என்பது குறித்துச் சிந்தித்தது...

Rama hugging Hanuman


இராமன், உள்ளபடியே ஹனுமதன் சொன்ன வாக்கியத்தைக் கேட்டுப் பிரீதியடைந்து, {பின்வரும்} வாக்கியத்தை மறுமொழியாகச் சொன்னான்:(1) "புவியில் துர்லபமானதும் {செய்வதற்கரியதும்}, தரணீதலத்திலுள்ள மற்ற எவருக்கும் மனத்தினாலும் சாத்தியமற்றதுமான மஹத்தான காரியம் ஹனுமதனால் செய்யப்பட்டிருக்கிறது.(2) கருடனையும், வாயுவையும், ஹனூமதனையும் தவிர, மஹோததியை {பெருங்கடலைக்} கடக்கக்கூடிய வேறு எவரையும் நான்  காணவில்லை.(3) தேவர்கள், தானவர்கள், யக்ஷர்களாலும், கந்தர்வர்கள், உரகர்கள், ராக்ஷசர்களாலும் அணுகமுடியாததும், ராவணனால் நன்கு ரக்ஷிக்கப்படுவதுமான லங்காம்புரீக்குள்,{4} சத்வத்தை ஆசரித்து {மனோவலிமையைக் கொண்டு}, பிரவேசித்து எவனால் ஜீவனுடன் திரும்பி வரமுடியும்?(4,5அ) 

இராக்ஷசர்களால் நன்றாக ரக்ஷிக்கப்படுவதும், மீறுதற்கரியதுமான அதற்குள் {லங்காபுரீக்குள்} எவன் புகுவான்? ஹனூமதனுக்கு சமமான வீரிய, பலசம்பன்னன் {வீரியமும், பலமும் நிறைந்தவன்} வேறு எவனும் இல்லை.(5ஆ,6அ) ஹனூமதன், சுக்ரீவனுக்குப் பணி செய்யும் வகையில், தன் விக்ரமத்திற்குத் தகுந்த பலத்தை வெளிப்படுத்தி, மஹத்தான காரியத்தைச் செய்திருக்கிறான்.(6ஆ,7அ)  எந்தப் பிருத்யன் {பணியாள்}, செய்வதற்கரிய கர்மத்தில் தலைவனால் நியமிக்கப்பட்டு, அதில் ஆர்வத்துடன் செயல்படுகிறானோ {தலைவன் சொன்னதையும் செய்து, துணையான வேறு காரியங்களையும் செய்வானோ}, அவன் புருஷோத்தமன் {மனிதர்களில் சிறந்தவன்} என்று அழைக்கப்படுகிறான்.(7ஆ,8அ) நிருபதிக்கு {மன்னனுக்குப்} பிரியமான காரியத்தில் நியமிக்கப்பட்டு, அதை சமர்த்தனாகச் செய்தும், பிறவற்றை {துணையான வேறு காரியங்களைச்} செய்யாத பிருத்யன் {பணியாள்} எவனோ, அவன் மத்யம நரன் {மனிதர்களில் நடுத்தரமானவன்} என்று அழைக்கப்படுகிறான்.(8ஆ,9அ) நிருபதியின் காரியத்தில் நியமிக்கப்பட்டு, அதைச் செய்வதற்கு சமர்த்தனாகவும், தகுந்தவனாகவும் இருந்தும், அதைச் செய்யாத பிருத்யன் {பணியாள்} எவனோ, அவன் புருஷாதமன் {மனிதர்களில் இழிந்தவன்} என்று அழைக்கப்படுகிறான்.(9ஆ,10அ)

எனவே, நியோகத்தில் {கடமையில்} நியமிக்கப்பட்ட ஹனூமதன், செய்ய வேண்டியதைச் செய்து முடித்துவிட்டான். செய்வதற்கரிய இன்னும் பிறவற்றையும் எளிதில் தானே செய்து, சுக்ரீவனையும் நிறைவடையச் செய்திருக்கிறான்.(10ஆ,11அ) வைதேஹி காணப்பட்டதால், நானும், ரகுவம்சமும், மஹாபலவானான லக்ஷ்மணனும் இன்று தர்மப்படி ரக்ஷிக்கப்பட்டிருக்கிறோம்.(11ஆ,12அ) இருப்பினும், பிரியத்திற்குரியவற்றை சொன்ன இவனுக்குத் தகுந்த பிரயத்தைச் செய்ய முடியாத நிலையில் நான் இருப்பதால், என் மனம் மேலும் தீனமடைகிறது.(12ஆ,13அ) இந்தக் காலத்தில், எனக்கு எல்லாமுமாக இருக்கும் மஹாத்மாவான இந்த ஹனூமதனுக்கு, நான் இந்த பரிஷ்வங்கத்தை {அங்கத்தழுவலை / அரவணைப்பை} தருகிறேன்" {என்றான் ராமன்}.(13ஆ,14அ)

பிரீதியில் திளைத்த அங்கங்களுடன் கூடிய ராமன், இதைச் சொல்லிவிட்டு, வாக்கை நிறைவேற்றிய நிறைவுடன் வந்த அந்த ஹனூமந்தனை ஆரத் தழுவிக்கொண்டான்.(14ஆ,15அ) இரகுசத்தமன் {ராமன், சற்றே} ஆலோசித்துவிட்டு, ஹரீக்களின் ஈஷ்வரன் {சுக்ரீவன்}, கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, மீண்டும் இந்த வசனத்தைச் சொன்னான்:(15ஆ,16அ) "சீதையைத் தேடுவது அனைத்து வகையிலும் நன்றாகவே செய்யப்பட்டது. ஆனால், சாகரத்தை நினைத்ததும் மீண்டும் என் மனம் தொலைகிறது {கலங்குகிறது}.(16ஆ,17அ) கடப்பதற்கரியதும், பெரும் நீர்க்கொள்ளிடமுமான சமுத்திரத்தின் தென்கரையை ஹரயர்கள் {குரங்குகள்} ஒன்று சேர்ந்து எப்படி அடையப் போகிறார்கள்?(17ஆ,18அ) இது வைதேஹி எனக்குச் சொல்லி அனுப்பிய விருத்தாந்தம். என்றாலும், ஹரீக்கள் {குரங்குகள்} சமுத்திரத்தை எப்படிக் கடக்கப்போகிறார்கள்?"(18ஆ,19அ) என்று ஹனூமந்தனிடம் சொல்லிவிட்டு, பகைவரை அழிப்பவனும், மஹாபாஹுவுமான ராமன், சோகத்தால் கலக்கமடைந்து, தியானத்தில் ஆழ்ந்தான்.(19ஆ,20)

யுத்த காண்டம் சர்க்கம் – 001ல் உள்ள சுலோகங்கள்: 20

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை