Sunday, 23 April 2023

அந்தப் பாபியைக் கண்டுபிடிப்பீராக | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 66 (21)

Find that sinful one | Aranya-Kanda-Sarga-66 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனிடம் சோகத்தைப் பொறுத்துக் கொள்ளுமாறு சொல்லி, அவனிடம் விவேகத்தைத் தூண்டிய லக்ஷ்மணன்...

Lakshmana

பிறகு சௌமித்ரியான லக்ஷ்மணன், இவ்வாறு சோக சந்தாபத்துடன் {சோகத்தால் பீடிக்கப்பட்டு}, மஹத்தான மோஹத்தில் மூழ்கி, அநாதையைப் போல அழுது கொண்டிருந்தவனும், கதியற்றவனாக நனவிழந்திருந்தவனுமான அந்த ராமனுக்கு ஒரு முஹூர்த்தம் போல் ஆறுதல் கூறி, அவனது பாதங்களை இறுகப் பற்றிக் கொண்டு {பின்வருமாறு} விளக்கினான்:(1,2) "இராமரே, அமரர்கள் {அடைந்த} அமிருதத்தைப் போல, மகத்தான தபத்தாலும், மஹத்தான கர்மங்களாலும் தசரத ராஜர் உம்மை அடைந்தார்.(3) பரதனிடம் கேட்டது போல, மஹீபதியான ராஜா {தசரதர்}, உமது குணங்களில் கட்டுண்டு, உமது பிரிவால் தேவத்வத்தை அடைந்தார் {இறந்தார்}.(4) 

காகுத்ஸ்தரே, பிராப்தமான {வாய்த்திருக்கும்} இந்த துக்கத்தை {உம்மால்} சஹித்துக் கொள்ள முடியவில்லையென்றால், அற்ப பலம் கொண்ட பிராக்ருதனாலோ {சாதாரணனாலோ}, பிறராலோ எவ்வாறு சஹித்துக் கொள்ள முடியும்?(5) நரசிரேஷ்டரே {மனிதர்களில் சிறந்தவரே}, எந்த பிராணிகளுக்குத்தான் ஆபத்தில்லை?. இராஜாவே, பற்றும் அக்னியும் க்ஷணத்தில் {ஒரே கணத்தில்} விட்டுவிடும். ஆசுவாசம் அடைவீராக {இளைப்பாறுவீராக}.(6) நரவியாகரரே, துக்கத்தில் இருக்கும் நீர், உமது தேஜஸ்ஸால் உலகங்களை தஹிக்கச் செய்தால் {உமது வல்லமையால் உலகங்களை எரியச் செய்தால்}, அதனால் பீடிக்கப்படும் பிரஜைகள் ஆறுதலடைய எங்கே போவார்கள்?(7) 

நஹுஷாத்மஜனான யயாதி, சக்ரனுடன் {இந்திரனுடன்} கூடிய ஒரே உலகத்தையே அடைந்தாலும், சாபம் அவனைத் தீண்டியது. இஃது உலகத்தின் சுபாவமே.(8) மஹாரிஷியான எந்த வசிஷ்டர், நமது பிதாவின் புரோஹிதராக இருந்தாரோ, அவருக்கு ஒரே நாளில் நூறு புத்திரர்கள் பிறந்தாலும், மீண்டும் அதே போல {ஒரே நாளில் அவர்கள்} கொல்லப்பட்டனர்.(9) கோசலேசுவரரே, எவள் ஜகத்தின் மாதாவோ, எவள் சர்வலோக நமஸ்கிருதையோ {உலகங்கள் அனைத்தாலும் வணங்கப்படுகிறவளோ} அந்த பூமியிலும் சலனம் காணப்படுகிறது.(10) யாவர் ஜகத்தின் நேத்திரங்களாக {கண்களாகத்} திகழும் தர்மர்களோ, யாவரிடம் சர்வமும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறதோ, அந்த மஹாபலர்களான ஆதித்ய, சந்திரர்களையும் கிரஹணம் நெருங்குகிறது.(11) புருஷரிஷபரே,  {பூமி, கிரஹங்கள் போன்ற} மஹாபூதங்களும், தேவர்களும், தேஹம் படைத்த சர்வ பூதங்களும் {உயிரினங்கள் அனைத்தும்} தைவத்திலிருந்து விடுபடமுடியாது {விதிப்பயனைத் தவிர்க்க முடியாது}.(12) நரசார்தூலரே, சக்கிராதி தேவர்களிடமும் {இந்திரன் முதலிய தேவர்களிடமும்}, நயாநய வர்தமானங்கள் {சுகதுக்கங்களுக்குரிய செயல்பாடுகள்} உண்டு என்று கேட்டிருக்கிறோம். நீர் துன்புறுவது தகாது.(13) 

வீரரே, இராகவரே, வைதேஹி கடத்தப்பட்டிருந்தாலும், கொல்லப்பட்டிருந்தாலும் பிராகிருத அந்நியனை {இயல்பான வேறொருவனைப்} போலவே நீர் சோகத்தை அடைவது தகாது.(14) இராமரே, எப்போதும் சத்தியத்தை தரிசிப்பவர்களும், மனச்சோர்விலிருந்து விடுபட்ட பார்வையைக் கொண்டவர்களுமான உம்மைப் போன்றவர்கள், மஹத்தான ஆபத்துகளிலும் மனத்தளர்ச்சி அடையமாட்டார்கள்.(15) நரசிரேஷ்டரே {மனிதர்களில் சிறந்தவரே}, புத்தியுடன் தத்துவங்களைச் சரியாகச் சிந்திப்பீராக. மஹாபிராஜ்ஞர்கள் {அனைத்தையும் அறிந்தவர்கள்}, தங்கள் புத்தியைப் பயன்படுத்தியே, சுபாசுபங்களை {நன்மை தீமைகளை} அறிகிறார்கள்.(16) குண தோஷங்களை {நன்மை தீமைகளைக்} காணாதவர்களுக்கும், கர்மங்களில் உறுதியற்றவர்களுக்கும் இஷ்டபலன்கள் {விரும்பிய பயன்கள்} ஒருபோதும் வாய்ப்பதில்லை.(17)

வீரரே, பூர்வத்தில் நீரே உண்மையில் என்னிடம் இவ்வாறு  பலமுறை சொல்லியிருக்கிறீர். பிருஹஸ்பதியைத் தவிர வேறு எவனால் உண்மையில் உமக்குக் கற்பிக்க முடியும்?(18) மஹாபிராஜ்ஞரே {அனைத்தையும் அறிந்தவரே}, உமது புத்தியை, தேவர்களாலும் விளங்கிக் கொள்ள முடியாது. சோகத்தில் துயில் கொள்ளும் உமது ஞானத்தை நான் தூண்டிவிட விரும்பினேன்.(19) இக்ஷ்வாகு ரிஷபரே {இக்ஷ்வாகு குலத்தில் சிறந்தவரே}, திவ்யமானவையும், மானுஷ்யம் சார்ந்தவையுமான உமது பராக்கிரமங்களை, உள்ளபடியே அறிந்து கொண்டு, பகைவனை வதம் செய்ய முயற்சிப்பீராக.(20) புருஷரிஷபரே, முற்றான அழிவை ஏற்படுத்துவதன் மூலம் உமக்கு என்ன {பயன்}? பாபியான அந்தப் பகைவனைக் கண்டறிவதே உண்மையில் உமக்குத் தகும்" {என்றான் லக்ஷ்மணன்}.(21)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 66ல் உள்ள சுலோகங்கள்: 21

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்