Saturday 22 April 2023

ஏகனின் அபராதம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 65 (16)

Felony of a single one | Aranya-Kanda-Sarga-65 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: உலகத்தை அழிப்பது முறையல்ல என்பதை விளக்க ராமனைத் தணித்த லக்ஷ்மணன்; தேடலைத் தொடங்குவது...

Lakshmana pacifies Rama

இவ்வாறு துன்பத்தில் தஹித்துக் கொண்டிருந்தவனும், உலகை மகிழ்ச்சியடையச் செய்பவனும், சீதை கடத்தப்பட்டதால் சோர்வடைந்து, சம்வர்த்தக அநலனை {ஊழித்தீயைப்} போல, உலகங்களை அழிப்பதற்கு ஆயத்தமாக, நாண்பொருத்தப்பட்ட தனுவை மீண்டும் மீண்டும் பார்த்து, வெப்பப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, யுகாந்தத்தின் ஹரனை {யுகத்தின் முடிவில் தோன்றும் சிவனைப்} போல, சர்வ ஜகத்தையும் தஹிக்க {எரிக்க} விரும்பியவனுமான ராமனை, இதற்குமுன் ஒருபோதும் கண்டிராத கோபத்துடன் கூடியவனாகக் கண்ட லக்ஷ்மணன், வாடிய முகத்துடன் {பின்வருமாறு} பேசினான்:(1-3) "முன்பு மிருதுவாகவும், தற்கட்டுப்பாட்டுடன், சர்வ பூத ஹிதத்தை {உயிரினங்கள் அனைத்தின் நலத்தை} விரும்பியவராக இருந்துவிட்டு, குரோதத்தின் வசத்தில் விழுந்து, இயல்பை இழப்பது உனக்குத் தகாது.(4)

சந்திரனின் மகிமையும், சூரியனின் பிரபையும், வாயுவின் கதியும், புவியின் பொறுமையும், நியதமும் {அடக்கமும்} என இவை அனைத்துடன் சேர்ந்து உத்தம புகழும் உம்மில் நிலைத்திருக்கிறது.(5) ஏகன் {தனியொருவன்} செய்த அபராதத்திற்காக {குற்றத்திற்காக}, உலகங்களை அழிப்பது உமக்குத் தகாது. ஆயுத பரிவாரங்களும், போரில் பயன்படுத்தக்கூடிய இந்த ரதமும் எவனுடையவை என்பதையும், எவனால், என்ன காரணத்திற்காக பங்கமடைந்தன {நொறுக்கப்பட்டன} என்பதையும் அறியமுடியவில்லை.(6,7அ) பார்த்திபாத்மஜரே {மன்னரின் மகனே},  போர் நடந்து முடிந்த இந்த தேசம் {இடம்}, குளம்புகள் {விலங்குக் காலடிகள்}, சக்கரங்கள் ஆகியவற்றின் தடங்கள் பதியப்பெற்றதாகவும், உதிர பிந்துக்களால் {ரத்தத்துளிகளால்} நனைந்ததாகவும் கோரமாகக் காட்சியளிக்கிறது.(7ஆ,8அ) 

பேசுபவர்களில் சிறந்தவரே, இஃது இருவருக்கிடையில் நடந்த தனிப்பட்ட மோதலே. மஹத்தான பலத்தின் {படையின்} சுவடுகள் எவையும் எனக்குப் புலப்படவில்லை.(8ஆ,9அ) தனியொருவன் செய்த செயலுக்காக, உலகங்களை அழிப்பது தகாது. மிருதுவானவர்களும், நல்ல இயல்பைக் கொண்டவர்களுமான வசுதாதிபர்கள் {பூமியின் தலைவர்கள்}, பொருத்தமான தண்டத்தையே {குற்றங்களுக்குத் தகுந்த தண்டனைகளையே} விதிப்பார்கள்.(9ஆ,10அ) நீர் சர்வ பூதங்களுக்கும் எப்போதும் புகலிடமாகவும், பரம கதியாகவும் திகழ்ந்தவர் ஆவீர். இராகவரே, {அத்தகையவரான} உமது தாரம் {மனைவி} தொலைந்து போவதை எவன்தான் நல்லதென நினைப்பான்?(10ஆ,11அ) தீக்ஷிதர்களுக்கு {விரதங்களை நோற்கத் தொடங்கியவர்களுக்குப் பிரியமற்றதைச் செய்யாத} நல்லோரைப் போலவே சரிதங்கள் {ஆறுகள்}, சாகரங்கள் {கடல்கள்}, சைலங்கள் {மலைகள்} ஆகியவற்றாலும், தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோராலும் உமக்குப் பிரியமற்றதைச் செய்ய இயலாது.(11ஆ,12அ)

இராஜரே, சீதையை எவன் கடத்தினானோ அவனை, தனுஷ்பாணியாக {கையில் வில்லுடன் கூடியவராக}, என்னை இரண்டாமவனாக {துணைவனாகக்} கொண்டும், பரமரிஷிகளின் சகாயத்துடனும் தேடுவதே தகுந்ததாகும்.(12ஆ,13அ) சமுத்திரம் {பெருங்கடல்}, பர்வதங்கள் {மலைகள்}, வனங்கள் {காடுகள்}, விதவிதமான கோரமான குகைகள் ஆகியவற்றிலும், அதேபோல விதவிதமான பத்மினியங்களிலும் {தாமரை ஓடைகளிலும்} தேடுவோம்.(13ஆ,14அ) உமது பாரியையை {மனைவியை} அபகரித்தவனைக் கண்டுபிடிக்கும்வரை சமாஹிதத்துடன் {ஒருமுகமாக} தேவ, கந்தர்வ உலகங்களிலும் தேடுவோம்.(14ஆ,15அ) கோசலேந்திரரே {கோசல நாட்டின் மன்னரே}, திரிதச {தேவலோக} ஈசுவரர்கள் உமது பத்தினியை நல்லபடியாகக் கொடுக்காமல் போனால், அதன் பிறகு, அந்தக் காலத்திற்குரிய காரியத்தைச் செய்வீராக.(15ஆ,இ) நரேந்திரரே, சீலத்துடனும் {பண்புடனும்}, இணக்கத்துடனும், விநயத்துடனும் {பணிவுடனும்}, நயமாக {மேன்மையாக} சீதையை மீட்க முடியாவிட்டால், அதன் பிறகு, ஹேமபுங்கங்களுடன் {பொன் இறகுகளுடன்} கூடியவையும், மஹேந்திரனின் வஜ்ரத்தைப் போன்றவையுமான சரத் தாரைகளால் அனைத்தையும் அழிப்பீராக" {என்றான் லக்ஷ்மணன்}.(16)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 65ல் உள்ள சுலோகங்கள்: 16

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை