Wednesday 19 April 2023

மயங்கிச் சாய்ந்த ராமன் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 61 (31)

Rama swooned away | Aranya-Kanda-Sarga-61 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையைக் கண்டுபிடிக்கமுடியாமல் பதற்றமடைந்த ராமன்; ஆறுதல் கூறிய லக்ஷ்மணன். மயங்கி விழுந்த ராமன்...

Rama Lakshmana search Sita

தசரதாத்மஜனான {தசரதனின் மகனான} ராமன், சூனியமான ஆசிரமபதத்தையும், யாருமில்லாத பர்ணசாலையையும், முற்றிலும் சிதறிக்கிடந்த ஆசனங்களையும் கண்டான். எங்கும் தன் பார்வையைக் கவனமாகச் செலுத்தியும், அங்கே வைதேஹியைக் காணாத ராமன், உரக்கக் கதறி, {லக்ஷ்மணனின்} புஜங்களைப் பற்றிக் கொண்டு {பின்வருமாறு} சொன்னான்:(1,2) "இலக்ஷ்மணா, வைதேஹி எங்கே? இங்கிருந்து எந்த தேசத்திற்குதான் {இடத்திற்குத்தான்} சென்றிருப்பாள்? சௌமித்ரியே, எவன் அவளை அபகரித்திருப்பான்? என் பிரியை {அன்புக்குரிய காதலி} யாரால் பக்ஷிக்கப்பட்டாள்?{உண்ணப்பட்டாள்}.(3) சீதே, என்னைப் பரிகாசம் செய்ய விரும்பி விருக்ஷங்களில் மறைந்திருந்தால், உன் வேடிக்கை போதும். இப்போது பெருந்துக்கத்தில் இருக்கும் என்னை அணுகுவாயாக.(4) சௌம்யமான சீதே,  விசுவாசத்துடன் {நம்பிக்கையுடன்} எந்த மிருகங்களுடனும் {மான்களுடனும்}, போதகங்களுடனும் {மான் குட்டிகளுடனும்} நீ விளையாடிக் கொண்டிருந்தாயோ, அவை நீ இல்லாமல் கண்ணீர் சிந்தும் விழிகளுடன் உருகுகின்றன.(5)

இலக்ஷ்மணா, சீதை இல்லாமல் உண்மையில் என்னால் ஜீவிக்க இயலாது. சீதை அபகரிக்கப்பட்டதால் உண்டான மஹா சோகத்தில் மூழ்கியிருக்கிறேன். மஹாராஜாவான என் பிதா {தசரதர்}, நிச்சயம் பரலோகத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்.(6,7அ) "என்னால் {காட்டுக்கு} அனுப்பப்பட்ட நீ, பிரதிஜ்ஞை ஏற்றும், அந்தக் காலத்தைப் பூர்த்தி செய்யாமல், இங்கே என் முன் எவ்வாறு வந்தாய்? விரும்பியபடி செயல்படுபவனும், பொய் பேசுபவனுமான அநாரியனான உனக்கு ஐயோ" என்று பரலோகத்தில் என்னிடம் பிதா {தசரதர்} வெளிப்படையாகச் சொல்வார்.(7ஆ-9அ) அழகிய இடையைக் கொண்டவளே, சோகத்தால் பீடிக்கப்பட்டு, வசமில்லாமல் தீனமடைந்து, மனோரதம் நொறுங்கிய என்னை, உண்மையற்ற நரனைக் {கைவிடும்} கீர்த்தியை {புகழைப்} போல, இங்கே பரிதாப நிலையில் விட்டு எங்கே சென்றுவிட்டாய்? நல்லிடை கொண்டவளே, என்னைவிட்டுச் செல்லாதே. உன்னைவிட்டுப் பிரிந்தால், நான் என் ஜீவிதத்தைக் கைவிடுவேன்" {என்றான் ராமன்}.(9ஆ-11அ)

சீதையைக் காணும் ஆவலில் பெருந்துக்கத்தை அடைந்த ராகவ ராமன், இவ்வாறே ஜனகாத்மஜையைக் காணாமல் அழுது புலம்பினான்.(11ஆ,12அ) சீதையை அடைய முடியாமல் அவன் சோகத்தில் மூழ்கினான். இலக்ஷ்மணன், ஆழமான சேற்றை அடைந்து மூழ்கும் குஞ்சரத்தை {யானையைப்} போன்ற அந்த ராமனின் நலனை விரும்பி அவனிடம் {பின்வருமாறு} பேசினான்:(12ஆ,13) "மஹாபுத்திமானே, மனச் சோர்வடையாதீர். என்னுடன் சேர்ந்து முயற்சி செய்வீராக. வீரரே, இந்தச் சிறந்த கிரி {மலை} பல குகைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.(14) கானகங்களில் சஞ்சரிப்பதில் பிரியங்கொண்ட அந்த மைதிலி, நீருக்கான உன்மத்தம் கொண்டு வனத்திலோ, புஷ்பித்திருக்கும் நளினியிலோ {தாமரைத் தடாகத்திலோ} பிரவேசித்திருக்கலாம். அல்லது மீனங்களும் {மீன்களும்}, வஞ்சுலங்களும் {நீர்நொச்சிகளும்} சேவிக்கும் சரிதத்தை {நதியை} அடைந்திருக்கலாம்.(15,16அ) புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, அல்லது உம்மையும், என்னையும் அச்சுறுத்த விரும்பியோ, நம்மை அறிந்து கொள்ளவோ {நாம் என்ன செய்வோம் என்பதை அறிய விரும்பியோ} கானகத்தில் எங்காவது அவள் மறைந்திருக்கலாம். ஸ்ரீமானே, அவளைத் தேடுவதில் சீக்கிரம் முயற்சி செய்வோம்.(16ஆ,17) காகுத்ஸ்தரே, அந்த ஜனகாத்மஜை எங்கே இருக்கிறாள் என்பதை அறிய வனம் முழுவதும் தேடுவோம். சோகத்தில் மனத்தைச் செலுத்த வேண்டாம்" {என்றான் லக்ஷ்மணன்}.(18)

நல்ல இதயத்துடன் லக்ஷ்மணன் இவ்வாறு சொன்னதும், ராமன் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டு, சௌமித்ரியுடன் சேர்ந்து தேடப் புறப்பட்டான்.(19) அந்த தசரதாத்மஜர்கள் இருவரும், வனங்களிலும், கிரிகளிலும் {மலைகளிலும்}, சரிதங்களிலும் {ஆறுகளிலும்}, சரஸ்களிலும் {தடாகங்களிலும்} முற்றுமுழுதாகத் தேடினர்.(20) சைலத்தில் {மலையில்}, சாரல்கள் {தாழ்வரைகள்}, பாறைகள் {குகைள்}, சிகரங்கள் என முற்று முழுதாகத் தேடியும், அவர்களால் அவளை நோக்கி செல்லமுடியவில்லை {அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை}.(21) அந்த சைலமெங்கும் தேடிய ராமன், லக்ஷ்மணனிடம் சொன்னான், "சௌமித்ரியே, இந்தப் பர்வதத்தில் மங்கலமான வைதேஹியைக் காணவில்லையே" {என்றான்}.(22) 

பிறகு துக்கத்தில் மூழ்கிய லக்ஷ்மணன், தண்டகாரண்யத்தில் அலைந்து திரிகையில், பெருந் தேஜஸ் கொண்ட தன்னுடன் பிறந்தானிடம் {ராமனிடம், இந்த} வாக்கியத்தைச் சொன்னான்:(23) "மஹாபிராஜ்ஞரே {அனைத்தையும் அறிந்தவரே}, மஹாபாஹுவான விஷ்ணு, பலியைக் கட்டிப்போட்டு, இந்த மஹீயை {பூமியை அடைந்ததைப்} போல, நீரும் ஜனகாத்மஜையான மைதிலியை அடைவீர்" {என்றான் லக்ஷ்மணன்}.(24)

வீரனான லக்ஷ்மணன் இவ்வாறு சொன்னாலும் அந்த ராகவன், துக்கத்தால் பீடிக்கப்பட்ட மனத்துடன், பரிதாபமான குரலில் {பின்வருமாறு} சொன்னான்:(25) "மஹாபிராஜ்ஞனே {அனைத்தையும் அறிந்தவனே}, வனம் முழுவதும் தேடிவிட்டோம். மலர்ந்த பங்கஜங்களுடன் கூடிய பத்மினிகளிலும் {தாமரை ஓடைகளிலும்}, பல குகைகளிலும், அருவிகளிலும், இந்த கிரியிலும் {தேடிவிட்டாலும்} என் பிராணனை விட உயர்ந்தவளான வைதேகியைக் காண முடியவில்லையே" {என்றான் ராமன்}.(26)

சீதை கடத்தப்பட்டதில் சோர்வடைந்த அந்த ராமன், இவ்வாறு தீனமாகப் புலம்பி, சோகத்தால் பீடிக்கப்பட்டு ஒரு முஹூர்த்தம் திகைத்திருந்தான்.(27) சர்வ அங்கங்களும் நடுங்கி, புத்தி அகன்று, உணர்விழந்து, கவலையுடன் பரிதாபமான நீண்ட வெப்பப் பெருமூச்சுகளை விட்டபடியே அவன் மயங்கிச் சாய்ந்தான்[1].(28) இராஜீவலோசனனான அந்த ராமன், அடிக்கடி பெருமூச்சுவிட்டபடியே, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், "ஹா, பிரியே {ஐயோ, அன்பே}" என்று சொல்லி மீண்டும் மீண்டும் அழுதான்.(29) அப்போது பிரிய பந்துவும் {அன்புக்குரிய உறவினனும்}, சோகத்தால் பீடிக்கப்பட்டவனும், பணிவுள்ளவனுமான லக்ஷ்மணன், தன் கைகளைக் குவித்துக் கொண்டு, பணிவுடன் பல்வேறு வழிகளில் அவனுக்கு ஆறுதல் கூறினான்.(30) அவனோ {ராமனோ}, லக்ஷ்மணனின் உதடுகளில் இருந்து வெளிப்பட்ட அந்த வாக்கியங்களை ஆதரிக்காமல், தன் பிரியையான சீதையைக் காணாது மீண்டும் மீண்டும் கதறினான்.(31)

[1] மண் சுழன்றது மால்வரை சுழன்றது மதியோர்
எண் சுழன்றது சுழன்ற அவ்வறி கடல் ஏழும்
விண் சுழன்றது வேதமும் சுழன்றது விரிஞ்சன்
கண் சுழன்றது சுழன்றது கதிரொடு மதியும்

- கம்பராமாயணம் 3475ம் பாடல், ஜடாயு உயிர் நீத்த படலம்

பொருள்: மண் சுழன்றது; பெரிய மலைகள் சுழன்றன; ஞானிகளின் எண்ணமும் திரிந்து சுழன்றது; அலைகளை எறியும் கடல்கள் ஏழும் சுழன்றன; விண் சுழன்றது; வேதமும் சுழன்றது, பிரம்மனின் கண்களுன் சுழன்றன; சூரியனோடு சந்திரனும் சுழன்றனர்.

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 61ல் உள்ள சுலோகங்கள்: 31

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை