Wednesday, 15 March 2023

மிரட்டல் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 21 (22)

Intimidation | Aranya-Kanda-Sarga-21 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சூர்ப்பணகையைத் தணிவடையச் செய்த கரன்; இராமனை எதிர்க்குமாறு கரனை மிரட்டிய சூர்ப்பணகை...

Shurpanaka complaining to Khara

கரன், மீண்டும் தன் முன் விழுந்த சூர்ப்பணகையைக் கண்டு, அர்த்தம் விளங்காத நிலையில், தெளிவான சொற்களில் குரோதத்துடன் {பின்வருமாறு} கேட்டான்:(1) "பிசிதாசனர்களும் {பச்சை மாமிசம் உண்பவர்களும்}, சூரர்களுமான அந்த ராக்ஷசர்களை நியமித்து உனக்கு விருப்பமானதை நான் செய்த பிறகும் மீண்டும் ஏன் நீ அழுது கொண்டிருக்கிறாய்?(2) என்னையும், என் நலத்தையும் எப்போதும் விரும்புகிறவர்களும், பக்தர்களும், தாக்குதல்களில் கொல்லப்பட முடியாதவர்களுமான அவர்கள் என் சொற்களை ஒருபோதும் செயல்படுத்தாமல் இருக்கமாட்டார்கள்.(3) "ஹா நாதா" என்று பெருங்கூச்சலிட்டு சர்ப்பம் {பாம்பு} போல எதற்காக நீ தரையில் புரள்கிறாய்? இதன் காரணம் என்ன? அதைக் கேட்க விரும்புகிறேன்.(4) நாதனாக {தலைவனாக} நான் இருக்கையில் ஏன் நீ அனாதையைப் போலப் புலம்புகிறாய்? எழு, எழுவாயாக. இனியும் இவ்வகையில் குழப்புவதைத் தவிர்ப்பாயாக" {என்றான் கரன்}.(5)

வெல்லப்பட முடியாதவனான கரன் இவ்வாறு சொன்னதும் சூர்ப்பணகை ஆறுதல் அடைந்தாள். பிறகு அவள், தன் நயனங்களின் {கண்களின்} நீரைத் துடைத்துக் கொண்டு தன்னுடன் பிறந்த கரனிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(6) "காதுகளும், மூக்கும் வெட்டப்பட்டுப் பெருகும் ரத்தத்தில் முழுமையாக நனைந்த நான், சற்று நேரத்திற்கு முன் இங்கே உன்னிடம் வந்து முழுமையான ஆறுதல் அடைந்தேன்.(7) சூரா, கோரனான ராகவனையும் {ராமனையும்}, லக்ஷ்மணனையும் கொல்லும் என் விருப்பத்திற்காக பதினான்கு ராக்ஷசர்களை நீ அனுப்பிவைத்தாய்.(8) பெருங்கோபத்துடன் கைகளில் சூலங்களையும், பட்டிசங்களையும் தரித்து வந்த அவர்கள் அனைவரும் போரில் ராமனின் கணைகளால் மர்மங்கள் பிளக்கப்பட்டு மாண்டனர்.(9) மஹாஜவான்களான {பெரும் வேகம் கொண்டவர்களான} அவர்கள், ராமனின் மகத்தான கர்மத்தால் க்ஷணப்பொழுதில் பூமியில் விழுந்ததைக் கண்டதும் எனக்குப் பேரச்சம் ஏற்பட்டது.(10) நிசாசரா {இரவுலாவியே}, எங்கும் பயத்தையே கண்டு பீதியடைந்த நான், மனம் நொந்தவளாக, துக்கத்துடன் மீண்டும் உன்னிடம் அடைக்கலம் நாடி வந்திருக்கிறேன்.(11)

துயரமெனும் முதலைகள் திரிவதும், பயமெனும் அலை மாலைகள் புரள்வதுமான மிகப்பெரிய சோகசாகரத்தில் மூழ்கிக் கிடக்கும் என்னை ஏன் நீ காக்காதிருக்கிறாய்?(12) பிசிதாசனர்களான {பச்சை மாமிசம் உண்பவர்களான} அந்த ராக்ஷசர்கள் என் பாதையில் பின்தொடர்ந்து வந்து, கூரிய சரங்களைக் கொண்ட ராமனால் பூமியில் வீழ்த்தப்பட்டனர்.(13) நிசாசரா {இரவுலாவியே}, என்னிடத்திலாவது, அந்த ராக்ஷசர்களிடத்திலாவது உனக்கு இரக்கம் உண்டானால், உனக்கு சக்தியும், துணிவும் உண்டானால், ராக்ஷசர்களுக்கு கண்டகமாய் {முள்ளாய்} தண்டகத்தில் குடியிருக்கும் ராமனை ஒழிப்பாயாக.(14,15அ) அமித்ரக்னனான {நட்பற்றவர்களைக் கொல்பவனான} ராமனை நீ இனி கொல்லாவிட்டால் தயக்கமேதும் இல்லாமல் இப்போதே உன் எதிரிலேயே நான் என் பிராணனை விடுவேன்.(15ஆ,16அ ) 

உன் படைகள் பெரும்போரின் களத்தில் ராமனை எதிர்த்து நிற்கும் சக்தி கொண்டவையல்ல; சூரனென எண்ணிக்கொண்டாலும் நீ சூரனல்ல; இல்லாத பராக்கிரமத்தை இருப்பதாகக் கருதுபவன் என்றே புத்தியால் நான் முன்னுணர்கிறேன்.(16ஆ,17) நீ, மானுஷர்களான அந்த ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் போரில் கொல்லும் சக்தி கொண்டவனல்ல. குலபாம்சனா {குலத்திற்கு இழிவைத் தேடித்தருபவனே}, ஆண்மையற்று, அல்ப வீரியத்துடன் மூடனைப் போல இங்கே வசிப்பது உனக்குத் தகாது. ஜனஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து பந்துக்களோடு உடனே புறப்படுவாயாக[1].(18,19) தசரதாத்மஜனான {தசரதனின் மகனான} அந்த ராமன் மஹாபராக்கிரமசாலி. நீயும் ராமனின் தேஜஸ்ஸால் {பராக்கிரமத்தால்} பீடிக்கப்பட்டு சிக்கிரமாக நாசமடைவாய்.(20) அவனுடன் பிறந்த மஹாவீரியவானாலேயே {லக்ஷ்மணனாலேயே} நான் விரூபியாக்கப்பட்டேன்" {என்றாள் சூர்ப்பணகை}.

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "16 முதல் இதுவரையுள்ள சுலோகங்கள் பல்வேறு பதிப்புகளில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் கருத்து அல்லது பொருள் இதுதான். இஃது ஒரு வகையான மிரட்டல். கரன், திரிசிரன், தூஷணன் ஆகியோரை ஜனஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்புகளில் நியமித்தவன் ராவணன். எனவே, அவர்கள் சூர்ப்பணகையைக் காக்க வரவில்லையென்றால், ராவணன் அவர்களை அந்தப் பதவியில் இருந்து தூக்கி வீசக்கூடும்" என்றும், "கரன் என்ற பெயர் ஆண் கழுதையைக் குறிக்கும்" என்றும் இருக்கிறது. கரனும், சூர்ப்பணகையும் ராகை என்பவளுக்கும், விஸ்வரஸுக்கும் பிறந்த இரட்டைப் பிள்ளைகள் என்று மஹாபாரதம், வனபர்வம் 273ம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.

பெரும்வயிறு படைத்தவளான அந்த ராக்ஷசி, உடன் பிறந்தானின் சமீபத்தில் {கரனின் அருகில்} சோகத்தால் பீடிக்கப்பட்டும், இவ்வாறு பலவகையில் புலம்பியும், பெருந்துயருற்று இரு கைகளாலும் தன் வயிற்றில் அடித்துக் கொண்டும் கதறியபடியே நினைவிழந்தாள்.(21,22)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 21ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்