Thursday 16 March 2023

தூஷணன் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 22 (24)

Dushana | Aranya-Kanda-Sarga-22 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கரன், தன் படைத்தளபதியான தூஷணனையும், தன் படையையும் போருக்கு ஆயத்தப்படுத்தியது; பதினான்காயிரம் ராக்ஷசர்களுடன் புறப்பட்டது...

Khara urging his charioteer

சூர்ப்பணகை, இவ்வாறு ராக்ஷசர்களுக்கு மத்தியில் வைத்து இழித்துரைத்தபோது, சூரனான கரன் குரோதத்துடன் இந்தக் கடுஞ்சொற்களைச் சொன்னான்[1]:(1) "உனக்கு ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக எனக்குண்டான அளவில்லா குரோதம், {செரிக்காததும், உவர்ப்பு நிறைந்ததுமான} கடும் உப்புநீரைப் போல தரிக்க இயலாததாக இருக்கிறது.(2) க்ஷீண ஜீவிதம் கொண்ட மானுஷனும் {அற்ப ஆயுள் கொண்ட மனிதனும்}, தன் தீச்செயல்களால் இப்போது வதைக்கப்பட்டு பிராணனை விடப்போகிறவனுமான ராமனின் வீரியத்தை நான் அறிய வேண்டியதில்லை.(3) கண்ணீரை அடக்குவாயாக. இந்தக் கலக்கத்தைக் கைவிடுவாயாக. இராமனையும், அவனுடன் பிறந்தானையும் {லக்ஷ்மணனையும்} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புகிறேன்.(4) இராக்ஷசியே, பரசால் {கோடரியால்} வெட்டப்பட்டு, மந்தப் பிராணனுடன் {குற்றுயிராகக்} கிடக்கும் ராமனின் சிவந்த உதிரத்தை உஷ்ணத்துடன் {சுடச்சுட} நீ பருகுவாய்" {என்றான் கரன்}.(5)

[1] அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என
பொங்கு அரத்தம் விழிவழிப் போந்து உக
வெங்கரப் பெயரோன் வெகுண்டான் விடைச்
சங்கரற்கும் தடுப்பு அருந்தன்மையான்.

- கம்பராமாயணம் 2896ம் பாடல்

பொருள்: காளை வாகனமுடைய சங்கரனாலும் தடுக்க முடியாத தன்மை கொண்டவனும், கொடியவனுமான கரன் என்ற பெயரைக் கொண்டவன், அங்கு அரக்கர் இறந்து அழிந்தனர் என {சூர்ப்பணகைச் சொல்லக்} கேட்டு இரத்தம் பொங்க, விழிகள் வெளியே வர வெகுண்டான்.

கரனின் வதனத்திலிருந்து விழுந்த சொற்களைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சியடைந்தவள் {சூர்ப்பணகை}, மூடத்தனத்தால், "இராக்ஷசர்களில் {நீயே} சிறந்தவன்" என்று சொல்லித் தன்னுடன் பிறந்தனை மீண்டும் மீண்டும் புகழ்ந்தாள்.(6) முன்பு அவளால் {சூர்ப்பணகையால்} பழித்துரைக்கப்பட்டாலும், மீண்டும் இவ்வாறு புகழப்பட்ட கரன், அப்போது தூஷணன் என்ற பெயருடைய சேனாதிபதியிடம் {பின்வருமாறு} சொன்னான்:(7) "என் சித்தம் போல் {என் விருப்பப்படி} நடப்பவர்களும், போரில் திரும்பாதவர்களும், பயங்கர வேகம் கொண்டவர்களுமான பதினான்காயிரம் ராக்ஷசர்கள் இருக்கிறார்கள்.(8) கருநீல மேகத்தின் வண்ணத்தினரான அவர்கள் கோரமானவர்கள்;  கொடுஞ்செயல் புரிபவர்கள்;  உலகத்தாரை ஹிம்சித்துத் திரிபவர்கள்; பலசாலிகள்; உக்ரதேஜஸ் படைத்தவர்கள்.(9) சௌம்யா {மென்மையானவனே, தூஷணா}, என் ரதத்தையும், தனுவையும், சரங்களையும், சித்திரமான கட்கத்தையும் {வாளையும்}, விதவிதமான கூரிய சக்திகளையும் {வேல்களையும்} சீக்கிரம் என் முன்னால் கொண்டுவருவாயாக.(10) இரணகோவிதா {போரில் திறன்படைத்தவனே}, துர்விநீதனான {ஒழுக்கங்கெட்டவனான} ராமனை வதம் செய்வதற்காக பௌலஸ்தியர்களில் {புலஸ்திய குலத்தைச் சேர்ந்த ராக்ஷசர்களில்} மஹாத்மாக்களுக்கு முன் நான் புறப்பட விரும்புகிறேன்" {என்றான் கரன்}.(11)

அவன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போதே அந்த தூஷணன், பல்வேறு வண்ணங்களிலான நல்ல அசுவங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டதும், சூரிய வர்ணம் கொண்டதுமான மஹாரதம் வருவதை அறிவித்தான்.(12) மேருவின் சிகர வடிவம் கொண்டதும், புடம்போட்ட காஞ்சனத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டதும், ஹேமச்சக்கரங்கள் {பொன்னாலான சக்கரங்கள்} பொருத்தப்பட்டதும், விசாலமானதும், வைடூர்யத்தாலான கூபரத்தை {நுகத்தடியைக்} கொண்டதும், காஞ்சனத்தாலான {பொன்னாலான} மீன்கள், புஷ்பங்கள், மரங்கள், சைலங்கள் {மலைகள்}, சந்திர சூரியர்கள், மங்கலமான பக்ஷி சங்கங்கள் {பறவைக் கூட்டங்கள்}, தாரைகள் {நக்ஷத்திரங்கள்} ஆகியவற்றால் எங்கும் சூழப்பட்டதும், துவஜம், கத்தி ஆகியவற்றைக் கொண்டதும், கிங்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், நல்ல அசுவங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டதுமான அதில் {அந்த ரதத்தில்} கரன் பொறுத்துக் கொள்ளமுடியாத கோபத்துடன் ஏறினான்.(13-15) இரதங்கள், தோல்கள் {தோலாலான கவசங்கள்}, ஆயுதங்கள், துவஜங்கள் {கொடிகள்} ஆகியவற்றுடன் கூடிய அந்த மஹத்தான சைனியத்தையும், சர்வராக்ஷசர்களையும், தூஷணனையும் கண்ட கரன், "நடப்பீராக" என்றான்.(16)

The army of Khara and Dushana

தோல்கள் {கவசங்கள்}, ஆயுதங்கள், துவஜங்களுடன் கூடிய கோரமான அந்த ராக்ஷச சைனியம், மஹாநாதத்துடனும், மஹாவேகத்துடனும் ஜனஸ்தானத்தில் இருந்து புறப்பட்டது.(17) கைகளில் முத்கரங்கள் {இரும்புத் தடிகள்}, பட்டிசங்கள் {பட்டாக்கத்திகள்}, சூலங்கள், மிகக்கூரிய பரசுகள் {கோடரிகள்}, கட்கங்கள் {வாள்கள்}, சக்கரங்கள், பளபளக்கும் தோமரங்கள்,{18} சக்திகள் {வேல்கள்}, கோரமான பரிகங்கள், மிகப் பெரிய விற்கள், கதைகள், கத்திகள், முசலங்கள் {உலக்கைகள்} ஆகியவற்றோடும், வஜ்ராயுதங்களோடும்,{19} மிகப் பயங்கரர்களும், கரனின் சித்தம்போல் நடப்பவர்களுமான அந்த ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேரும் ஜனஸ்தானத்திலிருந்து புறப்பட்டுச்சென்றார்கள்.(18-20)

பயங்கரத் தோற்றமுடைய அந்த ராக்ஷசர்கள், மிக வேகமாக விரைந்து கொண்டிருந்தனர். கரனின் ரதம் சற்றே அவர்களுக்குப் பின்னால் சென்றது.(21) அப்போது சாரதி, {அவர்களுக்கு முன்னால் செல்ல வேண்டும் என்ற} கரனின் அபிப்ராயத்தை அறிந்து கொண்டு, புடம்போட்ட காஞ்சனத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்டவைகளும், பல வர்ணமுள்ளவைகளுமான அசுவங்களை {குதிரைகளை} வேகமாக செலுத்தினான்.(22) இவ்வாறே, பகைவரைக் கொல்லும் கரனால் சீக்கிரமாகச் செலுத்தப்பட்ட ரதத்தின் சப்தம், திசைகளையும், உபதிசைகளையும் நிரப்பியது.(23) மஹாபலவானும், {கழுதை போன்ற} கொடிய குரல் உடையவனுமான கரன், கோபாவேசங்கொண்டு பகைவனைக் கொல்வதில் அந்தகனைப் போல் துரிதமடைந்து, கல்மழை பொழியும் மேகத்தைப் போல, சாரதியை மீண்டும் மீண்டும் அவசரப்படுத்தியபடியே கர்ஜித்துக் கொண்டிருந்தான்.(24)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 22ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை