Sunday, 22 January 2023

ஜாபாலியின் நாத்திக வாதம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 108 (18)

Jabali's Atheism | Ayodhya-Kanda-Sarga-108 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நாட்டை ஆள ராமனை சமாதானப்படுத்த ஜாபாலி செய்த முயற்சிகள். அவர் வேத நடைமுறைகளில் நம்பிக்கையற்றோரின் கோட்பாட்டை ஆதரித்துப் பேசியது...

Jabali and Rama

பிராமணோத்தமரான ஜாபாலி, பரதனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தவனும், தர்மத்தை அறிந்தவனுமான ராமனிடம், தர்மத்திற்கு மாறான இந்தச் சொற்களை {பின்வருமாறு} சொன்னார்:(1) "இராகவா, ஆரியபுத்திக்கும், உயர்ந்த மனத்திற்கும் புகழ்பெற்றவனான நீ, சாதாரண நரனைப் போல புத்தி மோகத்திற்கு ஆளாகாதே.(2) எந்த புருஷன் எவனுக்கு பந்து {உறவினன்}? ஒவ்வொரு ஜந்துவும் {உயிரினமும்} தனியாகவே பிறந்து, தனியாகவே இறக்கிறது என்பதால், எவன், எதனை, எவனிடம் இருந்து அடையப் போகிறான்?(3) எனவே, ராமா, "இவன் என் பிதா, இவள் என் மாதா" என்ற பற்று கொள்ளும் நரன் உன்மத்தனாகவே {பைத்தியக்காரனாகவே} அறியப்பட வேண்டும். எவனும் எவனுக்கும் இல்லை {உரியவனல்ல / உறவினனல்ல}.(4) காகுத்ஸ்தா {ராமா}, கிராமங்களைக் கடந்து செல்லும் எந்த நரனும், எங்கோ வசித்து, அடுத்த நாள் அவ்விடத்தை விட்டுப் பயணத்தைத் தொடர்வான். அதைப் போலவே, மாதா, பிதா ஆகியோரும், கிருஹம் {இல்லம்}, உடைமைகள் {செல்வம்} ஆகியவையும் மனுஷ்யர்களின் வசிப்பிடங்கள் மாத்திரமே. ஸத்ஜனங்கள் {விவேகிகள்} இவற்றில் ஒருபோதும் பற்று கொள்வதில்லை.(5,6)

நரோத்தமா {மனிதர்களில் முதன்மையானவனே}, துக்கம் நிறைந்ததும், {பயணிக்கக்} கடினமானதும், முட்கள் நிறைந்ததுமான தனிமையான காட்டில் வசிப்பதற்காக, உன் பிதாவின் ராஜ்ஜியத்தைக் கைவிடுவது விவேகமாகாது; அஃது உனக்குத் தகாது.(7) செழிப்பான அயோத்தியில் நீ அபிஷேகம் செய்து கொள்வாயாக. அந்த நகரம், {ஒரு பதிவிரதையைப் போல} ஒற்றைப் பின்னலுடன் உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.(8) பார்த்திவாத்மஜா {இளவரசே}, உனக்குத் தகுந்த ராஜபோகத்தை அனுபவிப்பாயாக. சொர்க்கத்தில் சக்ரனை {இந்திரனைப்} போல நீ அயோத்தியில் விளையாடித் திரிவாயாக.(9)

உனக்கு தசரதனும், அவனுக்கு நீயும் {உறவெனக் கொள்ள} ஏதுமில்லை. அந்த ராஜனும், நீயும் வெவ்வேறானவர்கள். எனவே, {நான்} சொன்னதைச் செய்வாயாக.(10) ஒரு ஜந்துவுக்கு {ஓர் உயிரினத்திற்குப்} பிதாவானவன், {அதன்} வித்தாக மாத்திரமே இருக்கிறான். மாதாவிடம் சரியான நேரத்தில் கலக்கும் உதிரசுக்லமே {வெண்குருதியே / விந்தணுவே} இஹத்தில் {இம்மையில்} புருஷனாக {மனிதனாகப்} பிறக்கிறது.(11) அந்த நிருபதி {தசரத மன்னன்} எங்கு செல்ல வேண்டுமோ அங்கே சென்றுவிட்டான். இதுவே {இவ்வாறு செல்வதே} அனைத்தின் விதியாகும். நீ இன்னும் வருந்திக் கொண்டிருப்பது தேவையற்றது.(12)

எவரெவர் அர்த்தத்திலும் {பொருளிலும்}, தர்மத்திலும் அர்ப்பணிப்புடன் இருந்து இஹத்தில் {உலகில்} துக்கத்தை அனுபவித்து, பிரேதமாகி அழிவடைகிறார்களோ அவர்கள் அனைவருக்காகவும் நான் வருந்துகிறேனேயன்றி {காமத்தில் / இன்பத்தில் அர்ப்பணிப்புள்ள} மற்றவர்களுக்காக அல்ல {நான் வருந்தவில்லை}.(13) இந்த ஜனங்கள், "எட்டாம் நாளில் பித்ருதைவத்யம் {பித்ருக்களுக்கான சிராத்தம் செய்யப்பட வேண்டும்}" என்று சொல்கின்றனர். அன்னத்திற்கு உண்டாகும் உபத்ரவத்தைப் பார் {உணவு வீணாவதைப் பார்}. மரித்தவன் எதை உண்பான்?(14) இஹத்தில் எவனாலும் புசிக்கப்பட்டது {உண்ட உணவு} மற்றொருவனின் தேஹத்தை {உடலை} அடையுமென்றால், நெடும்பயணம் மேற்கொள்வோருக்கும் சிராத்தம் அளிக்கலாமே. அஃது {அந்த சிராத்தம்} அவர்களின் பாதையில் உணவாகப் பயன்படாதா? {இது பலனளிக்கும் என்றால் பயணிகள் வழியில் உணவு தேடாமல், நாம் இங்கிருந்தே உண்டு அவர்களுக்கு  அளிக்கலாமே}.(15)

"வேள்விகளைச் செய், கொடையளி, தீக்ஷை பெறு, தபம் செய், அனைத்தையும் துற" என்ற கிரந்தங்கள் {உரைகள்} பிறர் தானம் செய்வதற்காகவே மேதாவிகளால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.(16) மதிமிக்கவனே, பரம் {மறுமை} என்ற ஏதுமிங்கில்லை {இஹத்தைத் தவிர வேறேதும் இல்லை} என்ற புத்தியை அடைவாயாக. புலன்களால் உணர்வனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அறிவுக்கு அப்பாற்பட்டவற்றில் இருந்து விலகிச் செல்வாயாக.(17) உலகத்தார் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த புத்தியை முன்னிட்டு, பரதனின் வேண்டுதலுக்கு இணங்கி ராஜ்ஜியத்தை ஏற்பாயாக" {என்றார் ஜாபாலி முனிவர்}.(18)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 108ல் உள்ள சுலோகங்கள்: 18

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் துந்துபி தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்