Sunday, 13 April 2025

மயங்கி விழுந்த ராவணன் | யுத்த காண்டம் சர்க்கம் - 068 (24)

Ravana faints | Yuddha-Kanda-Sarga-068 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் கும்பகர்ணனைக் கொன்றானென்பதைக் கேட்டு மயங்கி விழுந்த ராவணன்; நனவு மீண்டதும், விபீஷணனின் ஆலோசனைகளைக் கேட்காததற்காக வருந்தியது...

Ravana crying

கும்பகர்ணன், மஹாத்மாவான ராகவனால் கொல்லப்பட்டதைக் கண்ட ராக்ஷசர்கள், ராக்ஷசேந்திரனான ராவணனிடம் {பின்வருமாறு} அறிவித்தனர்:(1) “இராஜரே, காலனுக்கு ஒப்பாக வானர சேனையை விரட்டி, வானரர்களை பக்ஷித்தவர் {கும்பகர்ணர்}, காலனின் கர்மத்தை எதிர்கொண்டார் {யமனின் செயல்பாட்டால் உண்டாகும் மரணத்தை அடைந்தார்}.(2) ஒரு முஹூர்த்தத்திற்கு தன் பிரபாவத்தைக் காட்டிவிட்டு, ராமனின் தேஜஸ்ஸில் அவர் சாந்தமடைந்தார். அவரது காயம் {உடல்} சமுத்திரத்திற்குள் பாதி பிரவேசித்த நிலையில் பயங்கரமாகத் தெரிந்தது.{3} நாசியும், காதுகளும் துண்டிக்கப்பட்டு, உதிரம் சொட்டச் சொட்ட பர்வதத்திற்கு ஒப்பான சரீரத்துடன் லங்கையின் துவாரத்தை {வாயிலை} அடைத்துக் கொண்டார்.{4} உமது பிராதாவான {உம்முடன் பிறந்தவரான} கும்பகர்ணர், காகுத்ஸ்தனின் சரத்தால் பீடிக்கப்பட்டுக் காட்டுத் தீயால் எரிக்கப்படும் மரத்தைப் போலச் சிதைந்து விகாரமான லகண்டபூதமானார் {கழுத்தும், தாடையும் அடங்கிய சதைக் குவியலானார்” என்றனர்}.(3-5)

மஹாபலவானான கும்பகர்ணன் போரில் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன், சோக சந்தாபத்தில் மூர்ச்சித்து விழுந்தான்.(6) தங்கள் பித்ருவ்யன் {தந்தையைப் போன்ற கும்பகர்ணன்} கொல்லப்பட்டதைக் கேட்ட தேவாந்தகன், நராந்தகர், திரிசிரன், அதிகாயன் ஆகியோரும் சோகத்தால் பீடிக்கப்பட்டு அழுதனர்.(7) அக்லிஷ்ட கர்மனான ராமனால் {சிரமமின்றி செயல்களைச் செய்பவனான ராமனால்} தங்கள் பிராதா {தங்களுடன் பிறந்தவன்} கொல்லப்பட்டதைக் கேட்ட மஹோதரனும், மஹாபார்ஷ்வனும் சோகத்தில் மூழ்கினார்கள்.(8)

கும்பகர்ண வதத்தால் தீனனானவனும், கலங்கிய இந்திரியங்களைக் கொண்டவனுமான ராக்ஷசபுங்கவன் {ராக்ஷசர்களில் முதன்மையான ராவணன்}, பெருஞ்சிரமத்திற்கிடையில் நனவு மீண்டவனாக {பின்வருமாறு} அழுது புலம்பினான்:(9) “ஹா, வீரா, ரிபு தர்பக்னா {பகைவரின் செருக்கை அழிப்பவனே}, மஹாபலவானே, கும்பகர்ணா, தைவத்தால் {தெய்வத்தின் விருப்பத்தால்} என்னைவிட்டுவிட்டு யம சாதனத்தை {யமனின் வசிப்பிடத்தை} நீ அடைந்துவிட்டாய்.(10) மஹாபலவானே, சத்ரு சைனியத்தைப் பீடித்தும், என் பந்துக்களின் வேதனைமுள்ளை அகற்றாமல் என்னைவிட்டுவிட்டு நீ எங்கே சென்றுவிட்டாய்?(11) எவனை ஆசரித்து {பின்தொடர்ந்து} ஸுராஸுரர்களிடம் பீதியின்றி இருந்தேனோ, எவன் எனது வலது புஜமாக {கையாக} இருந்தானோ, அத்தகையவன் வீழ்ந்தபிறகு நானும் இல்லாமல் ஆகிவிட்டேன் {இனி உயிருடன் இருக்க மாட்டேன்}.(12) 

தேவ, தானவர்களின் செருக்கை அடக்கியவனும், காலாக்னிக்கு ஒப்பானவனுமான இந்த விதமான {இத்தகைய} வீரன் இன்று ரணத்தில் ராகவனால் {ராமனால்} எப்படி ஹதம் செய்யப்பட்டான் {கொல்லப்பட்டான்}?(13) எவனை வஜ்ரத்தின் தாக்குதலும் தீங்கைச் செய்யாதோ, அத்தகைய நீ எப்படி ராமபாணத்தால் பீடிக்கப்பட்டு மஹீதலத்தில் உணர்வின்றிக் கிடந்தாய் {பூமியில் நெடுந்துயில் கொண்டாய்}?(14) இரணத்தில் கொல்லப்பட்ட உன்னைக் கண்டு தேவகணங்களும், ரிஷிகளும் ககனத்தில் {வானத்தில்} நின்று மகிழ்ச்சிக் கூச்சலிடுகின்றனர்.(15) தங்கள் லக்ஷியத்தை அடைந்து பெரும் மகிழ்ச்சியில் திளைக்கும் பிலவங்கமர்கள் {தாவிச் செல்பர்களான குரங்குகள்}, எங்குமிருந்து அடைதற்கரிய இந்த லங்காதுவாரங்களில் {வாயில்களில்} இப்போதே நிச்சயம் ஏறுவார்கள்.(16) 

எனக்கு ராஜ்ஜியத்தைக் கொண்டு காரியமேதும் இல்லை. சீதையைக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்? கும்பகர்ணனை இழந்த எனக்கு, ஜீவிக்கும் மதி ஒன்றுமில்லை {உயிர் வாழ்வதில் மன விருப்பமேதும் இல்லை}.(17) யுத்தத்தில் என் பிராதாவை {என்னுடன் பிறந்த கும்பகர்ணனைக்} கொன்ற ராகவனை நான் கொல்லவில்லையென்றால், மரணமே சிறந்தது. இங்கே நான் ஜீவிப்பதில் அர்த்தமேதும் இல்லை.(18) என் அனுஜன் {தம்பி} எங்கிருக்கிறானோ அந்த தேசத்திற்கு {இடத்திற்கு} இப்போதே செல்வேன். பிராதாக்களை {என் உடன் பிறந்தாரைக்} கைவிட்டு ஒரு க்ஷணமும் ஜீவிப்பதில் எனக்கு உற்சாகமில்லை.(19) 

தேவர்கள், பூர்வத்தில் தீங்கிழைத்தவனான என்னைக் கண்டு பரிகசிப்பார்கள். கும்பகர்ணா, நீ கொல்லப்பட்ட பிறகு, இந்திரனை எப்படி நான் ஜயிப்பேன் {வெல்வேன்}?(20) எந்த மஹாத்மா சொன்ன எவற்றை நான் அஞ்ஞானத்தால் ஏற்கவில்லையோ, அத்தகையவையான இந்த சுபமான விபீஷணனின் சொற்கள் இதோ என்னிடம் வந்திருக்கின்றன {விபீஷணனின் சொற்கள் இதோ பலித்துவிட்டன}.(21) கும்பகர்ணன், பிரஹஸ்தன் ஆகியோரின் இந்தக் கொடூர நாசம் நடைபெற்றதிலிருந்து, விபீஷணன் சொன்ன சொற்கள் யாவும் என்னை சங்கடப்படுத்துகின்றன.(22) தார்மிகனும், ஸ்ரீமானுமான அந்த விபீஷணனை நான் நிராகரித்த, அந்தக் கர்மத்தின் சோக விளைவுகள் {வேதனை} இதோ என்னை அடைந்துவிட்டன” {என்றான் ராவணன்}.(23)

இந்திரரிபுவான தன் அனுஜன் ஹதம் செய்யப்பட்டதை {கொல்லப்பட்டதை} அறிந்த தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்}, அந்தராத்மா கலங்கிப் பெரிதும் கலக்கமடைந்தவனாக இவ்வாறும், இன்னும் கிருபைக்குரிய பலவிதங்களிலும் அழுது புலம்பினான்.(24)

யுத்த காண்டம் சர்க்கம் – 068ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை