Thursday, 31 July 2025

நிகும்பிலையை அடைதல் | யுத்த காண்டம் சர்க்கம் - 085 (36)

Arriving at Nihumbhila | Yuddha-Kanda-Sarga-085 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இந்திரஜித்தைக் கொல்ல லக்ஷ்மணனை நிகும்பிலைக்கு அனுப்பிய ராமன்; அங்கதன், ஹனுமான், ஜாம்பவான் ஆகியோரும் லக்ஷ்மணனுடன் சென்றது...

Vibheeshana speaking to Rama in the presence of Lakshmana in Battlefront

சோகத்தில் மூழ்கியிருந்த ராகவன் {ராமன்}, அவனது அந்த வசனத்தைக் கேட்டும், அந்த ராக்ஷசன் {விபீஷணன்} சொன்னதென்ன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை.(1) பிறகு, பரபுரஞ்ஜயனான {பகைவரின் நகரங்களை வெற்றி கொள்பவனான} ராமன், தைரியத்தை அடைந்து, கபிக்களின் {குரங்குகளின்} முன்னிலையில், அருகில் அமர்ந்திருந்த விபீஷணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "நைர்ருதாதிபதே {தென்மேற்குத் திசையின் தலைவனுடைய வழித்தோன்றல்களான ராக்ஷசர்களின் தலைவா}, விபீஷணா, நீ எந்த வாக்கியத்தைச் சொன்னாயோ, அதை மீண்டும் கேட்க விரும்புகிறேன். நீ எதைச் சொல்ல வருகிறாயோ, அதை மீண்டும் கேட்க விரும்புகிறேன்" {என்று கேட்டான் ராமன்}.(3)

வாக்கிய விசாரதனான அந்த விபீஷணன், தீனமாகச் சொல்லப்பட்ட ராகவனின் சொற்களைக் கேட்டு, யத்னத்துடன் {முயற்சியுடன்} மீண்டும் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(4) "மஹாபாஹுவே, வீரரே, படையின் அணிவகுப்பு எப்படி இருக்க வேண்டும் என்று நீர் ஆணையிட்டீரோ, அப்படியே, அந்த வாக்கியத்தின்படியே அது செய்யப்பட்டது.(5) பிரிக்கப்பட்ட அந்த அனீகங்கள் {படைப்பிரிவுகள்} அனைத்தும் எல்லா இடங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. யூதபர்களும் நியாயப்படி பிரித்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.(6) மஹாபிரபோ, நான் உமக்கு சொல்ல வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவற்றைக் கேட்பீராக. காரணமில்லாத உமது சந்தாபத்தால் எங்கள் ஹிருதயங்கள் சந்தாபமடைகின்றன.(7) இராஜரே, இந்த சோகத்தையும், உம்மை அடைந்திருக்கும் மித்யா சந்தாபத்தையும் {மாயையால் உண்டான வீண் வருத்தத்தையும்} கைவிடுவீராக. அதேபோல, சத்ருக்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் இந்தச் சிந்தையை {கவலையைக்} கைவிடுவீராக.(8) 

வீரரே, நீர் சீதையை அடைய வேண்டும் என்றால், நிசாசரர்கள் {இரவுலாவிகள்} கொல்லப்பட வேண்டும் என்றால், மகிழ்ச்சியுடன் நீர் {அவற்றை அடைய} முயற்சி செய்ய வேண்டும்.(9) இரகுநந்தனரே, நான் சொல்லும் ஹிதமான சொற்களைக் கேட்பீராக. இந்த சௌமித்ரி, மஹத்தான பலம் {படை} சூழு உடனே சென்று,{10} போரில், தனுர்மண்டலத்தில் இருந்து {வட்டமாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து} விடுவிக்கப்பட்டவையும், விஷம் மிக்க பாம்புகளுக்கு ஒப்பானவையுமான கணைகளால், நிகும்பிலையை அடைந்திருக்கும் ராவணியை {ராவணனின் மகனான இந்திரஜித்தைக்} கொல்ல வேண்டும்.(10,11) வீரனான அவனது தபத்தைக் கொண்டு, ஸ்வயம்பூவின் {பிரம்மனின்} வரதானத்தால், பிரம்மசிரஸ் என்ற அஸ்திரமும், நினைத்த இடம் செல்லவல்ல துரங்கங்களும் {குதிரைகளும் இந்திரஜித்தால்} அடையப்பட்டன.(12) 

இத்தகைய அவன், சைனியத்துடன் சேர்ந்து நிகும்பிலையை அடைந்திருக்கிறான் என்று தெரிகிறது. கர்மம் {ஹோமம்} நிறைவேறி அவன் வந்தால், நாம் அனைவரும் அழிந்தோம் என்பதை அறிவீராக.(13) "நிகும்பிலையை அடையாமலோ, அக்னியில் ஹோமம் செய்யாமலோ வில்லை வளைத்து செல்லும்போது, உன்னை எந்த ரிபு {பகைவன்} தாக்குவானோ, அவனே இந்திர சத்ருவான {இந்திரனின் பகைவனான} உன்னை வதம் செய்வான்".{14} மஹாபாஹுவே, இவ்வாறே சர்வலோகேஷ்வரனால் {உலகங்கள் அனைத்தின் தலைவனான பிரம்மனால்} வரம் தத்தம் செய்யப்பட்டது. இராஜரே, இப்படியே அந்த மதிமிக்கவனுக்கு {இந்திரஜித்துக்கு} வதம் விதிக்கப்பட்டிருக்கிறது.(14,15) மஹாபலவானே, ராமரே, இந்திரஜித்தின் வதத்திற்கு ஆணையிடுவீராக. அவன் கொல்லப்பட்டால், சுற்றத்தாருடன் கூடிய ராவணரே கொல்லப்பட்டார் என்பதை அறிவீராக" {என்றான் விபீஷணன்}.(16)

விபீஷணனின் சொற்களைக் கேட்ட ராமன், அப்போது {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான், "சத்தியபராக்கிரமா, அந்த ரௌத்திரனின் மாயையை நான் அறிவேன்.(17) அந்த பிரம்மாஸ்திரவித் {பிரம்மாஸ்திரத்தை ஏவ வல்லவனான இந்திரஜித்}, பிராஜ்ஞன் {அறிவாளி}; மஹாமாயன்; மஹாபலவான்; போரில் வருணனுடன் கூடிய தேவர்களையும் கூட நனவிழக்கச் செய்ய வல்லவன்.(18) பெரும்புகழ்பெற்ற வீரா, அடர்ந்த மேகங்களுக்கிடையே சூரியனைப் போல ரதத்துடன் அந்தரிக்ஷத்தில் அவன் செல்லும் கதி அறியப்படுவதில்லை" {என்றான் ராமன்}.(19)

துராத்மாவான ரிபுவின் {பகைவனின்} மாயவீரியத்தை அறிந்த ராகவன், கீர்த்தி சம்பன்னனான லக்ஷ்மணனிடம் இந்த வசனத்தைக் கூறினான்:(20) "இலக்ஷ்மணா, வானரேந்திரனின் பலம் {படை} எதுவோ அது முழுவதும் சூழ, ஹனூமதனை முன்னிட்ட யூதபர்களுடனும்,{21} சைனியத்தால் சூழப்பட்ட ரிக்ஷபதி {கரடிகளின் தலைவனான} ஜாம்பவனுடனும் சென்று மாயா பலம் நிறைந்த அந்த ராக்ஷச சுதனை {ராவணனின் மகனான இந்திரஜித்தைக்} கொல்வாயாக.(21,22) அவனது மாயைகளை நன்கறிந்த மஹாத்மாவான இந்த ரஜனீசரன் {இரவுலாவி விபீஷணன்} தன் ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} உன் பின்னால் தொடர்ந்து வருவான்" {என்றான் ராமன்}.(23)

அதியத்புத பராக்கிரமம் கொண்டவனான லக்ஷ்மணன், ராமனின் சொற்களைக் கேட்டு, விபீஷணனுடன் சேர்ந்து, சிறந்த கார்முகத்தை {வில்லை} எடுத்துக் கொண்டான்.(24) மகிழ்ச்சியுடன் ஆயத்தமான சௌமித்ரி, கவசம் பூண்டு, சரங்களுடன் கட்கம் {வாள்} தரித்து, சாபத்தை {வில்லை} ஏந்தி, ராமனின் பாதத்தைத் தீண்டி, {பின்வருமாறு} கூறினான்:(25) "இன்று என் கார்முகத்திலிருந்து விடுபடும் சரங்கள், ராவணியை {ராவணனின் மகனான இந்திரஜித்தைத்} துளைத்து, புஷ்கரையில் ஹம்சங்களை {தாமரைப் பொய்கையில் அன்னப்பறவைகளைப்} போல லங்கையில் பாய்ந்து விழப்போகின்றன.(26) இப்போது மஹாசாபத்தில் {பெரும் வில்லில்} இருந்து ஏவப்படும் என் சரங்கள், அந்த ரௌத்திரனின் சரீரத்தைப் பிளந்து அவனை வதைக்கப் போகின்றன" {என்றான் லக்ஷ்மணன்}.(27)

ஒளிமிக்கவனான அந்த லக்ஷ்மணன், பிராதாவின் {தன்னுடன் பிறந்தவனின்} முன்பு இவ்வாறு சொல்லிவிட்டு, ராவணியை {ராவணனின் மகனான இந்திரஜித்தை} வதைக்கும் நோக்குடன் துரிதமாகச் சென்றான்.(28) குருவின் {பெரியோனான ராமனின்} பாதத்தை வணங்கி, அவனை பிரதக்ஷிணமும் செய்து {வலமும் வந்து}, ராவணியால் பாலிதம் செய்யப்படும் நிகும்பிலை என்ற சைத்தியத்திற்கு {கோவிலுக்குச்} சென்றான்.(29) பிரதாபவானான ராஜபுத்ரன் லக்ஷ்மணன், பிராதாவின் {தன்னுடன் பிறந்தானான ராமனின்} நல்லாசிகளைப் பெற்று, விபீஷணன் சகிதனாகத் துரிதமாகப் புறப்பட்டுச் சென்றான்[1].(30)

[1] மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும்
வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக
சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தருமச் செல்வன்

- கம்பராமாயணம் 8945ம் பாடல், யுத்த காண்டம், நிகும்பலை யாகப் படலம்

பொருள்: "ஹனுமானை முதலாகக் கொண்ட வானரப் படைத் தலைவர்களோடு, வீரனே, நீ போருக்குச் செல்வாயாக" என்று {ராமன்} விடை கொடுத்தருளிய போது, தாமரை மலர் போன்ற பெரியோனின் {ராமனின்}பாதமானது உள்ளேயும், வெளியேயும் அமைய, சிறப்புடைய தன் தலையில் பொருந்த வைத்துச் சென்றான் தர்மச் செல்வன் {லக்ஷ்மணன்}.

அப்போது, பல்லாயிரம் வானரர்களால் சூழப்பட்ட ஹனுமானும், அமைச்சர்களுடன் கூடிய விபீஷணனும் லக்ஷ்மணனின் பின்னால் சென்றனர்.(31) ஹரிசைனியத்தால் வேகமாகச் சூழப்பட்ட அவன், தன் பாதையில் நிற்கும் ரிக்ஷராஜனின் {கரடிகளின் மன்னனான ஜாம்பவானின்} பலத்தையும் கண்டான்.(32) மித்ரானந்தனான அந்த சௌமித்ரி {நண்பர்களுக்கு ஆனந்தம் அளிப்பவனும், சுமித்ரையின் மகனுமான அந்த லக்ஷ்மணன்}, வெகுதூரம் சென்ற பிறகு, ராக்ஷசேந்திரனுடைய பலத்தின் {படையின்} அணிவகுப்பு {இன்னும்} தூரத்தில் இருப்பதைக் கண்டான்.(33) 

அரிந்தமனான அந்த ரகுநந்தனன்  {பகைவரைக் கொல்பவனும், ரகு குலத்திற்கு ஆனந்தம் அளிப்பவனுமான லக்ஷ்மணன்}, நிகும்பிலையை அடைந்ததும், பிரம்மன் விதித்தபடியே அந்த மாயாயோகனை {இந்திரஜித்தை} வெல்வதற்காகக் கையில் தனுசுடன் நின்றான்.(34) விபீஷணன், வீரனான அங்கதன், அதே போல அநிலசுதன் {வாயு மைந்தன் ஹனுமான்} ஆகியோர் சகிதனும், பிரதாபவானுமான அந்த ராஜபுத்திரன் {லக்ஷ்மணன்},(35) அமல சஸ்திரங்களால் {மாசற்ற ஆயுதங்களால்} ஒளிர்வதும், துவஜங்கள் அடர்ந்ததும், மஹாரதங்கள் நிறைந்ததும், உறுதிமிக்கதும், அளவற்ற வேகம் கொண்டதும், மிகப் பயங்கரமானதும், விதவிதமானதும், இருள் போன்றதுமான பகைவரின் பலத்திற்குள் {படைக்குள்} நுழைந்தான்.(36) 

யுத்த காண்டம் சர்க்கம் – 085ல் உள்ள சுலோகங்கள்: 36

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை