Saturday 14 September 2024

மாயா சிரம் | யுத்த காண்டம் சர்க்கம் - 031 (46)

Illusionary head | Yuddha-Kanda-Sarga-031 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அமைச்சர்களுடன் ஆலோசித்த ராவணன்; இராமனின் மாயத் தலையைக் காட்டி சீதையை அச்சுறுத்தியது...

Ravana showing illusionary Rama's head to Sita


அப்போது, சுவேல சைலத்தில் முகாமிட்டிருக்கும் கலங்கடிக்கப்பட முடியாத படையைக் குறித்தும், ராகவனை {ராமனைக்} குறித்தும் சாரர்கள் {ஒற்றர்கள்} லங்காதிபதியிடம் தெரிவித்தனர்.(1) பெரும்படையுடன் ராமன் முகாமிட்டிருப்பதை சாரர்களின் மூலம் கேட்ட ராவணன், கொஞ்சம் கலக்கமடைந்தவனாக, தன் அமைச்சர்களிடம் இதைச் சொன்னான்:(2) "நமக்கு இந்த மந்திர காலம் {ஆலோசனை செய்வதற்கான காலம்} இவ்வாறு வாய்த்திருக்கிறது. மந்திரிகளுடன் சர்வ ராக்ஷசர்களையும் கூட்டி சீக்கிரம் அழைத்து வருவீராக" {என்றான்}.(3)

அவனது அந்த சாசனத்தைக் கேட்ட மந்திரிகள் உடனே விரைந்து வந்தனர். அவன் அந்த ராக்ஷசர்களுடன் அமைச்சர்கள் சகிதனாக ஆலோசனை நடத்தினான்.(4) வெல்வதற்கரியவனான அவன், எது முறையானதோ அதை கலந்தாலோசித்துவிட்டு, தன் அமைச்சர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டுத் தன் ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.(5) பிறகு, அந்த மாஹாமாயன் {பெரும் மாயாவியான ராவணன்}, மஹாபலவானும், மாயாவிதங்களை நன்கறிந்தவனுமான வித்யுஜ்ஜிஹ்வனை அழைத்துக் கொண்டு, மைதிலி {சீதை} இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(6)

இராக்ஷசாதிபன் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணன்}, மாயாஜ்ஞனான {மாயங்களை அறிந்தவனான} வித்யுஜ்ஜிஹ்வனிடம் {பின்வருமாறு} கூறினான், "ஜனகாத்மஜையான {ஜனகனின் மகளான} சீதையை மாயையால் மோஹிக்கச் செய்ய வேண்டும் {மயக்க வேண்டும்}.(7) நிசாசரா {இரவுலாவியே}, ராகவனின் மாயாமயமான சிரசுடன் {ராமனின் தலையுடன்}, ஒரு சரத்தையும், மஹத்தான தனுசையும் எடுத்துக் கொண்டு என்னிடம் வந்து நீ நிற்பாயாக" {என்றான் ராவணன்}.(8)

இவ்வாறு சொல்லப்பட்டதும், நிசாசரனான வித்யுஜ்ஜிஹ்வன், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னான். அவன் நன்கு பொருத்தமாகச் செய்யப்பட்ட அந்த மாயையை ராவணனிடம் காட்டினான்.{9} அதில் நிறைவடைந்த ராஜா {ராவணன்}, அவனுக்கு ஒரு பூஷணத்தை {ஆபரணத்தைக்} கொடுத்தான்.(9,10அ) நைர்ருதர்களின் அதிபதியான மஹாபலவான் {ராவணன்}, சீதையை தரிசிக்கும் ஆவலுடன் அசோக வனிகைக்குள் நுழைந்தான்.(10ஆ,11அ) பிறகு தநதானுஜன் {குபேரனின் தம்பியான ராவணன்}, தகாத பரிதாப நிலையில் தீனமாக இருக்கும் அவள் {சீதை},{11ஆ} முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு, சோகத்தில் நிறைந்தவளாக, அசோக வனிகையின் மஹீதலத்தில் {வெறுந்தரையில்} அமர்ந்து கொண்டு, பர்த்தாவையே {கணவன் ராமனையே} தியானித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.(11ஆ,12)

அப்போது, அருகில் கோரமான ராக்ஷசிகளால் காக்கப்படுபவளும், அவர்களால் சூழப்பட்டவளுமான சீதையை மகிழ்ச்சியுடன் அணுகி, கீர்த்திமிக்க அவளது பெயரைச் சொல்லி அழைத்து,{13} ஜனகாத்மஜையைக் கண்டு இந்த வசனத்தைச் சொன்னான்:(13,14அ) "பத்ரே {மங்கலமானவளே},  என்னால் நல்வார்த்தைகள் சொல்லப்பட்டும் {வேண்டிக் கொள்ளப்பட்டும்}, எவனை ஆசரித்து {நாடி} என்னைப் புறக்கணித்தாயோ, கரனைக் கொன்றவனும், உன் பர்த்தாவுமான {கணவனுமான} அந்த ராகவன் சமரில் கொல்லப்பட்டான்.(14ஆ,15அ) சீதே, நான் அனைத்து வகையிலும் உன் மூலத்தை {வேரை} அறுத்துவிட்டேன். உன் செருக்கு அடக்கப்பட்டது. உன் விசனத்தாலேயே நீ என் பாரியை {மனைவி} ஆவாய்.(15ஆ,16அ) மூடே {மூடப்பெண்ணே}, இந்த மதியை {எண்ணத்தைக்} கைவிடுவாயாக. மரித்துப் போனவனைக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்? பத்ரே {மங்கலமானவளே}, என் சர்வ பாரியைகளுக்கும் நீ ஈஷ்வரி ஆவாயாக.(16ஆ,17அ) மூடே, அல்ப புண்ணியம் கொண்டவளே, பண்டிதையாக நினைத்துக் கொண்டு விருத்த அர்த்தத்தை {வளர்ச்சி நோக்கத்தைத்} தொலைத்தவளே,  சீதே, விருத்திர வதம் எப்படியோ, அப்படி கோரமான உன் பர்த்தாவின் {கணவனின்} வதத்தைக் குறித்துக் கேட்பாயாக.(17ஆ.18அ) 

இராகவன், என்னைக் கொல்வதற்கு வானரேந்திரனின் தலைமையிலான மஹத்தான படை சூழ சமுத்திர அந்தத்திற்கு வந்திருந்தான்.(18ஆ,19அ) திவாகரன் மேற்கை நோக்கி அஸ்தமானபோது, தாக்க வந்த ராமன் மஹத்தான படையுடன் சமுத்திரத்தின் உத்தர தீரத்தில் முகாமிட்டான்.(19ஆ,20அ) அந்தப் படை, வழிநடந்த களைப்பில் ஓய்ந்து, அர்த்த ராத்திரியில் தங்கி, நன்றாக உறங்கிக் கொண்டிருந்தபோது, பிரதம சாரர்களை {முதன்மையான} ஒற்றர்களை அனுப்பி அனைத்தையும் அறிந்து கொண்டோம்.(20ஆ,21அ) பிரஹஸ்தனால் தலைமை தாங்கப்பட்ட என்னுடைய மஹத்தான படை, அந்தப் படையை, ராமலக்ஷ்மணர்கள் இருந்த இடத்திலேயே ராத்திரியில் அழித்தது.(21ஆ,22அ) பட்டிசங்கள், பரிகங்கள் {உழல்தடிகள்}, {சிறிய} சக்கரங்கள், ரிஷ்டிகள் {கத்திகள்}, தண்டங்கள் {தடிகள்} உள்ளிட்ட மஹா ஆயுதங்கள்,{22ஆ} பாண ஜாலங்கள் {அம்புக் கூட்டங்கள்}, ஒளிரும் சூலங்கள், முள்பதிக்கப்பட்ட முத்கரங்கள், யஷ்டீசங்கள் {கழிகள்}, தோமரங்கள், பராசங்கள், {பெரிய} சக்கரங்கள், முஸலங்கள் {உலக்கைகள்} ஆகியவற்றை{23} மீண்டும் மீண்டும் உயர்த்தி வானரர்கள் மீது ராக்ஷசர்கள் வீசினர்.(22ஆ-24அ)

பிறகு, பிரமாதமான திடமான கைகளைக் கொண்ட பிரஹஸ்தன், உறங்கிக் கொண்டிருந்த ராமனின் சிரத்தை எந்த எதிர்ப்புமின்றி பெரும் வாளால் வெட்டினான்.(24ஆ,25அ) மேல்விழுந்த விபீஷணன் யதேச்சையாக கைப்பற்றப்பட்டான். பிலவங்கமர்களுடன் கூடிய லக்ஷ்மணன் அனைத்துத் திசைகளிலும் விரட்டப்பட்டான்.(25ஆ,26அ)

சீதே, கிரீவம் பங்கம் அடைந்த {கழுத்து முறிந்த} பிலவகாதிபன் சுக்ரீவனும், ஹனு {தாடை} நொறுக்கப்பட்ட ஹனுமானும் ராக்ஷசர்களால் கொல்லப்பட்டவர்களாகக் கிடக்கின்றனர்.(26ஆ,27அ) அதன் பிறகு முழங்காலிட்டு எழுந்த ஜாம்பவானும், ஏராளமான பட்டிசங்கள் கொண்டு சின்னாபின்னமாக்கப்பட்ட மரத்தைப் போல யுத்தத்தில் கொல்லப்பட்டான்.(27ஆ,28அ) பேருடல் படைத்தவர்களும், வானர ரிஷபர்களுமான மைந்தன், துவிவிதன் இருவரும்,{28ஆ} உதிரத்தில் குளித்தவர்களாக பெருமூச்சுவிட்டபடியே புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அரிசூதனர்களான அவ்விருவரும், வாளால் மத்தியில் வெட்டப்பட்டுக் கிடக்கிறார்கள்.(28ஆ,29) பனஸன், மேதினியில் பனசத்தைப் போல {பூமியில் பலாப்பழத்தைப் போல்} பிளவுண்டு கிடக்கிறான்.{30} தரீமுகன், ஏராளமான நாராசங்களால் துளைக்கப்பட்டவனாக பள்ளத்தில் விழுந்து கிடக்கிறான். மஹாதேஜஸ்வியான குமுதன், சாயகங்களால் கிழிக்கப்பட்டு அடங்கிக் கிடக்கிறான்.(30,31) 

அங்கதன், நெருங்கி வந்த ராக்ஷசர்களின் சரங்கள் பலவற்றால் துளைக்கப்பட்டு, அங்கதங்கள் {தோள்வளைகள்} சிதறி, உதிரம் கக்கி பூமியில் கிடக்கிறான்.(32) சயனித்துக் கொண்டிருந்த மற்ற ஹரயர்கள் {குரங்குகள்}, நாகங்களாலும் {யானைகளாலும்}, அதே போல ரதஜாலங்களாலும் {ரதக்கூட்டங்களாலும்}, வாயுவேகத்தால் மேகங்களைப் போல விரட்டப்பட்டனர்.(33) அச்சத்தால் பீடிக்கப்பட்ட பிறர், சிம்ஹங்களால் {தாக்கப்படும்} பெரும் யானைகள் போலவே ராக்ஷசர்களால் புறமுதுகில் தாக்கப்பட்டவர்களாக ஓடினர்.(34) சிலர் சாகரத்தில் விழுந்தனர். சிலர் ககனத்தை {ஆகாசத்தை} நாடினர். வானரர்களின் செய்கையைப் பின்பற்றி ரிக்ஷங்கள் {கரடிகள்} விருக்ஷங்களில் ஏறினர்.(35) சாகரதீரத்திலும், சைலங்களிலும், வனங்களிலும் அந்த பிங்களர்கள் {பிங்கள வண்ணக் கண்களைக் கொண்ட வானரர்கள்} பலர் ராக்ஷசர்களால் கொல்லப்பட்டனர்.(36) சைனியத்துடன் கூடிய உன் பர்த்தா, என் சைனியத்தால் இவ்வாறே கொல்லப்பட்டான். இரத்தம் வழிந்தும், புழுதி படிந்தும் இருக்கும் இந்த சிரமும் {ராமனின் தலையும்} கொண்டுவரப்பட்டிருக்கிறது" {என்றான் ராவணன்}.(37)

Ravana showing illusionary Rama's head to Sita

அப்போது, வெல்வதற்கரியவனும், ராக்ஷசேஷ்வரனுமான ராவணன், சீதை கேட்டுக் கொண்டிருக்கையில், ஒரு ராக்ஷசியிடம் இதைச் சொன்னான்:(38) "எவன் போர்க்களத்தில் இருந்து ராகவசிரத்தை {ராமனின் தலையைக்} கொண்டு வந்தானோ, குரூர கர்மங்களைச் செய்யும் ராக்ஷசனான அந்த வித்யுஜ்ஜிஹ்வனை அழைத்து வருவாயாக" {என்றான் ராவணன்}.(39)

பிறகு, வித்யுஜ்ஜிஹ்வன், சராசனத்துடன் கூடிய அந்த சிரத்தை {வில்லுடன் கூடிய அந்த தலையை} எடுத்து, சிரத்தால் ராவணனுக்கு வணக்கம் செலுத்திவிட்டு {தலைவணங்கிவிட்டு} எதிரில் நின்றான்.(40) அப்போது ராஜா ராவணன், நீண்ட நாக்குடையவனும், சமீபத்தில் வந்து நிற்கும் ராக்ஷசனுமான அந்த வித்யுஜ்ஜிஹ்வனிடம், {பின்வருமாறு} சொன்னான்:(41) "தாசரதியின் சிரத்தை {ராமனின் தலையை} சீக்கிரம் சீதையின் முன்னே வைப்பாயாக. கிருபைக்குரியவள், பர்த்தா முடிவில் அடைந்த அவஸ்தையை {ராமனின் மரணதசையை உணரும் வகையில்} நன்றாகப் பார்க்கட்டும்" {என்றான் ராவணன்}.(42)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்த ராக்ஷசன், பிரியதரிசனந்தரும் அந்த சிரத்தை சீதையின் கண்முன் வைத்துவிட்டு அங்கேயே அப்போது மறைந்துவிட்டான்.(43) இராவணன், ஒளிரும் மஹத்தான கார்முகத்தை {வில்லை} எடுத்து, "இது ராமனுக்குரியது. மூவுலகங்களிலும் புகழ்பெற்றது" என்று சொல்லி {சீதையின் முன்பு}  வீசினான்.(44) "நாண்பூட்டப்பட்டதும், உன் ராமனுக்குரியதுமான இந்தக் கார்முகம் {வில்}, நிசியில் அந்த மானுஷனைக் கொன்ற பிறகு, பிரஹஸ்தனால் இங்கே கொண்டுவரப்பட்டிருக்கிறது" {என்றான் ராவணன்}.(45)

அந்த ராவணன், வித்யுஜ்ஜிஹ்வனுடன் தானும் சேர்ந்து, அந்த சிரத்தையும் {தலையையும்}, தனுசையும் பூமியில் வீசிவிட்டு, விதேஹ ராஜனின் மகளும், பெரும்புகழ்பெற்றவளுமான அவளிடம், "எனக்கு நீ வசப்படுவாயாக" என்று கூறினான்.(46)

யுத்த காண்டம் சர்க்கம் – 031ல் உள்ள சுலோகங்கள்: 46

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை