Friday 2 August 2024

இந்திரஜித் கண்டனம் | யுத்த காண்டம் சர்க்கம் - 015 (14)

Condemnation of Indrajith | Yuddha-Kanda-Sarga-015 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விபீஷணனைக் கண்டித்த இந்திரஜித்; இந்திரஜித்துக்கு மறுமொழி கூறிய விபீஷணன்...

Vibheeshana Ravana and Indrajit

மஹாத்மாவும், நைர்ருதயூதமுக்யனுமான {ராக்ஷசத் தலைவர்களில் முக்கியமானவனுமான} இந்திரஜித், அங்கே பிருஹஸ்பதிக்குத் துல்லியமான மதியைக் கொண்ட விபீஷணனின் அந்தச் சொற்களை யத்னத்துடன் கேட்டு, {பின்வரும்} வசனத்தைக் கூறினான்:(1) "கனிஷ்ட தாதா {சிறிய தந்தையே}, என்ன சொன்னீர்? உமது வாக்கியம் அர்த்தமற்றதாகவும், பயங்கரப் பீதியில் சொல்வதாகவும் இருக்கிறது. இந்தக் குலத்தில் பிறவாதவன் கூட இத்தகையனவற்றைப் பேச மாட்டான்; செய்யவும் மாட்டான்.(2) இந்தக் குலத்தில், கனிஷ்டதாதா {சிற்றப்பர்} விபீஷணர் என்ற இந்தப் புருஷர் ஒருவரே, சத்வமும் {பலமும்}, வீரியமும், பராக்கிரமமும், தைரியமும், சௌரியமும் {மன உறுதியும்}, தேஜஸ்ஸும் அற்றவராக இருக்கிறார்.(3) 

அந்த மானுஷ ராஜபுத்திரர்கள் இருவரைக் குறித்து என்ன சொன்னீர்? நம்மில் சாதாரண ஏக ராக்ஷசனால் கொல்லப்படக்கூடியவர்களே இவர்கள். பயந்தவரே, ஏன் பீதியடைகிறீர்?(4) அப்போது {ஒருகாலத்தில்}, திரிலோகநாதனும், தேவராஜனுமான சக்ரன் {இந்திரன்} அப்படியே பூமிதளத்தில் {என்னால்} வீழ்த்தப்பட்டான். சர்வ தேவகணங்களும் பயத்தால் பீடிக்கப்பட்டு திசைகளெங்கும் ஓடின.(5) பிளிறிக்கொண்டே ஓடிவந்த {இந்திரனின் யானையான}  ஐராவதத்தை நான் பூமியில் வீழ்த்தினேன். மேலும் அதன் தந்தங்களை பிடுங்கி, மொத்த தேவகணங்களையும் நான் விரட்டினேன்.(6) ஸுரர்களின் {தேவர்களின்} செருக்கை அழித்து, உத்தம தைத்தியர்களுக்கே {அசுரர்களுக்கே} சோகத்தை உண்டாக்கிய அத்தகைய வீரியம் கொண்ட நான், பிராக்ருத மனுஷ்யர்களான நரேந்திராத்மஜர்களுக்கு {சாதாரண மனிதர்களும், மனிதர்களின் தலைவனுடைய மகன்களுமான ராமலக்ஷ்மணர்களை எதிர்ப்பதற்கு} சக்தனல்லேன் என்பது எப்படி?" {என்றான் இந்திரஜித்}.(7)

அப்போது, தடுப்பதற்கரியவனும், மஹௌஜஸுமான {அளவில்லா ஆற்றலுடையவனுமான} இந்திரகல்பனின் {இந்திரனுக்கு நிகரான இந்திரஜித்தின்} வசனத்தைக் கேட்டு, சஸ்திரங்கள் ஏந்தியவர்களில் சிறந்தவனான விபீஷணன் இந்த மஹா அர்த்தம் பொருந்திய வசனத்தைச் சொன்னான்:(8) "தாதா {ஐயா}, ஆலோசனைகளை நிச்சயிக்க முடியாத பாலனாகவும், பக்குவப்படாத புத்தியைக் கொண்டவனாகவும் நீ இருக்கிறாய். எனவே, ஆத்மவிநாசத்திற்குரிய {நமக்கு அழிவைத் தரக்கூடிய}, அர்த்தஹீனமான {அர்த்தமில்லாத} சொற்களை முன்பின் தொடர்பில்லாமல் சொல்கிறாய் {பிதற்றுகிறாய்}[1].(9) இந்திரஜித்தே, ராகவரிடமிருந்து இவருக்கு இத்தகைய நாசம் ஏற்படும் எனக் கேட்டும், மோஹத்தால் ஏற்கிறாய். இராவணரின் புத்திரன் என அழைத்துக் கொண்டும், மித்ரனின் முகங்கொண்ட சத்ருவாக நீ இருக்கிறாய்.(10) 

[1] நூலினால் நுணுங்கிய அறிவு நோக்கினை
போலுமால் உறு பொருள் புகலும் பூட்சியோய்
காலம் மேல் விளை பொருள் உணரும் கற்பு இலாப்
பால நீ இனையன பகரற்பாலையோ (6136)
கருத்து இலான் கண் இலான் ஒருத்தன் கைக்கொடு
திருத்துவான் சித்திரம் அனைய செப்புவாய்
விருத்த மேதகையவர் வினைஞர் மந்திரத்து
இருத்தியோ இளமையால் முறைமை எண்ணலாம் (6137)

- கம்பராமாயணம், 6136, 6137 பாடல்கள், யுத்த காண்டம், இராவணன் மந்திரப்படலம்

பொருள்: "பல நூல்களையும் கற்ற நூலறிவாலும், நுணுக்கமான அறிவாற்றலாலும் {எதிர்காலத்தை} நோக்கினாய் போலும். காலத்தையும், பின்னால் நிகழும் காரியத்தையும் உணர்கின்ற அறிவற்ற சிறுவா, நேர இருப்பதைக் கூறும் மன உறுதியுடன் பேசுகிறாய். நீ இவற்றைப் பேசுதல் தகுமோ?(6136) கருத்து இல்லாதவனும், கண்ணில்லாதவனுமான ஒருவன், சித்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இதனை நன்கு திருத்தி அமைப்பேன் என்பது போல நீ பேசுகிறாய். வயது முதிர்ந்த மேலான அறிஞரும், சிறந்த வினையம் உடையவர்களும் இருக்கத்தகுந்த மந்திராலோசனை சபையில் நீ இருக்கலாமோ? இளமையினால் முறைமைகளை எண்ணி பார்க்காதவனே" {என்றான் விபீஷணன்}.(6137)

நீ வதைக்கப்படத்தகுந்தவனாகவே இருக்கிறாய். துணிகரமுயற்சியை விரும்புகிறவனும், பாலனும் {சிறுவனும்}, துர்மதி படைத்தவனுமான உன்னை, ஆலோசனையை {இந்த ஆலோசனைக்கூட்டத்தைக்} கெடுப்பதற்காக இங்கே பிரவேசிக்கச் செய்தவரும் {ராவணரும்} வதைக்கப்படத் தகுந்தவரே.(11) இந்திரஜித்தே, மூடனும், தற்புகழ்ச்சி செய்து கொள்பவனும், பணிவில்லாதவனும், கொடிய ஸ்வபாவம் கொண்டவனும், அல்ப மதியுடையவனும், துராத்மாவும், மூர்க்கனும், ஆதீத துர்மதி படைத்தவனுமான நீ பாலனைப் போலப் பேசிக் கொண்டிருக்கிறாய்.(12) யுத்தத்தில் ராகவரால் ஏவப்படுபவையும், பிரஹ்மதண்டத்திற்கு ஒப்பாகப் பிரகாசிப்பவையும், தீப்பொறிகளுடன் கூடியவையும், காலனுக்கு ஒப்பான ரூபம் கொண்டவையும், யமதண்டத்தின் வடிவானவையுமான பாணங்களை எவனால் சகித்துக் கொள்ள முடியும்?(13) 

இராஜரே {ராவணரே}, தனங்கள், ரத்தினங்கள், பூஷணங்கள் {ஆபரணங்கள்}, திவ்ய வஸ்திரங்கள், சித்திர மணிகள் ஆகியவற்றுடன் சீதா தேவியை ராமரிடம் கொடுத்துவிட்டு, சோகம் நீங்கியவராக இங்கே நிலைத்திருப்பீராக" {என்றான் விபீஷணன்}.(14)

யுத்த காண்டம் சர்க்கம் – 015ல் உள்ள சுலோகங்கள்: 14

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை