Thursday 1 August 2024

விபீஷணன் பிரஹஸ்தன் | யுத்த காண்டம் சர்க்கம் - 014 (22)

Advice of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-014 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் கணைகள், ராக்ஷசர்களைத் துளைப்பதற்கு முன், சீதையை அவனிடம் கொடுத்துவிடும்படி ராவணனுக்கு அறிவுரை கூறிய விபீஷணன்...

Vibheeshana advising Ravana

நிசாசரேந்திரனின் {இரவுலாவிகளின் தலைவனான ராவணனின்} வாக்கியத்தையும், கும்பகர்ணனின் கர்ஜனையையும் கேட்ட அந்த விபீஷணன், ஹிதமானதும், அர்த்தம் நிறைந்ததுமான வாக்கியத்தை ராக்ஷசராஜர்களில் முக்கியனிடம் {ராவணனிடம் பின்வருமாறு} சொன்னான்:(1) "இராஜரே, தோள்களுக்கு இடைப்பட்ட பகுதியை {மார்பைப்} படமாகவும், சிந்தையை {கவலையை} விஷமாகவும், புன்சிரிப்பைக் கூரிய பற்களாகவும், ஐந்து விரல்களை ஐந்து தலைகளாகவும் கொண்ட சீதை என்ற பேருடல் படைத்த பெரும்பாம்பை நீர் என்னவென்று {நினைத்து} விரும்புகிறீர்?(2) 

பர்வதகூட மாத்திரமுள்ளவர்களும் {மலைச்சிகரங்களின் பருமனுள்ளவர்களும்}, பற்களை ஆயுதங்களாகக் கொண்டவர்களும், நகங்களை ஆயுதங்களாகக் கொண்டவர்களுமான வலீமுகர்கள் {குரங்குகள்} யாவரும் லங்கையை அடையும் முன் தாசரதியிடம் மைதிலியை {தசரதரின் மகனான ராமரிடம் சீதையைக்} கொடுத்துவிடுவீராக[1].(3) வஜ்ரத்திற்கு சமமானவையும், வேகத்தில் வாயுவுக்கு சமமானவையம், ராமரால் ஏவப்படுபவையுமான பாணங்கள், ராக்ஷசபுங்கவர்களின் சிரங்களைக் கொய்யும் முன் தாசரதியிடம் மைதிலியைக் கொடுத்துவிடுவீராக.(4) இராஜரே, கும்பகர்ண இந்திரஜித்துகளோ, அதேபோல, மஹாபார்ஷ்வ மஹோதரர்களோ, நிகும்ப கும்பர்களோ, அதேபோல, அதிகாயனோ யுத்தத்தில் ராகவரை எதிர்த்து நிற்கக்கூடிய சமர்த்தர்களல்லர்.(5) நீர், சவித்ரன் {சூரியன்}, அல்லது மருத்துக்களால் காக்கப்பட்டாலும், வாசவன் {இந்திரன்}, அல்லது மிருத்யுவின் {யமனின்} மடியில் அமர்ந்திருந்தாலும், நபம் {வானம்}, அல்லது பாதாளத்திற்குள் பிரவேசித்தாலும் ராமரிடமிருந்து ஜீவனுடன் திரும்பமுடியாது" {என்றான் விபீஷணன்}.(6)

[1] இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச
வசையும் கீழ்மையும் மீக்கொள கிளையொடும் மடியாது
அசைவு இல் கற்பின் அவ்வணங்கை விட்டருளுதி இதன்மேல்
விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான்

- கம்பராமாயணம் 6169ம் பாடல், யுத்த காண்டம், இராவணன் மந்திரப்படலம்

பொருள்: "புகழும், செல்வமும், உயர் குலத்து இயல்பும் விழ, பழியும், கீழ்மையும் எழ, உற்றார் உறவினரோடு மடிந்து போகாமல், தளர்வில்லா கற்புடைய தெய்வமகளை {சீதையை} விட்டருள்வாயாக. இதைவிட மேலான விஜயம் வேறில்லை" எனச் சொன்னான் அறிஞர்களில் சிறந்தவன் {விபீஷணன்}.

பிரஹஸ்தன், விபீஷணனின் வாக்கியத்தைக் கேட்ட பிறகு, {பின்வரும்} வசனத்தைக் கூறினான், "தைவதங்களிடம், அல்லது தானவர்களிடம், {அல்லது வேறு} எவரிடமும் எந்த பயத்தையும் {ஆபத்தையும்} நாம் அறியோம்.(7) யக்ஷ, கந்தர்வ, மஹோரகங்களுடன் {பெரும்பாம்புகளுடன்} போரில் பயம் இல்லை. பதகங்கள் {பறவைகள்}, உரகங்களிடமும் {பாம்புகளிடமும்} இல்லை. நரேந்திரபுத்ரனான ராமனிடம் போரிடுவதில் கொஞ்சமேனும் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது?" {என்றான் பிரஹஸ்தன்}(8)

இராஜனின் ஹிதத்தை விரும்புகிறவனும், தர்ம, அர்த்த, காமங்களை புத்தியில் நிலைநிறுத்துபவனுமான விபீஷணன், ஹிதமில்லாத பிரஹஸ்தனின் வாக்கியத்தைக் கேட்டு, மஹா அர்த்தம் பொதிந்த {பின்வரும்} வசனத்தைக் கூறினான்:(9) "பிரஹஸ்தா, அதர்மபுத்தியுள்ளவனுக்கு ஸ்வர்க்க கதி எப்படி சாத்தியமில்லையோ, அப்படியே ராஜரும், மஹோதரனும், நீயும், கும்பகர்ணரும் ராமரைக் குறித்த அர்த்தங்களைச் சொல்கிறீர்கள் {நீங்கள் ராமரை எதிர்க்க திட்டமிடும் எதுவும் சாத்தியப்படாது}.(10) பிரஹஸ்தா, அபிலவன் மஹார்ணவத்தை {மிதவை இல்லாதவன் / நீந்தத் தெரியாதவன் / தாவமுடியாதவன் பெருங்கடலைக்} கடப்பதைப் போல, என்னாலோ, உன்னாலோ, சர்வ ராக்ஷசர்களாலோ, அர்த்த விசாரதரான {அனைத்தையும் அறிந்தவரான} ராமரை வதைக்க எப்படி முடியும்?(11) தர்மத்தையே பிரதானமாகக் கொண்டவரும், மஹாரதரும், இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ராஜரும், இவ்விதமான செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் தேவர்களையே கலங்கடிக்கவல்லவருமான அவரை எதிர்க்கப் போகிறீர்கள்.(12)

கூரியவையும், கங்க இறகுகள் {கழுகின் இறகுகள்} பூட்டப்பட்டவையும், தடுப்பதற்கரியவையும் ராகவரால் விடுவிக்கப்படுபவையுமான பாணங்கள் {இன்னும்} உன் சரீரத்தைப் பிளந்து ஊடுருவாததால், பிரஹஸ்தா, நீ பெருமை பேசுகிறாய்.(13) வேகத்தில் அசனிக்கு {இடிக்குத்} துல்லியமானவையும், கூரியவையும், ராகவரால் விடுவிக்கப்படுபவையுமான பிராணாந்தகச் சரங்கள் உன் காயத்தை {உயிரைப் போக்கும் கணைகள் உன் உடலை} ஊடுருவாதவரை நீ உன் பெருமை பேசுவாய்.(14) இரணத்தில்  சக்ரனுக்கு சமமான தாசரதியை {போர்க்களத்தில் இந்திரனுக்கு நிகரானவரும், தசரதரின் மகனுமான ராமரை} எதிர்க்க ராவணரோ, அதிபலவானான திரிசீர்ஷனோ, கும்பகர்ணரோ, நிகும்பனோ, இந்திரஜித்தோ, நீயோ சமர்த்தர்கள் இல்லை.(15) தேவாந்தகனோ, நராந்தகனோ, அதேபோல அதிரதனோ, மஹாத்மாவான அதிகாயனோ, அத்ரி சமான சாரம் கொண்ட {பெருங்கடலுக்கு நிகரான வலிமைமிக்க} அகம்பனனோ யுத்தத்தில் ராகவரை எதிர்க்கவல்லவர்கள் இல்லை.(16) விசனபூதரும் {தீச்செயல்களுக்கு அடிமையானவரும்}[2], இயல்பில் கொடியவரும், சிந்திக்காமல் செயல்படுபவருமான இந்த ராஜா {ராவணர்}, ராக்ஷசர்களின் நாசத்திற்காகவே மித்ர வடிவில் அமித்ரர்களான {நண்பனைப் போன்ற எதிரியான} உங்களை நிறுவி அனுசரிக்கிறார்.(17)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "மன்னர்கள் பொதுவாக அடிமையாகும் ஏழு தீச்செயல்கள் பின்வருபவை: பேச்சில் கடுமை, கொடுந்தண்டனை வழங்குதல், ஆடம்பரம் / பகட்டு, மது, பெண்கள், வேட்டை, சூது" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பின் அடிக்குறிப்பில், "வைதல், குற்றத்திற்கு மீறிய தண்டனை விதித்தல், பொருளை நாசஞ்செய்தல், குடி, பரஸ்த்ரீகமனம், காலமில்லாத காலத்தில் வேட்டையாடுதல், சூது இவைகளைக் கொண்டவர்" என்றிருக்கிறது.

எல்லையற்ற வடிவத்தையும், ஆயிரம் தலைகளையும், மஹாபலத்தையும் கொண்டதும், பயங்கரமானதுமான நாகத்தால் பலமாகச் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் இந்த ராஜாவைத் தூக்கி விடுவிப்பீராக.(18) பயங்கர பலம் கொண்ட பூதங்களால் பற்றப்பட்டவனின் கேசத்தை {தலைமுடியைப்} பற்றி இழுப்பதைப் போலவாவது, விருப்பங்கள் பரிபூரணமான {நிறைவேறிய} நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மன்னரை ரக்ஷிக்க வேண்டும்.(19) இராகவசாகரத்தால் {ராமர் எனும் பெருங்கடலால்} அழிவுக்காகச் சூழப்படுபவரும், காகுத்ஸ்த பாதாள முகத்தில் {ராமர் எனும் பாதாளத்தின் வாயில்} விழப்போகிறவருமான இவரை {இந்த ராவணரை}, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து காப்பதே இப்போது தகும்.(20) இராக்ஷசர்களுக்கும், அங்கே புரத்தில் {நகரத்தில்} உள்ள நண்பர்களுக்கும், ராஜருக்கும் பத்தியமான {நலம்பயக்கும்} என் கருத்தை இந்த நல்ல வாக்கியத்தில் சொன்னேன். நரேந்திரபுத்திரரின் பத்தினி {ராஜகுமாரரான ராமரின் மனைவி} கொடுக்கப்பட வேண்டும்.(21) பகைவரின் வீரியத்தையும், தன் பலத்தையும் அறிந்து, அதேபோல ஸ்தானம் {தன் நிலை}, தன் தரப்புக்கு அழிவைத் தருவது,  விருத்தியைத் தருவது ஆகியவற்றை புத்தியால் அனுமானித்து, ஸ்வாமிக்கு ஹிதம் விளைவிப்பதைக் கருத்தில் கொண்டு பேசுபவன் எவனோ, அவனே மந்திரியாவான்" {என்றான் விபீஷணன்}.(22)

யுத்த காண்டம் சர்க்கம் – 014ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை