Monday 22 July 2024

இராவணன் ஆலோசனை | யுத்த காண்டம் சர்க்கம் - 006 (19)

Ravana's counsel | Yuddha-Kanda-Sarga-006 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனை வெல்வது குறித்து ராக்ஷசர்களுடன் லங்கையில் ஆலோசித்த ராவணன்...

Ravana having a counsel meet

சக்ரனை {இந்திரனைப்} போலவே பயத்தை உண்டாக்கும் வகையில், மஹாத்மாவான ஹனுமதனால் லங்கையில் செய்யப்பட்ட கோரமான கர்மத்தைக் கண்ட ராக்ஷசேந்திரன் {ராவணன்},[1]{1} சற்றே வெட்கி முகத்தைத் தாழ்த்திக் கொண்டு, சர்வ ராக்ஷசர்களிடமும் {பின்வருமாறு} பேசினான்:(1,2அ) "வானரன் மாத்திரமே ஆன அவன் {ஹனுமான்}, எதிர்க்கவொண்ணா லங்காபுரீக்குள் பிரவேசித்துத் தாக்கியிருக்கிறான்[2]. ஜானகியான சீதையையும் கண்டுவிட்டான்.(2ஆ,3அ) சைத்ய பிராசாதத்தை {வேள்விச் சாலையை} ஹனுமதன் தாக்கியிருக்கிறான். மிகச்சிறந்த ராக்ஷசர்களைக் கொன்றிருக்கிறான். சர்வ லங்காபுரீயையும் கலங்கச் செய்திருக்கிறான்.(3ஆ,4அ) இனி பத்ரமாக {மங்கலமாக} இருக்க என்ன செய்வது? அடுத்து எது நமக்குப் பொருத்தமானதோ, செய்வதற்கு சமர்த்தமானதோ, நன்மையைப் பயப்பதோ, அதைச் சொல்வீராக.(4ஆ,5அ)

[1] வரம்பு அறு சுற்றமும் மந்திரத் தொழில்
நிரம்பிய முதியரும், சேனை நீர் கடல்
தரம் பெறு தலைவரும் தழுவத் தோன்றினான்
அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான்

- கம்பராமாயணம் 6076ம் பாடல், யுத்த காண்டம், இராவணன் மந்திரப் படலம்

பொருள்: வரம்பில்லா சுற்றத்தாரும், ஆலோசனையில் வல்ல முதியோரும் {முதிய அமைச்சர்களும்}, சேனை என்ற பெருங்கடலையே வழிநடத்தும் தகுதிமிக்க தானைத்தலைவர்களும் சூழ இருந்தான், அரம்பையர் வீசும் விருந்தோம்பலோடு, ஆடும் மாலையை அணிந்தவன் {ராவணன்}.

[2] தாழ்ச்சி இங்கு இதனின்மேல் தருவது ஏன் இனி
மாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மாநகர்
ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று எனா
சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான்

- கம்பராமாயணம் 6081ம் பாடல், யுத்த காண்டம், இராவணன் மந்திரப்படலம்

பொருள்: "இங்கு எனக்கு இதையும்விடத் தாழ்வைத் தருவது வேறு என்ன இருக்கிறது? பெருமையும், பெரும் நகரும் ஒரு குரங்கால் அழிந்தது. {என்} ஆட்சியும், தகுதியும், அரசும் நன்றாயிருக்கிறது" என்று தன் அமைச்சர்களை நோக்கிச் சொன்னான் {ராவணன்}.

மஹாபலவான்களே, விஜயம் மந்திரமூலம் என்று மனஸ்வினிகள் சொல்கின்றனர் {வெற்றியானது, ஆலோசனைகளின் மூலமே விளையும் என்று விவேகிகள் சொல்கின்றனர்}. எனவே ராமனைக் குறித்து ஆலோசனை செய்ய நான் விரும்புகிறேன்.(5ஆ,6அ) உலகில், உத்தமர்கள், அதமர்கள், மத்யமர்கள் என்று மூன்றுவித புருஷர்கள் {மனிதர்கள்} இருக்கின்றனர். அவர்களுக்குரிய குணதோஷங்களை {நிறைகுறைகளை} நான் சொல்கிறேன்.(6ஆ,7அ) ஹிதம் விரும்புகிறவர்களும், மந்திர நிர்ணயம் செய்வதில்  சமர்த்தர்களுமான மந்திரிகள் {ஆலோசனைகளுடன் நிர்ணயம் செய்வதில் திறன்மிக்க அமைச்சர்கள்},{7ஆ} அல்லது சம அர்த்தங்களுடைய மித்ரர்கள் {பொது நோக்கங்களுடைய நண்பர்கள்}, அல்லது அதற்கும் அதிகமாகத் தன் பந்துக்கள் {உறவினர்கள்} சஹிதனாக ஆலோசனை செய்துவிட்டு, கர்மத்தை ஆரம்பிக்கையில்,{8} தைவேசத்துடன் யத்னத்தைச் செய்பவன் எவனோ, அவனே புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறான் {தெய்வத்தின் மீது பாரத்தை இட்டு முயற்சியில் ஈடுபடுபவனே உத்தம புருஷன் / மனிதர்களில் சிறந்தவன்}.(7ஆ-9அ) ஒருவனாகவே அர்த்தத்தை ஆராய்ந்து, ஒருவனாகவே தர்மத்தில் தன் மனத்தைச் செலுத்தி, ஒருவனாகவே காரியங்களைச் செய்யும் அந்த நரன் மத்யமன் {மனிதர்களில் நடுத்தரமானவன்} என்று அழைக்கப்படுகிறான்.(9ஆ,10அ) "காரியத்தை நான் செய்கிறேன்" என்று சொல்லி, குணதோஷங்களை {நன்மை தீமைகளைத்} தெளிவாக நிச்சயிக்காமல், தைவத்தை {தெய்வத்தைக்} கருதாமல்  புறக்கணிப்பவன் எவனோ, அவனே நராதமன் {மனிதர்களில் இழிந்தவன்} ஆவான்.(10ஆ,11அ)

நித்தியம் இந்தப் புருஷர்கள் {மனிதர்கள்} உத்தமர்கள், அதமர்கள், மத்யமர்கள் என்றாவது எப்படியோ, அப்படியே மந்திரமும் {ஆலோசனையும்} உத்தமம், அதமம், மத்யமம் என்று அறியப்படுகிறது.(11ஆ,12அ) சாஸ்திரங்களின் பார்வையில் நோக்கி, ஐக்கியத்துடன் மந்திரர்கள் {கருத்தொற்றுமையுடன் ஆலோசகர்கள்} நிறைவடையும் அந்த மந்திரமே {ஆலோசனையே} உத்தமம் என்று சொல்லப்படுகிறது.(12ஆ,13அ) எதில் அர்த்தத்தை நிர்ணயிப்பதில் மந்திரிகளின் மதி {கருத்துகள்} பலவிதமாக இருந்து,  மீண்டும் {முடிவில்} ஒற்றுமை வாய்க்கிறதோ, அந்த மந்திரம் {ஆலோசனை} மத்யமம் என்று அழைக்கப்படுகிறது.(13ஆ,14அ) எதில் அன்யோன்ய மதியை {ஒருவருக்கொருவர் கருத்துகளை} தங்களுக்குப் பிடித்த வகையில் பிடிவாதத்துடன் சொல்லி, நல்ல முறையில் ஐக்கியம் {கருத்தொற்றுமை} ஏற்படவில்லையோ, அந்த மந்திரம் அதமம் என்று சொல்லப்படுகிறது.(14ஆ,15அ) எனவே, மதிசத்தமர்களான {புத்திசாலிகளில் சிறந்தவர்களான} நீங்கள், நன்கு ஆலோசித்து, செய்ய வேண்டிய நல்ல காரியத்தைச் செய்வீராக. செய்யத்தகுந்தது இதுவே என்பது என் கருத்தாகும்.(15ஆ,16அ)

Ravana in his counsel hall

தீரர்களான ஆயிரக்கணக்கான வானரர்களால் சூழப்பட்டவனாக ராமன், நம்மை முற்றுகையிட லங்காம்புரீயை நெருங்குகிறான்.(16ஆ,17அ) இராகவன் {ராமன்}, தன் தம்பியுடனும், படைகளுடனும், தனக்குத் தகுந்த வல்லமையுடன் சுகமாக சாகரத்தைக் கடப்பான் என்பது வெளிப்படையானது.(17ஆ,18அ) சமுத்திரத்தை வற்றச் செய்வான். {அல்லது}, தன் வீரியத்தால் வேறேதேனும் செய்வான்[3]. வானரர்களுடன் விரோதம் ஏற்பட்ட இந்தக் காரியம் இவ்விதமாகி இருக்கிறது. என் நகரத்திற்கும், சைனியத்திற்கும், ஹிதமானவை {நன்மையைச் செய்யக்கூடிய} அனைத்தையும் எனக்கு ஆலோசனைகளாகச் சொல்வீராக" {என்றான் ராவணன்}.(18ஆ,19)

[3] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "அதாவது, கடலைக் கடப்பதற்கான பாலம் {பாலத்தைக் கட்டுவான்} என்பது பொருள்" என்றிருக்கிறது.

யுத்த காண்டம் சர்க்கம் – 006ல் உள்ள சுலோகங்கள்: 19

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை