Saturday 14 August 2021

விஷ்வாமித்ரரின் மகிமை | பால காண்டம் சர்க்கம் - 21 (22)

The glory of Vishvamitra | Bala-Kanda-Sarga-21 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம் : விஷ்வாமித்ரரின் கோபத்தைத் தணிக்க தசரதனை சமாதானப்படுத்திய வசிஷ்டர்; விஷ்வாமித்ரரின் மகிமை; ராமனை அனுப்ப சம்மதித்த தசரதன்...


Vasishta Dasharatha and Vishwamitra

ஸ்னேஹத்தால் அக்ஷரங்கள் {எழுத்துகள்} தெரியாமல் குழறிச் சொன்ன அவனது {தசரதனின்} வசனத்தைக் கேட்ட விஷ்வாமித்ரர் கோபத்துடன் அந்த மஹீபதிக்குப் பதில் சொல்லும் வகையில்:(1) "பூர்வத்தில் ஒரு பொருளை வாக்களித்துவிட்டு அந்தப் பிரதிஜ்ஞையை மறுதலிக்க விரும்புகிறாய். இந்த விலக்கம் ராகவ குலத்திற்குத் தகாது.(2) ராஜாவே {தசரதா}, இஃது உனக்குத் தகுமென்றால் நான் வந்த வழியே திரும்பிச் செல்ல விரும்புகிறேன். காகுத்ஸ்தா {காகுத்ஸனின் வழித்தோன்றலே}, பிரதிஜ்ஞை செய்வது போல் பாசாங்கு செய்துவிட்டு உன் உற்றாருடன் மகிழ்ச்சியாக இருப்பாயாக" {என்றார்}.(3)

மதி நுட்பம் வாய்ந்தவரான விஷ்வாமித்ரர் இவ்வாறு கோபமடைந்த போது, பூமி முழுவதும் நடுங்கியது, தேவர்கள் அச்சமடைந்தனர்.(4) நல்ல விரதங்களைக் கொண்டவரும், தீரரும், மஹானுமான ரிஷி {வசிஷ்டர்}, ஜகம் முழுவதும் திகைப்பதை அறிந்து அந்த நிருபதியிடம் {மன்னன் தசரதனிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னார்:(5) "இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவனும், சாக்ஷாத் தர்ம வடிவம் கொண்டவனும், தைரியமிக்கவனும், நல்ல விரதங்களைக் கொண்டவனும், ஸ்ரீமானுமான நீ தர்மம் தவறுவது தகாது.(6) ராகவா {தசரதா}, தர்மாத்மாவாக மூவுலகங்களிலும் புகழ் பெற்றிருக்கும் நீ, ஸ்வதர்மத்தை {சுயதர்மத்தை / தன்னறத்தைப்} பின்பற்றுவாயாக. அதர்மத்திற்கு இடங்கொடுப்பது உனக்குத் தகாது.(7) ஒரு காரியத்தை உறுதிகூறிவிட்டு, சொல் தவறுவது இஷ்டாபூர்தங்களை {விரும்பி நிறைவேற்றிய நற்காரியங்களை}[1] அழிக்கும். எனவே ராமனை அனுப்புவாயாக.(8)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வேத சடங்குகள் சிலவற்றில் சமூகத் தொண்டுகள் சிலவும் செய்யப்படும். அவை இஷ்டாபூர்தச் சடங்குகள் என்று அறியப்படும். இவை கிணறு, தடாகம் போன்றவற்றைத் தோண்டுவதைக் குறிக்கும்" என்றிருக்கிறது.

அஸ்திரப் பயிற்சி பெற்றிருந்தாலும், இல்லாவிட்டாலும் அமுதத்தைக் காக்கும் ஜுவாலையை {நெருப்பைப்}[2] போலிந்தக் குசிக புத்திரரால் {விஷ்வாமித்ரரால்} பாதுகாக்கப்படும் அவனை {ராமனை} ராக்ஷசர்களால் வெல்ல முடியாது.(9) இவர் தர்மமே வடிவானவர், வீரியவான்களில் ஒப்பற்றவர், மேலானபுத்தியில் உலகில் நிகரற்றவர், தவத்தில் குற்றங்குறையற்றவர்.(10) சராசரங்களுடன் {அசைவன, அசையாதனவற்றுடன்} கூடிய மூவுலகங்களிலும் உள்ளவையும், பிறரால் அறியப்படாதவையும், இனியும் அறியப்பட முடியாதவையுமான பலவகைப்பட்ட அஸ்திரங்களை இவர் அறிந்தவர்.(11) அவற்றைத் தேவர்களும் அறியார், ரிஷிகளில் எவரும் அறியார், அமரர்கள் அறியார், ராக்ஷசர்கள் அறியார், கின்னரர்கள், மஹா உரகர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்களும் அறியார்.(12)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சொர்க்கத்தில் அமுத கலசமானது, அசுரர்கள் கொள்ளையிடாவண்ணம் அணுகப்பட முடியாத நெருப்பு அரணால் பாதுகாக்கப்படுகிறது" என்றிருக்கிறது.

அந்த அஸ்திரங்கள் அனைத்தும் கிருஷாஷ்வரின் {பிருசாச்வரின்} பரம தார்மீக புத்திரர்களாவர். முன்னர், கௌசிகர் ராஜ்யத்தை ஆண்டுக் கொண்டிருந்தபோது அவை அனைத்தும் இவருக்குக் கொடுக்கப்பட்டன.(13) {தக்ஷ} பிரஜாபதியுடைய மகளின் சுதன்களும், கிருஷாஷ்வரின் புத்திரர்களுமான அவை வடிவத்தில் ஒப்பற்றவையாகவும், மஹாவீரியமிக்கவையாகவும், பளபளப்பானவையாகவும், ஜய வாகனங்களாகவும் {வெற்றிக்கு அழைத்துச் செல்லும் வாகனங்களாகவும்} இருக்கின்றன.(14) 

அழகான இடையைக் கொண்ட ஜயை, ஸுப்ரபை என்ற தக்ஷகன்னிகள் {தக்ஷனின் மகள்கள்}, பிரகாசமிக்க அஸ்திர சஸ்திரங்கள் நூற்றுக் கணக்கானவற்றைப் பெற்றனர்.(15) ஜயை என்ற பெயரைக் கொண்டவள், அசுர சைன்ய வதத்திற்கான வரத்தைப் பெற்று, அளவிடமுடியாத மனோவலிமை கொண்டவர்களும், அரூபர்களும் {வடிவமற்றவர்களும்}, சிறந்தவர்களுமான ஐம்பது மகன்களை {அஸ்திர சஸ்திரங்களைப்} பெற்றாள்.(16) ஸுப்ரபை, தாக்கப்பட இயலாதவர்களும், வெல்லப்பட முடியாதவர்களும், பலசாலிகளும், ஸம்ஹாரம் என்ற பெயர் படைத்தவர்களுமான ஐம்பது புத்திரர்களைப் பெற்றாள்.(17) குசிகனின் மகன் {விஷ்வாமித்ரர்} இந்த அஸ்திரங்கள் அனைத்தையும் அறிவார். மேலும் இந்தத் தர்மவித் {தர்மத்தை அறிந்தவர்}, பூர்வத்தில் இல்லாதவற்றையும் {புதிய அஸ்திரங்களையும்} படைக்கவல்லவராவார்.(18)

ராகவா {தசரதா}, தர்மத்தை அறிந்தவரும், மஹாத்மாவும், முனிவர்களில் முக்கியருமான இவர், கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் அறியாதது ஏதுமில்லை. இவர் அறியாதது ஒன்றுமில்லை.(19) பெரும்புகழ் படைத்த இந்த மஹாதேஜஸ்வி {விஷ்வாமித்ரர்}, இவ்வகை வீரியத்தைப் பெற்றவராவார். ராஜாவே, ராமனை உடனனுப்புவதில் ஐயமேதும் கொள்வது உனக்குத் தகாது.(20) குசிகரின் மகனே {விஷ்வாமித்ரரே} அவர்களை {ராட்சசர்களை} அழித்து விடலாம் என்றாலும், உன் புத்திரனின் நன்மையை நோக்கில் கொண்டே உன்னை அணுகி வேண்டிக் கொண்டிருக்கிறார்" {என்றார் வசிஷ்டர்}.(21)

அந்த ரகுரிஷபன் {ரகு குலத்தின் காளையான தசரதன்}, இந்த முனிவசனத்தால் மன அமைதியை அடைந்தான். புகழ் பெற்றவனும், பார்த்திபர்கள் பிறரில் உயர்ந்தவனுமான அவன் {தசரதன்}, குசிகனின் மகனுடன் {விஷ்வாமித்ரருடன்} ராகவன் {ராமன்} செல்ல மகிழ்ச்சியுடனும், முழு இதயத்துடனும் சம்மதித்தான்.(22) 


பாலகாண்டம் சர்க்கம் –21ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை