Sunday 28 July 2024

சபா பிரவேசம் | யுத்த காண்டம் சர்க்கம் - 011 (32)

Entering the Hall | Yuddha-Kanda-Sarga-011 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விபீஷ்ணன், பிரஹஸ்தன் முதலியோர் பின்தொடர அரச சபைக்குள் நுழைந்த ராவணன்...

Ravana entering his hall

மைதிலியின் மீது காம மோஹிதம் அடைந்தவனும், பாபியுமான அந்த ராஜா {ராவணன்}, தன் பாபக் கர்மங்களாலும், நல்லிதயம் கொண்டோரால் இகழப்பட்டதாலும் {நாணிக்} குறுகினான்.(1) அதீத சமயம் ஆகிவிட்டதாலும், யுத்த காலம் வாய்த்திருக்கிறது என்பதாலும், அஃது அமைச்சர்களுடனும், நலம் விரும்பிகளுடனும் ஆலோசிப்பதற்கான காலமென ராவணன் நினைத்தான்[1].(2)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு "அதீதஸமயே காலே தஸ்மிந்வே யுதி⁴ ராவண꞉ | அமாத்யைஷ்²ச ஸுஹ்ருத்³பி⁴ஷ்²ச ப்ராப்தகாலமமந்யத" என்பது மூலம். (காலே அதீதஸமயே) ராவணனுடைய ஆயுஷ்காலம் விஞ்சிப்போகையில் (யுதி⁴) யுத்தத்தில், (அமாத்யைஷ்²ச ஸுஹ்ருத்³பி⁴ஷ்²ச ஆத்மாநம்) மந்திரிகளோடுங் கூடின தன்னை, (ப்ராப்தகாலம்) மரணகாலம் ஸமீக்கப்பெற்றவனாக (அமந்யத) நினைத்தனன். ராவணன் ஆயுள்முடிகையால் தனக்கும் தன் மந்த்ரிகளுக்கும் மிருத்யு ஸமீபத்ததென்று நினைத்ததாக வால்மீகியின் கருத்து. இங்ஙனம் கோவிந்தராஜர். "மந்த்ரகாலமமந்யத" {ஆலோசனைக்கான காலம் என நினைத்தான்} என்று மஹேஷ்வரதீர்த்தர் பாடம்" என்றிருக்கிறது.

அவன் {ராவணன்}, ஹேமஜாலங்களை {பொற்சாளரங்களைக்} கொண்டதும், மணிகளாலும், பவளங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், பயிற்றுவிக்கப்பட்ட அஷ்வங்களுடன் {குதிரைகளுடன்} கூடியதுமான மஹாரதத்தை அடைந்து, ஆரோஹணம் செய்தான் {அதில் ஏறினான்}.(3) இராக்ஷசசிரேஷ்டனான தசக்ரீவன் {ராட்சசர்களில் சிறந்தவனும், பத்துக் கழுத்துகளைக் கொண்டவனுமான ராவணன்}, மஹாமேகத்தின் ஸ்வனத்துடன் கூடிய அந்தச் சிறந்த ரதத்தில் ஏறி, சபையை நோக்கிச் சென்றான்.(4) கத்தி, கேடயங்களைத் தரித்தவர்களும், சர்வாயுதங்களையும் தரித்தவர்களும், போர்வீரர்களுமான ராக்ஷசசர்கள், ராக்ஷசேந்திரனுக்கு {ராட்சசர்களின் தலைவனான ராவணனுக்கு} முன்னே சென்றனர்.(5) மெருகற்ற நானாவித ஆடைகளை அணிந்து கொண்டு, நானாவித ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, பக்கங்களிலும், பின்புறத்திலும் அவனை {ராவணனைச்} சூழ்ந்தபடியே அவர்கள் சென்றனர்.(6) அதிரதர்கள், ரதங்களின் மீதும், மதங்கொண்ட சிறந்த வாரணங்களின் {யானைகளின்} மீதும், விளையாட்டாக நடைபழகும் வாஜிகள் {குதிரைகள்} மீதும் சீக்கிரமாக தசக்ரீவனை {ராவணனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(7) {அவர்களில் சிலர்}, கதைகள் {கதாயுதங்கள்}, பரிகங்களைக் கையில் கொண்டிருந்தனர். சக்திகள் {வேல்கள்}, தோமரங்களை {ஈட்டிகளைப்} பிடித்துக் கொண்டிருந்தனர். சிலர் பரசுகளை {கோடரிகளைத்} தரித்திருந்தனர். இன்னும் சிலர் சூலங்களைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.(8)

இராவணன், சபைக்குள் சென்றபோது, ஆயிரக்கணக்கான தூரியங்களின் மஹாஸ்வனத்துடன் கூடிய பெரும் முழக்கமும், சங்குகளின் முழக்கமும் உண்டானது.(9) அந்த மஹான் {ராவணன்}, மஹாரதத்தின் நேமிகோஷம் {சக்கர சடசடப்பொலி} எங்கும் எதிரொலிக்க, பிரகாசிப்பதும், காண்பதற்கு இனியதுமான ராஜமார்க்கத்தை வேகமாக அடைந்தான்.(10) இராக்ஷசேந்திரனுக்கு {ராட்சசர்களின் தலைவனான ராவணனுக்குப்} பிடிக்கப்பட்டதும், விமலமானதுமான {மாசற்றதுமான} வெண்குடை, பூர்ணக் கதிர்களை வெளியிடும் தாராதிபனை {நட்சத்திரங்களின் தலைவனான சந்திரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(11) அவனுக்கு இடப்புறத்திலும், வலப்புறத்திலும், இடையிடையே ஹேமமஞ்சரிகளால் {பொற்கொடிகளால்} கட்டப்பெற்றவையும், சுத்தமான ஸ்படிகத்தாலானவையுமான கைப்பிடிகளுடன் கூடிய சாமரங்கள் இரண்டு ஒளிர்ந்து கொண்டிருந்தன[2].(12) 

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு, "ஹேமஞ்ஜரிக³ர்பே⁴ ச ஷு²த்³த⁴ஸ்ப²டிகவிக்³ரஹே | சாமரவ்யஜநே" என்பது மூலம். (ஹேமஞ்ஜரிக³ர்பே⁴) - "பொன்மயமான பல்லவங்கள் அமைந்த கொடிகள் இடையில் இயற்றப்பெற்றவைகள்" என்று பொருள் என்பதாக மஹேஷ்வரதீர்த்தர்" என்றிருக்கிறது.

பிருத்வியில் நின்றிருந்த அந்த ராக்ஷசர்கள் அனைவரும், ரதத்தில் அமர்ந்திருந்த அந்த ராக்ஷசசிரேஷ்டனுக்கு {சிறந்த ராட்சசனான ராவணனுக்குத்} தங்கள் கைகளைக் கூப்பி, தலையால் {தலைவணங்கி} வந்தனம் செய்தனர்.(13) அரிந்தமனும் {பகைவரை அழிப்பவனும்}, மஹாதேஜஸ்வியுமான அவன் {ராவணன்}, அப்போது, "ஜயமும், ஸ்ரீயும் {வெற்றியும் செழிப்பும்} உமதாகுக" என்று ராக்ஷசர்களால் போற்றப்பட்டவனாக, நன்கு அமைக்கப்பட்டிருந்த அந்த சபையை அடைந்தான்.(14) ஸ்வர்ணத்தாலும், வெள்ளியாலுமான தூண்களைக் கொண்டதும், சுத்தமான ஸ்படிகத்தால் {பளிங்கால்} இழைக்கப்பெற்றதும், ருக்மம் {தங்கம்}, பட்டு ஆகியவற்றால் ஒளிரும் உள்ளமைப்பைக் கொண்டதும்,{15} எக்காலத்திலும் அறுநூறு பிசாசர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டதும், அழகானதும், எப்போதும் ஒளிர்வதும், விஷ்வகர்மனால் நன்கு அமைக்கப்பட்டதுமான அதற்குள் {அந்த சபைக்குள்} அந்த மஹாதேஜஸ்வி {ராவணன்} நுழைந்தான்.(15,16) அந்த ராவணன், வைடூரியமயமானதும், விருப்பத்திற்குரிய மான்தோல் விரிக்கப்பட்டதும், தலையணையுடன் கூடியதுமான மஹத்தான பரம ஆசனத்தை அடைந்தான்.(17)

பிறகு, லகு பராக்கிரமர்களான {வேகமாகச் செல்லக்கூடிய} தூதர்களிடம், ஈஷ்வரனைப் போல {பின்வருமாறு} ஆணையிட்டான், "சீக்கிரமே ராக்ஷசர்களை இங்கே அழைத்து வருவீராக.{18} நாம் சத்ருக்களுக்கு எதிராக மஹத்தான பணியைச் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்" {என்றான் ராவணன்}.(18,19அ)

அவன் சொன்னதைக் கேட்ட ராக்ஷசர்கள், லங்கை எங்கும் சுற்றித் திரிந்து,{19ஆ} விஹாரங்கள் {விளையாடுமிடங்கள்}, சயனேசங்கள் {படுக்கையறைகள்}, உத்யானங்கள் {உத்யானவனங்கள்} ஆகியவற்றில் இருந்த ராக்ஷசர்களைத் தயங்காமல் அழைத்து ஏவிக் கொண்டிருந்தனர்.(19ஆ,20) அவர்களில் சிலர் அழகான ரதங்களிலும், சிலர் செருக்குமிக்க திடமான ஹயங்களிலும் {குதிரைகளிலும்}, சிலர் நாகங்களில் {யானைகளிலும்} ஏறியும், சிலர் பாதநடையாகவும் சென்றனர்.(21) இரதகுஞ்சரவாஜிகளை {தேர்கள், யானைகள், குதிரைகளைக்} கூட்டங்கூட்டமாகக் கொண்ட செழிப்பான அந்தப் புரீ {லங்காநகரம்}, பறவைகள் நிறைந்த அம்பரத்தை {வானத்தைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(22) அவர்கள், {யானைகள், குதிரைகள், ரதங்கள் உள்ளிட்ட} விதவிதமானத் தங்கள் வாஹனங்களையும், யானங்களையும் {சிவிகைகளையும்} வெளியே நிறுத்திவிட்டு, கிரியின் குகைக்குள் சிங்கங்களைப் போலப் பாதநடையாக சபைக்குள் பிரவேசித்தனர்.(23) அவர்கள் ராஜனின் பாதங்களைப் பற்றினர். இராஜனாலும் பூஜிக்கப்பட்டனர். சிலர் பீடங்களிலும், சிலர் பாய்களிலும் {தர்ப்பாஸனங்களிலும்}, சிலர் பூமியிலும் அமர்ந்தனர்.(24)

அந்த ராக்ஷசர்கள், ராஜசாசனத்தின் {ராவணனின் கட்டளையின்} பேரில், சபையின் தகுந்த இடங்களில், ராக்ஷசாதிபனான ராவணனுக்கு நெருக்கமான இடங்களில் அமர்ந்தனர்.(25) அர்த்தங்களை நிச்சயிக்கும் பண்டிதர்களும், பேதமில்லா குணங்களைக் கொண்டவர்களும், சர்வஜ்ஞர்களும் {அனைத்தையும் அறிந்தவர்களும்}, புத்தி தர்சனர்களுமான {நல்ல புத்தியுடையவர்களுமான} மந்திரிகளில் {அமைச்சர்களில்} முக்கியமானவர்களும்,{26} அதேபோல, பல நூற்றுக்கணக்கான சூரர்களும், அங்கே ஹேமவர்ணங்கொண்ட சபையில், சர்வ அர்த்தங்களையும் சுகமாகத் தீர்மானிப்பதற்காகத் திரண்டிருந்தனர்.(26,27)

அப்போது, மஹாத்மாவும், புகழ்மிக்கவனுமான விபீஷணன், விபுலமானதும் {அகலமானதும்}, நன்குபூட்டப்பட்டதும் {நல்ல குதிரைகள் பூட்டப்பட்டதும்}, ஹேமமயமானதும், சித்திர அங்கங்களுடன் கூடியதும், சுபமானதும், சிறந்ததுமான ரதத்தைச் செலுத்திக் கொண்டு, ஆக்ரஜனின் சம்சதத்திற்கு {அண்ணனின் சபைக்குச்} சென்றான்.(28) பிறகு அந்த அவரஜன் {தம்பி விபீஷணன்}, பூர்வஜனின் நாமத்தை {அண்ணனின் பெயரை} மீண்டும் மீண்டும் சொல்லி, அவனது சரணங்களுக்கு வந்தனம் செய்தான் {ராவணனின் காலில் விழுந்து வணங்கினான்}. சுகன், பிரஹஸ்தன் ஆகியோர் இருவரும் அப்படியே செய்தனர். அவரவருக்குத் தக்க வெவ்வேறு ஆசனங்கள் கொடுக்கப்பட்டன.(29) நானாவித சுவர்ண, மணிகளால் {தங்கங்களாலும், ரத்னங்களாலும் பலவிதங்களில்} அலங்கரிக்கப்பட்டவர்களும், நல்ல வஸ்திரங்களுடன் கூடியவர்களுமான ராக்ஷசர்களின் சம்சதத்தில் {சபையில்}, அகுரு {அகில்}, சந்தனம் முதலியவற்றுடன் கூடிய மாலைகளின் கந்தம் எங்கும் கமழ்ந்தன.(30) சபையில் வந்திருந்தவர்கள் சத்தமிடவில்லை; கொஞ்சமேனும் பொய்யாகப் பேசவில்லை. எவனும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அனைவரும் மனோரதங்கள் கைக்கூடப்பெற்றவர்களாக, மஹத்தான வீரியம் படைத்தவர்களாகத் தலைவனின் முகத்தைப் பார்த்தவண்ணம் இருந்தனர்.(31) மனஸ்வினியான {பிடிவாதம் கொண்ட} அந்த ராவணன், மனஸ்வினீகளும் {பிடிவாதம் கொண்டவர்களும்}, மஹா பலவான்களும் இருந்த அந்த சபையில், வசுக்களின் மத்தியில் வஜ்ரஹஸ்தனை {கையில் வஜ்ரத்துடன் கூடிய இந்திரனைப்} போன்ற பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(32)

யுத்த காண்டம் சர்க்கம் – 011ல் உள்ள சுலோகங்கள்: 32

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை