Thursday 19 August 2021

தாடகை வதம் | பால காண்டம் சர்க்கம் - 26 (36)

Elimination of Tataka | Bala-Kanda-Sarga-26 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விஷ்வாமித்ரரின் ஆணையின் பேரில் தாடகையைக் கொன்ற ராமன்...

Tataka vadha

திடவிரதனான அந்த நரவராத்மஜன் {சிறந்த மனிதனின் மகனான ராமன்}, {அச்சமில்லாதவனாக} ஆண்மையுடன் அந்த முனிவசனத்தைக் கேட்டுக் கைகளைக் கூப்பி மறுமொழி சொன்னான்:(1) {ராமன்}, "என் பிதாவின் வசனம் {தந்தையின் சொற்கள்}, என் பிதாவின் வசனத்தில் {நான்} கொண்டிருக்கும் மதிப்பு, கௌசிகரின் வசனம் ஆகியவற்றால் மேலும் சந்தேகிக்காமல் நிச்சயம் இதை {தாடகைவதத்தை} நிறைவேற்ற வேண்டும்.(2) அயோத்தியின் குருக்களுக்கு மத்தியில் மஹாத்மாவும், என் பிதாவுமான தசரதரால் எனக்கு ஆணையிடப்பட்ட வசனத்தை நான் அலட்சியம் செய்ய முடியாது.(3) இவ்வாறிருக்கும் நான், என் பிதாவின் வசனத்தைக் கேட்டு, பிரம்மவாதியின் சாசனத்தை {பிரம்மவாதியான உமது உத்தரவை} சந்தேகமில்லாமல் நிறைவேற்ற வேண்டும்.(4) கோக்களின் நன்மைக்காகவும், பிராமணர்களின் நன்மைக்காகவும், இந்தத் தேசத்தின் நன்மைக்காகவும் அளவிடற்கரியவரின் {உமது} வசனத்தை நிறைவேற்றப் போகிறேன்" {என்றான்}.(5)

அந்த அரிந்தமன் {பகைவரை அடக்குபவனான ராமன்}, இவ்வாறு சொல்லிவிட்டு, தன் முஷ்டியை மடித்து தனுசின் மத்தியைப் பற்றி, திசைகளை வெடிக்கச் செய்யும் சத்தத்துடன் கூடிய தீவிர நாணொலியை உண்டாக்கினான்.(6) தாடகாவனவாசிகள் அந்த சத்தத்தால் அச்சமடைந்தனர். தாடகையுங்கூட அந்த சத்தத்தால் மோஹமடைந்து பொறுத்துக் கொள்ள முடியாத கோபத்தை அடைந்தாள்.(7) அந்தச் சத்தத்தைக் கேட்டுக் குரோதமடைந்த அந்த ராக்ஷசசி {தாடகை}, சத்தம் வந்த வழியைக் கவனித்து {அங்கே} மூர்க்கத்துடன் விரைந்து சென்றாள்[1].(8)

[1] தாடகையின் வருகையைக் கம்பர் பின்வருமாறு வர்ணிக்கிறார்

சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள் நெளித்த குழி வேலைச்
சலம் புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக நிலக் கிரிகள் பின் தொடர வந்தாள்.

இறைக்கடை துடித்த புருவத்தள் எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட மடித்த பில வாயள்
மறைக் கடை அரக்கி வடவைக் கனல் இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்தென நெருப்பு எழ விழித்தாள்.

கடம் கலுழ் தடங் களிறு கையொடு கை தெற்றா
வடம் கொள நுடங்கும் இடையாள் மறுகி வானோர்
இடங்களும் நெடுந் திசையும் ஏழ் உலகும் யாவும்
அடங்கலும் நடுங்க உரும் அஞ்ச நனி ஆர்த்தாள்.

- கம்பராமாயணம் பாலகாண்டம் 368-370

அவன் {ராமன்}, விகாரத் தோற்றமும், விகார முகமும் கொண்டவளும், பரிமாணத்தில் பேரளவு கொண்டவளும், வெறி கொண்டவளுமான அவளைக் கண்டு லக்ஷ்மணனிடம் இதைச் சொன்னான்:(9) "இலக்ஷ்மணா, இந்த யக்ஷியின் கோரமான பயங்கர வடிவைப் பார். இதைக் கண்டால் கோழைகளின் {அச்சமடைபவர்களின்} இதயங்கள் பிளந்துவிடும்.(10) தடுக்கப்பட முடியாதவளும், மாயாபலம் கொண்டவளுமான இவளது காதுகளையும், நுனிமூக்கையும் அறுத்து நான் விரட்டப் போவதை இப்போது பார்ப்பாயாக.(11) ஸ்திரீ சுபாவம் இவளைக் காக்கிறது, உண்மையில் நான் இவளைக் கொல்ல முயற்சிக்கவில்லை. இவளது வீரியத்தையும், அசையும் ஆற்றலையும் நிறுத்துவதே என் நோக்கம்" {என்றான்}.(12)

இராமன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே குரோதத்தில் மூழ்கியிருந்தவள் {தாடகை}, கைகளைச் சுழற்றி கர்ஜித்தபடியே ராமனை நோக்கி விரைந்தாள்.(13) பிரம்மரிஷியான விஷ்வாமித்ரர் ஹுங்காரம் செய்து அதட்டி, "இராகவர்களே, {உங்களுக்கு} நலமும் {பாதுகாப்பும்}, ஜயமும் {வெற்றியும்} உண்டாகட்டும்" என்றார்.(14)

அவள் ராகவர்கள் மீது புழுதியை கோரமாக வாரி இறைத்து, ஒரு முஹூர்த்த காலம் பெரும்புழுதி மேகத்தால் அவர்களைக் கலங்கடித்தாள்.(15) பிறகு அவள் மாயையைக் கைக்கொண்டு அந்த ராகவர்களைச் சுற்றிலும் கல்மழையைப் பொழிந்தாள். அப்போது ராமன் குரோதமடைந்தான்.(16) ராகவன், அவளது கல்மழையைச் சரமழையால் தடுத்து, தன்னை நோக்கி விரைந்து வரும் அவளது கரங்கள் இரண்டையும் {சரங்களால்} சிதைத்தான்.(17) கைகள் அறுந்தவளும், களைத்தவளுமான அவள், {லக்ஷ்மணனின்} அருகில் சென்று பயங்கரமாக கர்ஜித்தாள். அப்போது குரோதமடைந்த சௌமித்ரி {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணன்}, அவளது காதுகளையும், நுனிமூக்கையும் அறுத்தான்.(18) விரும்பிய வடிவை ஏற்கவல்லவளான அவள் அனேக வடிவங்களை ஏற்றும், {சமயங்களில்} மறைந்தும், மாயையால் {அவர்களை} மோகமடைய {மயங்கச்} செய்தும், கல்மழையைப் பொழிந்தபடியும் பீதியடையச் செய்யும் வகையில் திரிந்தாள்.(19,20அ)

அப்போது, ராமனையும், லக்ஷ்மணனையும் சூழும் கல்மழையைக் கண்டு ஸ்ரீமானான காதிசுதன் {காதியின் மகனான விஷ்வாமித்ரர்}, இந்த வசனத்தைச் சொன்னார்:(20ஆ,21அ) "உன் கருணை போதும் ராமா, பாவியும், தீய நடை கொண்டவளும், யஜ்ஞத்தை அழிப்பவளுமான இந்த யக்ஷி, மாயையைப் பயன்படுத்திக் குறுகிய காலத்தில் மீண்டுவிடுவாள்.(21ஆ,22அ) செவ்வந்தி {மாலை சந்தி} நேர்வதற்குள் இவளை வதம் செய்வாயாக. சந்தியாகாலத்தில் ராக்ஷசர்கள் எதிர்க்கவொண்ணா வல்லமை பெறுவார்கள்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(22ஆ,23அ)

இவ்வாறு சொல்லப்பட்டதும் அவன் {ராமன்}, அந்த யக்ஷியிடம் சப்தவேதித்வத்தை {சத்தத்தைக் கொண்டு கணைகளை ஏவும் கலையை} வெளிப்படுத்தி, அவள் பொழியும் கல்மழையைத் தன் கணைகளால் தடுத்தான்.(23ஆ,24அ) பாணஜாலத்தால் தடுக்கப்பட்ட அந்த மாயாபலம் கொண்டவள் {தாடகை}, கடுமையாக கர்ஜித்தபடியே காகுத்ஸனையும் {ராமனையும்}, லக்ஷ்மணனையும் நோக்கி விரைந்தாள்.(24ஆ,25அ) மோதுவதற்காக இடியைப் போல வேகமாக விரைந்து வந்து பாய்ந்த அவளது மார்பில் அவன் சரம் எய்த உடனேயே கீழே விழுந்து மாண்டாள்.(25ஆ,26அ)

ஸுரபதியும் {இந்திரனும்}, ஸுரர்களும் {தேவர்களும்}, பயங்கரவடிவத்துடன் கூடியவள் அழிக்கப்பட்டதைக் கண்டு, "நன்று, நன்று" என்று சொல்லி அந்தக் காகுத்ஸனை பூஜித்தனர்.(26ஆ,27அ) ஸஹஸ்ராக்ஷனான {ஆயிரம் கண்களைக் கொண்ட} புரந்தரன் {பகைவரின் கோட்டைகளை அழிக்கும் இந்திரன்}, பரமபிரீதியுடனும், ஸுரர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் விஷ்வாமித்ரரிடம் சொன்னார்கள்:(27ஆ,28அ) "கௌசிக முனியே {விஷ்வாமித்ரரே}, பத்ரமாக {அருளப்பட்டு} இருப்பீராக. இந்திரனுடன் கூடிய மருத்கணங்கள் அனைவரும் இந்தச் செயலால் நிறைவடைந்திருக்கின்றனர். ராகவனிடம் {ராமனிடம்} ஸ்னேகத்தைக் காட்டுவீராக.(28ஆ,29அ) பிராமணரே, சத்திரபராக்கிரமம் கொண்டவர்களும், தவபலம் கொண்டவர்களுமான கிருஷாஷ்வப்ரஜாபதியின் {பிரஜாபதியான பிருசாச்வரின்} புத்திரர்களை {அஸ்திர சஸ்திரங்களை} ராகவனுக்கு {ராமனுக்குக்} கொடுப்பீராக[2].(29ஆ,30அ) பிராமணரே, இவன் {உம்மை} உறுதியாகப் பின்பற்றுகிறான். எனவே உமக்கு இவன் தகுந்தவன். இந்த ராஜசுதன், ஸுரர்களுக்காக {தேவர்களுக்காக} பெருஞ்செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது" {என்றனர்}.(30ஆ,31அ)

[2] பாலகாண்டம் 21ம் சர்க்கம் 10 முதல் 20ம் சுலோகம் வரை சொல்லப்படும் தெய்வீக ஆயுதங்களைத் தான் தேவர்கள் இங்கே விஷ்வாமித்ரரிடம் சொல்கின்றனர்.

இவ்வாறு சொன்ன ஸுரர்கள் அனைவரும் விஷ்வாமித்ரரைப் பூஜித்துவிட்டு நிறைவுடன் சொர்க்கத்திற்குச் சென்றனர். அப்போது சந்தியாகாலமும் வந்தது.(31ஆ,32அ) தாடகாவதத்தால் மகிழ்ச்சியும் நிறைவுமடைந்த அந்த முனிவரர் {விஷ்வாமித்ரர்}, ராமனின் நெற்றியை முகர்ந்து {உச்சிமுகர்ந்து} இந்த வசனத்தைச் சொன்னார்:(32ஆ,33அ) "காண்பதற்கு இனியவனே, இன்றிரவு இங்கே வசிப்போம். நாளை காலையில் என்னுடைய ஆசிரமத்திற்குச் செல்வோம்" {என்றார்}.(33ஆ,34அ)

விஷ்வாமித்ரரின் வசனத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த தசரதனின் மகன் {ராமன்}, அந்தத் தாடகாவனத்தில் அவ்விரவில் சுகமாக வசித்திருந்தான்.(34ஆ,35அ) அதே நாளில் அந்த வனமும் சாபத்தில் இருந்து விடுபட்டு சைத்ரரத வனம் போல ரமணீயமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.(35ஆ,இ) அந்த ராமனும், யக்ஷனின் மகளை {தாடகையை} முற்றிலும் அழித்து, ஸுர, சித்த கூட்டத்தால் துதிக்கப்பட்டு விடியல் வேளையில் எழுப்பப்படும்வரை அங்கே இருந்தான்.(36)

பாலகாண்டம் சர்க்கம் – 26ல் உள்ள சுலோகங்கள் : 36

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை