Saturday 27 May 2023

இராமனைத் தேற்றிய சுக்ரீவன் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 07 (25)

Sugriva consoled Rama | Kishkindha-Kanda-Sarga-07 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையை மீட்டு வருவதாக உறுதியளித்து ராமனைத் தேற்றிய சுக்ரீவன்; வாலியைக் கொல்வதாக உறுதியளித்த ராமன்...

Rama consoled by Sugreeva

இராமன் வருத்தத்துடன் {இவ்வாறு} சொன்னதும், வானரனான சுக்ரீவன், தன் கைகளைக் கூப்பிக் கொண்டு, கண்கள் நிறைந்த கண்ணீருடனும், கண்ணீரால் தழுதழுக்கும் குரலுடனும் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(1) "துஷ்ட குலத்தைச் சேர்ந்தவனும், பாபியுமான அந்த ராக்ஷசனின் நிலயம் {வசிப்பிடம்}, சாமர்த்தியம், விக்கிரமம், குலம் ஆகியன எதையும் நான் அறிவேனில்லை.(2) அரிந்தமரே {பகைவரை அழிப்பவரே}, உமக்கு சத்தியப்ரதிஜ்ஞை செய்கிறேன். மைதிலியை எவ்வாறு மீட்க முடியுமோ அவ்வாறு யத்னம் {முயற்சி} செய்வேன். சோகத்தைக் கைவிடுவீராக.(3) இராவணனையும், அவனது கணங்களையும் {தொண்டர்களையும்} கொன்று, ஆத்ம பௌருஷத்திற்கு {என் ஆற்றலுக்கு} நிறைவளிக்கும் வகையிலும்,  நீர் மகிழ்ச்சியடையும் வகையிலும் விரைவிலேயே நான் செயல்படுவேன்[1].(4) 

[1] அயனுடை அண்டத்தின்அப் புறத்தையும்
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன்
உயர் புகழ்த் தேவியை உதவற்பாலெனால்
துயர் உழந்து அயர்தியோ சுருதி நூல் வலாய்

- கம்பராமாயணம் 3912ம் பாடல், கலன் காண் காண்டம்

பொருள்: வேதநூல்களில் வல்லோனே, பிரம்மனின் அண்டத்திற்கு அப்பாற்பட்ட இடங்களையும் தளர்வில்லாமல் நன்றாகத் தேடி, என் வலிமையையும் காட்டி, உயர்ந்த புகழுடன் கூடிய உன் தேவியை மீட்டு உன்னிடம் சேர்ப்பிப்பேன். எனவே துன்பமடையவோ, தளர்வடையவோ வேண்டாம் {என்றான் சுக்ரீவன்}.

மனக்கலக்கம் போதும். இயல்பு நிலையையும், தைரியத்தையும் அடைவீராக. உம்மைப் போன்றவர்களுக்கு இத்தகைய புத்திலாகவம் {மனத்தடுமாற்றம்} தகாது.(5) நானும், பாரியையின் பிரிவால் உண்டாகும் மஹத்தான வியசனத்தை {துன்பத்தை} அடைந்தாலும், இவ்வாறு தைரியத்தைக் கைவிட்டு சோகமடையவில்லை.(6) சாதாரண வானரனான நானே, அவளின் {என் மனைவியான ருமையின்}[2] நிமித்தம் சோகத்தை அடையவில்லை என்றால், மஹாத்மாவும், வினீதரும் {அடக்கமுள்ளவரும்}, துணிவுமிக்கவருமான உம்மைக் குறித்து என்ன சொல்வது?(7) கண்ணீர் சிந்துவதை தைரியத்தால் அடக்குவதே உமக்குத் தகும். சத்வ யுக்தர்களுக்குரிய {உள்ளச்சமநிலை கொண்டவர்களுக்குரிய} மரியாதை, துணிவு ஆகியவற்றைக் கைவிடுவது உமக்குத் தகாது.(8) 

[2] கிஷ்கிந்தா காண்டம் 18ம் சர்க்கம் 19ம் சுலோகத்தில், சுக்ரீவனின் மனைவியின் பெயர் ருமை என்று ராமன் குறிப்பிடுகிறான்.

பொறுமையுள்ளவன், வியசனத்திலோ {துன்பத்திலோ}, பொருள் இழப்பிலோ, ஜீவிதாந்தத்திலோ {வாழ்வின் முடிவிலோ}, பயத்திலோ தன் சுய புத்தியின் மூலம் ஆலோசனை செய்து தளர்ச்சியடையாமல் இருப்பான்.(9) எந்த நரன், நித்தியம் பாலத்தனத்துடன் {சிறுபிள்ளைத்தனத்துடன்} தளர்ச்சியடைவானோ, அவன் ஜலத்தில் பாரத்துடன் கூடிய நவத்தை {ஓடத்தைப்} போல, தன் வசம் இழந்து சோகத்தில் மூழ்குவான்.(10) கூப்பிய கைகளுடன் கூடிய நான், நட்பால் உம்மிடம் வேண்டுகிறேன். பௌருஷத்தை {ஆற்றலை} வெளிப்படுத்துவீராக. சோகத்திற்கு வாய்ப்பளிப்பது {இடங்கொடுப்பது} உமக்குத் தகாது.(11) சோகத்தில் மூழ்குபவர்களால் சுகத்தை அனுபவிக்க முடியாது. அவர்களின் தேஜஸ் குறையும். நீர் வருந்துவது உமக்குத் தகாது.(12) இராஜேந்திரரே, சோகத்தில் மூழ்கியவனின் ஜீவிதமும் {உயிருடன் இருப்பது} சந்தேகத்திற்குரியதே. அத்தகைய சோகத்தைக் கைவிட்டு தைரியத்தை அடைவீராக.(13) வயஸ்ய பாவத்தால் ஹிதத்தை {நட்பெண்ணத்தால் நன்மையைச்} சொல்கிறேனேயன்றி உமக்கு உபதேசிக்கவில்லை. என் வயஸ்யத்தை {நட்பைப்} பூஜித்தால் {மதித்தால்}, நீர் வருத்தத்திற்கு இடமளிப்பது தகாது" {என்றான் சுக்ரீவன்}.(14)

அந்த சுக்ரீவனால், மதுரமாக சாந்தப்படுத்தப்பட்ட அந்த ராகவன், கண்ணீரால் முழுதும் நனைந்திருந்த தன் முகத்தை வஸ்திர நுனியால் துடைத்தான்.(15) பிரபுவான அந்த காகுத்ஸ்தன் {ராமன்}, சுக்ரீவனின் சொற்களால் தன் இயல்பில் திடமடைந்து, சுக்ரீவனைத் தழுவிக் கொண்டு இந்தச் சொற்களைச் சொன்னான்:(16) "சுக்ரீவா, சினேகித ஹிதத்தால் வயஸ்யன் {நண்பன்} எதைச் செய்ய வேண்டுமோ, அதையே நேரத்திற்குப் பொருத்தமாகச் செய்திருக்கிறாய்.(17) சகாவே, உன் வேண்டுதலின் மூலமே, நான் என் இயல்புநிலையில் திடமடைந்தேன். இவ்வகையான பந்து, விசேஷமாக இந்தக் காலங்களில் கிடைப்பதற்கரிதானவன்.(18) 

ஆனால், மைதிலியையும், துராத்மாவும், ரௌத்திரங்கொண்ட ராக்ஷசனுமான ராவணனையும் தேடுவதற்கு நீ யத்னம் {முயற்சி} செய்ய வேண்டும்.(19) நம்பகத்தன்மைக்கு என்னால் எது செய்யப்பட வேண்டுமோ அதைச் சொன்னால் உன் சர்வ முயற்சிகளும் வர்ஷகாலத்தில் க்ஷேத்திரங்களை {மழைக்காலத்தில் வயலைப்} போல விளையும்.(20) ஹரிசார்தூலா {குரங்குகளில் புலியே}, அபிமானத்தால் நான் எந்த வாக்கியத்தைச் சொன்னேனோ, அதையே  நீ உண்மையெனக் கருதுவாயாக.(21) பூர்வத்தில் நான் பொய் பேசியவனல்ல. ஒருபோதும் பேசவும் மாட்டேன். இதை உனக்குப் பிரதிஜ்ஞை செய்கிறேன். சத்தியத்தின் மீது நான் சபதம் ஏற்கிறேன்" {என்றான் ராமன்}.(22)

அப்போது வானரர்களுடன் கூடிய சுக்ரீவன், ராகவனின் சொற்களை, விசேஷமாக பிரதிஜ்ஞையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தான்.(23) பிறகு, இவ்வாறு ஏகாந்தமாகச் சந்தித்தவர்களும், நரரும், வானரருமான அவ்விருவரும் அன்யோன்யம் தகுந்த சுக துக்கங்களைக் கலந்தாலோசித்தனர்.(24) வித்வானும், ஹரிவீரர்களில் {குரங்குவீரர்களில்} முக்கிய ஹரியுமானவன் {சுக்ரீவன்}, நிருபர்களின் அதிபனானவன் {ராமன்} சொன்னதைக் கேட்டதும், காரியம் நிறைவேறியதாகவே ஹிருதயத்தில் நினைத்தான்.(25)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 07ல் உள்ள சுலோகங்கள்: 25

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை