Friday 17 March 2023

அபசகுனங்கள் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 23 (34)

Evil Omens | Aranya-Kanda-Sarga-23 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தீய சகுனங்களைக் கண்ட கரன்; அவற்றைப் பொருட்படுத்தாமல் ராக்ஷசப்படைக்கு உற்சாகமளித்தது...

Khara sees bad omens

கழுதை போன்ற செம்பட்டை நிறத்துடன் கூடிய பெரும் மேகமானது, கொந்தளித்தபடியே முன்னேறிக் கொண்டிருந்த அந்த சைனியத்தின் மீது ரத்தம் தோய்ந்த மங்கலமற்ற மழையைப் பொழிந்தது.(1) அவனது {கரனின்} ரதத்தில் பூட்டப்பட்டிருந்த மஹாவேகமுள்ள குதிரைகள், ராஜமார்க்கத்தில், புஷ்பங்கள் நிறைந்த சமமான தேசத்தில் {இடத்தில்} தற்செயலாக இடறி விழுந்தன.(2) சிவந்த முனைகளுடன் கூடிய ஒரு கரிய வட்டம், கொள்ளியைப் போன்ற வட்ட வடிவத்தில் திவாகரனை {சூரியனைச்} சூழ்ந்து கொண்டது.(3) அப்போது, பேருடல் படைத்ததும், பயங்கரமானதுமான கழுகொன்று, உயர்த்தப்பட்டதும் ஹேமதண்டத்துடன் கூடியதும் {தங்கஸ்தம்பமுடையதுமான} துவஜத்தை அணுகி அங்கே அமர்ந்தது.(4) மாமிசங்களை உண்ணும் மிருகங்களும், பக்ஷிகளும் கொடுங்குரலுடன் ஜனஸ்தானத்தின் அருகிலேயே விதவிதமான சுவரங்களில் பலத்த கூச்சல் இட்டன.(5)

கோரமானவையும், பெருங்குரல் படைத்தவையுமான நரிகள் ஒளியூட்டப்படும் {கிழக்குத்} திசையில் அந்த யாதுதானனுக்கு {ராக்ஷசனுக்கு / கரனுக்கு}[1] எதிராக மங்கலமற்ற வகையில் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தன.(6) ரத்த ஜலத்தைத் தரித்த மதங்கொண்ட யானைகளைப் போல {ரத்தஜலத்துடன் சிதறிய மலைகளைப் போல} பயங்கர மேகங்கள் பெரும் நீரைச் சுமந்தவாறே ஆகாயத்தில்  பிரகாசத்துடன் அச்சுறுத்திக் கொண்டிருந்தன.(7) மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான கோரமான இருள் சூழ்ந்தது.  திசைகளும், உபதிசைகளும் தெளிவாகத் தெரியவில்லை.(8) அகாலத்தில் நேர்ந்த சந்திப்பொழுது, ரத்தம் நனைந்த பொருள்களுக்கு ஒப்பாக விளங்கியது. அப்போது கோர மிருகங்களும், பறவைகளும் கரனுக்கு எதிரில் இருந்து கூச்சலிட்டன. ஆபத்தை முன்னறிவிக்கும் வகையில் பருந்துகளும், நரிகளும், கழுகுகளும் அலறின.(9,10அ) யுத்தத்தில் எப்போதும் அமங்கலத்தை ஏற்படுத்துபவையும், கோர நிதர்சனத்தை {ஆபத்தை} அறிவிப்பவையும், ஜுவாலையைக் கக்கும் தங்கள் வாய்களுடன் கூடியவையுமான {பெண்} நரிகள், அந்தப் படையின் எதிரில் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.(10ஆ,11அ)

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் யாதுதானன் என்பதாகும். இது தீய ஆவிகளை அல்லது ராக்ஷசர்களை குறிப்பதாகும்" என்றிருக்கிறது. "யாதுதானன், கசியபர் மற்றும் சுரஸையின் மகனாவான். அவனது பத்து மகன்களும் சூரிய தேவனைப் பின்பற்றும் ராக்ஷசர்களாவர். மஹாபாரதம், அஸ்வமேதபர்வம் பகுதி 8, 6ம் சுலோகத்தில் சிவவழிபாட்டாளர்களாக இந்த யாதுதானர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்" என்று விஸ்டம் லைப்ரரி வலைத்தளத்தில், https://www.wisdomlib.org/definition/yatudhana என்ற சுட்டியில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பாஸ்கரனின் {சூரியனின்} அருகில் பரிகம் போன்ற கபந்தம் {தலையற்ற முண்டம்} காணப்பட்டது. கொடியவனும், மஹாகிரஹமுமான சுவர்பானு {ராகு} சூரியனைப் பற்றிக் கொண்டான் {கிரஹணம் பீடித்தது}. மாருதன் சீக்கிரமாக {காற்று வேகமாக} வீசிக் கொண்டிருந்தான்; திவாகரன்  பிரபையற்றிருந்தான் {சூரியன் ஒளியிழந்திருந்தான்}.(11ஆ,12) இரவு நேராமலேயே தாரைகள் {நக்ஷத்திரங்கள்} மின்மினிப் பூச்சிகளைப் போல மின்னி மறைந்தன. அந்த க்ஷணத்தில் தடாகங்களில் மீன்களும், நீர்ப்பறவைகளும் மறைந்து, வாடிய பங்கஜங்களே {தாமரைகளே} இருந்தன. மரங்கள் புஷ்பங்களையும், பழங்களையும் இழந்தவையாக இருந்தன.(13,14அ) காற்றின்றியே புழுதியானது, ஜலதாரியை {மேகத்தைப்} போல் சிவந்து, படர்ந்து, எழும்பியது[2]. அங்கே சாரிகைகளும் {மைனாக்களும்}, "கீ, கீ, கூ, கீ" என்று {குழப்பத்துடன்} கீச்சிட்டுக் கொண்டிருந்தன.(14ஆ,15அ) இடியுடன் கோர தரிசனந்தரும் உல்கங்களும் {எரிநக்ஷத்திரங்களும்} விழுந்தன. சைலங்கள் {மலைகள்}, வனங்கள் {காடுகள்}, கானகங்கள் {சோலைகள்} ஆகியவற்றுடன் கூடிய மஹீயும் {பூமியும்} நடுங்கினாள்.(15ஆ,16அ) 

[2] அசும்புறு மத கரி புரவி ஆடகத்
தசும்புறு சயந்தனம் அரக்கர் தாள் தர
விசும்புறு தூளியால் வெண்மை மேயின
பசும்பரி பகலவன் பைம்பொன் தேரரோ

- கம்பராமாயணம் 2927ம் பாடல்

நீரூற்று போன்று பெருகுகின்ற மதநீருடைய யானைகளும், குதிரைகளும், பொன்னாலான கலசத்துடன் கூடிய சயந்தனங்களும் {தேர்களும்}, அரக்கர்களும் கால் வைத்து நடந்தமையால் வானத்தில் போய்ப் படிந்த புழுதிகளால் சூரியனுடைய பச்சைக் குதிரைகளும் பசும்பொன்னிறமான தேரும் வெண்ணிறத்தை அடைந்தன.

ரதத்தில் அமர்ந்து சென்று கொண்டிருந்தவனும், மதிமிக்கவனுமான கரனின் இடது தோள் துடித்தது. அவனது குரலும் கம்மியது.(16ஆ,17அ) எங்கும் பார்வையைச் செலுத்தும் அவனது கண்கள் கண்ணீரால் நிறைந்தன. நெற்றி வலித்தது. ஆயினும் மோஹத்தால் {அறிவின்மையால்} அவன் திரும்பினானில்லை.(17ஆ,18அ) அந்தக் கரன், மயிர்க்கூச்சத்தை உண்டாக்கும் அந்த மஹா உத்பாதங்களை {அந்தப் பெரும் அபசகுனங்களைக்} கண்டு சிரித்து, ராக்ஷசர்கள் அனைவரிடமும் {பின்வருமாறு} சொன்னான்:(18ஆ,19அ) "பலமற்றவனை {பொருட்படுத்தாத} பலவானைப் போல, வீரியனான நானும், கோர தரிசனம் தரும் வகையில் எழும் இந்த மஹா உத்பாதங்கள் அனைத்தையும் பொருட்படுத்தமாட்டேன்.(19ஆ,20அ) என் கூரிய சரங்களால் தாரைகளையும் {நக்ஷத்திரங்களையும்} ஆகாயத்திலிருந்து விழச் செய்வேன். நான் குரோதமடைந்தால் மிருத்யுவையும் மரண தர்மத்தில் சேரச் செய்வேன் {யமனை மரணமடையச் செய்வேன்}.(20ஆ,21அ) 

பலத்தால் செருக்குற்றிருக்கும் அந்த ராகவனையும் {ராமனையும்}, அவனுடன் பிறந்த லக்ஷ்மணனையும் கூரிய அம்புகளால் கொல்லாமல் திரும்புவதில் நான் உற்சாகங் கொள்ள மாட்டேன்.(21ஆ,22அ) இராமலக்ஷ்மணர்களுக்கு ஆபத்து நேரக் காரணமான என் பகினி {தமக்கை} அவ்விருவரின் உதிரத்தையும் பருகி ஆசை நிறைவேறுவாள்.(22ஆ,23அ) நான் போர்களில் ஒருபோதும் தோற்றவனல்ல. நான் பொய் சொல்பவனுமல்ல. இதை நீங்கள் வெளிப்படையாகவே அறிவீர்கள்.(23ஆ,24அ) நான் குரோதமடைந்தால், மத்தஐராவதத்தில் {மதங்கொண்ட ஐராவதத்தில்} ஏறிச் செல்லும் வஜ்ரஹஸ்தனான தேவராஜாவையும் {வஜ்ரத்தைக் கைகளில் கொண்ட தேவேந்திரனையும்} கூடப் போரில் கொன்றுவிடுவேன். அற்ப மானுஷர்களான அவ்விருவரும் எனக்கு எம்மாத்திரம்?" {என்றான் கரன்}(24ஆ,25அ)

மிருத்யுவின் {யமனின்} பாசக்கயிற்றில் சிக்கிக் கொண்ட அந்த ராக்ஷசர்களின் மஹா சம்முவானது {பெரும்படையானது}, அவனது {கரனின்} கர்ஜனையைக் கேட்டு ஒப்பற்ற மகிழ்ச்சியை அடைந்தது.(25ஆ,26அ) மஹாத்மாக்களான ரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் யுத்தத்தை தரிசிக்கும் ஆவலுடன் அங்கே ஒன்றுகூடினர்.(26ஆ,27அ) புண்ணிய கர்மங்களைச் செய்தோரான அவர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடி அன்யோன்யம் {ஒருவரோடொருவர்} பின்வருமாறு பேசிக் கொண்டனர்: "உலகத்தால் மதிக்கப்படும் கோக்களுக்கும் {பசுக்களுக்கும்}, பிராமணர்களுக்கும் நன்மை உண்டாகட்டும்.(27ஆ,28அ) சக்கரஹஸ்தனான {சக்கரபாணியான} விஷ்ணு, யுத்தத்தில் சர்வ அசுரர்களையும் கொன்றதைப் போல ராகவனும் பௌலஸ்தியர்களான இந்த ரஜனீசரர்களை {இரவுலாவிகளை} வெல்லட்டும்" {என்றனர்}.(28ஆ,29அ) அங்கே விமானங்களில் இருந்த தேவர்களும், பரமரிஷிகளும் இப்படியும் அப்படியும், இன்னும் பலவாறாகவும் ஆவலுடன் பேசிக் கொண்டே ஆயுள் தீர்ந்த அந்த ராக்ஷச வாஹினியை {ராட்சசப் படையைக்} கண்டனர்.(29ஆ,30)

கோபத்துடன் கூடிய கரன், சைனியத்தின் முன் ரதத்தில் வேகமாகச்  சென்றான். அப்போது அந்த ராக்ஷசனைக் கண்ட ராக்ஷசர்கள் இன்னும் அதிகமாக பெருகி நெருங்கினார்கள். சியேனகாமீ, பிருதுக்ரீவன், யஜ்ஞசத்ரு, விஹங்கமன், துர்ஜயன், கரவீராக்ஷன், பருஷன், காலகார்முகன், ஹேமமாலி {மேகமாலி}, மஹாமாலி, ஸர்ப்பாஸ்யன், ருதிராசனன் என்ற பனிரெண்டு மஹாவீரர்கள் கரனைச் சூழ்ந்து நின்றனர்.(31-33அ) மஹாகபாலன், ஸ்தூலாக்ஷன், பிரமாதி, திரிசிரன் என்ற நால்வரும் சேனையின் முன்னிலையில் தூஷணனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(33ஆ,இ) அதிவேகமுடையதும், போரில் ஆசை கொண்டதும், கொடியதுமான அந்த ராக்ஷச வீரசேனை, சந்திர சூரியர்களை நெருங்கும் கிரஹங்களின் மாலையை {கிரஹங்களுடைய வரிசையைப்} போலவே அந்த ராஜபுத்திரர்கள் இருவரையும் விரைவில் நெருங்கிற்று.(34)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 23ல் உள்ள சுலோகங்கள்: 34

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை