Thursday 11 April 2024

சேனாபதிகள் வதம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 46 (39)

Generals killed | Sundara-Kanda-Sarga-46 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போரில் ராவணனின் சேனாதிபதிகள் ஐவரைக் கொன்ற ஹனுமான்...

Ravana commanding his five generals

மஹாத்மாவான வானரனால் {ஹனுமனால்} மந்திரிமகன்கள் கொல்லப்பட்டதை அறிந்த ராவணன், தன் மனவேதனையை மறைத்துக் கொண்டு, உத்தம மதியை அமைத்துக் கொண்டான் {நல்ல தீர்மானத்திற்கு வந்தான்}.(1) சேனையின் ஐந்து முன்னணி நாயகர்களான விரூபாக்ஷன், யூபாக்ஷன், ராக்ஷசன் துர்த்தரன், பிரகஸன், பாஸகர்ணன்{2} என்ற நயவிசாரதர்களும் {உத்திகளைக் கையாள்வதில் திறம்பெற்றவர்களும்}, ஹனூமனைக் கைப்பற்றும் ஆவலுள்ளவர்களும், யுத்தத்தில் வாயுவுக்கு சமமான வேகம் கொண்டவர்களுமான அந்த வீரர்களுக்கு அந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன், பின்வருமாறு} ஆணையிட்டான்:(2,3) "சேனாக்ரகர்களே {படையின் முன்னணியில் உள்ள தலைவர்களே}, நீங்கள் அனைவரும் வாஜிகள், ரதங்கள், மாதங்கங்களுடன் கூடிய மஹாபலத்தை {குதிரைகள், தேர்கள், யானைகளுடன் கூடிய பெரும்படையை} அழைத்துச் சென்று அந்த கபியை {குரங்கை} தண்டிப்பீராக" என்றான் {ராவணன்}.(4) 

{மேலும் ராவணன்}, "அந்த வனாலயனை அணுகி, ஏமாற்றமடையாத யத்னத்துடன் கூடியவர்களாக, தேசகாலங்களுக்கு விரோதமில்லாத கர்மங்களைச் செய்வீராக.(5) கர்மங்களைக் கொண்டு முன்பின் ஆலோசிக்கும்போது, அவனைக் கபியாகவே {குரங்காகவே} என்னால் கருதமுடியவில்லை. எல்லாவகையிலும் இஃது அளவிலா மஹாபலம் பொருந்திய மஹத்தான பூதமாகவே இருக்க வேண்டும்.(6) இந்திரனின் தபோபலத்தால் நமக்காகவே உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும். தேவர்கள், அசுரர்கள், மஹரிஷிகள், நாகர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகியோரை{7} உங்கள் அனைவருடன் சேர்ந்து நான் வென்றிருக்கிறேன். அவர்கள் நமக்கு எந்தத் தீங்கையேனும் அவசியம் செய்வார்கள்.{8} சந்தேகமற இஃது அப்படியே தெரிகிறது. தீரமும், பராக்கிரமும் கொண்ட அந்த கபியை நீங்கள் பலவந்தமாகக் கைப்பற்றுவீராக; அவமானப்படுத்த வேண்டாம்.(7-9) 

Ravana commanding his five generals

வேகத்துடன் கூடிய விபுல விக்கிரமர்களான ஹரயர்களை {பேராற்றல் படைத்தவர்களான குரங்குகளை} நான் பூர்வத்தில் கண்டிருக்கிறேன். சுக்ரீவனுடன் கூடிய வாலி, மஹாபலவானான ஜாம்பவான்,{10} சேனாபதிகளான நீலன், துவிவிதன் உள்ளிட்ட பிறரின் கதி இவ்வளவு பயங்கரமானதில்லை; அவர்களிடம் இதைப் போன்ற தேஜஸில்லை; பராக்கிரமம் இல்லை;{11} மதி இல்லை; விரும்பிய ரூபத்தையும், சக்தியையும் கொள்ளவல்ல பலமும், உற்சாகமும் அவர்களிடம் இல்லை.(10-12அ) கபிரூபத்தில் நிற்கும் மஹாசத்வம் {குரங்கின் வடிவில் இருக்கும் பெரும்பூதம்} என்று இதை அறிந்து கொண்டு, மஹத்தான பிரயத்னத்தைச் செய்து அதைக் கைப்பற்றுவீராக.(12ஆ,13அ) ஸுரேந்திரன், ஸுராஸுரமானவர்கள் {இந்திரன், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள்} உள்ளிட்ட மூவுலகத்தார் போர்க்களத்தில் உங்கள் முன் நின்றாலும் அவர்களின் விருப்பம் ஈடேறாது.(13ஆ,14அ) இருப்பினும், நயத்தை அறிந்தவனும், ஜயத்தை விரும்புகிறவனுமான ஒருவன், போரில் பிரயத்னத்துடன் தன்னை ரக்ஷித்துக் கொள்ள வேண்டும். யுத்தசித்தி சஞ்சலமானது {போரில் வெற்றி நிலையற்றது}" {என்றான் ராவணன்}.(14ஆ,15அ)

மஹாஓஜஸர்களும் {பெரும்வலிமைமிக்கவர்களும்}, ஹுதாசனனுக்கு {அக்னிக்கு} சமமான தேஜஸ் கொண்டவர்களுமான அவர்கள் அனைவரும்,{15} தங்கள் ஸ்வாமியின் {தலைவனான ராவணனின்} வசனத்தை ஏற்றுக் கொண்டு, ரதங்கள், மத்தமாதங்கங்கள் {தேர்கள், மதங்கொண்ட யானைகள்}, பெரும் வேகம் கொண்ட வாஜிகள் {குதிரைகள்},{16} கூர்மையுடன் கூடிய விதவிதமான சஸ்திரங்கள் ஆகியவை திரட்டப்பட்ட படையுடன், பெரும் வேகத்தில் புறப்பட்டுச் சென்றனர்.(15ஆ-17அ) 

பிறகு அந்த வீரர்கள், உதயமாகும் ரஷ்மிமந்தனை {கதிரவனைப்} போலத் தன்னொளிக் கதிர்களை மாலையாகப் பூண்டு ஒளிர்ந்தபடியே, மஹா உற்சாகத்துடனும், மஹாசத்வத்துடனும் {பெரும் மனோவலிமையுடனும்}, மஹாபலத்துடனும் தோரணத்தில் நின்று கொண்டிருக்கும் அந்த மஹாகபியை {பெருங்குரங்கான ஹனுமானைக்} கண்டனர்[1].(17ஆ,18) மஹாமதியும், மஹாவேகமும், மஹாகாயமும் {பேருடலும்} கொண்ட அவனை {ஹனுமானைக்} கண்ட அவர்கள் அனைவரும், சர்வ திக்குகளில் ஆங்காங்கே நின்றபடியே, தங்கள் தங்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் தொடுத்தனர்.(19,20அ)

[1] ஆயிடை அனுமனும் அமரர்கோன் நகர்
வாயில் நின்று அவ்வழிக் கொணர்ந்து வைத்த மாச்
சேயொளித் தோரணத்து உம்பர் சேண் நெடு
மீ உயர்விசும்பையும் கடக்க வீங்கினான்

- கம்பராமாயணம் 5629ம் பாடல், பஞ்ச சேனாபதிகள் வதைப்படலம்

பொருள்: அப்போது தேவர்களின் தலைவனது {இந்திரனின்} தலைநகரின் {அமராவதியின்} வாசலில் இருந்து அங்கே {அசோகவனத்தில்} கொண்டு வந்து வைக்கப்பட்டதும், செக்கச்சிவந்ததுமான தோரணத்தின் மேலே மிக நெடுந்தூரமாக மேலே உயர்ந்த ஆகாயத்தையும் கடந்து செல்லும் அளவு பெரிதானான் {ஹனுமான்}.

துர்த்தரன், உத்பல {கருநெய்தல்} இதழ்களுக்கு ஒப்பான மஞ்சள் முகங்களுடன் கூடியவையும், திடமானவையும், கூர்மையானவையும், இரும்பாலானவையுமான சரங்கள் {கணைகள்} ஐந்தை, அவனது சிரஸில் {ஹனுமானின் தலையில்} ஏவினான்.(20ஆ,21அ) அந்த ஐந்து சரங்களால் சிரசில் தாக்கப்பட்ட வானரன் {ஹனுமான்}, பத்து திசைகளிலும் எதிரொலிக்கும்படியான நாதம் செய்தபடியே வானத்தில் குதித்தான்.(21ஆ,22அ) அப்போது, மஹாபலவானும், வீரனுமான துர்த்தரன், தன் ரதத்தில் இருந்தபடியே, கார்முகத்தை வளைத்து நூறு கூரிய சரங்களை ஏவித் தாக்கினான்.(22ஆ,23அ) கார்காலத்தின் அந்தத்தில் மழைபொழியும் மேகத்தை மாருதன் {வாயு விலக்குவதைப்} போல, அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, வானத்தில் இருந்தபடியே சரமழை பொழிவதைத் தடுத்தான்.(23ஆ,24அ) இவ்வாறு அந்த துர்த்தரனால் அநிலாத்மஜன் {வாயுமைந்தனான ஹனுமான்} பீடிக்கப்பட்ட போது, மீண்டும் நாதம் செய்படியே வேகமாகத் தன் உடலைப் பெருக்கிக் கொண்டான்.(24ஆ,25அ) கிரியில் {விழும்} மின்னல் திரளைப் போலத் திடீரெனப் பாய்ந்த அந்த ஹரி {குரங்கான ஹனுமான்}, பெரும் வேகத்துடன் துர்த்தரனின் ரதத்தில் குதித்தான்.(25ஆ,26அ) எட்டு அஷ்வங்களும் {குதிரைகளும்} கொல்லப்பட்டு, அச்சும், ஏர்க்கால்களும் பங்கமடைந்த ரதத்தையும் இழந்த பிறகு, அந்த துர்த்தரன், பூமியில் விழுந்து, ஜீவிதத்தைக் கைவிட்டான்.(26ஆ,27அ)

Hanuman fighting with tree in hand

வெல்வதற்கரியவர்களும், அரிந்தமர்களுமான விரூபாக்ஷன், யூபாக்ஷன் ஆகிய இருவரும், அவன் {துர்த்தரன்} புவியில் விழுந்ததைக் கண்டு கோபமடைந்தவர்களாக விரைந்து சென்றனர்.(27ஆ,28அ) விரைவாகச் சென்ற அவர்கள், விமலமான அம்பரத்தில் {தெளிந்த வானில்} நின்று கொண்டிருந்தவனும், மஹாபாஹுவுமான அந்தக் கபியின் {குரங்கான ஹனுமானின்} மார்பில் முத்கரங்களால் {சம்மட்டிகளால்} தாக்கினர்.(28ஆ,29அ) மஹாபலவானும், சுவர்ணனுக்கு {கருடனுக்கு} சமமான விக்கிரமம் கொண்டவனுமான அவன் {ஹனுமான்}, வேகத்துடன் கூடிய அவ்விருவரின் ஊக்கத்தை ஒடுக்கியபடியே மீண்டும் பூமியில் இறங்கி நின்றான்.(29ஆ,30அ) வானரனான அந்தப் பவனாத்மஜன் {வாயு மைந்தன் ஹனுமான்}, ஒரு சால விருக்ஷத்தை அடைந்து, அதை வேருடன் பிடுங்கி, அந்த ராக்ஷச வீரர்கள் இருவரையும் கொன்றான்.(30ஆ,31அ)

அந்த வலிமைமிக்க மூவரும் வானரனால் கொல்லப்பட்டதை அறிந்தபோது, பிரகஸன், மஹாவேகத்துடனும், வலிமையுடனும் தாக்குதல் தொடுத்தான். வீரியவானான பாஸகர்ணனும், கோபமடைந்தவனாக சூலத்தை எடுத்துக் கொண்டான்.(31ஆ,32) {அவ்விருவரும்} புகழ்பெற்ற கபிசார்தூலனுக்கு {குரங்குகளில் புலியான ஹனுமானுக்கு} ஒருபக்கமாக நின்றனர். பிரகஸன், கூர்முனையுடன் கூடிய பட்டிஸத்தாலும், ராக்ஷசன் பாஸகர்ணன் சூலத்தாலும் அந்த கபிசத்தமனைத் துளைத்தனர்.(33,34அ) அவர்களால் தன் அங்கங்களில் காயமடைந்தவனான அந்த வானரன் {ஹனுமான்}, ரத்தத்தால் நனைந்த உடல் மயிருடனும், பாலசூரியனுக்கு சமமான பிரபையுடனும் கூடியவனாகக் குரோதமடைந்தான்.(34ஆ,35அ) கபிகுஞ்சரனான {குரங்குகளில் யானையான} வீர ஹனுமான், மிருகங்கள், பாம்புகள், மரங்களுடன் கூடிய கிரி சிருங்கத்தை {மலைச்சிகரம் ஒன்றைப்} பிடுங்கி, அந்த ராக்ஷசர்கள் இருவரையும் கொன்றான்.(35ஆ,36அ)

அந்த சேனாபதிகள் ஐவரும் கொல்லப்பட்டதும், அந்த வானரன், எஞ்சியிருந்த பலத்தையும் {படையையும்} நாசமடையச் செய்தான்.(36ஆ,37அ) அசுரர்களை சஹஸ்ராக்ஷன் {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரன் கொன்றதைப்} போல, அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, அஷ்வங்களால் அஷ்வங்களையும், கஜங்களால் நாகங்களையும், யோதர்களால் யோதர்களையும், ரதங்களால் ரதங்களையும் {குதிரைகளால் குதிரைகளையும், யானைகளால் யானைகளையும், போர்வீரர்களால் போர்வீரர்களையும், தேர்களால் தேர்களையும்} நாசம் செய்தான்.(37ஆ,38அ) கொல்லப்பட்ட நாகங்களாலும், துரகங்களாலும் {யானைகளாலும், குதிரைகளாலும்}, கொல்லப்பட்ட ராக்ஷசர்களாலும், அச்சுகள் பங்கமடைந்த மஹாரதங்களாலும்  பூமி எங்கிலும் இருந்த மார்க்கங்கள் {வழிகள்} அடைபட்டிருந்தன.(38ஆ,39அ) வீரக் கபியானவன் {குரங்கான ஹனுமான்},  போரில் வாகனங்களுடனும், பலத்துடனும் {படையுடனும்} கூடிய வீரர்களான அந்த துவஜனீபதிகளைக் கொன்றுவிட்டு, பிரஜைகளை அழிப்பதற்காக ஒருக்ஷணம் காத்திருக்கும் காலனை {யமனைப்} போலவே {மீண்டும்} தோரணத்தை {நுழைவாயிலை} அடைந்தான்.(39ஆ,இ,உ,ஊ)

சுந்தர காண்டம் சர்க்கம் – 46ல் உள்ள சுலோகங்கள்: 39


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை