Tuesday 27 February 2024

சீதையின் சந்தேகம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 34 (41)

Doubt of Seetha | Sundara-Kanda-Sarga-34 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தான் ராம தூதன் என்ற ஹனுமான்; இவன் ராவணனாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்த சீதை; தன்னை நம்புமாறு சீதையை வேண்டிய ஹனுமான்...

Seetha doubts Hanuman to be Ravana

ஹரிபுங்கவனான ஹனுமான், துக்கத்திற்கு மேல் துக்கத்தில் மூழ்கியிருப்பவளது வசனத்தை {சீதையின் சொற்களைக்} கேட்டு, சாந்தமடையும் வகையில் {பின்வரும்} மறுமொழியைச் சொன்னான்:(1) “தேவி வைதேஹி, நான் ராமரின் சந்தேசத்துடன் {செய்தியுடன்} உன்னிடம் வந்திருக்கும் தூதனாவேன். குசலீயான {நலமுடன் கூடிய} ராமர், உனக்கும் குசலத்தை {நலத்தை} அறிவிக்கச் சொன்னார்.(2) தேவி, எவர் வேதவித்துகளில் சிறந்தவரோ, வேதத்தையும், பிரம்மாஸ்திரத்தையும் அறிந்தவரோ, அத்தகைய தாசரதியான {தசரதரின் மகனான} ராமர், உன்னுடைய குசலத்தை {நலத்தை} விசாரித்தார்.(3) உன் பர்த்தாவை {கணவரான ராமரை} அனுசரிக்கும் பிரியரும், மஹாதேஜஸ்வியும், சோகசந்தாபத்துடன் கூடியவருமான லக்ஷ்மணரும், சிரம்பணிந்து உனக்கு வணக்கந்தெரிவித்தார்” {என்றான் ஹனுமான்}.(4)

அந்த நரசிம்ஹர்களின் குசலத்தை {மனிதர்களில் சிங்கங்களான ராமலக்ஷ்மணர்களின் நலத்தைக்} கேட்ட அந்த தேவி, சர்வ அங்கங்களிலும் அன்பும், மகிழ்ச்சியும் பொங்க, ஹனுமந்தனிடம் {பின்வருமாறு} பேசினாள்:(5) “நரன் ஜீவித்திருந்தால் {மனிதன் பிழைத்திருந்தால்}, நூறு வருஷங்கள் கழிந்தாயினும் ஆனந்தம் பெறுவான்” என்ற இந்த உலகப் பழமொழி எனக்கு மங்கலமானதாக {உண்மையானதாகத்} தெரிகிறது” {என்றாள் சீதை}.(6)

அணுகி வந்தவனிடம் {ஹனுமானிடம்} அற்புதமான பிரீதியை அவள் {அன்பை சீதை} வெளிப்படுத்தினாள். அவர்கள் இருவரும், பரஸ்பரம் விசுவாசத்துடன் {நம்பிக்கையுடன்} பேசிக்கொண்டனர்.(7) ஹரியூதபனான {குரங்குக்குழுத் தலைவனான} ஹனுமான், சோகத்தால் பீடிக்கப்பட்ட அத்தகைய சீதையின் அந்த வசனத்தைக் கேட்டு, சமீபத்தில் {அவளை நெருங்கிச்} சென்றான்.(8) எவ்வளவுக்கு எவ்வளவு அந்த ஹனுமான் சமீபத்தில் சென்றானோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த சீதை, அவனை ராவணனென சந்தேகித்தாள்.(9) “அஹோ, சீ, இவனிடம் இதைச் சொல்லி நான் தவறு செய்துவிட்டேன். இவன் ரூபாந்தரமடைந்த {வேறு வடிவத்தை அடைந்த} அந்த ராவணனேதான்” {என்று நினைத்தாள்}.(10)

களங்கமற்ற அங்கங்களுடன் கூடியவளும், சோகத்தில் மெலிந்தவளுமான அவள், அந்த அசோக சாகையை {அசோக மரக்கிளையை} விட்டுவிட்டு, அந்த தரணியிலேயே {வெறுந்தரையிலேயே} அமர்ந்தாள்.(11) மஹாபாஹுவான ஹனுமானோ, துக்கத்தால் பீடிக்கப்பட்டவளும், பயத்தால் கலங்கியவளுமான அந்த ஜனகாத்மஜையை {சீதையை} வணங்கினான். அவளோ, பயத்தால் நடுங்கியவளாக மீண்டும் அவனைப் பாராதிருந்தாள்.(12,13அ) சசிக்கு {சந்திரனுக்கு} ஒப்பான முகத்தைக் கொண்ட சீதை, வணங்கிக் கொண்டிருப்பவனைக் கண்டு, பெருமூச்சுவிட்டபடியே, வானரனிடம் மதுர ஸ்வரத்தில் {பின்வருமாறு} பேசினாள்:(13ஆ,14அ) “மாயத்தைப் பயன்படுத்தும் மாயாவியான ராவணனாக நீ இருந்தால், மேலும் எனக்கு சந்தாபத்தையே {வருத்தத்தையே} உண்டாக்குபவனாவாய். இது சோபிக்காது {நன்மையை விளைவிக்காது}.(14ஆ,15அ) சொந்த ரூபத்தைக் கைவிட்டவனும், பரிவ்ராஜக ரூபத்தில் {துறவியின் வடிவில்} இருந்தவனுமாக என்னால் ஜனஸ்தானத்தில் காணப்பட்டவன் எவனோ, அதே ராவணன்தானே நீ?.(15ஆ,16அ) காமரூப நிசாசரா {விரும்பிய வடிவை ஏற்கவல்ல இரவுலாவியே}, உபவாசத்தால் மெலிந்து, தீனமாக {பரிதாப நிலையில்} இருப்பவளான எனக்கு மீண்டும் மீண்டும் இப்படி சந்தாபத்தை {வருத்தத்தை} உண்டாக்குவது சோபிக்காது {உனக்கு நல்லதைச் செய்யாது}.(16ஆ,17அ) 

அல்லது, என்னால் எது சந்தேகிக்கப்படுகிறதோ, அஃது அப்படி இல்லாமலும் இருக்கக்கூடும். எனவேதான், என் மனத்தில் உன் தரிசனத்தால் பிரீதி எழுகிறது[1].(17ஆ,18அ) நீ ராமரின் தூதனாக வந்திருந்தால், பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. ஹரிசிரேஷ்டா {குரங்குகளில் சிறந்தவனே}, ராமகதை என் பிரியத்திற்குரியது. {எனவேதான், அதை} உன்னிடம் கேட்க விரும்புகிறேன்.(18ஆ,19அ) வானரா, {எனக்குப்} பிரியரான ராமரின் குணங்களை உரைப்பாயாக. சௌம்யா {மென்யானவனே}, வெள்ளம் நதிக்கரையை {கரைப்பதைப்} போல நீ என் சித்தத்தைக் கரைக்கிறாய்.(19ஆ,20அ) நீண்ட காலத்திற்கு முன் அபகரிகப்பபட்ட நான், இவ்வாறு ராகவரால் அனுப்பப்பட்ட வனௌகஸனை {வனத்தில் வாழும் இப்படிப்பட்டக் குரங்கைப்} பார்க்கிறேன். அஹோ, இந்த ஸ்வப்னம் {கனவு} சுகமானது.(20ஆ,21அ) வீரரான ராகவரை, லக்ஷ்மண சகிதராக பார்த்திருந்தால் நான் {இவ்வாறு} அவதிப்பட மாட்டேன். எனக்கு {இந்த} ஸ்வப்னமும் கொடுமையானதே.(21ஆ,22அ) 

[1] அரக்கனே ஆக வேறு ஓர் அமரனே ஆக அன்றக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக; கொடுமை ஆகுக
இரக்கமே ஆக வந்து, இங்கு எம்பிரான் நாமம் சொல்லி
உரிக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ

- கம்பராமாயணம் 5254ம் பாடல், உருக்காட்டுப்படலம்

பொருள்:  {இவன்} அரக்கனாகவே இருக்கட்டும்; வேறு ஓர் அமரனாகவும் {தேவனாகவும்} இருக்கட்டும்; அல்லாமல் குரங்கு இனத்தைச் சார்ந்த ஒருவனாகவே இருக்கட்டும்; {அவன் கொண்டது} கொடுமை ஆகவே இருக்கட்டும்; இரக்கமாகவே ஆகட்டும்; இங்கு வந்து எம்பிரான் {என் கணவர் ராமரின்} பெயரைச் சொல்லி உணர்வை உருக்கினான்; உயிரைத் தந்தான். இதைவிடச் சிறந்த உதவி உண்டோ?

ஸ்வப்னத்தில் வானரத்தைக் கண்டால், செழிப்படைவது {நல்ல செய்திக்கு} சாத்தியமில்லை. நானோ செழிப்பை {நலம் குறித்த செய்தியை} பெற்றிருக்கிறேன்[2]. {எனவே}, இதை ஸ்வப்னமாக நான் நினைக்கவில்லை.(22ஆ,23அ) இது சித்தமோஹந்தானோ {மதிமயக்கந்தானோ}? இஃது உன்மத்தத்தால் {பைத்தியக்காரத்தனத்தால்} விளையும் வாதகதியோ {மனச்சமநிலையின்மையோ}[3]? விகாரமோ {மனம்பிறழ்தலோ}? இது மாயமாகத் தெரியும் கானல் நீரோ?(23ஆ ,24அ) அல்லது, இஃது உன்மத்தமாகவோ {பைத்தியமாகவோ}, உன்மத்தத்தின் லக்ஷணமான மோஹமாகவோ {மயக்கமாகவோ} இல்லாதிருக்கக்கூடும். நான் என்னையும், இந்த வனௌகஸனையும் {குரங்கையும்} அறிந்திருக்கிறேன்” {என்றாள் சீதை}.(24ஆ,25அ)

[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே செழிப்பு என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும். இராமனின் தூதனான ஹனுமானைக் கண்டதில் சீதை பெரும் மகிழ்ச்சியை அடைந்திருக்கிறாள்” என்றிருக்கிறது.

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “ஆயுர்வேதத்தில் வாதம், பித்தம், கபம் ஆகியவை ஒன்றையொன்று எதிர்த்துப் போராடும் உடலில் உள்ள மூன்று தோஷங்களாகும். இங்கே குறிப்பிடப்படுவது வாதத்தால் {வாயுவால்} உண்டாவதாகும்” என்றிருக்கிறது.

Seetha doubts Hanuman could be Ravana

இவ்வாறும், பலவாறும் பலாபலங்களை {பலங்களையும், பலவீனங்களையும்} கருத்தில் கொண்ட சீதை, காமரூபியான ராக்ஷசாதிபன் {ராவணன்} என்றே அவனை நினைத்தாள்.(25ஆ,26அ) தனுமத்யமையும், ஜனகாத்மஜையுமான {மெல்லிடையாளும், ஜனகனின் மகளுமான} அந்த சீதை, இவ்வாறு புத்தியை அமைத்துக் கொண்ட பிறகு, அந்த வானரனிடம் {ஹனுமானிடம்} எந்த மறுமொழியும் கூறாதிருந்தாள்.(26ஆ,27அ)

சீதையின் சிந்தையைப் புரிந்து கொண்டவனும், மாருதாத்மஜனுமான {வாயுமைந்தனுமான} ஹனுமான், அப்போது, காதுகளுக்கு இனிமையானவையும், அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்குபவையுமான சொற்களை {பின்வருமாறு} சொன்னான்:(27ஆ,28அ) “ஆதித்யனை {சூரியனைப்} போன்ற தேஜஸ்வியும், சசியை {சந்திரனைப்} போன்ற லோககாந்தரும் {உலகத்தவரை ஈர்ப்பவரும்}, வைஷ்ரவண தேவனை {குபேரனைப்} போன்ற சர்வலோக ராஜாவும், விஷ்ணுவைப் போன்ற புகழையும், விக்கிரமத்தையும் கொண்டவரும்,(28ஆ,29) தேவன் வாசஸ்பதியை {பிருஹஸ்பதியைப்} போன்ற சத்தியவாதியும், மதுரவாக்குள்ளவரும், ரூபவானும், நற்பாக்கியம் கொண்டவரும், ஸ்ரீமானும், கந்தர்பனை போன்ற மூர்த்திமானும் {உடல் கொண்டு வந்த மன்மதனைப் போன்றவரும்},(30) உரிய காலத்தில் குரோதம் கொள்பவரும், தகுந்த சிரேஷ்டரும் {தகுதி வாய்ந்தவரும், சிறந்தவரும்}, மஹாரதரும், உலகத்தைத் தோள்களின் நிழலில் தாங்கும் மஹாத்மாவுமான(31) ராகவர் {ராமர்}, மிருகரூபத்தை {மான் வடிவைக்} கொண்டு எவனால் அப்புறப்படுத்தப்பட்டு, சூனியமான ஆசிரமபதத்தில் உன்னை அபகரித்தானோ, அத்தகையவன் {ராவணன்} அதற்கான பலனை அடைவதை நீ காண்பாய்.(32)

பாவகனை {அக்னியைப்} போல ஜொலிப்பவையும், கோபத்தில் ஏவப்படப்போகிறவையுமான  கணைகளால் போரில் ராவணனை சீக்கிரமே கொல்லப்போகும் வீரியவான் எவரோ,{33} அவரால் {ராமரால்} அனுப்பப்பட்ட தூதனாக இங்கே உன் முன்னே நான் வந்திருக்கிறேன். உன் பிரிவெனும் துக்கத்தால் பீடிக்கப்பட்டவர் {ராமர்}, உனக்கு குசலத்தை {நலத்தைச்} சொல்லி அனுப்பினார்.(33,34) மஹாதேஜஸ்வியும், சுமித்ரானந்தவர்தனரும் {சுமித்திரையின் ஆனந்தத்தை அதிகரிப்பவரும்}, மஹாபாஹுவுமான அந்த லக்ஷ்மணரும் வணக்கத்துடன் உனக்கு குசலத்தை {நலத்தைச்} சொல்லியனுப்பினார்.(35) தேவி, ராமரின் சகாவும், முக்கிய வானரர்களின் ராஜாவும், சுக்ரீவன் என்ற பெயரைக் கொண்டவருமான அந்த வானரரும் உனக்கு குசலத்தை {நலத்தைச்} சொல்லி அனுப்பினார்.(36) சுக்ரீவருடனும், லக்ஷ்மணருடனும் கூடிய ராமர், நித்தியம் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறார். வைதேஹி, ராக்ஷசிகளின் வசத்தை அடைந்தும், அதிஷ்டத்தால் ஜீவித்திருக்கிறாய் {நற்பேற்றால் நீ பிழைத்திருக்கிறாய்}.(37)

சீக்கிரமே, ராமரையும், மஹாபலம் பொருந்திய லக்ஷ்மணரையும், அமிதௌஜஸரான {அளவில்லா ஆற்றலுடைய} சுக்ரீவரையும் கோடிக்கணக்கான வானரர்களின் மத்தியில் நீ காணப்போகிறாய்.(38) பெருங்கடலைக் கடந்து லங்காநகரில் பிரவேசித்தவனும், ஹனுமான் என்ற பெயர் கொண்ட வானரனுமான நான், சுக்ரீவரின் அமைச்சனாவேன்.(39) பராக்கிரமத்தை உறுதி செய்து, துராத்மாவான ராவணனின் மூர்த்தத்தில் {தலையில்} பாதத்தை வைத்து, உன்னை தரிசிக்க வந்தவன் நான்.(40) தேவி, நான் எத்தகையவனென நீ புரிந்து கொண்டாயோ, அத்தகையவனல்லன். உன்னுடைய இந்த சந்தேகத்தைக் கைவிடுவாயாக. நான் சொல்வதை நம்புவாயாக” {என்றான் ஹனுமான்}.(41) 

சுந்தர காண்டம் சர்க்கம் – 34ல் உள்ள சுலோகங்கள்: 41


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை