Saturday 9 December 2023

இலங்கினி | சுந்தர காண்டம் சர்க்கம் - 03 (51)

Lankini | Sundara-Kanda-Sarga-03 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலங்கையின் தேவியான லங்கினியை எதிர்கொண்ட ஹனுமான்; லங்கா நகரியை வீழ்ந்தது...

Lanka Nagariya and Hanuman
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கிய படங்களின் தொகுப்பு

மேதாவியும், மாருதாத்மஜனுமான {வாயு மைந்தனுமான} அந்த ஹனுமான், துணிவைத் திரட்டிக் கொண்டு, {லம்ப} உயர்ந்த சிகரங்களுடனும், மேகங்களுக்கு நிகரான உயரத்துடனும் {லம்பத்துடனும்} கூடிய லம்பத்தில் {லம்ப மலையில்} நின்று கொண்டிருந்தான்[1].{1} மஹாசத்வனான {பெரும் வலிமைமிக்க} கபிகுஞ்சரன் {குரங்குகளில் யானையான ஹனுமான்},  ரம்மியமான கானகங்களாலும், நீர்நிலைகளாலும் நிறைந்ததும், ராவணனால் பாலிதம் செய்யப்பட்டதுமான லங்காம்புரீக்குள் நிசியில் {இரவில்} நுழைந்தான்.(1,2) 
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "லம்பம் என்ற சொல், நீண்டது என்ற பொருளைக் கொண்டது. இங்கே வார்த்தை விளையாட்டு நடைபெறுகிறது" என்றிருக்கிறது.

சரத்கால மேகங்களுக்கு ஒப்பான பவனங்களால் {மாளிகைகளால்} ஒளிர்வதும், சாகரத்திற்கு ஒப்பான கோஷத்துடன் கூடியதும், சாகரத்தின் அநிலனால் {கடற்காற்றால்} சேவிக்கப்படுவதும், அழகாயிருப்பதும்{3} விடபாவதியை {குபேரனின் தலைநகரான அளகாபுரியைப்} போல வலிமைமிக்க படைகள் மிகுந்ததும், அழகிய வெண்தோரண வாயில்களைக் கொண்டதும், அத்தோரணவாயில்களில் யானைகளைக் கொண்டதும்,(3,4) புஜகங்கள் {பாம்புகள்} சஞ்சரித்துப் பாதுகாக்கும் சுபமான {நாகத்தலைநகரம்} போகவதியைப் போலக் காவல் மிகுந்ததும், முக்கியமானதும், மின்னல்களுடன் கூடிய மேகங்களைப் போல ஜோதி மார்க்கம்வரை {நட்சத்திரங்கள் இருக்கும் வானம் வரை} பரவியுள்ளதும்,{5} இந்திரனின் அமராவதியைப் போல், மந்தமாருதம் வீசப்பெற்றதுமானது {இளந்தென்றல் வீசப்பெற்றதுமான லங்கை}, பொன்வண்ணமான மஹத்தான பிராகாரங்களால் {மதிற்சுவர்களால்} சூழப்பட்டிருந்தது.{6} மகிழ்ச்சியடைந்தவன் {அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த ஹனுமான்}, கிங்கிணி ஜாலகோஷங்களுடன் கூடிய பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டப் பிராகாரத்தை உடனே அடைந்தான்[2].(5-7) 

[2] மகிழ்ச்சியான மனத்துடன் கூடிய ஹனுமான், மணிவரிசைகளின் ஒலியுடன் கூடிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட மதிற்சுவற்றின் மீது விரைவாக ஏறினான்.

வியப்படைந்த ஹிருதயத்துடன் சுற்றிலுமுள்ள புரீயைக் கண்டவன் {லங்கா நகரைக் கண்ட ஹனுமான்}, ஜாம்பூநதமயமான துவாரங்களுடனும் {பொன்மயமான வாயில்களுடனும்}, வைடூரியங்களால் இழைக்கப்பட்ட வேதிகைகளுடனும்,{8} மணி {வஜ்ரம் / வைரம்}, ஸ்படிகம், முத்து ஆகியவற்றாலும், மணிகளாலும் {ரத்தினங்களாலும்} அலங்கரிக்கப்பட்ட தரைகளுடனும், புடம்போட்ட பொன்னால் செய்யப்பட்ட யானைகளுடனும், களங்கமற்ற வெண்வெள்ளியாலான கோபுரத்துடனும் கூடியதும்,{9} வைடூரியங்களால் சோபிக்கும் படிகளையும், மாசற்ற ஸ்படிகங்களால் செய்யப்பட்ட அழகான முற்றங்களையும் கொண்ட வரிசையான சுபமான வீடுகளுடன் கூடியதும்,{10} கிரௌஞ்சம் {அன்றில்}, மயில் ஆகியவற்றின் ஒலிகளால் நிறைந்ததும், சுபமான ராஜஹம்சங்களால் {அன்னப்பறவைகளால்} சேவிக்கப்படுவதும், எங்கும் தூரியங்கள் {இசைக்கருவிகள்}, ஆபரணங்களின் ஒலிகளால் ஒலிக்கப்பெறுவதும்,{11} வஸ்வௌகசாரத்திற்கு ஒப்பானதுமான அந்த {இந்திரனின் தலைநகருக்கு ஒப்பான லங்கா} நகரைக் கண்டான். வானத்தை நோக்கி எழுவதைப் போன்றிருந்த அந்த லங்கையைக் கண்டு, கபியான ஹனுமான் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(8-12) 

அந்த வீரியவான் {ஹனுமான்}, ராக்ஷசாதிபதியின் அந்த உத்தம புரியானது, செழிப்பாகவும், சுபமாகவும், ரம்மியமாகவும் இருப்பதைக் கண்டு {பின்வருமாறு} சிந்தித்தான்:(13) “உயர்த்தப்பட்ட ஆயுதங்கள் தரித்த ராவண பலத்தால் {ராவணனின் படைகளால்} ரக்ஷிக்கப்படும் இந்த நகரை {லங்காபுரியை}, பலத்தால் வேறு எவரும் எதிர்கொள்வது சாத்தியமில்லை.(14) குமுதன், அங்கதன், மஹாகபியான சுஷேணன், மைந்தன், துவிவிதன் ஆகியோரால் இந்த பூமி அடையத்தக்கது.(15) விவஸ்வத தனூஜர் {சூரியனின் தனயனான சுக்ரீவர்}, குசபர்வன் என்ற ஹரயன் {குரங்கு}, கபிமுக்கியனான {குரங்குகளில் முக்கியனான} கேதுமாலன், ரிக்ஷன் {கரடியான ஜாம்பவான்} ஆகியோராலும், என்னாலும் இதை அடைய முடியும்” {என்று நினைத்தான்}.(16)

அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, மஹாபாஹுவான ராகவனின் பராக்கிரமத்தையும், லக்ஷ்மணனின் விக்கிராந்தத்தையும் கருத்தில் கொண்டு பிரீதிமான் ஆனான்.(17) இரத்தினங்களையே மேல் வஸ்திரமாகவும், சேமிப்புக் கிடங்குகளையே காதணிகளாகவும் பூண்டு, யந்திரசாலைகளையே ஸ்தனங்களாகப் பெற்று, செழிப்பால் அலங்கரிக்கப்பட்ட பிரமதையை {ஒரு பெண்ணைப்} போல,{18} ஒளிமிகுந்து பிரகாசிக்கும் மஹாகிருஹங்களால் {பெரும் வீடுகளால்} இருள் தொலைந்து போன அந்த ராக்ஷசேந்திரனின் நகரத்தை அந்த மஹாகபி {ஹனுமான்}  கண்டான்.(18,19) 

Lanka Devi and Hanuman

அப்போது, சொந்த ரூபத்துடன் கூடிய அந்த நகரிகை {லங்கா நகரமானவள்}, ஹரிசார்தூலனும் {குரங்குகளில் புலியும்}, மஹாபலம் பொருந்தியவனுமான பவனாத்மஜன் {வாயுவின் மகன் ஹனுமான்} பிரவேசிப்பதைக் கண்டாள்.(20) இராவணனால் பாலிதம் செய்யப்படுபவளான அந்த லங்கை, அந்த ஹரிவரனை {குரங்குகளில் சிறந்த ஹனுமானைக்} கண்டு, விகார முகத்துடனும், கண்களுடனும், தானாக உதித்தெழுந்தாள்[3].(21) கபிவரனான வாயுமைந்தனின் முன்பு நின்று, மஹாநாதத்தை வெளியிட்டபடியே, அந்த பவனாத்மஜனிடம் {வாயு மைந்தன் ஹனுமானிடம், பின்வருமாறு} பேசினாள்:(22) “வனாலயா {வனத்தில் வாழ்பவனே}, நீ யார்? என்ன காரியத்தோடு இங்கே வந்தாய்? உன் பிராணன்களைத் தரித்திருக்கும் வரை, இங்கே தத்துவம் {உண்மை} எதுவோ அதைச் சொல்வாயாக.(23) வானரா, அனைத்துப் பக்கங்களிலும் காவல்காக்கப்படுவதும், ராவணபலத்தால் {ராவணனின் படைகளால்} ரக்ஷிக்கப்படுவதுமான இந்த லங்கைக்குள் பிரவேசிப்பது நிச்சயம் உனக்கு சாத்தியம் இல்லை” {என்றாள்}.(24)

[3] எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல்மூதூர்
நல்லாள் அவ்வூர் வைகுறை ஒக்கும் நயனத்தாள்
நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையாமுன்
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான்

- கம்பராமாயணம், 4915ம் பாடல், ஊர் தேடு படலம்

பொருள்: எல்லாவற்றுக்கும் பயத்தை உண்டாக்கும் கடலால் சூழப்பட்ட பழைய ஊரான  லங்கைக்கு வலிமையை உண்டாக்கி நன்மை செய்பவளும், அந்த ஊரிலேயே நிலைத்திருக்கும் உறை போன்ற கண்களைக் கொண்டவளுமானவள் {லங்கினி}, “நில்லாய், நில்லாய்” என்று முழங்கி, நினைப்பதற்கு முன்னே வேகமாகச் சென்றாள். அதை மாருதி {ஹனுமான்} கண்டான். “வருக” என்றான்.

அப்போது வீர ஹனுமான், தன் எதிரில் நின்று கொண்டிருந்தவளிடம் {அந்த லங்கினியிடம் பின்வருமாறு} பேசினான், “நீ என்னிடம் எதைக் கேட்கிறாயோ அதன் தத்துவத்தை {அதை உள்ளபடியே} நான் உனக்குச் சொல்கிறேன்.(25) புரதுவாரத்தில் நின்று கொண்டிருக்கும் விரூபநயனையே {நகரத்தின் வாயிலில் நின்று கொண்டிருக்கும் விகாரக் கண்களையுடையவளே}, நீ யார்? பயங்கரமானவளே, என்ன அர்த்தத்திற்காக என்னைத் தடுத்துப் பயமுறுத்துகிறாய்?” {என்று கேட்டான்}.(26)

காமரூபிணியான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவளான} அந்த லங்கை, ஹனுமதனின் வசனத்தைக் கேட்டுக் குரோதமடைந்து, பவனாத்மஜனிடம் கடுமையான சொற்களில் {பின்வருமாறு} பேசினாள்:(27) “மஹாத்மாவான ராக்ஷசராஜா ராவணனின் ஆணையை ஏற்பவளும், வெல்லப்பட முடியாதவளுமான நானே இந்த நகரை ரக்ஷித்துவருகிறேன்.(28) என்னை அவமதித்து, நகருக்கு பிரவேசிப்பது உனக்கு சாத்தியமில்லை. இப்போது என்னால் கொல்லப்பட்டு, பிராணன்களைவிட்டு, பெருந்துயில் கொள்ளப் போகிறாய்.(29) பிலவங்கமா {தாவிச் செல்பவனே}, நானே அனைத்துப் பக்கங்களிலும் லங்கா நகரைப் பாதுகாக்கிறேன். இதை நான் உன்னிடம் {ஏற்கனவே} சொல்லியிருக்கிறேன்” {என்றாள்}.(30) 

ஹரிசிரேஷ்டனான மாருதாத்மஜன் {குரங்குகளில் சிறந்தவனும், வாயுமைந்தனுமான ஹனுமான்}, லங்கையின் வசனத்தைக் கேட்டு, யத்னவானாக {முயற்சியுடையவனாக}, இரண்டாம் சைலத்தை {மலையைப்} போல {அசையாமல்} நின்றான்.(31) பிறகு, மேதாவியும், சத்வானும் {வலிமைமிக்கவனும்}, பிலவகரிஷபனும் {தாவிச் செல்பவர்களில் காளையும்}, வானரபுங்கவனுமானவன் {வானரர்களில் மேன்மையானவனுமான ஹனுமான்}, விகாரமான ஸ்திரீரூபத்தில் இருப்பவளைக் கண்டு {பின்வருமாறு} பேசினான்:(32) “ஸாட்டங்கள், பிராகாரங்கள், தோரணங்கள் {கோட்டைகள், மதிற்சுவர்கள், நுழைவாயில்கள்} ஆகியவற்றுடன் கூடிய லங்கா நகரத்தை தரிசிக்க விரும்புகிறேன். நான், இந்த அர்த்தத்திற்காகவே பரம கௌதூஹலத்துடன் {பேராவலுடன்} இங்கே வந்திருக்கிறேன்.(33) வனங்கள், உபவனங்கள், கானகங்கள், சுற்றிலுமுள்ள முக்கிய கிருஹங்கள் ஆகியவற்றுடன் கூடிய லங்கையை தரிசிக்கவே இங்கே நான் வந்திருக்கிறேன்” {என்றான் ஹனுமான்}.(34)

காமரூபிணியான லங்கை, அவனது அந்த வசனத்தைக் கேட்டு, முன்பைவிட வலிய கடுஞ்சொற்களுடன் மீண்டும் {பின்வருமாறு} பேசினாள்:(35) “துர்ப்புத்தியுடன் கூடிய வானராதமா {வானரர்களில் இழிந்தவனே}, என்னை வெல்லாமல், ராக்ஷசேஷ்வரனால் பாலிக்கப்படும் இந்தப் புரியை {லங்கா நகரை} தரிசிப்பது, இப்போது உனக்கு சாத்தியமில்லை” {என்றாள்}.(36)

அப்போது, அந்த கபிசார்தூலன் {குரங்குகளில் புலியான ஹனுமான்}, அந்த நிசாசரியிடம் {இரவுலாவியிடம், பின்வருமாறு} பேசினான், “பத்ரையே {மங்கலமானவளே}, இந்தப் புரியைக் கண்டபிறகு, நான் வந்தபடியே திரும்பிச் செல்வேன்” {என்றான்}.(37)

அப்போது அந்த லங்கை, பயத்தை உண்டாக்கும் வகையில் மஹாநாதத்தை எழுப்பியபடியே தன் உள்ளங்கையால் வேகமாக வானரசிரேஷ்டனை {குரங்குகளில் சிறந்த ஹனுமானைத்} தாக்கினாள்.(38) கபிசார்தூலனும் {குரங்குகளில் புலியும்}, வீரியவானும், பவனாத்மஜனுமானவன் {வாயு மைந்தனுமான ஹனுமான்}, லங்கையால் தாக்கப்பட்டதும், பெரும் மஹாநாதத்தை வெளியிட்டான் {கர்ஜித்தான்}.(39) அப்போது, குரோதத்தால் மூர்ச்சித்தவனான {கோபத்தில் தன்னை மறந்த} அந்த ஹனுமான், இடது கையின் விரல்களை மடக்கி, முஷ்டிகளால் அவளைத் தாக்கிவிட்டு,{40} “இவள் ஸ்திரீ {பெண்}” என்று மனத்தில் நினைத்து, அதிகுரோதத்தில் தானாக ஏதும் செய்யாதிருந்தான்.(40,41அ) விகார அங்கங்களுடனும், விகார முகத்துடனும் கூடிய அந்த நிசாசரி {இரவுலாவி}, இவ்வாறு தாக்கப்பட்ட உடனேயே பூமியில் விழுந்தாள்.(41ஆ,42அ) 

Lankini and Hanuman

அப்போது, பிராஜ்ஞனும் {உள்ளதை உள்ளபடியே அறிபவனும்}, தேஜஸ்வியுமான ஹனுமான், அவள் விழுவதைக் கண்டு, ஸ்திரீயென மனத்தில் நினைத்து அவளிடம் கிருபை கொண்டான்.(42ஆ,43அ) பிறகு, பெரிதும் கலக்கமடைந்த அந்த லங்கை, தழுதழுத்த அக்ஷரங்களுடன் கூடிய வாக்கியத்தைப் பிலவங்கமனான ஹனூமந்தனிடம் கர்வம் இல்லாமல் {பின்வருமாறு} சொன்னாள்:(43ஆ,44அ) “மஹாபாஹுவே, ஹரிசத்தமா {பெருந்தோள்களைக் கொண்டவனே, குரங்குகளில் மேன்மையானவனே}, கருணையுடன் என்னைக் காப்பாயாக. சௌம்யா, சத்வவந்தர்களான மஹாபலவான்கள் {வலிமையும், மஹாபலமும் கொண்டவர்கள்}, சமயத்தின்படியே {நியாயநெறிகளின்படியே} நிற்பார்கள்.(44ஆ,45அ) பிலவங்கமா {தாவிச் செல்பவனே}, நானே லங்காநகரிகை ஆவேன். மஹாபலவானே, வீரா, உன் விக்கிரமத்தால் நான் வெல்லப்பட்டேன்.(45ஆ,46அ) 

ஹரேஷ்வரா {குரங்குகளின் தலைவா}, பூர்வத்தில் ஸ்வயம்பூ {பிரம்மன்} எனக்கு ஒரு வரதானதத்தம் செய்தார். இந்த தத்துவத்தை {அந்த வரதானம் குறித்து உள்ளபடியே} நான் சொல்கிறேன் கேட்பாயாக.(46ஆ,47அ) “எப்போது வானரன் எவனும், தன் விக்கிரமத்தால் உன்னை வசப்படுத்துவானோ, அப்போது, ராக்ஷசர்களுக்கு பயம் உண்டாகும். இதை நீ அறிவாயாக” {என்றான் பிரம்மன்}[4].(47ஆ,48அ) சௌம்யா {மென்மையானவனே}, உன் தரிசனத்தால் இப்போது அந்த சமயம் {நேரம்} எனக்கு வாய்த்திருக்கிறது. ஸ்வயம்பூவின் விதி சத்தியமானது {பிரம்மன் விதித்தது உண்மையானது}. அதற்கு மாற்று வேறேதும் இல்லை.(48ஆ,49அ) 

[4] எத்தனை காலம் காப்பென் யான் இந்த மூதூர் என்று
முத்தனை வினவினேற்கு முரண்வலிக் குரங்கு ஒன்று உன்னைக்
கைத்தலம் அதனால் தீண்டிக் காய்ந்த அன்று என்னைக் காண்டி
சித்திர நகரம் பின்னை சிதைவது திண்ணம் என்றான்.

- கம்பராமாயணம், 4928ம் பாடல், ஊர் தேடு படலம்

பொருள்: "நான் இந்தப் பழைய ஊரை {லங்கையை} எத்தனை காலம் காப்பேன்?" என்று பிரம்மதேவனை வினாவிய என்னிடம், "பெரும் வலிமைபெற்ற குரங்கு ஒன்று உன்னைத் தன் கைகளால் தொட்டு சினம் கொண்ட காலத்தில் என்னைக் காண்பாய். பிறகு, சித்திர நகரம் {அழகிய இலங்கை நகரம்} அழிவது உறுதி" என்றான்.

துராத்மாவான ராவணனும், சர்வ ராக்ஷசர்களும் சீதையின் நிமித்தம் நாசமடையப் போகிறார்கள்.(49ஆ,50அ) எனவே, ஹரிசிரேஷ்டா, ராவணனால் பாலிதம் செய்யப்படும் புரீக்குள் {லங்கா நகருக்குள்} பிரவேசித்து, சர்வ காரியங்களையும், இங்கே நீ விரும்பிய எதையும்  செய்வாயாக.(50ஆ,51அ) ஹரேஷ்வரா {குரங்குகளின் தலைவா}, சுபமானதும், ராக்ஷச ராஜாவால் பாலிதம் செய்யப்படுவதும், சாபத்தால் பீடிக்கப்பட்டதுமான {லங்கா} புரீக்குள் யத்ருச்சையாக {விருப்பம்போல்} பிரவேசித்து, சுகமாக எங்கும் சென்று, சதீயான ஜனகாத்மஜையை {கற்பிற்சிறந்தவளும், ஜனகனின் மகளுமான சீதையைத்} தேடுவாயாக” {என்றாள் லங்கினி}.(51ஆ,இ,ஈ,உ)

சுந்தர காண்டம் சர்க்கம் – 03ல் உள்ள சுலோகங்கள்: 51


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை