Friday 11 August 2023

பிரஸ்ரவண மலை | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 27 (48)

Mount Prasravana | Kishkindha-Kanda-Sarga-27 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பிரஸ்ரவண மலையை அடைந்த ராமனும், லக்ஷ்மணனும்; அவர்கள் வசித்த மலைக்குகை குறித்த வர்ணனை...

Lakshmana and Rama in Prasavana Mountain

வானரனான சுக்ரீவன் அபிஷேகிக்கப்பட்டு, குகைக்குள் {கிஷ்கிந்தைக்குள்} பிரவேசித்த பிறகு, ராமன் தன்னுடன் பிறந்தான் {தம்பி லக்ஷ்மணன்} சகிதனாகப் பிரஸ்ரவண கிரியை {பிரசிரவணம் என்ற மலையை} அடைந்தான்.(1)

அது {பிரஸ்ரவண மலையானது}, சார்தூலங்களாலும் {புலிகளாலும்}, மிருகங்களால் {மான்களாலும்} ஒலிக்கப்பெற்றும், பயங்கரமாக முழங்கும் சிங்கங்களால் நிறையப்பெற்றும், நானாவித குல்மங்களாலும், லதைகளாலும் {புதர்களாலும், கொடிகளாலும்} மறைக்கப்பட்டும், ஏராளமான மரங்களால் அடர்ந்தும்,{2} கரடிகள், வானரங்கள், கோபுச்சங்கள் ஆகியவற்றாலும், பூனைகளாலும் சேவிக்கப்பெற்றும், மேகக்குவியலுக்கு ஒப்பாக, நித்தியம் தூய நீரூற்றுகளுடன் கூடியதுமாக இருந்தது.(2,3) இராமன், சௌமித்ரி {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணன்} சகிதனாக அந்த சைலத்தின் {மலையின்} சிகரத்தில், அகலமான பெருங்குகை ஒன்றைத் தங்கள் வசிப்பிடமாக்கிக் கொண்டான்.(4) 

அனகனும் {களங்கமற்றவனும்}, உடன்பிறந்தவனும், சுக்ரீவனிடம் {ராவண வதத்திற்கேற்ற} சமயம் குறித்த ஏற்பாட்டைச் செய்து கொண்டவனுமான ரகுநந்தனன் {ராமன்}, விநீதனும் {பணிவுள்ளவனும்}, லக்ஷ்மிவர்தனனுமான {செழிப்பை அதிகரிப்பவனுமான} தன்னுடன் பிறந்தானிடம் {லக்ஷ்மணனிடம்}, காலத்திற்குப் பொருத்தமான {பின்வரும்} மஹத்தான வாக்கியங்களை சொன்னான்:(5,6அ) "அரிந்தமா {பகைவரை அழிப்பவனே}, சௌமித்ரியே {சுமித்திரையின் மகனே, லக்ஷ்மணா}, ரம்மியமான இந்த கிரியின் குகை விசாலமாக இருக்கிறது. மாருதத்திற்கும் {காற்றுக்கும்}, மழைக்கால ராத்திரிகளுக்குப் பொருத்தமான இவ்விடத்திலேயே நாம் வசிக்கலாம்.(6ஆ,7அ) பார்த்திவாத்மஜா {மன்னரின் மகனே}, ரம்மியமாகத் திகழும் இந்த உத்தம கிரி சிருங்கத்தில்,{7ஆ} வெளுத்தவையும், கரியவையும், சிவந்தவையுமான பாறைகள் சோபித்து {ஒளிர்ந்து} கொண்டிருக்கின்றன; நானாவித தாதுக்கள் பரவிக் கிடக்கின்றன; நதிகளும், அருவிகளும் நிறைந்திருக்கின்றன.{8} விதவிதமான விருக்ஷங்கள் அடர்ந்திருக்கின்றன; அழகிய, அற்புதமான கொடிகளும் இருக்கின்றன; நானாவித பறவைகள் எதிரொலிக்கின்றன. மயூரங்களின் நாதம் {மயில்களின் அகவல்கள்} நிறைந்திருக்கிறது.{9} மாலதி, மல்லிகை ஆகியவற்றின் புதர்களாலும், சிந்துவாரங்களும் {வெண்ணொச்சி}, ஸ்ரீசகைகளாலும் {குறிஞ்சி}, புஷ்பித்தவையான கடம்ப, அர்ஜுன {மருது}, சர்ஜங்களாலும் {ஆச்சா மரங்களாலும்} இது {பிரஸ்ரவண மலை} சோபிக்கிறது.(7ஆ-10) 

நிருபாத்மஜா {மன்னரின் மகனே}, பூத்த பங்கஜங்கள் {தாமரைகள்} சூழ்ந்ததும், ரம்மியமானதுமான இந்த நளினி {தாமரைத்தடாகம்} நம் குகையில் இருந்து அதிக தூரத்தில் இல்லை.(11) சௌம்யா {மென்மையானவனே}, இந்த குகையின் வடகிழக்கு தேசம் {பகுதி} நன்றாகத் தாழ்ந்திருக்கிறது. மேற்கு உயர்ந்து வாதமில்லாமல் {காற்றில்லாமல்} இருக்கிறது.(12) சௌமித்ரியே, குகை துவாரத்தில் {வாயிலில்} சம தலமானதும், மழுமழுவென்ற அஞ்சன {மைக்} குவியலுக்கு ஒப்பானதும், கரியதும், அகன்றதுமான  கல் அழகுடன் திகழ்கிறது.(13) தாதா {ஐயா}, இதோ பார். வடக்கில் மழுமழுப்பான அஞ்சன மைக் குவியலின் வடிவில் உதித்திருப்பதும், நீர்த்தாரையைப் போன்றதும், சுபமானதுமான இந்த கிரி சிருங்கத்தையும் {மலைச்சிகரத்தையும்},(14) தக்ஷிண {தென்} திசையில் திடமாக இருப்பதும், நானாவித தாதுக்கள் நிறைந்ததும், வெண்மையானதும், கைலாச சிகரத்தைப் போன்றதுமான மற்றொன்றையும் {மற்றொரு மலையையும்},(15) சந்தனம், திலகம், சாலம் {ஆச்சா}, தமாலம், அதிமுக்தகம் {குருக்கத்தி}, பத்மகம், சரளம் ஆகியவற்றுடனும், அசோகத்துடனும் சோபித்தபடியே, திரிகூடத்து ஜாஹ்னவியை {கங்கையைப்} போல இந்த குகையின் அகலத்திற்குக் கிழக்கு நோக்கிப் பாயும் இந்த நதியையும் {துங்கபத்திரை ஆற்றையும்} பார்[1].(16,17) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவர்கள் இப்போது கிஷ்கிந்தையில் இருக்கின்றனர். திரிகூடமோ இமயமலைத்தொடரில் இருக்கிறது. அங்கே இருக்கும் கங்கையாறு இங்கே பிரஸ்ரவண {மால்யவத} மலையில் இருக்கும் துங்கபத்திரையுடன் இணக்கமாக நினைவுகூரப்படுகிறது" என்றிருக்கிறது. திரிகூடம் இலங்கையில் உள்ளது என்று ராமாயணத்தில் வேறு சில இடங்களில் வருகிறது. மூன்று மலைகளுக்கு மத்தியில் லங்காபுரி இருந்ததால் அந்த நகரமே திரிகூடம் என்று அழைக்கப்பட்டது என்று சொல்வோரும் உண்டு.

தீரத்தில் {ஆற்றங்கரையில்} பிறந்தவையும், நானாவித ரூபங்களைக் கொண்டவையும், அங்கேயும், இங்கேயும் இருப்பவையுமான வானீரங்கள், திமிதங்கள், வகுளங்கள் {மகிழங்கள்}, கேதகங்கள் {பேரீச்சைகள்}, ஹிந்தாலங்கள், தினிசங்கள், நீபங்கள் {கடம்பு}, வேதசங்கள், கிருதமாலகங்கள் ஆகிய மரங்களால் இது {ஆறு} வஸ்திர ஆபரணங்களுடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட பிரமதையை {பெண்மணியைப்} போல சோபிக்கிறது.(18,19) நானாவித நாதங்களை எழுப்பும் நூற்றுக்கணக்கான பக்ஷிசங்கங்களால் {பறவைக் கூட்டங்களால்} ஒலிக்கப்பெறுவதும், ஒன்றோடொன்று அன்புள்ள சக்ரவாகங்களால் அலங்கரிக்கப்பட்டதும்,{20} அதிரம்மியமான மணற்திட்டுகளுடனும், ஹம்சங்கள், சாரஸங்கள் ஆகிவற்றுடனும் கூடிய இது {துங்கபத்திரை ஆறு}, சிரித்துக் கொண்டிருக்கும் நாரீரத்ன விபூஷிதையை {அனைத்து வகை ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெண்ணைப்} போலத் தெரிகிறது.(20,21) சில இடங்களில் நீலோத்பலங்களாலும் {கருநெய்தல்களாலும்}, சில இடங்களில் ரக்தோத்பலங்களாலும் {செங்கழுநீர்மலர்களாலும்} மறைக்கப்பட்டிருக்கும் இது, சில இடங்களில் வெண்மையானவையும், திவ்யமானவையுமான குமுத {ஆம்பல்} மொட்டுகளுடனும் பிரகாசிக்கிறது.(22) நூற்றுக்கணக்கான நீர்ப்பறவைகள் திரிவதும், மயில்கள், கிரௌஞ்சங்கள் {அன்றில்கள்} ஆகியவற்றின் நாதங்களை எதிரொலிப்பதும், முனிசங்கங்களால் சேவிக்கப்படுவதுமான இந்த நதி ரமணீயமாக இருக்கிறது.(23) 

சந்தன விருக்ஷங்களின் வரிசைகள் உண்டாக்கும் ஈர்ப்பைப் பார். சமகாலத்தில் மனத்தில் உதித்ததைப் போல, ககுபங்களும் {மருத மரங்களின் வரிசைகளும்} இங்கே புலப்படுகின்றன.(24) சத்ருநிசூதனா, சௌமித்ரியே, அஹோ, இந்த தேசம் ரமணீயமாக இருக்கிறது. இங்கே நன்றாக வசித்திருப்போம். திடமான மகிழ்ச்சியை அடைவோம்.(25) நிருபாத்மஜா {மன்னரின் மகனே}, சித்திரக் கானகங்களுடன் கூடியதும், ரம்மியமானதும், சுக்ரீவனின் புரியுமான அந்த கிஷ்கிந்தை இங்கிருந்து அதிக தூரத்தில் இல்லை.(26) ஜெயதாம்வரா {வெற்றியாளர்களில் சிறந்தவனே}, கீத வாத்தியங்களின் கோஷங்களும், ஆடம்பர மிருதங்கங்களுடன் கூடிய வானரர்களின் நாதமும் கேட்கின்றன.(27) கபிவரனான {குரங்குகளில் சிறந்தவனான} சுக்ரீவன், தன் பாரியையை {ருமையை} மீண்டும் அடைந்து, ராஜ்ஜியமும் வாய்க்கப்பெற்று, மஹத்தான செழிப்பை அடைந்திருக்கிறான். நிச்சயம் அவன் நண்பர்களால் சூழப்பட்டு ஆனந்தமாக இருக்க வேண்டும்" {என்றான் ராமன்}.(28) 

இராகவன் இவ்வாறு சொல்லிவிட்டு, காண்பதற்கினிய ஏராளமான குகைகளுடன் கூடிய அந்தப் பிரஸ்ரவண கிரியில் லக்ஷ்மணனுடன் வசித்திருந்தான்.(29) நல்ல சுகத்துடனும், ஏராளமான திரவியத்துடனும் அந்த தரணீதரத்தில் வசித்திருந்தபோது, அந்த ராமன், அற்ப மகிழ்ச்சியிலுங்கூட நாட்டங்கொள்ளாதிருந்தான்.(30) விசேஷமாக, உதய மலையில் உதிக்கும் சஷாங்கனை {நிலவைக்} கண்டு, கடத்தப்பட்டவளும், பிராணனைவிட விலைமதிப்பற்றவளுமான தன் பாரியையை {சீதையை} நினைவுகூர்ந்து மனஞ்சோர்ந்திருந்தான்.(31) அந்த சோகத்தில், பொங்கும் கண்ணீருடனும், துடிக்கும் நனவுடனும், நிசியில் {இரவில்} சயனத்தை அடைந்தவனுக்கு நித்திரையும் வசப்படவில்லை.(32)

வருந்திக் கொண்டிருந்தவனும், நித்யம் சோகத்தில் ஆழ்ந்திருந்தவனுமான அந்த காகுத்ஸ்தனை {ராமனைத்} தேற்றியவனும், அதே அளவு துக்கத்தில் இருந்தவனும், உடன்பிறந்தவனுமான லக்ஷ்மணன் {பின்வரும்} சொற்களைச் சொன்னான்:(33) "வீரரே, வருந்தியது போதும். உமக்கு சோகம் தகாது. சோகத்தில் இருப்பவனின் சர்வ அர்த்தங்களும் {காரியங்கள் அனைத்தும்} மூழ்கிப் போகும் என்பதை நீர் அறிவீர்.(34) இராகவரே, உலகத்தில் காரியங்களைச் செய்பவர் நீர்; தேவர்களிடம் அர்ப்பணிப்புள்ள ஆஸ்திகரும், தர்மசீலரும், வியவசாயியும் {முயற்சியில் ஈடுபடுபவரும்} நீர்.(35) {இத்தகைய வெற்றிநடை கொண்ட} விக்ரமரான நீர், முயற்சியற்றவராக இருந்தால், கொடுங்காரியங்களைச் செய்யும் சத்ருக்களை, விசேஷமாக ராக்ஷசனானவனை {ராவணனைப்} போரில் கொல்லும் சமர்த்தராகமாட்டீர்.(36) 

உமது சோகத்தை வேரோடு களைந்துவிட்டு, முயற்சியில் திடமடைந்த பிறகு, பரிவாரங்களுடன் சென்று அந்த ராக்ஷசனைக் கொல்வதே தகும்.(37) காகுத்ஸ்தரே,  சாகரங்கள் {கடல்கள்}, வனங்கள் {காடுகள்}, அசலங்கள் {மலைகள்} ஆகியவற்றுடன் கூடிய பிருத்வியையும் {பூமியையே} தலைகீழாக்கும் சக்தி கொண்டவர் நீர் எனும்போது, அந்த ராவணனைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?(38) கனமழைக்குரிய காலம் இதோ வந்துவிட்டது. சரத் காலத்தை {கூதிர்காலத்தை} எதிர்பார்த்திருந்து, ராஷ்டிரம், கணங்களுடன் {நாடு, தொண்டர்களுடன்} கூடிய அந்த ராவணனை அழிப்பீராக.(39) ஆகுதிகளைக் கொண்டு மூட்டப்பட்டு, பஸ்மத்தில் மறைந்திருக்கும் அனலனை {நீறுபூத்த நெருப்பைப்} போல உறங்கிக் கொண்டிருக்கும் உமது வீரியத்தை உரிய காலத்திலேயே நான் தூண்டுகிறேன்" {என்றான் லக்ஷ்மணன்}.(40)

இராகவன், ஹிதமாகவும், சுபமாகவும் லக்ஷ்மணன் சொன்ன அந்த வாக்கியங்களுக்குப் பிரதிபூஜை செய்யும்வகையில், நல்ல ஹிருதயமும், சினேகிதமும் கொண்டவனிடம் {லக்ஷ்மணனிடம்} இந்தச் சொற்களைச் சொன்னான்:(41) "இலக்ஷ்மணா, அன்பையும், சினேகத்தையும், ஹிதத்தையும் விரும்பும் சத்தியவிக்கிரமயுக்தன் {உண்மையான பராக்கிரமம் கொண்டவன்} எந்தச் சொற்களைச் சொல்வானோ, அதையே நீ சொன்னாய்.(42) சர்வ காரியங்களையும் சாதகமற்றதாக்கும் இந்த சோகத்தை முழுமையாக கைவிட்டுவிட்டு, விக்கிரமங்களில் தடுக்கமுடியாத தேஜஸ்ஸை நான் ஊக்குவிக்கப் போகிறேன்.(43) சுக்ரீவனும், நதியும் அருள்வதற்காகக் காத்தும் சரத்காலத்தை {கூதிர்காலத்தை} எதிர்பார்த்தும், உன் சொற்களில் நான் திடமாக நிலைத்திருப்பேன்.(44) உபகாரம் {உதவி} பெற்ற வீரன், பிரதிகாரம் {கைம்மாறு} செய்ய வேண்டும். நன்றி மறந்து பதிலுதவி செய்யாதவன், சத்வவதர்களின் {நல்லவர்களான சான்றோரின்} மனங்களைப் புண்படுத்துகிறான்" {என்றான் ராமன்}.(45)

இலக்ஷ்மணன் அதையே {ராமனால் சொல்லப்பட்டதையே} பொருத்தமானதாக ஆலோசித்து, கைகளைக் கூப்பி, அந்த பாஷிதத்திற்கு {பேச்சுக்கு} பிரதிபூஜை செய்து, தன்னுடைய நன்னோக்கத்தை வெளிப்படுத்துவதற்காக, அழகிய தோற்றம் கொண்டவனான ராமனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(46) "நரேந்திரரே, நீர் சொன்னது போல், வானரன் {சுக்ரீவன்} விரைவாக இல்லையெனினும் உமது விருப்பத்திற்குரிய அனைத்தையும் செய்வான். ரிபு நிக்ரஹத்தில் {பகைவனை அழிப்பதில்} திடமாகவும், சரத் காலத்தை எதிர்பார்த்தும் இருந்து, இந்த ஜலப் பிரபாதங்களை {கனமழையைப்} பொறுத்துக் கொள்வீராக.(47) சத்ருவதத்திற்கு சமர்த்தரான நீர், கோபத்தைப் பொறுத்துக் கொண்டு, சரத்காலத்தை {கூதிர்காலத்தை/ இலையுதிர்காலத்தை} எதிர்பார்த்திருந்து, சதுர் மாசங்களை {நான்கு மாதங்களைக்} கழித்து, மிருகங்களால் சேவிக்கப்படும் ராஜாவை {சிங்கத்தைப்} போல இந்த அசலத்தில் {மலையில்} என்னுடன் வசித்திருப்பீராக" {என்றான் லக்ஷ்மணன்}.(48)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 27ல் உள்ள சுலோகங்கள்: 48

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை