Sunday 2 July 2023

தாரையின் வருகை | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 19 (28)

Tara's arrival | Kishkindha-Kanda-Sarga-19 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மகனுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாரை; அங்கதனை மன்னனாக்கும்படி அவளிடம் வேண்டிய குரங்குகள்; இறந்து கிடக்கும் வாலியைக் கண்டு மயங்கிவிழுந்த தாரை...

Tara and Angada meets vanaras on the way

சரத்தால் பீடிக்கப்பட்டுக் கிடந்த அந்த வானர மஹாராஜன் {வாலி}, பதில் சொல்ல ஹேதுவான வாக்கியங்கள் இன்றி மறுமொழி கூறாதிருந்தான்.(1) ஏராளமான பாறைகளாலும், மரங்களாலும் பலமாகத் தாக்கப்பட்டு, அங்கங்கள் சிதைந்து, ராம பாணத்தால் வீழ்ந்தவன் ஜீவிதாந்த {வாழ்வின் இறுதி} மயக்கத்தில் வீழ்ந்தான்.(2)

பிலவக சார்தூலனான {தாவிச் செல்லும் குரங்குகளில் புலியான} அந்த வாலி, போரில் ராமன் தத்தம் செய்த பாண மோக்ஷத்தால் {ராமன் ஏவிய கணையால்} அழிந்தான் என்று அவனது பாரியையான தாரை கேள்விப்பட்டாள்.(3) புத்திரனுடன் {அங்கதனுடன்} கூடிய அவள் {தாரை}, தன் பர்த்தா பயங்கரமாகவும், பிரியமற்ற வகையிலும் வதம் செய்யப்பட்டதைக் கேட்டு, பெரும் துக்கமடைந்து, அந்த கிரிகந்தரத்திலிருந்து {மலைக்குகையில் இருந்து} வெளியே வந்தாள்.(4) அங்கதனின் பரிவாரத்தில் எவர்கள் மஹாபலவான்களோ அந்த வானரர்கள், கார்முகத்துடன் {வில்லுடன்} கூடிய ராமனைக் கண்டு அச்சமடைந்து {அங்கிருந்து} தப்பி ஓடினர்.(5) அப்போது அவள், யூதபன் {குழு தலைவன்} கொல்லப்பட்ட உடனேயே, யூதத்தில் {குழுவில்} இருந்து ஓடிச் செல்லும் மிருகங்களைப் போல அச்சத்துடன் {தன்னை நோக்கி} விரைந்து ஓடிவரும் ஹரிக்களை {குரங்குகளைக்} கண்டாள்.(6)

அவள் {தாரை}, துக்கத்தில் இருந்தவர்களும், கணைகளால் கட்டப்பட்டதைப் போல ராமனிடம் பேரச்சம் கொண்டவர்களுமான அவர்கள் நெருங்கி வந்ததும், துக்கத்துடன் {பின்வருமாறு} பேசினாள்:(7) "வானரர்களே, நீங்கள் அனைவரும் எந்த ராஜசிம்ஹத்தின் முன்னே சென்றீர்களோ அவரை {அந்த வாலியைக்} கைவிட்டு, பேரச்சத்துடன் கூடிய துர்கதியில் ஏன் ஓடுகிறீர்கள்?(8) உடன்பிறந்த கொடியவர் {சுக்ரீவர்}, தன்னுடன் பிறந்தவரை {வாலியை}, ராஜ்ஜியத்தின் நிமித்தம், தூரத்தில் இருக்கும் ராமனைக் கொண்டு, தூரம் செல்லக்கூடிய மார்கணைகளை {கொடுங்கணைகளை} ஏவச் செய்து வீழ்த்தியிருந்தால்? {என்ன செய்வீர்கள்?}" {என்று கேட்டாள்}[1].(9) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகத்தில் இலக்கண ரீதியான பிரச்சனை ஒன்றிருக்கிறது. "சேத்" என்ற சொல்லை, "இருந்தால்" என்ற பொருளுக்காகப் பயன்படுத்துவது வழக்கம். அப்போது இந்த சுலோகத்தின் பொருள், "இராஜ்ஜியத்திற்காக ஒரு சகோதரன், தன் சகோதரனை வீழ்த்தினால் என்ன? அதனால் உங்களுக்கு என்ன பயம்?" என்று இருக்கும். ஆனால் இது தாரையின் நயத்தக்க இயல்புக்கு நியாயம் கற்பிக்காது. ஆனால் "சேத்" என்பதை, வினாச் சொல்லாகப் பொருள் கொண்டால், வாலி உயிருடன் இருக்கிறானா, இல்லையா என்பதை உறுதி செய்வதற்காக தாரை கேட்பதாகப் பொருள் கொள்ள முடியும். மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளில் வேதனையுடன் விசாரிப்பதே இயல்பு. "எதுவானாலும்" என்ற பொருளைப் பயன்படுத்துவது சரியாக இருக்கக் கூடும், ஏனெனில் "இல்லை" என்பதற்கான பதில் கேள்வியாகவும் அஃது அமையும். "இருந்தால்" என்ற பொருளைப் பயன்படுத்தினால் "அறியாமையின் இருக்கலாம்" என்ற பொருள் வருமேயன்றி, இல்லை என்ற "நிச்சயத்தன்மையோ’, "வாய்ப்பிருக்கலாம் என்ற பொருளோ" வராது. எவ்வாறிருப்பினும், அவள் தகவலிலும், குரங்குகளின் ஒழுங்குமுறையற்ற தன்மையிலும் கவலை கொள்கிறாள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "வானரர்களே, பயங்கரனாகிய தம்பி ஸுக்ரீவன் அண்ணனாகிய வாலியை ராஜ்ஜியத்தின் நிமித்தமாக ராமனைக் கொண்டு வெகுதூரஞ் செல்லவல்ல கொடிய பாணங்களைத் தொடுக்கச் செய்து கொன்றுவிட்டானாயின் உங்களுக்கு என்ன பயம்? உங்களைக் கொல்விப்பதற்கு உங்களுக்கு ராஜ்யம் இல்லையே? வாலியைப் போல் உங்களுக்கும் பயம் ஏன்? நீங்கள் எவனுடைய வேலைக்காரர்களோ அப்படிப்பட்ட ராஜஸ்ரேஷ்டனாகிய வாலியைக் கைவிட்டுத் திக்கற்று மிகவும் திகிலுற்று இப்படி ஏன் ஓடி வருகின்றீர்கள்" என்றிருக்கிறது.

காமரூபம் {விரும்பிய வடிவங்களை} ஏற்கவல்லவர்களான கபிக்கள் {குரங்குகள்}, கபிபத்னியின் {குரங்கான வாலியின் மனைவியான தாரையின்} சொற்களைக் கேட்டு, பிராப்த காலத்திற்குப் பொருந்திய சொற்களை அந்த அங்கனையிடம் {தாரையிடம் பின்வருமாறு} பேசினார்கள்:(10) "ஜீவபுத்ரனுடன் {உயிருடன் கூடிய மகனுடன்} திரும்பிச் செல்வாயாக. உன் புத்திரன் அங்கதனை ரக்ஷிப்பாயாக. இராமன் ரூபத்திலுள்ள அந்தகன், வாலியைக் கொன்று கொண்டு போகிறான்.(11) {சுக்ரீவனால்} வீசப்பட்ட விருக்ஷங்களையும், பெரும்பாறைகளையும் கலங்கடித்த வாலி, வஜ்ரத்திற்கு சமமான ராமனின் பாணங்களால் தாக்கப்பட்டு வஜ்ரத்தைப் போலவே வீழ்ந்தான்[2].(12) சக்ரனுக்கு {இந்திரனுக்கு} சமமான பிரபையை {ஒளியைக்} கொண்ட அந்த பிலவகசார்தூலன் {தாவிச் செல்லும் குரங்குகளில் புலியான வாலி} கொல்லப்பட்டதும் இந்த வானர பலம் {படை} சர்வமும் வீழ்த்தப்பட்டு ஓடுகிறது.(13) 

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே, 'பாணங்கள்' என்று பன்மையில் சொல்லப்படுவது தென்படுகிறது. இராமன் ஒரு கணையையே வாலியின் மீது ஏவியிருந்தாலும், ஒவ்வொரு குரங்கும் அந்த ஒரு பாணத்தைப் பல பாணங்களாகப் பெருக்கிச் சொல்கின்றன. வதந்திகள் இவ்வாறே பெருகுகின்றன" என்றிருக்கிறது. வதந்தி எவ்வாறு பெருகும் என்பதற்கு வலுசேர்க்கும் வகையில் {4:19:11ல்} ராமன் வாலியைக் கொன்று அவனைக் கொண்டு போகிறான் என்றும் அந்தக் குரங்குகள் சொல்கின்றன.

நகரம் சூரர்களால் ரக்ஷிக்கப்படட்டும்; அங்கதன் அபிஷேகம் செய்யப்படட்டும். பதத்தில் நிலைக்கும் வாலி புத்திரனை பிலவங்கமர்கள் {அரியணையில் நிலைக்கும் அங்கதனை வானரர்கள்} வழிபட்டு நிற்பார்கள்.(14) இல்லையெனில், நீ இங்கே இருப்பது நல்லதல்ல. அழகிய முகம் படைத்தவளே, {சுக்ரீவனின்} வானரர்கள் இப்போதே சீக்கிரமாக துர்கங்களுக்குள் {கோட்டைகளுக்குள் / குகைகளுக்குள்} நுழைந்துவிடுவார்கள்.(15) பாரியை {மனைவி} இல்லாதவர்களும், பாரியையுடன் கூடியவர்களுமான வனசாரிகள் அங்கே இருக்கின்றனர். இலுப்தர்களும் {பேராசைக்காரர்களும்}, விப்ரலப்தர்களுமான {ஏமாற்றம் அடைந்தவர்களுமான} அவர்களால் நமக்கு மஹத்தான பயம் உண்டாகும்[3]"{என்றனர் அந்த வானரர்கள்}.(16)

[3] தேசிராஜு ஹனுமாந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தலைநகரிலும் பலர் பிறர் மனைவியரை சிறைப்படுத்துவதில் வாலியின் நடைமுறையைப் பின்பற்றினர். இப்போதோ சுக்ரீவன் போரில் வென்றிருப்பதால் வாலியின் நடைமுறையைப் பின்பற்றுபவர்களைத் தாக்கக்கூடும். இந்த பயத்தையே இவர்கள் தாரையிடம் தெரிவிக்கின்றனர்" என்றிருக்கிறது.

அற்ப தூரமே சென்றிருந்தாலும், அந்தச் சொற்களைக் கேட்டவளும், சாருஹாசினியுமான அந்த அங்கனை {அழகிய புன்னகை உடையவளுமான அந்தப் பெண் தாரை}, தன் தகுதிக்குத் தகுந்தவற்றைப் {பின்வருமாறு} சொன்னாள்:(17) "கபி சிம்மமும் {குரங்குகளில் சிங்கமும்}, மஹாபாக்கியவானுமான அந்த பர்த்தாவே நசியும்போது {என் கணவரே சாகும்போது} எனக்குப் புத்திரனாலென்ன ராஜ்ஜியத்தாலென்ன என்னாலென்ன ஆகப்போகிறது?(18) எவர் ராமன் ஏவிய சரத்தால் வீழ்ந்தாரோ, அந்த மஹாத்மாவின் {கணவர் வாலியின்} பாதமூலத்தையே நான் அடைய விரும்புகிறேன்" {என்றாள் தாரை}.(19)

இவ்வாறு சொன்னவள், சோகத்தில் மூர்ச்சித்து அழுதவாறும், துக்கத்துடன் தலையிலும், மார்பிலும் இரு கைகளால் அடித்துக் கொண்டும் விரைந்து சென்றாள்.(20) அவள் விரைந்து சென்றபோது, {மாயாவி, துந்துபி உள்ளிட்ட} தானவேந்திரர்களை அழித்தவனும், சமர்களில் ஒருபோதும் பின்வாங்காதவனுமான தன் பதி {கணவன் வாலி} பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டாள்.(21) வஜ்ரங்களை {வீசும்} வாசவனை {இந்திரனைப்} போல பர்வதேந்திரங்களை {மலைகளை} வீசியெறிபவனும், மஹாவாதத்திற்கு {பெருங்காற்றுக்கு} சமமான வலிமை கொண்டவனும், மஹா மேகக் கூட்டம் போல முழங்குபவனும்,(22) சக்ரனுக்கு இணையான பராக்கிரமம் கொண்டவனும், கர்ஜிப்பவர்களில் பயங்கரமாக கர்ஜிப்பவனும், சூரர்களை வீழ்த்தும் சூரனுமான அவன் {வாலி}, மாமிசத்திற்காகப் புலியால் கொல்லப்பட்ட மிருகராஜனைப் போலவும், பெரும் மழையைப் பொழிந்து அமைதியடைந்த மேகத்தைப் போலவும்,(23) சர்வலோகத்தாலும் அர்ச்சிக்கப்படுவதும், பதாகைகள் {கொடிகள்}, வேதிகைகளுடன் {வேள்விப்பீடங்களுடன்} கூடியதும், நாகத்திற்காக சுபர்ணனால் {பாம்பிற்காக கருடனால்} சிதைக்கப்பட்டதுமான சைத்யத்தை {கோவிலைப்} போலவும் {தன் கணவன் கிடப்பதைக் கண்டாள்}.(24)

வலிமைமிக்க தனுவை உறுதியாகப் பற்றி நிற்கும் ராமனையும், ராமானுஜனையும் {ராமனின் தம்பியான லக்ஷ்மணனையும்}, தன் பர்த்தாவின் அனுஜனையும் {தன் கணவனின் தம்பியான சுக்ரீவனையும்} அவள் கண்டாள்.(25) அவர்களைக் கடந்து சென்றவள், ரணத்தில் {போரில்} கொல்லப்பட்ட பர்த்தாவை {கணவன் வாலியை} அடைந்து, {அவனை} நெருக்கமாகக் கண்டு, கவலையிலும், குழப்பத்திலும் மூழ்கி பூமியில் விழுந்தாள்[4].(26) 

[4] வாலியும் ஏக யார்க்கும் வரம்பிலா உலகில் இன்பம்
பாலிய முன்னர் நின்ற பரிதி சேய் செங்கை பற்றி
ஆல் இலைப் பள்ளியானும் அங்கதனோடும் போனான்
வேல் விழித் தாரை கேட்டாள் வந்து, அவன் மேனி வீழ்ந்தாள்

- கம்பராமாயணம் 4095ம் பாடல், வாலி வதைப் படலம்

பொருள்: "வாலியும் மேலுலகை அடைய, யாருக்கும் எல்லையில்லா இன்பத்தை வழங்குபனான ஆலிலையைப் படுக்கையாகக் கொண்டவனும் {இராமனும்}, தன் முன் நின்ற சூரியன் புதல்வனின் சிவந்த கைகளைப் பற்றிக் கொண்டு அங்கதனுடன் போனான்" என்று வேல்விழியாளான தாரை கேட்டு அங்கே வந்து அவன் {வாலி} மேனியில் விழுந்தாள்.

தூங்கியவளைப் போல இருந்தவள், மீண்டும் எழுந்து, "ஆரிய புத்திரரே" என்று சொல்லி மிருத்யுவின் {மரணத்தின்} கயிறுகளில் கட்டப்பட்டிருந்த பதியைக் கண்டு கதறி அழுதாள்.(27) சுக்ரீவன், குராரியை {அன்றில் பறவையைப்} போலக் கதறுபவளை {தாரையைக்} கண்டும், அங்கே வந்த அங்கதனையும் கண்டும் கஷ்டத்தையும், மனச் சோர்வையும் அடைந்தான்.(28)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 19ல் உள்ள சுலோகங்கள்: 28

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை