Tuesday 2 May 2023

பம்பை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 75 (35)

Pampa | Aranya-Kanda-Sarga-74 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பம்பைக் கரையை அடைந்து இயற்கை எழிலை எண்ணி வியந்த ராமனும், லக்ஷ்மணனும்...

Rama and Lakshmana at the banks of Pampa lake

அந்த சபரி, தன் சொந்த தேஜஸ்ஸுடன் திவத்திற்கு {சொர்க்கத்திற்குச்} சென்ற போது, இராகவன் தன் உடன் பிறந்த லக்ஷ்மணனுடன் சிந்தனையில் ஆழ்ந்தான்.(1) தர்மாத்மாவான ராகவன், மஹாத்மாக்களின் பிரபாவத்தைக் குறித்துச் சிந்தித்து, ஒரே மனத்துடன் தன் நலனை விரும்புகிறவனான லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "சௌம்யா, மிருக சார்தூலங்கள் விசுவாசத்துடன் {மான்களும், புலிகளும் நம்பிக்கையுடன்} ஒன்றாக வாழ்வதும், நானாவித பறவைகள் வசிப்பதும், ஆச்சரியமிக்கதுமான இந்த {மதங்க} ஆசிரமத்தைக் கண்டோம்.(3) இலக்ஷ்மணா, இந்த சப்த சமுத்திரங்களின் தீர்த்தங்களில் நீராடி, பித்ருக்களுக்குக் காணிக்கைச் செலுத்தி விதிப்படி தர்ப்பணம் செய்தோம்.(4) 

நமக்கு எது அசுபமோ, அதை முழுமையாக விலக்கிவிட்டோம். இலக்ஷ்மணா, நன்மை விளைவிப்பன முன்னே வருகின்றன. இப்போது என் மனம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறது. நரவியாகரா {மனிதர்களில் புலியே}, ஹிருதயத்தில் சுபமானது தோன்றும்.(5,6அ) எனவே, தர்மாத்மாவும், அம்சுமானின் {சூரியனின்} மகனுமான சுக்ரீவன், நித்யம் வாலியிடம் கொண்ட பயத்தால் அச்சமடைந்து, நான்கு வானரர்களுடன் எங்கே வசிக்கிறானோ, எங்கே அந்த ரிச்யமூக கிரி அருகாமையில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ, அந்த பிரிய தரிசனம் தரும் பம்பையிடம் செல்வோம் வா.(6ஆ-8அ) வானரரிஷபனான அந்த சுக்ரீவனைக் காண நான் விரைய வேண்டும். சீதையைத் தேடும் என் காரியம், அவனது ஆதீனத்திலேயே {அவனைச் சார்ந்தே} இருக்கிறது.(8ஆ,9அ)

இவ்வாறு சொன்ன அந்த வீரனிடம் {ராமனிடம்} சௌமித்ரி இதைச் சொன்னான், "என் மனமும் அவசரப்படுகிறது. துரிதமாக அங்கே செல்வோம்" என்றான்.(9ஆ,10அ) பிறகு, விசாம்பதியான {மக்கள் தலைவனான} அந்தப் பிரபு, அந்த ஆசிரமத்தைவிட்டுப் புறப்பட்டு அங்கிருந்து லக்ஷ்மணனுடன் சேர்ந்து பம்பைக்குச் சென்றான்.(10ஆ,11அ) அந்த ராமன், அந்த மஹத்தான வனத்தில், எங்கும் புஷ்பங்கள் அடர்ந்த பெரும் மரங்களையும், விதவிதமான விருக்ஷங்களையும் பார்த்துக் கொண்டிருந்தபோது, கோயஷ்டிகள் {நாரைகள்}, அர்ஜுனகங்கள் {மயில்கள்}, சதபத்ரங்கள் {கொக்குகள்}, கீரகைகள் {குருவிகள்} மற்றும் பலவகை பறவைகளால் ஒலிக்கப்பெறும் விதவிதமான சரஸ்களை {ஓடைகளைக்} கண்டவாறே, உத்தமமான அந்த ஹிரதத்தை {தடாகத்தை} அடைந்தான்.(11ஆ-13) அந்த ராமன், நீர்க்கொள்ளிடமான அவளை {பம்பையை} தூரத்தில் இருந்து கண்டவாறே, மதங்க சரஸ் என்ற பெயரைக் கொண்ட ஹிரதத்திற்குள் {தடாகத்திற்கு} நுழைந்தான் {நீராடினான்}[1].(14) அந்த ராகவர்கள், சாந்த மனத்துடன் அங்கிருந்து சென்றனர். தசரதாத்மஜனான அந்த ராமன், {பம்பையைக் கண்டதும்} சோகத்தால் சூழப்பட்டான்.(15)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கிருந்தே சுலோகங்களின் வரிசையில் பெருங்குழப்பம் நேர்கிறது. எந்த இரண்டு பதிப்புகளிலும் ஒரேமாதிரியான வரிசையில் இந்த சுலோகங்கள் வருவதில்லை. சில பதிப்புகளில் கிஷ்கிந்தா காண்டத்திலுள்ள சுலோகங்களும் இங்கே சேர்க்கப்படுகின்றன" என்றிருக்கிறது.

திலகம், அசோகம், புன்னாகம் {புன்னை}, பகுளம் {மகிழ்}, உத்தாலம் ஆகியவற்றுடன் ஒளிர்வதும், பங்கஜங்களுடன் கூடியதுமான அந்த ரம்மியமான நளினிக்குள் {தாமரைத் தடாகத்திற்கு} நுழைந்தான்.(16) இரம்மியமான உபவனங்களுடன் கூடியதும், பத்மங்கள் நிறைந்த நீருடன் கூடியதும், ஸ்படிகம் போன்று தெளிந்த நீரைக் கொண்டதும், எங்கும் மென்மையான மணற்படுகைகளைக் கொண்டதும்.(17) மத்ஸ்யங்கள் {மீன்கள்}, ஆமைகள் நிறைந்ததும், சம்யுக்த சகியை {தோழியைப்} போல தழுவிக் கொள்ளும் கொடிகளுடன் கூடிய மரங்களால் பிரகாசிக்கும் தீரங்களைக் கொண்டதும்,(18) கின்னர, உரக, கந்தர்வ, யக்ஷ, ராக்ஷசர்களால் சேவிக்கப்படுவதும், நானாவித மரங்களும், கொடிகளும் நிறைந்ததும், சுபநிதியாக குளிர்ந்த நீரைக் கொண்டதும்,(19) பத்ம கந்தம் கொண்டதும், தாமிர {சிவப்பு}, சுக்கில {வெள்ளை} வண்ண குமுத மண்டலங்களுடனும், நீலக் குவளைக் குவியல்களுடனும் கூடியதும், பலவண்ணங்களிலான யானைத் துணியைப் போல இளஞ்சிவப்பு தாமரைகளாலும், வெண் பத்மங்களாலும் நிறைந்ததும், புஷ்பித்த ஆம்ரவனத்தால் {மாந்தோப்புகளால்} சூழப்பட்டதும், மயில்களால் சுற்றிலும் ஒலிக்கப் பெறுவதுமான,(20,21) அந்தப் பம்பையைக் கண்டு, சௌமித்ரியுடன் கூடியவனும், தசரதாத்மஜனும், தேஜஸ்வியுமான அந்த ராமன், காமத்தால் பீடிக்கப்பட்டு அழுது புலம்பினான்.(22)

திலகம், மாதுளை, ஆல் போன்ற மரங்களாலும், வெண்மையான வேறு மரங்களாலும், புஷ்பித்த கோங்கு, புன்னை ஆகியவற்றாலும், புஷ்பித்த அலரி, முல்லை, குந்தம் போன்ற கொடிகளுடன் கூடிய மரங்களாலும், நீர்நொச்சிகள், அசோகங்கள் ஏழிலைப்பாலை மரங்களாலும், தாழைகளாலும், அதிமுக்த, மாதவி மரங்களாலும், மற்றுமுள்ள பல மரங்களாலும் அது {பம்பை} பிரகாசித்துக் கொண்டிருந்தது.(23-25அ) பூர்வத்தில் {கபந்தன்} சொன்னது போலத் தாது மண்டலங்களுடனும், சித்திரமாகப் புஷ்பித்த மரங்களுடனும் கூடிய ரிச்யமூக பர்வதம், அந்த தீரத்தில் இவ்வாறே பிரகாசித்துக் கொண்டிருந்தது.(25ஆ,26அ)

ரிக்ஷரஜஸ் என்ற பெயரைக் கொண்ட மஹாத்மாவான அந்தக் குரங்கின் புத்திரனும், மஹாவீரன் என்று புகழ்பெற்றவனுமான சுக்ரீவன் அதில்தான் வசித்திருந்தான்.(26ஆ,27அ) அந்த நரரிஷபன் {ராமன்}, "நீ வானரேந்திரனான சுக்ரீவனிடம் செல்" என்றான், மீண்டும் சத்யவிக்கிரமனான லக்ஷ்மணனிடம் இந்த வாக்கியத்தையும் சொன்னான், "இலக்ஷ்மணா, சீதை இல்லாமல் நான் ஜீவிப்பது எவ்வாறு சாத்தியம்?" {என்றான்}.(27ஆ,28) மதனனால் பீடிக்கப்பட்டவன், நனவில் வேறெதையும் கொள்ளாமல் லக்ஷ்மணனிடம் இதையே சொல்லிக் கொண்டு, சோகத்துடன் பேசிக் கொண்டும் இருந்தான். பிறகு மனத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் உத்தம நளினியை {தாமரை ஓடையை} அடைந்து, அந்த பம்பையின் அருகில் சென்றான்.(29) இராமன், லக்ஷ்மணனுடன் அடிமேல் அடியெடுத்துச் சென்று வனத்தை ஆர்வத்துடன் கண்டு {திரும்பிப் பார்த்து}, சுப தரிசனந்தரும் கானகத்தில் நானாவித பக்ஷிகள் கூட்டமாக நுழையும் பம்பையை தரிசித்தான்.(30)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 75ல் உள்ள சுலோகங்கள்: 30

*******ஆரண்ய காண்டம் முற்றும்*******

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை