Monday 1 May 2023

சபரி | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 74 (35)

Shabari | Aranya-Kanda-Sarga-74 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சபரியின் விருந்தோம்பல்; மதங்க முனிவரின் ஆசிரமம்; சொர்க்கத்திற்குச் சென்ற சபரி...

Shabari offering fruits to Rama and Lakshmana

நரவராத்மஜர்களான அவர்கள் இருவரும், வனத்தின் பிரதீசீ {மேற்குத்} திசையை நோக்கி கபந்தனால் காட்டப்பட்ட அந்த பம்பை மார்க்கத்தில் புறப்பட்டுச் சென்றனர்.(1) இராமலக்ஷ்மணர்களான அவர்கள் இருவரும் சைலங்களில் {மலைகளில்} தேனுக்கு ஒப்பான பழங்களுடன் பூத்து அடர்ந்திருக்கும் மரங்களைக் கண்டபடியே சுக்ரீவனைக் காணச் சென்றனர்.(2) இராகவநந்தனர்களான அந்த ராகவர்கள் இருவரும் சைல உச்சிகளில் {சாரல்களில்} தங்கிச் சென்று பம்பையின் பஷ்சிம தீரத்துக்கு {மேற்குக் கரைக்குச்} சென்றனர்.(3) பிறகு அவர்கள் இருவரும் பம்பா புஷ்கரணியின் பஷ்சிம தீரத்தை {மேற்குக்கரையை} அடைந்து அங்கே சபரியின் ரம்மியமான ஆசிரமத்தைக் கண்டனர்.(4) அவர்கள் இருவரும், பல்வேறு மரங்கள் சூழ்ந்த அந்த ரம்மியமான ஆசிரமத்தை அடைந்து சபரியை நெருங்கினர்.(5)

அப்போது அவர்களைக் கண்ட அந்த சித்தை {பெண் சித்தரான சபரி}, கைகளைக் கூப்பி எழுந்து, ராமன், மதிமிக்க லக்ஷ்மணன் ஆகியோரின் பாதங்களைப் பற்றிக் கொண்டாள்.(6) பாத்யம் {கால் கழுவுவதற்கான நீர்}, ஆசமனீயங்களையும் {வாய் அலம்புவதற்கான நீர்} என விதிப்படியான அனைத்தையும் அவள் கொடுத்தாள். அப்போது, தர்மத்தை உறுதியாகப் பின்பற்றுபவளான அந்த சிரமணியிடம் {பெண்துறவியான சபரியிடம், பின்வருமாறு} ராமன் சொன்னான்:(7) "தபோதனையே {தபத்தையே செல்வமாகக் கொண்டவளே}, உன் விக்னங்களை {இடையூறுகளை} முழுமையாக வென்றுவிட்டாயா?  உன் தபம் வளர்கிறதா? உன் கோபமும், ஆஹாரமும் நியதமாக {கட்டுப்பாட்டில்} இருக்கின்றனவா?(8) சாருபாஷிணியே {அழகாகப் பேசுபவளே}, உன் நியமங்கள் நிறைவேறினவா? உன் மனம் சுகமாக இருக்கிறதா? உன் குருக்களுக்கு செய்த தொண்டு பலனளித்ததா?" {என்று கேட்டான் ராமன்}.(9)

இராமன் இவ்வாறு வினவியதும், சித்தையும் {பெண் சித்தரும்}, சித்தர்களுக்குத் தொண்டாற்றிய தபசியும், விருத்தையுமான {முதிர்ந்தவளுமான} அந்த சபரி, எதிரில் வந்து ராமனிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(10) "இப்போது உன் இனிய தரிசனத்தால் நான் தப சித்தி பிராப்தமடைந்தவளானேன் {தவத்தின் பயன் எனக்கு வாய்த்திருக்கிறது}. இப்போது என் ஜன்மம் பலனடைந்தது; குருக்களும் நிறைவாகப் பூஜிக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.(11) புருஷரிஷபா, தேவர்களில் சிறந்தவனே, உன்னை பூஜிக்கிறேன். இராமா, இப்போது என் தபத்தின் பலத்தால் ஸ்வர்க்கத்தை அடையப் போகிறேன்.(12) சௌம்யா {மென்மையானவனே}, உன் மென்மையான கண்களால் {அருட்பார்வையால்} நான் புனிதமடைந்தேன். அரிந்தமா {பகைவரை அடக்குபவனே}, மதிப்பை அளிப்பவனான உன் அருளால் அழிவற்ற உலகங்களுக்கு நான் செல்ல விரும்புகிறேன்.(13) 

நான் யாவருக்கு பரிசாரம் {தொண்டு} செய்தேனோ, அவர்கள் {மதங்க முனிவரின் சிஷ்யர்கள்}, நீ சித்திரகூடம் சென்றபோது ஒப்பற்ற பிரகாசத்துடன் கூடிய விமானங்களில் இங்கிருந்து {பம்பையிலிருந்து / உலகத்திலிருந்து} திவத்திற்கு {சொர்க்கத்திற்கு} உயர்ந்துவிட்டனர்.(14) தர்மத்தை அறிந்தவர்களும், மஹாபாக்கியவான்களுமான அந்த மஹரிஷிகள் என்னிடம் {பின்வருமாறு} சொன்னார்கள், "இராமன், உன் புண்ணிய ஆசிரமத்திற்கு சௌமித்ரி {லக்ஷ்மணன்} சஹிதனாக வருவான். அவனை உன் அதிதியாக {விருந்தினனாக} ஏற்று முறையாக வரவேற்பாயாக. அவனைக் கண்டதும், அழிவற்ற சிறந்த உலகங்களை அடைவாய்" {என்று சொன்னார்கள்}.(15,16) புருஷரிஷபா, அந்த மஹாபாக்கியவான்கள் அவ்வாறு சொன்னதில் இருந்து, புருஷவியாகரா, புருஷரிஷபா, விதவிதமான வனப்பொருட்களைச் சேகரித்துக் கொண்டு, பம்பா தீரத்தில் உனக்காகக் காத்திருக்கிறேன்" {என்றாள் சபரி}.(17,18அ)

சபரி இவ்வாறு சொன்னதும், தர்மாத்மாவான அந்த ராகவன், நித்தியம் விஜ்ஞானத்தில் இருந்து ஒதுக்கப்படாதவளான அந்த சபரியிடம் {பின்வருமாறு} சொன்னான்:(18ஆ,19அ) "மஹாத்மாவான தனுவிடம் {கபந்தனிடம்}, சாக்ஷாத் உன் பிரபாவம் குறித்த தத்துவத்தை {உள்ளபடியே உன் மகிமை குறித்த உண்மையைக்} கேட்டிருக்கிறேன். நீ இவ்வாறு நினைத்தால் பிரத்யக்ஷம் பார்க்க விரும்புகிறேன்"[1] {என்றான் ராமன்}.(19ஆ,20அ)

[1] தர்மாலயப் பதிப்பில், "ஸ்ரீராமரோ சாச்வதமாய் கீழ்மக்களில் பிறந்தவளென்று தள்ளிவைக்கப்படாதவளாகிவிட்ட அந்த சபரியைப் பார்த்துப் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளினார், "பிரம்மஞானம் பெற்றவளே, மகாத்மாவாகிய தனு கபந்தனிடமிருந்து உனது தவமகிமை உள்ளபடி என்னால் கேட்கப்பட்டது. நீ இஷ்டப்படுகிறாயாகில் நேரில் பார்க்க விரும்புகிறேன்" என்றிருக்கிறது. கம்பராமாயணத்தில் சபரி என்ற பெயர் சவரி என்று சொல்லப்படுகிறது. அதற்கு வேட்டுவக் குலப்பெண் என்று பொருளும் சொல்லப்படுகிறது. சபரி தான் உண்டு பார்த்து சுவையுள்ள கனிகளை ராமனுக்குக் கொடுத்தாள் என்று சொல்லப்படும் கதை மூலத்திலும் இல்லை, கம்பராமாயணத்திலும் இல்லை.

இராமனின் வாயிலிருந்து உதிர்ந்த அந்த சொற்களைக் கேட்ட சபரி, அவர்கள் இருவருக்கும் அந்த வனத்தைக் காட்டத் தொடங்கி {பின்வருமாறு சொன்னாள்}:(20ஆ,21அ) இரகுநந்தனா, மேகக் கூட்டங்களுக்கு ஒப்பான மிருக, பக்ஷி கூட்டங்களுடன் கூடியதும், நன்கறியப்பட்டதுமான இந்த மதங்க வனத்தைப் பார்ப்பாயாக. ஒளிமிக்கவனே, பாவித ஆத்மாக்களான என் குருக்கள் {பரமாத்மா ஞானம் கொண்ட மதங்கரின் சிஷ்யர்கள்} இங்கே மந்திரங்களின் சக்தியால் மந்திரங்களைச் சொல்லி பூஜித்து, தீர்த்தத்தைக் கொண்டு வந்து அக்னிக்கு காணிக்கை அளித்தனர் {யாகத்தைச் செய்தார்கள்}.(21ஆ,22) என் நற்சேவையைப் பெற்ற அவர்கள், எங்கே சிரமத்துடனும், நடுங்கும் கைகளுடனும் புஷ்ப உபகாரம் செய்தனரோ அந்த பிரத்யக்ஸ்தலீ என்ற {மேற்குப் பக்கமாக நிர்மாணிக்கப்பட்ட அந்த} வேதி இதுவே.(23) இரகோத்தமா, அவர்களுடைய தபத்தின் பிரபாவத்தால், ஒப்பற்ற பிரபையுடன் {பிரகாசத்துடன்} கூடிய வேதி இதோ மகத்தாக சர்வ திசைகளுக்கும் ஒளியூட்டிக் கொண்டிருப்பதைப் பார்.(24) 

உபவாசம், தியானம் ஆகியவற்றின் சிரமத்தால் தளர்ந்து, நடக்கவும் சக்தியற்றவர்களான அவர்கள், சிந்தனையின் மூலம் திரண்டு சென்று சப்த சாகரத்தையும் {ஏழு கடல்களையும்} கண்டனர்.(25) இரகுநந்தனா, இங்கே அபிஷேகங்களைச் செய்த {நீராடிய} அவர்கள், இந்தப் பிரதேசத்தின் மரங்களில் வைத்துச் சென்ற மரவுரிகள் இன்னும் முழுமையாகக் காயாமல் இருக்கின்றன.(26) தேவகாரியங்களைச் செய்தபோது குவளைகளுடன் {கருநெய்தல்களுடன்} கூடிய புஷ்பங்களால் செய்யப்பட்டவை {மாலைகள்}, இதோ இங்கே வாடி வதங்காமல் இருக்கின்றன.(27) நீ இந்த வனத்தில் காணவேண்டியவற்றைக் கண்டாய், கேட்க வேண்டியவற்றைக் கேட்டாய். எனவே உன் அனுமதியுடன் இந்த உறையை {உடலைக்} கைவிட நான் விரும்புகிறேன்.(28) இந்த ஆசிரமத்தில் எந்த முனிவர்களுக்கு நான் பரிசாரிணியாக {தொண்டு செய்பவளாக} இருந்தேனோ, அந்த பாவிதாத்மர்களின் சமீபத்தை அடைய நான் விரும்புகிறேன்" {என்றாள் சபரி}[2].(29)

[2] அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்தபின்றை
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி வெய்ய
துனை பரித் தேரோன் மைந்தன் இருந்த அத்துளக்கு இல் குன்றம்
நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள்

- கம்பராமாயணம் 3704ம் பாடல், சவரி பிறப்பு நீங்கு படலம்

பொருள்: குற்றம் இல்லாதவனாகிய ராமனும், லக்ஷ்மணனும் அன்றைக்கு அந்த மதங்காசிரமத்திலே தங்கியிருந்தபின் இருவினைப் பயனும் நீங்குவதற்கு ஏற்ற தவநிலை பெற்றவளாகிய சபரி, அவர்களை மெய்யன்புடன் பார்த்து, வெப்பம் கொண்டதும், விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பெற்றதுமாகிய தேரைச் செலுத்தும் கதிரவனின் மைந்தன் {சுக்ரீவன்} இருந்த அழிவில்லா ருசியமுகம் எனும் குன்றத்தை நினைப்பதற்கரியதும், ஆராய்ந்து தெளிந்தால் மட்டுமே தெரியக்கூடியதும் ஆகிய வழி முழுவதையும் எண்ணிப் பார்த்துச் சொன்னாள்.

இலக்ஷ்மணனுடன் கூடிய ராகவன், அந்த தர்மிஷ்டையின் சொற்களைக் கேட்டு, ஒப்பற்ற பிரகாசத்தை அடைந்து, "இஃது ஆச்சரியமாக இருக்கிறது" என்று சொன்னான்.(30) அப்போது ராமன், விரதத்தில் உறுதியுடன் இருந்த அந்த சபரீயிடம் {பின்வருமாறு} சொன்னான், "பத்ரே, நான் உன்னால் அர்ச்சிக்கப்பட்டேன் {பூஜிக்கப்பட்டேன்}. நீ விரும்பியபடியே சுகமாகச் செல்வாயாக" {என்றான் ராமன்}.(31)

இவ்வாறு சொன்னதும், ஜடை தரித்திருந்தவளும், மரவுரி உடுத்தியிருந்தவளும், கருப்பு மான்தோலை உடையாகக் கொண்டிருந்தவளுமான அவள், ராமனின் அனுமதியுடன் ஹுதாசனத்தை {நெருப்பை} மூட்டி ஜுவலிக்கும் பாவகனுக்கு {அக்னிக்கு} ஒப்பானவளாகி ஸ்வர்க்கத்தை அடைந்தாள்.(32,33அ) திவ்ய ஆபரணங்களுடன் கூடியவளாகவும், திவ்ய மாலைகளை அணிந்தவளாகவும், திவ்ய ஆடைகளைத் தரித்தவளாகவும், ஒளிவீசும் மின்னற்கொடியைப் போல அந்த தேசத்தையே {இடத்தையே} ஒளிரச் செய்து அங்கே பிரிய தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.(33ஆ,34) ஆத்ம சமாதி அடைந்தவளான அந்த சபரி, நற்செயல்களைச் செய்த ஆத்மாக்களான அந்த மஹரிஷிகள் எங்கே சென்றனரோ அந்த புண்ணிய ஸ்தானத்தையே அடைந்தாள்.(35)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 74ல் உள்ள சுலோகங்கள்: 35

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை