Tuesday 31 January 2023

பரதனின் பிரகடனம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 112 (31)

Proclamation of Bharata | Ayodhya-Kanda-Sarga-112 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன், பரதன் ஆகியோரின் நற்குணங்களைப் புகழ்ந்த முனிவர்கள்; அயோத்திக்கு வெளியில் தங்கி ராமனுடைய பாதுகையின் பாதுகாப்பின் கீழ் ஆளப் போவதாக பிகடனம் செய்த பரதன்...

Bharata receives Rama's Sandals from him

அங்கே கூடியிருந்த மஹரிஷிகள், ஒப்பிலா தேஜஸ்ஸுடன் கூடிய அந்த உடன் பிறந்தார் இருவரும் மயிர்க்கூச்செரியும் வகையில் விவாதித்ததைக் கண்டு வியப்படைந்தனர்.(1) அங்கே அந்தர்ஹிதமாக {புலப்படாமல்} நின்ற முனிகணங்களும், சித்தர்களும், பரமரிஷிகளும் {தேவரிஷிகளும்} உடன்பிறந்த மஹாத்மாக்களான அந்தக் காகுத்ஸ்தர்கள் {ராமன், பரதன்} இருவரையும் {பின்வருமாறு} பாராட்டினர்:(2)  "தர்மஜ்ஞர்களும் {தர்மத்தை அறிந்தவர்களும்}, தர்மவிக்கிரமர்களுமான {தர்மத்திற்கு இணக்கமாகச் செயல்படுபவர்களுமான} இவ்விரு புத்திரர்களைப் பெற்றவன் எவனோ அவன் தன்யனாவான் {அந்த தசரதன் பாக்கியவானாவான்}. இவர்களிருவருக்கும் இடையில் நடந்த சம்பாஷனையை {உரையாடலைக்} கேட்டு நாங்கள் பூரிப்படைகிறோம்" {என்றனர்}.(3)

அப்போது, தசக்ரீவ {ராவண} வதத்தைக் காண விரும்பிய ரிஷிகணங்கள், சீக்கிரமாகக் கூடி, ராஜசார்தூலனான பரதனிடம் இந்த சொற்களைப் பேசினார்கள்:(4) "உத்தம குலத்தில் பிறந்தவனே, மஹாபிராஜ்ஞனே {பெரும் ஞானியே}, சிறந்த நடத்தை கொண்டவனே, பெரும் புகழ்பெற்றவனே {பரதா}, உன் பிதாவை மதிக்க விரும்பினால், ராமனின் வாக்கியங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக.(5) இந்த ராமன், பிதாவின் கடனிலிருந்து எப்போதும் விடுபட்டிருக்க நாங்கள்  விரும்புகிறோம். கைகேயியின் கடனிலிருந்து விடுபட்ட தசரதன் ஸ்வர்க்கத்திற்குச் சென்றுவிட்டான்" {என்றனர்}.(6)

மஹரிஷிகளும், கந்தர்வர்களும், ராஜரிஷிகள் அனைவரும் இவ்வாறான சொற்களைச் சொல்லிவிட்டுத் தங்கள் தங்கள் கதியை அடைந்தனர் {தாங்கள் செல்லுமிடம் சென்றனர்}.(7) சுபதர்சனனான ராமன்,  அந்த சுபவாக்கியங்களைக் கேட்டுப் புத்துணர்ச்சி அடைந்து, மகிழ்ச்சியான வதனத்துடன் அந்த ரிஷிகளைப் பூஜித்தான்.(8) 

பரதன், அங்கங்கள் நடுங்கத் தன் கைகளைக் கூப்பி, தழுதழுத்த குரலில் ராகவனிடம் {ராமனிடம்} இந்த வாக்கியங்களை மீண்டும் சொன்னான்:(9) "காகுத்ஸ்தரே, ராஜதர்மத்தையும், குலதர்மத்தையும் கருத்தில் கொண்டு நம் மாதாக்களின்  வேண்டுகோளை நிறைவேற்றுவதே உமக்குத் தகும்.(10) தனியாக மஹத்தான ராஜ்ஜியத்தை ரக்ஷிக்கவும், நம்மிடம் அன்புள்ள நகர ஜானபதவாசிகளை நிறைவடையச் செய்யவும் என்னால் முடியாது.(11) நம் ஞாதிகளும் {சுற்றத்தாரும்}, போர்வீரர்களும், மித்ரர்களும் {நண்பர்களும்}, நலம்விரும்பிகளும் {அன்பர்களும்} பர்ஜன்யனுக்காக {மேகங்களின் தேவனுக்காக / மழைக்காகக்} ஏங்கும் உழவர்களைப் போல உம்மை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.(12) மஹாபிராஜ்ஞரே, திரும்பி வந்து இந்த ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பீராக. உலகைப் பரிபாலிக்கும் சக்திமிக்கவர் நீரே" {என்றான் பரதன்}.(13)

பிரியவாதியான {இன்சொல் பேசுபவனான} பரதன் இவ்வாறு பேசிவிட்டு, தன்னுடன் பிறந்தானின் பாதங்களில் விழுந்து,  இன்னும் பலவாறாக ராமனை வேண்டினான்.(14) இராமன், கரிய நிறத்தையும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களையும், மயக்கும் ஹம்சத்தின் {அன்னப்பறவையின்} குரலையும் கொண்ட பரதனைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டு {பின்வருமாறு} சொன்னான்:(15) "தாதா {ஐயா}, சுயமாகவும், பயிற்சியினாலும் அடைந்த புத்தி உன்னிடம் இருக்கிறது. பிருத்வியை ரக்ஷிக்க நீ திறன்மிக்கவனாகவே இருக்கிறாய்.(16) அமைச்சர்கள், நண்பர்கள், புத்திசாலித்தனமுள்ள மந்திரிகள் ஆகியோருடன் ஆலோசித்து மஹத்தான காரியங்கள் அனைத்தையும் செய்வாயாக.(17) சந்திரனில் ஒளி மறையலாம், இமயத்தில் பனியும் விலகலாம், சாகர வெள்ளம் கரையைக் கடக்கலாம், நான் பிதாவுக்குச் செய்த பிரதிஜ்ஞையை மீற மாட்டேன்.(18) தாதா, ஆசையாலோ, லோபத்தாலோ பேராசையாலோ மாதாவால் உனக்காகச் செய்யப்பட்டது இஃது என்பதை மனத்தில் வைத்துக் கொள்ளாமல் மாதாவிடம் மதிப்புடன் நடந்து கொள்வாயாக" {என்றான் ராமன்}.(19)

ஆதித்யனுக்கு ஒப்பான தேஜஸ்ஸையோ, பிரதமைச் சந்திரனின் தோற்றத்தையோ  கொண்ட அந்த கௌசல்யாசுதன் {கௌசலையில் மகன் ராமன்} இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது, பரதன் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(20) "ஆரியரே, ஹேமத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்ட இந்த {மரப்} பாதுகைகளில் உமது பாதம் பதிப்பீராக. இவை சர்வலோகத்திற்கும் யோக்ஷேமத்தை {வளர்ச்சியையும், பாதுகாப்பையும்} நிச்சயம் அருளும்" {என்றான்}.(21)

மஹாதேஜஸ்வியான அந்த நரவியாகரன் {மனிதர்களில் புலி / ராமன்}, பாதுகைகளில் பாதங்கள் பதித்து, இறங்கி, மஹாத்மாவான பரதனிடம் அவற்றைக் கொடுத்தான்.(22) அந்தப் பாதுகைகளின் முன் பணிந்து வணங்கிய அவன் {பரதன்}, ராமனிடம் {இதைச்} சொன்னான், "பரந்தபரே {பகைவரை தபிக்கச் செய்பவரே}, வீரரே, இரகுநந்தனரே, சதுர்தச வருஷங்களும் {இந்தப் பதினான்காண்டுகளும்} நான் ஜடையும், மரவுரியும் தரித்து, பழங்களையும், கிழங்குகளையும் உண்டு, ராஜ்ஜிய பாரத்தை இந்தப் பாதுகைகளின் மேலிட்டு, உமது வரவை எதிர்பார்த்து {அயோத்தி} நகரத்திற்கு வெளியே வாழ்வேன். இரகோத்தமரே {ரகு குலத்தவரில் உத்தமரே}, சதுர்தச வருஷங்கள் நிறைவடையும் நாளில் உம்மை நான் காணாவிட்டால் நெருப்புக்குள் பிரவேசிப்பேன்" {என்றான் பரதன்}[1].(23-26அ)

[1] ஆம் எனில் ஏழிரண்டு ஆண்டில் ஐய நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம்
கோ முறை புரிகிலை என்னின் கூர் எரி
சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன்

- கம்பராமாயணம் 2507ம் பாடல்

பொருள்: அப்படியானால் ஐயா, பதினான்கு ஆண்டுகள் கழிந்ததும் {பகைவருக்கு} அச்சந்தரும் அகழி நீர் சூழ்ந்த பெரும் நகரை {அயோத்தியை} அடைந்து நானிலம் ஆளவில்லையெனில் கொடும் நெருப்பில் இறந்து படுவேன். இஃது உண்மை. உன் மேல் ஆணையிடுகிறேன்.

"அவ்வாறே ஆகட்டும்" என்று பிரதிஜ்ஞை செய்து, {ராமன் பரதனை} ஆரத்தழுவி, சத்ருக்னனின் கரங்களைப் பற்றிக் கொண்டு பரதனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(26ஆ,27அ) "இரகுசத்தமா {ரகு குலத்தவரில் மேன்மையானவனே}, மாதா கைகேயியை ரக்ஷிப்பாயாக. அவளிடம் கோபங்கொள்ளாதே. என் பேரிலும், சீதையின் பேரிலும் சபதமேற்பாயாக" {என்று சொல்லி} கண்ணீர் நிறைந்த கண்களுடன் தன்னுடன் பிறந்தானுக்கு விடைகொடுத்தான்.(27ஆ,28) பிரதாபவானும், தர்மவித்துமான அந்த பரதன், நன்கலங்கரிக்கப்பட்ட அந்தப் பாதுகைகளைப் பூஜித்து, ராகவனை {ராமனை} பிரதக்ஷிணம் செய்து, உத்தம நாகத்தின் {சிறந்த யானையின்} தலையில் அவற்றை {அந்தப் பாதுகைகளை} வைத்தான்[2].(29)

[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில்,"நன்கலங்கரிக்கப்பட்ட பாதுகைகளை கையேந்தி வாங்கிக் கொண்டு உத்தமருக்கெல்லாம் உத்தமரின் சிரஸில் வைத்துக் கொண்டார். அப்படியே ராகவரையும் வலம் வந்தார்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "நன்கலங்கரிக்கப்பட்ட அந்தப் பாதுகைகளை விசேஷமாகப் பூஜித்து ராமனை ப்ரதக்ஷிணஞ் செய்து அவைகளை ராஜர்களுக்குரிய உத்தமகஜமான சத்ருஞ்ஜயத்தின் சிரஸில் வைத்தனன்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "ஸ்ரீபரதாழ்வானும் விடைபெற்றுக் கொண்டு பெருமாளைத் தண்டம் ஸமர்ப்பித்து வலம் வந்து அந்த ஸ்ரீபாதுகைகளைப் பட்டத்து யானையின் மேலெழுந்தருளப்பண்ணி மகிழ்ந்தனர்" என்றிருக்கிறது. 

அப்போது, ஸ்வதர்மத்தில் {தன் கடமையைச் செய்வதில்} இமய மலை போல் உறுதிமிக்கவனான அந்த ராகவ வம்சவர்தனன் {ராமன்}, குருக்களையும், மந்திரிமார்களையும், பிறரையும், தன் தம்பிகள் இருவரையும் முறைப்படி வரிசையாக மதித்து அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினான்.(30) துக்கக் கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன் கூடிய மாதாக்கள், அவனிடம் விடைபெற்றுக் கொள்ள இயலாதவர்களாக இருந்தனர். எனினும், ராமன் தன் மாதாக்கள் அனைவரையும் சேவித்து, அழுது கொண்டே தன் குடிலுக்குள் பிரவேசித்தான்.(31)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 112ல் உள்ள சுலோகங்கள்: 31

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை