Thursday 23 September 2021

வேள்விக்குதிரை | பால காண்டம் சர்க்கம் - 39 (26)

Yajna Horse | Bala-Kanda-Sarga-39 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இந்திரனால் அபகரிக்கப்பட்ட வேள்விக்குதிரை; பூமியைத் தோண்டித் தேடி அதைக் கண்டுபிடிக்குமாறு அறுபதாயிரம் மகன்களிடம் ஆணையிட்ட ஸகரன்; தோண்டப்பட்ட தரணி...

Sagara's sons digging the earth

இரகுநந்தனன் {ராமன்}, விஷ்வாமித்ரர் சொன்னதைக் கேட்டு பரமபிரீதியடைந்தான். அவன், கதையின் முடிவில் அநலம் {நெருப்பு} போல் ஒளிர்ந்து கொண்டிருந்த முனியிடம் {விசுவாமித்ரரிடம்} பேசினான்:(1) "பிராமணரே, நான் இந்தக் கதையை விஸ்தாரமாகக் கேட்க விரும்புகிறேன். மங்கலமாக இருப்பீராக. என் மூதாதை உண்மையில் எவ்வாறு அந்த யஜ்ஞத்தை நிறைவேற்றினார்" {என்று கேட்டான் ராமன்}.(2)

குதூகலத்துடன் கூடிய அவனது வசனத்தைக் கேட்ட விஷ்வாமித்ரர், புன்னகைத்தவாறே அந்தக் காகுத்ஸ்தனிடம் சொன்னார்: "இராமா, மஹாத்மாவான ஸகரனைக் குறித்து விஸ்தாரமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(3,4அ) ஹிமவான் என்ற பெயரில் நன்கறியப்படும் சங்கரனின் மாமனும் {இமயமலையானவனும்}, விந்திய பர்வதமும் கண் இமைக்காமல் பரஸ்பரம் பார்த்திருந்தனர்.(4ஆ,5அ) புருஷோத்தமா, அந்த யஜ்ஞம் அவை இரண்டுக்கும் {அந்த மலைகள் இரண்டிற்கும்} மத்தியில் தொடங்கியது. நரவியாகரா {மனிதர்களில் புலியே}, அது யஜ்ஞ கர்மங்களுக்காகப் பிரசித்திப் பெற்ற தேசமாகும் {இடமாகும்}[1].(5ஆ,6அ) ஐயா, காகுத்ஸ்தா, திடமான தனுவை {வில்லைக்} கொண்டவனும், மஹாரதனுமான {பெருந்தேர்வீரனுமான} அம்சுமான், ஸகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரனாக அஷ்வத்தை {குதிரையைக்} காக்க பின்தொடர்ந்து சென்றான்.(6ஆ,7அ)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆர்யாவர்த்த: புண்யபூமிர் மத்யம் விந்தியஹிமாலயோ: என்று சொல்லப்பட்டது" என்றிருக்கிறது. அதாவது, விந்தியத்திற்கும், ஹிமாலயத்திற்கும் இடைப்பட்ட புண்ணிய பூமியான ஆரியவர்த்தமே யஜ்ஞ கர்மங்களுக்குப் பிரசித்தி பெற்ற இடமாகும்.

மங்கல நேரத்தில் {உக்த்யம் நடைபெறும் நாளில்}, ராக்ஷச வடிவை ஏற்ற வாசவன் {இந்திரன்}, யஜ்ஞத்தின் யஜமானனுடைய யஜ்ஞீயாஷ்வத்தை {வேள்வியின் தலைவனான ஸகரனின் வேள்விக்குதிரையை} அபகரித்தான்.(7ஆ,8அ) காகுத்ஸ்தா, அந்த மஹாத்மாவின் அஷ்வம் களவாடப்பட்டதும் உபாத்யாயர்கள் {புரோஹிதர்கள்} அனைவரும் யஜமானனிடம் {ஸகரனிடம்} பேசினார்கள்:(8ஆ,9அ) "காகுத்ஸ்தா {ஸகரா}, மங்கலநாளில் யஜ்ஞீயாஷ்வம் வேகமாகக் களவாடப்பட்டது. கள்வரை நீ கொல்வாயாக. ஹயத்தையும் {குதிரையையும்} மீட்டு வருவாயாக.(9ஆ,10அ) யஜ்ஞத்திற்கு நேர்ந்த இந்த இடையூறு நம் யாவருக்கும் மங்கலமானதல்ல. இராஜா, இந்த யஜ்ஞத்திற்குக் கேடேற்படாத வகையில் நீ செயல்படுவாயாக" {என்றனர்}.(10ஆ,11அ)

அந்தப் பார்த்திபன் {ஸகரன்}, உபாத்யாயர்கள் சொன்னதைக் கேட்டு அந்த சபையில் தன் புத்திரர்களான அறுபதாயிரம் பேரிடம் இந்த வாக்கியத்தைப் பேசினான்:(11ஆ,12அ) "புருஷ ரிஷபர்களே {மனிதர்களில் காளைகளே}, புத்திரர்களே, ராக்ஷசர்களின் கதியை {ராக்ஷசர்கள் எங்குச் சென்றார்களோ} நான் அறியவில்லை. இந்த மகத்தான சடங்கு மந்திரங்களாலும், புனிதர்களாலும் புனிதப்படுத்தப்பட்டதாகவும், அவ்வாறே தலைமைதாங்கப்பட்டதாகவும் இருக்கிறது. அல்லவா? (12ஆ,13அ) எனவே, புத்திரர்களே, {குதிரையையும், கள்வனையும்} தேடிச் செல்வீராக. உங்களுக்கு மங்கலம் உண்டாகட்டும். சமுத்திரத்தை மாலையாகக் கொண்ட மொத்த பிருத்வியிலும் {பூமியிலும்} திரிந்து தேடுவீராக.(13ஆ,14அ) புத்திரர்களே, என் ஆணையால் ஒருவன் {நீங்கள் ஒவ்வொருவரும்} ஒரு யோஜனை விஸ்தாரத்தை அடைந்து, குதிரைக் கள்வன் சென்ற மார்க்கத்தைத் தேடுவீராக. குதிரை தோன்றும்வரை மேதினியைத் தோண்டுங்கள்.(14ஆ,15) தீக்ஷை பெற்ற நான், குதிரை காணப்படும் வரை உபாத்யாய கணங்களுடன் {புரோகிதக் கூட்டத்தாருடன்} பௌத்திர சகிதனாக {அம்சுமான் முதலிய பேரர்களுடன் கூடியவனாக} இங்கேயே இருப்பேன். உங்களுக்கு மங்கலம் உண்டாகட்டும்" {என்றான் ஸகரன்}.(16)

இராமா, மஹாபலர்களான அந்த ராஜபுத்திரர்கள் அனைவரும், மனமகிழ்ச்சியடைந்தும், பிதாவின் வசனத்தால் தூண்டப்பட்டும் மஹீயின் {பூமியின்} பரப்புக்குச் சென்றனர்.(17) புருஷவியாகரா {மனிதர்களில் புலியே}, அந்த மஹாபலர்கள் மொத்த பிருத்வியிலும் திரிந்தாலும் அதை {குதிரையைக்} காணவில்லை. ஒவ்வொருவனும் வஜ்ரம் போன்ற தங்கள் நகங்களால் ஒவ்வொரு யோஜனை அகலத்திற்கு தரணியின் பரப்பைத் தோண்டினர்.(18) இரகுநந்தனா, வஜ்ரங்களைப் போன்ற சூலங்களாலும், மிகப்பயங்கரமான கலப்பைகளாலும் பிளந்ததால் வசுமதி {பூமி} ஓலமிட்டாள்.(19) இராகவா, கொல்லப்பட்ட நாகங்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள் ஆகியோரிடம் இருந்தும், பிற உயிரினங்களிடம் இருந்தும் பொறுத்துக்கொள்ளமுடியாத கூச்சல் வெளிப்பட்டது.(20) இரகுநந்தனா, ராமா, அறுபதாயிரம் யோஜனைகள் தரணியைத் தோண்டியதும் ஒப்பற்ற ரஸாதலம் வெளிப்பட்டது.(21) நிருபசார்தூலா {மன்னர்களில் புலியே}, அந்த நிருபாத்மஜர்கள் {மன்னனின் மகன்கள்}, பர்வதங்கள் நெருங்கிய ஜம்பூத்வீபத்தை[2] இவ்வாறு தோண்டியபடியே எங்கும் திரிந்து கொண்டிருந்தனர்.(22)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்து தொன்மவியலின்படி ஜம்பூத்வீபம் என்பது உலகின் ஏழு கண்டங்களில் ஒன்றாகும். "ஜம்பூ³ப்லக்ஷாக்²யத்³வீபௌ ஷா²ல்மலி꞉ ச அபரோ த்³விஜ | குஷ²꞉ க்ரௌந்ச꞉ ததா² ஷ²க꞉ புஷ்கர꞉ ச ஏவ ச ஸப்தம꞉" என்று சொல்லப்படுவதில், ஜம்பூ, பிலக்ஷம், ஷால்மலி, குஷம், கிரௌஞ்சம், ஷகம், புஷ்கரம் என்பன ஏழு கண்டங்களாகும். அவற்றில் ஒன்று ஜம்பூத்வீபமாகும்" என்றிருக்கிறது.

அப்போது கந்தர்வர்கள், அஸுரர்கள், பன்னகர்கள் ஆகியோருடன் கூடிய தேவர்கள் அனைவரும் {பூமியின் அவல நிலையைக் கண்டு} மனத்தில் துன்பமடைந்து பிதாமஹனை {பிரம்மனை} அணுகினர்.(23) பேரச்சம் கொண்டிருந்த அவர்கள், முகத்தில் வருத்தத்துடன் மஹாத்மாவான பிதாமஹனின் அருளைப் பெற்று, இந்த வசனத்தைச் சொன்னார்கள்:(24) "பகவானே, ஸகராத்மஜர்களால் {ஸகரனின் மகன்களால்} மொத்த பிருத்வியும் தோண்டப்படுகிறது. ஜலசாரிகளும் {நீரில் திரிபவர்களான தலவாசிகளும், ரஸாதலவாசிகளும்}, பல மஹாத்மாக்களும் அழிவடைகின்றனர்.(25) அந்த ஸகராத்மஜர்கள், "இவனே நம் யாகத்தைக் கெடுத்தவன். இவனால் நம் அஷ்வம் அபகரிக்கப்பட்டது" என்று நினைத்துக் கொண்டு சர்வ பூதங்களையும் {உயிரினங்கள் அனைத்தையும்} இம்சிக்கின்றனர்" {என்றனர்}.(26)

பாலகாண்டம் சர்க்கம் – 39ல் உள்ள சுலோகங்கள் : 26

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை