Wednesday 26 April 2023

கபந்தன் கரபங்கம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 70 (19)

Kabandha arms mutilated | Aranya-Kanda-Sarga-70 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கபந்தனின் கைகளை வெட்டிய ராமனும், லக்ஷ்மணனும்; கபந்தனின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டது; இராமலக்ஷ்மணர்களை வரவேற்ற கபந்தன்...

Rama Lakshmana Kabandha

கைகளெனும் பாசத்தில் {கயிற்றில்} முழுமையாகக் கட்டப்பட்டு அங்கே நிற்கும் சகோதரர்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் கண்டு, கபந்தன் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(1) "க்ஷத்திரிய ரிஷபர்களே {க்ஷத்திரியர்களில் காளைகளே}, பசியால் துன்புற்றிருந்த என்னைக் கண்டும் நனவிழந்தவர்களாக ஏன் நீங்கள் நிற்கிறீர்கள்? தைவத்தால் ஆஹாரமாகவே அனுப்பப்பட்டிருக்கிறீர்கள்" {என்றான் கபந்தன்}.(2)

இலக்ஷ்மணன் அதைக் கேட்டு துயரத்தால் பீடிக்கப்பட்டு, விக்கிரமத்தை {வலிமையை} வெளிப்படுத்த நிச்சயித்துக் கொண்டு, பிராப்த காலத்திற்கு ஹிதமான {சமயத்திற்கு ஏற்ற நன்மை பயக்கும் பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(3) "இந்த ராக்ஷசாதமன் {ராக்ஷசர்களில் இழிந்தவன்} துரிதமாக உம்மையும், என்னையும் முன்பே பற்றிவிட்டான் {இவன் நம்மை விழுங்கும் முன்பே} இவனுடைய நீண்ட கரங்களை வாள்களால் வேகமாக வெட்டுவோம்.(4) பயங்கரமானவனும், மஹாகாயனும் {பேருடல் படைத்தவனும்}, புஜவிக்கிரமனுமான {வலிமையான கரங்களைக் கொண்டவனுமான} இந்த ராக்ஷசன் உலகத்தை வென்ற பிறகே இங்கே நம்மைக் கொல்ல இச்சிக்கிறான்.(5) இராகவ ராஜரே, வேள்விச்சாலையின் மத்தியில் கொண்டு வரப்படும் பசுக்களை {விலங்குகளைப்} போல, சலனமற்றவர்களை {தீங்கிழைக்காதவர்களைக்} கொல்லும் ஜகதீபதிகளே {மன்னர்களே} நிந்திக்கத் தகுந்தவர்கள்[1]" {என்றான் லக்ஷ்மணன்}[2].(6)

[1] இந்த சுலோகம் பல்வேறு பதிப்புகளில் பல்வேறு வகைகளில் இருக்கிறது. இங்கே 5, 6ம் சுலோகங்களில் உள்ள இந்த வசனங்கள் பிபேக்திப்ராய் பதிப்பில் முற்றிலும் இல்லை. தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், பல்வேறு உரைகளை ஒப்பாய்ந்து பின்வருமாறு நான்கு வகைகளில் இந்த சுலோகத்திற்குப் பொருள் உரைக்கப்பட்டிருக்கிறது, "(1) தொடக்கத்திலேயே வேள்விக்கென ஆயத்தம் செய்யப்படாமல் வேள்விச்சாலைக்குக் கொண்டு வரப்படும் விலங்குகள்; (2) தீங்கிழைக்காமலேயே வேள்விச்சாலைக்குக் கொண்டு வரப்பட்ட விலங்குகள்; (3) காட்டு விலங்குகளைக் கொண்டு வருதல்; (4) யூபத்தில் கட்டப்படாத விலங்கைக் கொண்டு வருதல்" என்றிருக்கிறது. "வேள்விச்சாலைகளின் மத்தியில் தீங்கற்ற விலங்குகள் கொல்லப்படுவதைப் போல ஜகதீபதிகளும் தீங்கற்றவர்களை {சாதாரண விலங்குகளைப் போலக்} கொன்றால் அது நிந்திக்கத்தக்கது" என்பதே இங்கே பொருளாக இருக்க வேண்டும். இங்கே வேள்வி பலி நிந்திக்கப்படுவதாகத் தெரியவில்லை. மன்னர்கள் அப்பாவிகளைக் கொல்வதே நிந்திக்கப்படுகிறது.

[2] தணிக்கும் தன்மைத்து அன்று எனின் இன்று இத்தகை வாளால்
கணிக்கும் தன்மைத்து அன்று விடத்தின் கனல் பூதம்
பிணிக்கும் கையும், பெய் பில வாயும் பிழையாமல்
துணிக்கும் வண்ணம் காணுதி துன்பம் துற என்றான்

- கம்பராமாயணம் 3675ம் பாடல், கவந்தன் படலம்

பொருள்: "விஷம் போல் எரிக்கும் இந்த பூதம், இன்று இந்தத் தகுதிமிக்க வாளால் வெட்டித் துணிக்கத்தக்கது இல்லை என்றால் வேறு எந்த வகையிலும் மதிப்பிடத் தகுந்ததில்லை. பிடிக்கும் எல்லைக்குள் சிக்கியவற்றையெல்லாம் எறியும் கையையும், {அவ்வாறு எறிந்ததை ஏற்கும்} குகை போன்ற வாயையும் குறி தப்பாமல் துண்டாக்கிப் பிளக்கும் தன்மையைக் காண்பீராக. துன்பத்தைத் துறப்பீராக" என்றான் {லக்ஷ்மணன்}

அப்போது அவர்களின் உரையாடலைக் கேட்டுக் குரோதமடைந்த ராக்ஷசன், ரௌத்திரத்துடன் வாயைத் திறந்து, அவர்களை பக்ஷிப்பதற்கான {உண்பதற்கான} முயற்சியை ஆரம்பித்தான்.(7) அப்போது, தேசகாலம் அறிந்தவர்களான அந்த ராகவர்கள், பெரும் மகிழ்ச்சியடைந்தவர்களாகத்[3] தங்கள் கட்கங்களால் {வாள்களால்} அவனது கைகளைத் தோள்ப்பூட்டுகளிலிருந்து துண்டித்தனர்.(8) தக்ஷிணனான {வலக்கைப் பக்கம் இருந்த} ராமன் பொறுத்துக் கொள்ள முடியாத வேகத்துடன் தக்ஷிண பாஹுவையும் {வலது கரத்தையும்}, வீரனான லக்ஷ்மணன் இடது கரத்தையும் தங்கள் வாள்களால் வெட்டினர்.(9) மஹாபாஹுவான அவன் {நீண்ட கைகளைக் கொண்ட கபந்தன்}, கைகள் வெட்டப்பட்டதும், ஜலதனை {மழை தரும் மேகத்தைப்} போல வானத்திலும், பூமியிலும், திசைகளிலும் எதிரொலிக்கும் வகையில் பெருங்கூச்சலிட்டபடியே கீழே விழுந்தான்.(10) அந்த தானவன் {கபந்தன்}, வெட்டப்பட்ட கைகளில் குருதி பெருகிப் பாய்வதைக் கண்டு, தீனமாக {பரிதாபகரமாக} அவர்கள் இருவரிடமும், "வீரர்களான நீங்கள் இருவரும் யாவர்?" என்று கேட்டான்.(11)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கோவிந்தராஜர், மஹேஷ்வரத் தீர்த்தர் உரைகளின் படி இங்கே, "பெரிதும் கலக்கமடைந்தவர்களாக" என்று பொருள் கொள்ளப்படுகிறது" என்றிருக்கிறது.

அவன் இவ்வாறு கேட்டதும், சுபலக்ஷணங்களைக் கொண்டவனான லக்ஷ்மணன், அந்த மஹாபலவானிடம் {கபந்தனிடம்}, காகுத்ஸ்தனை {ராமனைக்} குறித்து {பின்வருமாறு} சொன்னான்:(12) "இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவரான இவரை ராமர் என்ற பெயரில் ஜனங்கள் அழைப்பார்கள்.  நான் இவரது தம்பியான லக்ஷ்மணன் என்று அறிவாயாக.(13) இராஜ்ஜியத்தில் இருந்து மாதாவால் விரட்டப்பட்ட இந்த ராமர், வனத்திற்கு அனுப்பப்பட்டவராக என்னுடனும், பாரியையுடனும் {மனைவியுடனும்} மஹத்தான வனத்தில் திரிந்து வந்தார்.(14) ஜனங்களற்ற வனத்தில் வசித்து வந்தபோது, தேவ பிரபாவங்கொண்ட இவரது பாரியை {மனைவி} ராக்ஷசனால் அபகரிக்கப்பட்டாள். அவளை {மீட்க} விரும்பியே இங்கே வந்தோம்.(15) கபந்தம் {தலையற்ற முண்டம்} போன்றிருக்கும் நீ யார்? ஒளிரும் மார்பில் வாயுடனும், முறிந்த கெண்டைக்காலுடனும் வனத்தில் எதற்காக புரண்டு கொண்டிருக்கிறாய்?" {என்று கேட்டான் லக்ஷ்மணன்}.(16)

இலக்ஷ்மணனால் இவ்வாறு கேட்கப்பட்ட கபந்தன், அப்போது இந்திரனின் சொற்களை நினைவுகூர்ந்து, பரமபிரீதியடைந்து, இந்தச் சொற்களை மறுமொழியாக சொன்னான்:(17) "நரவியாகரர்களே {மனிதர்களில் புலிகளே}, உங்களுக்கு ஸ்வாகதம் {நல்வரவு}. நான் அதிர்ஷ்டவசத்தால் உங்களை பார்க்கிறேன். அதிர்ஷ்டவசத்தாலேயே நீங்கள் இருவரும் என்னுடைய இந்தத் கைப்பூட்டுகள் இரண்டையும் வெட்டினீர்கள்.(18) நரவியாகரா {ராமா}, என்னுடைய இந்த ரூபம் எவ்வாறு சிதைந்தது என்பதை உனக்கு உள்ளபடியே சொல்கிறேன். அதை என்னிடம் இருந்து கேட்பாயாக" {என்றான் கபந்தன்}.(19)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 70ல் உள்ள சுலோகங்கள்: 19

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை