Tuesday 2 April 2024

சைத்திய பிராசாதம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 43 (26)

Sacred Sanctuary | Sundara-Kanda-Sarga-43 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வேள்வி மண்டபத்தை அழிக்க நினைத்து, அதை எரித்த ஹனுமான்; ராக்ஷசர்களை எச்சரித்தது...

Hanuman attacking Rakshasas with a pillar

கிங்கரர்கள் கொல்லப்பட்ட பிறகு, அந்த ஹனுமான் {பின்வருமாறு} தியானத்தில் ஆழ்ந்தான், "வனம் என்னால் பங்கமடைந்தது. சைத்திய பிராசாதம்  {வேள்வி மண்டபம்} நாசமடையவில்லை.{1} எனவே, இப்போதே நான் இந்த பிராசாதத்தை அழிக்கப்போகிறேன்[1]" என்று இவ்வாறு மனத்திற்குள் சிந்தித்த ஹனுமான், தன் பலத்தைக் காட்டினான்.{2} ஹரிசிரேஷ்டனும், மாருதாத்மஜனுமான ஹனுமான், குதித்தெழுந்து, மேரு சிருங்கத்தைப் போல் உன்னதமான {உயரமான} சைத்திய பிராசாதத்தின் மீது ஏறினான்.(1-3) மஹாதேஜஸ்வியான அந்த ஹரியூதபன் {குரங்குக்குழுத் தலைவனான ஹனுமான்}, கிரிக்கு ஒப்பான பிராசாதத்தில் ஏறி உதிக்கும் மற்றொரு சூரியனைப் போல ஒளிர்ந்தான்.(4)

[1] கம்பன் டிரஸ்ட் வெளியிட்ட கம்பராமாயணம் - இராமாவதாரம் புத்தகத்தில், சுந்தரகாண்டம், பொழில் இறுத்த படலம், 5478ம் பாடலின் அடிக்குறிப்பில், "சயித்தம் -சைத்தியம் என்னும் வடமொழியின் தமிழ்வடிவம் ஓமம் வேள்வி முதலியன புரியும் மண்டபம். வானோங்கு சிமயத்து வாலொளி சயித்தம் - மணிமேகலை 28:131" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "தேவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட கட்டடம்" என்றிருக்கிறது.

வெல்வதற்கரிய உத்தம சைத்திய பிராசாதத்தைத் தாக்கிய ஹனுமான், லக்ஷ்மியால் {வெற்றியால்} ஜொலித்து, பாரியாத்ரத்திற்கு {பாரியாத்ர மலைக்கு} ஒப்பானவன் ஆனான்.(5) மாருதாத்மஜன் {வாயுமைந்தன் ஹனுமான்}, தன் பிரபாவத்தால் மஹாகாயம் {பேருடல்} படைத்தவனாகி, பலமாகத் தோள்களைத் தட்டி, அந்த சப்தத்தால் லங்கையை நிறைத்தான்.(6) தோள்களைத் தட்டுவதால் உண்டானதும், செவிகளைப் பிளக்கவல்லதுமான அந்த மஹத்தான சத்தத்தால், அங்கே விஹங்கமங்கள் {பறவைகள்} விழுந்தன. சைத்திய பாலர்களும் {வேள்வி மண்டபத்தைக் காத்த காவலர்களும்} திகைத்தனர்.(7)

{அப்போது ஹனுமான்}, "அஸ்திரவித்தான ராமருக்கும், மஹாபலவானான லக்ஷ்மணருக்கும் ஜயம் உண்டாகட்டும். இராகவரால் ஆளப்படும் சுக்ரீவ ராஜாவுக்கும் ஜயம் உண்டாகட்டும்.{8} களைப்பின்றி கர்மங்களைச் செய்பவரும், கோசலேந்திரருமான ராமரின் தாசனான {கோசல நாட்டின் தலைவருமான ராமரின் அடியவனான} நான், சத்ரு சைனியங்களை அழிக்கவல்லவனும், மாருதாத்மஜனுமான {பகைவரின் படைகளை அழிக்கவல்லவனும், வாயுமைந்தனுமான} ஹனுமான் ஆவேன்.{9} ஆயிரக்கணக்கான கற்களையும், மரங்களையும் கொண்டு தாக்கவல்லவனான எனக்கு, யுத்தத்தில் ஆயிரம் ராவணர்களும் பிரதிபலம் {என்னை எதிர்க்குமளவிற்கான பலம்} கொண்டவராக மாட்டார்கள்.{10} சர்வராக்ஷசர்களின் கண்ணெதிரிலேயே, லங்காம்புரியை அழித்து, மைதிலியை வணங்கி, அர்த்தம் {நோக்கம்} நிறைவேறியவனாகவே திரும்பிச் செல்லப் போகிறேன்" {என்றான்}[2].(8-11) சைத்தியஸ்தர்களிடம் {வேள்விமண்டபத்தில் இருந்தவர்களிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு, விமானத்தில் நின்றபடியே பயங்கர முழக்கம் செய்த ஹரியூதபன் {குரங்குக் குழுத்தலைவன் ஹனுமான்}, ராக்ஷசர்களுக்கு பயத்தை உண்டாக்கும்படி நாதம் செய்தான்.(12)

[2] கிட்டத்தட்ட சென்ற சர்க்கத்தில், 33 முதல் 36 வரை இருக்கும் சுலோகங்களே இங்கேயும் வருகின்றன.

அந்த மஹத்தான சப்தத்தால் நாற்றுக்கணக்கான சைத்திய பாலர்களும், விதவிதமான அஸ்திரங்களையும், பிராசங்கள் {ஈட்டிகள்}, கட்கங்கள் {வாள்கள்}, பரஷ்வதங்கள் {கோடரிகள்} ஆகியவற்றையும் எடுத்துச் சென்று,{13} அவற்றை ஏவியபடியே மஹாகாயனான மாருதியை {பேருடல் படைத்தவனான வாயு மைந்தன் ஹனுமானைச்} சூழ்ந்து கொண்டனர்.(13,14அ) விசித்திரமான கதைகளையும் {கதாயுதங்களையும்}, பரிகங்களையும், காஞ்சனத்தால் அலங்கரிக்கப்பட்டவையும்,{14} ஆதித்யனுக்கு ஒப்பானவையுமான சரங்களையும் கொண்டு அவர்கள் அந்த வானரசிரேஷ்டனை {வானரர்களில் சிறந்தவனான ஹனுமானைத்} தாக்கினர். கங்கையின் நீரில் பெரிதும் விரிந்திருக்கும் நீர்ச்சுழலைப் போல,{15} அந்த ராக்ஷசகணங்களால் சூழப்பட்ட ஹரிசிரேஷ்டன் {குரங்குகளில் சிறந்த ஹனுமன்} ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(14ஆ-16அ)

அப்போது குரோதமடைந்த வாதாத்மஜன் {வாயு மைந்தன் ஹனுமான்}, பயங்கர ரூபத்தை ஏற்றான்.{16} பிறகு, மாருதாத்மஜனான ஹனூமான், அந்த பிராசாதத்தில் ஹேமத்தால் {அந்த மண்டபத்தில் தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்டிருந்த மஹாஸ்தம்பத்தை {பெருந்தூணை} வேகமாகப் பெயர்த்தெடுத்தான்.{17} பிறகு, அந்த மஹாபலவான் நூறு முனைகளைக் கொண்ட அதை {அந்த ஸ்தம்பத்தைச்} சுழற்றினான்.(16ஆ-18அ) அங்கே உண்டான அக்னியில் பிராசாதம் எரிந்து அழிந்தது.{18} பிராசாதம் எரிவதைக் கண்ட அந்த ஹரியூதபன் {குரங்குக் குழுத் தலைவன் ஹனுமான்}, வஜ்ரத்தால் அசுரர்களை {கொல்லும்} இந்திரனைப் போல, சதராக்ஷசர்களையும் {அந்த நூறு ராட்சசர்களையும்} கொன்றான்.{19}

அந்தரிக்ஷத்தில் இருந்த ஸ்ரீமான் {வானத்தில் இருந்த ஹனுமான்} இந்த வசனத்தைச் சொன்னான்:(18ஆ-20அ) "என்னைப் போன்றவர்களான ஆயிரக்கணக்கான மஹாத்மாக்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனர்.{20} பலவானான வானரேந்திரர் சுக்ரீவரின் வசம் {கட்டுப்பாட்டில்} இருந்த வானரர்களான நாங்கள், வசுதை {பூமி} முழுவதும் சுற்றித் திரிகிறோம்.(20ஆ-21) சிலர் தசநாக {பத்து யானைகளின்} பலம் கொண்டவர்கள்; சிலர் அதிலும் பத்து மடங்கானவர்கள் {நூறு யானைகளின் பலம் கொண்டவர்கள்}; மேலும் சிலர் ஆயிரம் யானைகளுக்குத் துல்லியமான விக்கிரமத்தைக் கொண்டவர்கள்.(22) சிலர் ஓக பலம் {காட்டு வெள்ளத்தின் பலம்} கொண்டவர்கள்; சிலர் வாயுவுக்கு ஒப்பான பலம் கொண்டவர்கள்; இன்னும் சில ஹரியூதபர்கள் அளவிட முடியாத பலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(23) தந்தங்களையும் {பற்களையும்}, நகங்களையும் ஆயுதங்களாகக் கொண்டவர்களும், சத, ஆயுத, சதசஹஸ்ர, {நூறு, பத்தாயிர, நூறாயிர} கோடிக்கணக்கானவர்களும் அத்தகைய ஹரிக்கள் சூழ, உங்கள் அனைவரையும் அழிக்கவல்ல சுக்ரீவர் வரப்போகிறார்.(24,25அ) மஹாத்மாவான இக்ஷ்வாகுநாதரிடம் வைரம் {ராமரிடம் பகை} கொண்டதால் இந்த லங்காபுரி இல்லாமல் போகும். நீங்களும், ராவணனும் இல்லாமல் போவீர்கள்" {என்றான் ஹனுமான்}.(25ஆ,26)

சுந்தர காண்டம் சர்க்கம் – 43ல் உள்ள சுலோகங்கள்: 26


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை